Pages

Monday, March 10, 2025

தக்கர் பாபாவின் பயணம் -3- சித்ரா பாலசுப்பிரமணியன்




14 நவம்பர்


கத்தியவாடின் வடகிழக்குப் பகுதியான ஜலாவாட்டின் பகுதிகளைச் சுற்றிப் 


பார்ப்பதற்காக நாங்கள் இந்த நான்கு நாட்களும் வாத்வானில் இருந்த ஹரிஜன் ஆசிரமத்தில் (முன்பு அதன் பெயர் பாலமந்திர்) தங்கியிருந்தோம். பதினான்காம் தேதி வாத்வானில் இருந்த ஹரிஜனப் பள்ளிகளையும் குடியிருப்பையும் துரேஜ் கிராமத்தையும் பார்வையிட்டோம். பதினைந்தாம் தேதி முலி, சய்லா, கூக்டா ஆகிய இடங்களுக்குச் சென்றோம். சய்லா இருபத்தியிரண்டு மைல் தொலைவில் இருந்தது. பதினாறாம் தேதி வாகெலா, குன்ட்யாலா,கேரளி ஆகிய கிராமங்களுக்குச் சென்றோம். பெரும்பாலும் அவர்களுக்கான குடிநீர் மற்றும் பள்ளிகள் குறித்தே பேசப்பட்டது.

பதினேழாம் தேதி அலுவலகப்பணிகள் இருந்ததால் ஆசிரமத்திலேயே தங்க நேர்ந்தது. அதுவும் நன்மைக்கே.

வாத்வான் முனிசிபல் துப்புரவுத் தொழிலாளர்களுடனும் வாத்வான் ஆசிரமத்தில் தங்கியிருந்த மாணவர்களுடனும் உரையாட நேரம் கிடைத்தது.தொழிலாளர்கள் தங்களது கடனிலிருந்தும் வட்டச் சுமையிலிருந்தும் தங்களை மீட்க ஒரு வழி ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை வைத்தனர்.


வாத்வானிலும் நகரத்திலும் இரண்டு தனித்தனியான பள்ளிகள் தேட் பிரிவினருக்காகவும் துப்புரவு பணியாளர் குழந்தைகளுக்காகவும் நடத்தப்படுகின்றன. தேட் பிரிவினர் துப்புரவு பணியாளர் குழந்தைகளைத் தங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து பயில அனுமதிப்தில்லை.இவ்வளவுத் தீவிரமாக இங்குத் தீண்டாமை வேரூன்றியிருப்பது வருத்தமானது. கல்வி வளர்ச்சி என்பது தீண்டாமையை அகற்றுவதற்கான முக்கியக் கருவி என்பதால் நாளடைவில் இது மாறும் என்பதைப் புரிந்து கொண்டு ,தற்போது இரண்டு பள்ளிகளாகச் செயல்படும் அவலத்தை நாம் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. துத்ரேஜ் சிறிய கிராமமாக இருப்பினும் அங்கு எண்பது ஹரிஜனக் குடும்பங்கள் வசிக்கின்றன. பள்ளிக்கு இக்குழந்தைகள் ஆர்வத்தோடு வருகின்றனர். இங்கு ராஜ்புத்கள் மற்றும் குன்பி விவசாயக் குடியினருடன் முக்கியமான தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.ராஜ்புத் சனாதனிகள் வினவிய கேள்விகளுக்கு விடையளிக்கப்பட்டது. இரவு நேரத்தில் வாத்வான் தெருக்களில் மூன்று இடங்களில் கூட்டங்கள் நடைபெற்றன. முதல் கூட்டத்தில் இளைஞர் அணி அலுவலகத்தில் ஹரிஜன சேவைக்கான இளைஞர் குழு உருவாக்கப்பட்டது. இரண்டாவது கூட்டம் தேட் குடியிருப்பிலும் மூன்றாவது துப்புரவுப் பணியாளர் குடியிருப்பிலும் தனித்தனியாக நடைபெற்றது. திரு.மணிலால் கோத்தாரி இவ்விடங்களிலெல்லாம் மனவெழுச்சியுடன் உரையாற்றினார். ஏராளமானோர் இறந்த விலங்குகளை உண்ணுவதில்லை என உறுதிபூண்டனர்.

முலி கிராமத்தில் சம்மார் பிரிவினரின் எண்பத்தியிரண்டு குடும்பங்கள் உள்ளன. மிக அதிக செலவில் தங்களுக்கென்று கிணறு ஒன்றைக் கட்டிக்கொண்டுள்ளனர். தங்களுக்காக பள்ளி ஒன்றையும் கட்டியிருக்கிறார்கள். மாணவர்கள், மிக ஏழ்மையாக இல்லாதபட்சத்தில் ஆசிரியருக்கு மாதம் எட்டு அணா, கட்டணம் செலுத்தினர். ஆனால், இங்கு துப்புரவுப் பணியாளர் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. சய்லா என்ற இடத்தில் பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த ஹரிஜனக் குழந்தைகளுக்கான பள்ளி தற்போது மூடப்பட்டிருப்பதன் காரணம் தெரியவில்லை. மீண்டும் ,அரசின் உதவியோடு அப்பள்ளியைத் திறக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம்.சம்மார் மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கான குடியிருப்புக்குச் சென்றோம்.

துப்புரவுப் பணியாளர்கள் தங்கள் பணிக்கென ஊதியமாகப் பெறும் கம்பு தானியம் குறைந்த அளவாகவே இருக்கிறது எனக் கூறினர். கூக்டா கிராமத்தில்,தன்னார்வம் மிக்க ஆசிரியர் ஒருவரின் கீழ் பத்து தேட் பிரிவு மாணவர்கள் கல்வி கற்பதைப் பார்க்க மகிழ்வாக இருந்தது. இங்கு அரசை விட, தனியான அமைப்புகளே இப்பிரச்சினையில் அதிக ஆர்வம் காட்டுவதைப் பார்க்க முடிந்தது. அரசுக்கு அது குறித்த தெளிவான திட்டம் ஏதும் இல்லை.

இங்கு ஜே.பி. பன்சாலியை நெருக்கமாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. அவர் ஒரு பட்டதாரி. தன் உடலை வருத்திக் கொள்ளும் துறவு வாழ்வில் பற்று உடையவர். காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் பல ஆண்டுகள் தங்கியிருந்தவர். ஆசிரமத்தில் தொடர்ச்சியாக ஐம்பத்தைந்து நாட்கள் உண்ணாநோன்பு மேற்கொண்டவர்.முலி செல்லும் வழியில் வெறுங் காலுடன் நடந்து சென்று கொண்டிருந்த அவரைப் பார்த்தோம். வெறும் கோவணம் மட்டுமே உடுத்தியிருந்தார். அரையாடை கூட இல்லை,வெறும் கோவணம் தான். என்னுடன் காரில் வந்த கோத்தாரி, ஜோஷி இருவரும் காரிலிருந்து இறங்கி ஓடிப் போய் மகிழ்வோடு அவரைத் தழுவிக் கொண்டார்கள்.

மௌன விரத்த்தில் இருந்த அவரும் உற்சாகமாகப் புன்னகைத்தார். பிரார்த்தனை செய்யும் நேரம் தவிர பிற நேரங்களில் மௌன விரதம் தான்.நான் அவரை 1934 ஜூலையில் பவநகரில் பார்த்தபோது,அவர் ஒரு செப்புக்கம்பியில் தன் வாயைத் தைத்துக்கொண்டிருந்தார். தவறியும் பேசிவிடக் கூடாது என்பதற்காக..இந்த முறை அது நீக்கப்பட்டிருந்ததைக் கண்டு எனக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது.அவருடைய உணவு, தானியத்தை உடைத்து மாவாக்கி நீரில் கலந்து உண்பது தான்.வேண்டுமானால், வேப்ப இலைகளையும் பச்சையாக மென்று தின்பார். கார்,ரயில் என எதிலும் பயணம் செய்வதில்லை. ஜைன சாதுக்களைப் போல எங்கும் வெறும் காலில் தான் நடை. மூன்று நாள் எங்களோடு வாத்வானில் தங்கியிருந்தது அவருக்கு மிகவும் தேவைப்பட்ட இளைப்பாறலாக இருந்திருக்கும். நாற்பது வயதுக்குள்ளேயே இருக்கும் அவர் ஐரோப்பா முழுக்க சுற்றி வந்தவர். செல்வந்தக் குடும்பத்தில் பிறந்திருந்தும், ஏறக்குறைய எல்லாவற்றையும் பிறருக்குக் கொடுத்துவிட்டு பிச்சை எடுத்துண்ணும் வாழ்வை நடத்துகிறார்.அவருடைய பரிசுத்தமான எளிய வாழ்வு கண்டு மதிப்பு உண்டெனினும் தன்னைத் தானே வருத்திக் கொள்ளும் இந்தத் தியாகம் எந்த வகையில் மனித சேவைக்குப் பயன்படும் என்று எண்ணி ஆச்சரியப் படுவதுண்டு. அவருடைய ஆன்மத் தேடலுக்கு அது உபயோகமாக இருக்கிறதோ என்னவோ?

இந்த இடையீடுக்கு வாசகர்கள் என்னை மன்னிப்பார்களாக. பதினாறாம் தேதி மேலும் மூன்று கிராமங்களுக்குச் சென்றோம். வகேலா கிராமத்தில் வசிக்கும் தேட் பிரிவினர் முழுக்கவே கல் வெட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.பொருளாதார வளம் பெற்றவர்களாக உள்ளனர்.வாத்வான் ஆசிரமத்தில் பயின்ற ஹரிஜன இளைஞன் ஒருவன் இங்கிருக்கும் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்கிறான்.

எனினும அவர்களது குடும்பத் தொழிலான கல்வெட்டும் வேலைக்கு அவன் சென்று விடுவதால் பள்ளி இயங்காத நிலை ஏற்பட்டு விடுகிறது. மறுபடியும் பள்ளியைத் திறக்க முயற்சி நடைபெற்று வருகிறது.குன்டியாலாவில் உள்ள ஹரிஜனங்கள் பயன்படுத்தும் கிணற்றில் நீர் எண்ணெய்ப் படிமத்தோடு கிடைப்பதால் உடல்நலம் பாதிக்கப் படுகிறது. இன்னொரு கிணறு வெட்டி, கிணற்றுத் தேவையைப் பூர்த்தி செய்தால் இந்தக் கிணற்றைத் தொழில் தேவைகளுக்குக் கொடுத்துவிடலாம். கேரளி என்ற கிராமத்தில் வசிக்கும் எண்பது ஹரிஜ் குடும்பங்களுக்கு ஒரு பள்ளி செயல்பட்டு வந்தது. பள்ளி நடத்தும் இடத்தை அதன் சொந்தக்கார்ர் இலவசமாகத் தந்திருந்தார். ஆனால், ஒரு பியூன் அந்தச் சொந்தக்கார்ரை மிரட்டியிருக்கிறார்.அங்கிருந்த நிர்வாக அலுவலரிடம் பேசி பிரச்சினையை

முடித்து வைத்து பள்ளி மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளைச் செய்தோம்.


No comments:

Post a Comment