Pages

Thursday, March 20, 2025

ஆசிரம வாழ்க்கை- மஹாத்மா காந்தி- சித்ரா பாலசுப்ரமணியன்.





அண்ணல் காந்தியின் ஆசிரம வாழ்க்கை என்ற நூலைத் திருப்பூர் சர்வோதயப் பிரசுராலயம் 1950 இல் மூவாயிரம் படிகள் அச்சிட்டு வெளியிட்டது. பின் மறுபதிப்பாகத் தற்போது அழிசி பதிப்பகம் மீண்டும் இதனைக் காகா காலேகரின் முன்னுரையுடன் பதிப்பித்துள்ளது. கோ. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மொழிபெயர்த்திருக்கிறார்.காகா காலாகர் எழுதிய காந்தி காட்சிகள் என்ற நூலையும் மொழிபெயர்த்தவர் இவரே.


காந்தி 1932 ஆம் ஆண்டு எரவாடா சிறையில் இருந்தார். சிறையில் இருக்கும் காலம் என்பதே காந்தி சற்று ஓய்வாக இருக்கும் காலம் என்பதாயிற்று. அதுவும் பணியில்லாத முழு ஓய்வு என்பதல்ல. அரசியல் பணிகளற்ற வேறு பணிகள். குறிப்பாக எழுத்துப் பணி.சிறையில் இருந்த போது தான் அவர் தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகம் நூலையும் எழுதினார். 1932 இல் ,ஆசிரமக் குழந்தைகளுக்குப் பயிற்றுவிப்பதற்காக பால பாடங்கள் எனக் குறிப்புகள் எழுதி அனுப்பினார். ஆனால் அது நூலாக அச்சாகவில்லை. மகாத்மா காந்தி தொகுப்பு நூலில் அந்த பால பாடங்கள் பதிவாகியுள்ளன. ஆசிரமக் குழந்தைகளுக்கு நன்னெறியைப் போதிக்கும் விதமாக அந்தப் பாடங்களைக் காந்தி எழுதியிருந்தார். அவர் இதை எழுதி அனுப்பிய போதே காகா காலேகர் ஆசிரமத்தின் வரலாற்றையும் எழுதுமாறு காந்தியிடம் கோரிக்கை வைத்திருந்தார். முயல்வதாகச் சொன்ன அண்ணல் சிறையில் இருந்த போது நினைவில் இருந்தவற்றைத் தொகுத்து கடிதங்களாக அனுப்பி வைத்தார். ஆனால் அது அப்படியே பிரசுரமாகும் நிலையில் இல்லை. அது திருத்தப்படவும் கூடுதலாகச் சேர்த்து எழுதப்படவுமானதாக இருந்தது. அதை மீண்டும் சரி பார்த்து எழுதக் கூடிய நேரமோ வாய்ப்போ அண்ணலுக்கு வாய்க்கவில்லை. ஆனால் நல்லூழாகத் திருத்தி எழுதித் தருகிறேன் என அவர் கூறிய போது,எதற்கும் இந்தக் கையெழுத்துப் பிரதி இருக்கட்டும் என வாங்கி வைத்துக் கொண்டு மகன்பாய் தேசாயைக் கொண்டு அதைச் சில படிகளும் செய்து வைத்துக் கொண்ட நற்செயலைக் காகா காலேக்கர் செய்துவிட்டார். பிரதிகள் வேறு சிலரிடமும் தரப்பட்டிருந்த போதும் திருத்தி எழுதுவதற்கான சந்தர்ப்பம் வாய்க்காத காரணத்தால் ,அண்ணல் எழுதிய குறிப்புகளாகவே இது பதிப்பிக்கப்பட்டது. 5.4.1932 முதல் 11.7.1932 எழுதப்பட்ட குறிப்புகள் இவை. பதினைந்து தலைப்புகளில் காந்தி , ஆசிரம்ம் குறித்த தன் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். கடைசி அத்யாயமான சத்தியாகிரகம் என்ற தலைப்பிட்ட பகுதி முழுமை பெறாமல் நின்று விட்டது.


தென்னாப்பிரிக்காவில் ஆசிரம அமைப்பு போன்ற இரு அமைப்புகளையும்( ஃபீனிக்ஸ் குடியிருப்பு, டால்ட்ஸ்டாய் பண்ணை) இந்தியா திரும்பிய பின் மூன்று ஆசிரம அமைப்புகளையும் ( கோச்ரப் ஆசிரம்ம், சபர்மதி ஆசிரம்ம், வார்தாவின் சேவாகிராம்) காந்தி உண்டாக்கி நடத்தினார். தன்னளவில் முழுமை பெற்ற தனி மனிதர்கள் சமூக வளர்ச்சிக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் பெரும்பங்காற்ற முடியும் என்பதே இவற்றை அமைப்பதன் பின்னால் அவருக்கிருந்த முக்கிய நோக்கமாக இருந்தது. தென்னாப்பிரிக்காவில் விடுதலைப் போராட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கிய உடனேயே தானும் தன் குடும்பமும் என்ற எண்ணத்தைத் துறந்து அவர் கூடி வாழும் தன்மையைக் கைகொண்டு விட்டார்.

கூடி வாழத் தலைப்படும் போது ,அதிலும் சத்தியாகிரகப் போருக்கான முன்தயாரிப்புக் களம் என்ற கொள்கை முடிவோடு சேர்ந்து வாழ்கையில் அந்த அமைப்பு சரியான சட்ட திட்டங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் எனக் காந்தி தீர்மானமாக நம்பினார். அதை எந்த அளவு உள்ளிருப்பவர்கள் நடைமுறைப் படுத்துவார்கள் என்ற கேள்வியும் ஐயமும் எழக் கூடுமெனினும் ஒழுக்க விதிகள் இன்றியமையாதவை என்றே காந்தி கருதினார். ஒரு சத்யாகிரகிக்கு அது அடிப்படைப் பண்பும் ஆகும். எனவே,ஒவ்வொரு பகுதி சார்ந்தும் விதிகளை வகுத்தார். விதிகள் எழுதப்படுவது சுலபம். அவை உயிரில்லாதவை. ஆனால் அவற்றை நடைமுறையில் செயல்படுத்தப்புகும் மனிதர்கள் உயிரோட்டம் மிக்கவர்கள். எனவே,சலனமும் வீழ்வும் மீண்டு எழுதலும் மன்னிப்புக் கோரலும் குற்ற உணர்வும் மேம்படுதலும் என பலப்பல மன விகாசங்களாக அவை விரியும். காந்தி இவை அத்தனையையும் நடைமுறையில் கண்டவர். மனித மனம் எவ்வெத் தருணங்களில் எவ்வெவ்வாறு தொழிற்படும் என்பதை உய்த்துணரக்கூடிய திறன் அவருக்கு வாய்த்திருந்தது.காரணம்,அவரே தன் மனதையும் உடலையும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தி இருளும் ஒளியும் கண்டவர்.


“ ஒரு வகையில் பார்க்கையில் ஆசிரமத்தில் இருந்தவர்களால் காந்தியடிகளின் லட்சியத்தை எய்துமளவுக்கு மேலே எழ முடியவில்லை என்று சொல்லலாம். ஆனால், இன்னொரு வகையிலோ நாட்டின் சக்தியையும் நியாயமென்ற மூலதனத்தைய்யும் வளர்க்கக்கூடிய கூடிய இச்சோதனையின் ரகசியத்தை வெளியிலுள்ளவர்களால் புரிந்து கொள்ள முடியாமல் போய்விடவே காந்தியடிகளின் இம்முயற்சி முழுதும் அனுஷ்டிக்கப்படாமலே இருந்து விட்டதென்று சொல்ல வேண்டியிருக்கிறது.” எனக் காகா காலேகர் தம் முன்னுரையில் குறிப்பிடுகிறார். எனினும் இது காந்தியின் தோல்வி அல்ல என்றும் அவர் தம் முன்னுரையின் நிறைவில் குறிப்பிடத் தவறவில்லை. காந்தி நடந்த பாதை புனிதமானதாகியது. அவர் அமர்ந்த இடமே ஆலயமாகியது என ஜவஹர்லால் நேரு பின்னாளில் குறிப்பிடுவார். ஆனால் தான் சென்ற இடமெல்லாம் ஆசிரமமாகவே ஆகியது என காந்தி நகைச்சுவையோடு குறிப்பிடுவார். “ அல்லது நான் அந்த இடத்தை ஆசிரமமாக மாற்றி விடுகிறேன். எந்தச் செயலைத் தொடங்கினாலும் ஆசிரமத் தனமை அதில் வந்து விடுகிறது. உண்மையில் என் மனதில் இருப்பதே ஆசிரமம் தானோ என்னவோ” எனக் காந்தி குறிப்பிட்டிருக்கிறார்.அந்த அளவு அவரது கவனத்தோடும் கருத்தோடும் ஆசிரமம் பின்னிப் பிணைந்திருந்தது.


தன் நினைவில் இருந்த குறிப்புகளைக் கொண்டு காந்தி எழுதிய ஆசிரம வாழ்க்கை பதினைந்து அத்தியாயங்களாக விரிகிறது. தொடக்க முதல், ஆசிரமத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்த அதன் கொள்கைகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன; அதை நடைமுறைப் படுத்துகையில் உண்டான இடர்ப்பாடுகள் என்னென்ன; அவற்றில் எந்த மாதிரியான தளர்வுகள் அனுமதிக்கப்பட்டடன; எவையெவை மாற்றியமைக்கப்பட்டன;

இவற்றின் மூலமாக்க் கண்டறியப்பட்ட உண்மைகளும் மனித மனம் குறித்த பாடங்களும் என்ன என்பதைக் குறித்து காந்தி தெளிந்த நீரோடை போல விளக்கியிருக்கிறார். எத்தனையெத்தனையோ மாற்றங்களும் வளர்ச்சிகளும் வந்து விட்ட போதும் மானிட மனம் அடிப்படை தர்மம் என்ற ஒன்றைப் பற்றி நிற்கிறது. அந்த ஒன்றே மானுட வாழ்வைத் தெளிவாக்குகிறது. அதையே அண்ணலும் திரும்பத் திரும்பப் பேசுகிறார்.

சக மனிதர்களோடு இணைந்து சமூக வாழ்வை மேற்கொள்ள வேண்டிய இந்த தர்மம் தான் சமூக வாழ்வை மேம்படுத்துகிறது. ஒரு இணையற்ற சமூகத்தை உண்டாக்க விரும்பிய காந்தியின் கனவு தான் இந்தப் புத்தகத்தில் விரிகிறது.


தென்னாப்பிரிக்காவில் ஆசிரமம் போன்றதொரு அமைப்பைத் தொடக்கியதிலிருந்து காந்தி விவரிக்கிறார்.

பொதுவாகச் சமூகத்தில் பல்துறை சார்ந்து என்னென்ன குற்றங்கள் உள்ளனவோ அவற்னின்று நீங்கியதாக ஆசிரம வாழ்வு விளங்க வேண்டும் என்பதே தொடக்ககட்ட பரிசோதனை முயற்சியாகத் தொடங்கியது.

பின் ஒவ்வொன்றாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டன. சத்தியம் ,அகிம்சை, பிரம்மசரியம், நாவடக்கம், கள்ளாமை, வௌவாமை, உடலுழைப்பு, சுதேசி, அஞ்சாமை, தீண்டாமை ஒழிப்பு, சகிப்புத்தன்மை ஆகியன ஆசிரமம் கைக்கொண்ட முக்கிய ஒழுக்கங்கள். இவற்றில் எதுவும் புதியவையோ அல்லது சிறப்பாக உண்டாக்கப்பட்டவையோ அல்ல. மலைகளைப் போல இச்சமூகத்தில் காலங்காலமாக நின்று நிலைபெற்றவையே.

ஆனால், ஒவ்வொன்றையும் நவீன சமூக வாழ்வின் நடைமுறைக்கு ஏற்ப காந்தி விளக்கியுரைக்கும் விதம் தான் விதந்தோதி நோக்கத்தக்கது. எளிய வார்த்தைகளில் மிக ஆழமான பொருளை உணர்த்தி விடும் காந்தியின் எழுத்து வாசித்து இன்புறத் தக்கது.

“பௌதிக சாஸ்திரத்தில் குறிப்பிட்ட பொருள்களைக் கலக்கும் பொழுது எந்த விளைவுகள் நமக்குத் தெளிவாகப் புலனாகின்றனவோ அவ்வாறே ஏன், அதை விட அதிகத் தெளிவாக, ஆத்மீகக் கிரியைகளில் நாம் பார்க்கக் கூடும் என்பது என் கருத்து. ஆனால், அதை அளந்து பார்ப்பதற்கு நம்மிடம் கருவியெதுவும் இல்லாதிருப்பதே இதிலுள்ள குறை.இதனாலேயே இத்தகைய விளைவுகளைக் குறித்து நமக்கு விரைவில் நம்பிக்கை உண்டாவதில்லை. ஒருக்கால், உண்டானாலும் அது உறுதியாயிருப்பதில்லை.” என்று கூறும் அண்ணல் அதற்காக வாளாயிருந்து விட முடியாது என்பதை, “குகையில உட்கார்ந்து சத்தியத்தைத் தேடுவது சாத்தியில்லை.பேசுவது அவசியமாயிருக்குமிடத்தில் மௌனமாயிருப்பதெப்படி? குகைக்கும் விசேஷ சந்தர்ப்பங்களில் இடமுண்டு. ஆனால், சாதாரண மனிதர்களைச் சமூகத்தில் தான் பரீட்சிக்க முடியும்“ என்கிறார். பரிட்சித்துப் பார்க்கும் இடமாகவே ஆசிரம்ம் திகழ்ந்தது.


கொள்கைகள் ஒவ்வொன்றையும் காந்தி விளக்கியுரைக்கிறார். சத்தியம் என்ற தலைப்பில் குற்றம், குற்றம் உணர்தல், ஒப்புக்கொள்ளுதல், பிராயசித்தம் என தனித்தனியாக அவர் விளக்கும் விதம் அவர் இதற்குத் தரும் முக்கியத்துவத்தை விளக்குகிறது.

பிரார்த்தனை என்பதைச் சமூகப் பிரார்த்தனையாக்க் கொண்டே காந்தி விவரிக்கிறார். ஆசிரம்ம் துவங்கியதிலிருந்தே பிரார்த்ததனைஎன்பதற்கு முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது.பிரார்த்தனை இன்றி ஒருநாளும் கழிந்ததில்லைஎன்றே காந்தி குறிப்பிடுகிறார்.ஆகாசம் கூரையாகவும் திசைகள் தூண்களாகவும் இருப்பதே பொதுப்பிரார்த்தனைக்குச் சிறப்பு சேர்க்கும் என்ற அவரது கணிப்பு அலாதியானது. அதனால் தான் செல்லுமிடமெங்கும் அவரால் பிரார்த்தனை செய்ய முயன்றது. இரயில் நிலைய மேடைகளிலும் வயல் வெளிகளிலும் ஊர்ப் பொது மேடைகளிலும் என எங்கிருந்தபடியும் சர்வ வியாபியான இறைவனைத் துதிக்க முடியும் எனக் காட்டித் தந்தவர் காந்தி.அதோடு, அப்பிரார்த்தனை ஒரு சமூக நல்லிணக்க கிரியா ஊக்கியாகவும் திகழ்ந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை.

அகிம்சை ஆசிரம விதிகளுள் முக்கியமானது. ஆயினும் அதன் எல்லைகள் குறித்தும் பயன்பாட்டில் அது போதாமைகள் குறித்தும் ஆசிரமம் தொடர்ந்து விவாதித்தபடியே இருந்தது. “அகிம்சை விஷயமாக நடந்துள்ள அளவு ஆசிரமத்தில் வேறு எதைப் பற்றியும் அவ்வளவு விவாதங்கள் நடந்திராதென்று “ காந்தியும் குறிப்பிடுகிறார். வாழ்வு என்பதே பரந்த ஹிம்சையில் சிக்கிக் கொண்டிருக்கும் போது இதில் அகிம்சை என்பதை எந்தளவு கடைபிடிக்க முடியும் என்பதன் சோதனைக் களமாகவே ஆசிரமம் இருந்தது. கோபம், வெறுப்பு முதலிய சூட்சுமமான ஹிம்சைகளைத் தவிர்ப்பது எப்படி என்பதே அகிம்சையை நோக்கிய பாதையின் முக்கிய நகர்வாக இருந்தது.“ எவருக்கும் தீமையை விரும்பாதிருத்ததல், ஒருவர் நமக்கு பெருந்தீங்கு விளைவித்திருந்த போதும் அவருக்குத் தீங்கு நேர வேண்டுமெனக் கருதாமை, மனதால் கூட அவருக்கு வருத்தமளியாதிருத்தல்” ஆகியவை அகிம்சைக்கு உரைகல் என்று காந்தி குறிப்பிடுகிறார். ஆனால் அகிம்சையை பரிபூரணமாக நடைமுறையில் செயல்படுத்தும் ஒரு சமூகத்தைப் படைத்தளிப்பது என்பது கற்பனைக்கெட்டாத ஒன்று என்ற புரிதலும் காந்திக்கு உண்டு.


ஆசிரமத்துக்குரிய மஹா விரதங்கள் ஐந்தனுள் கள்ளாமையும் வௌவாமையும் முக்கியமானவை. மேம்போக்காகப் பார்த்தால அவை அனைவருக்கும் விளங்கக் கூடியதே எனினும் காந்தி இவற்றுக்குத் தரும் விளக்கம் வாசித்து இன்புறத் தக்கது. சமூக சேவையே வாழ்வின் இலட்சியம் என வாழத் தலைப்படும் ஒருவர் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிகளாக்க் காந்தி இவற்றை விளக்குகிறார். “இந்த விரதத்தை அனுஷ்டிப்பதற்கு பிறருடைய பொருளை அவருடைய அனுமதியின்றி எடுத்துக் கொள்ளாமலிருந்தால் மட்டும் போதாது.நமக்கு எந்தப் பொருள் எந்த காரியத்திற்காக்க் கிடைத்திருக்கிறதோ அதைத் தவிர்த்து வேறொரு காரியத்திற்காக் அதை உபயோகித்தலும் எவ்வளவு காலத்திற்கென்று ஒரு பொருள் கிடைத்திருக்கிறதோ அதைவிட அதிக காலத்திற்கு அதை உபயோகித்து வருதலும் திருட்டே” என விளக்குகிறார் காந்தி.எவ்வளவு நுட்பமாக ஒவ்வொரு விரத்த்தையும் அவர் விளக்குகிறார் என்பது ஆச்சரியமளிப்பது. கள் ளாமை என்பது திருடாமை என்பது அனைவரும் அறிந்தத்தே. கூடவே, உள்ளத்தில் உள்ளலும் தீதே பிறர் பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனில் எனத் திருக்குறளும் நமக்கு உபதேசித்துள்ளது. காந்தி கள்ளாமை எனும் வைரத்தை இன்னும் பட்டை தீட்டுகிறார். மனிதர் தேவைக்கு அதிகமாக உபயோகிப்பதெல்லாம் திருட்டு என்றே ஆகிறது. இயற்கை அனைவருக்கும் தேவையான பொருட்களை வழங்கவே செய்கிறது என்ற புகழ் பெற்ற காந்திய வாசகத்தை இங்கு நாம் நினைவு கூர்தல் நலம்.

கள்ளாமையை அடுத்து வௌவாமைக்குக் காந்தி அளிக்கும் விளக்கம் அபாரமானது. நம் உடல் என்பதே வௌவுதலை ஊக்குவிக்கக் கூடிய தன்மை கொண்டது என்கிறார். அதற்கான தேவைகளை நிறைவேற்றவேகூட மனிதர்கள் தம் உழைப்பையும் பொருளையும் அதிகம் செலவிடுகின்றனர். அதிக வசதிகளையும் சொகுசையும்ச ஆடம்பரத்தையும் அதற்குக் காட்டித் தந்து விட்டால் ,அது அதனின்று ஒருபோதும் நீங்காது.மாறாக, இன்னும் இன்னும் என அவாவுறும். அந்த அவாவிற்கு வானம் கூட எல்லை இல்லை என்பதைத் தான் நுகர்வு மிஞ்சிய இவ்வுலத்தில் தற்போது நாம் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எனவே, எந்த அளவு தேவைகளைக் குறைத்துக் கொள்கிறீர்களோ அந்த அளவு நலம் என்கிறார். அனைவருக்கும் ஒன்றே போல அஅது சாத்தியமா என்றால் இல்லை என்றே காந்தி பதில் தருகிறார். நடைமுறைக்குப் பொருந்தக் கூடிய பதில் அது.

“ எல்லோருக்கும் இவ்விஷயத்தில் ஒரே அளவை நிர்ணயிப்பதற்கில்லை.ஒரு எறும்பு வௌவும் பொருளின் அளவு வேறாகவேதானிருக்கும்.” என்கிறார். இஇதனால் தான் சந்நியாசம் என்ற கோட்பாடு ஏற்படுத்தப்பட்டதோ என்று வினவும் காந்தி அடுத்த வரியிலேயே அதை மறுதலிக்கிறார். துறவு மேற்கொண்டு குகைகளில் வாழ்தல் ஒருசிலருக்கே சாத்தியப்படுவது. சேவைக்கான் தேவை உள்ள சமூகத்தில் மனிதர்கள் அவ்விதம் தம் பொறுப்புகளைத் தட்டிக் கழித்துச் செல்வதற்கில்லை. எனவே,தேவைகளை எவ்வளவுக் கெவ்வளவு குறைத்துக் கொண்டு எளிய வாழ்க்கை வாழ இயலுமோ அதுவே சிறப்பு. முத்தாய்ப்பாக,நம்மிடமிருந்து எந்தப் பொருள் போய்விட்டபோதிலும் நமக்கு வருத்தமுண்டாக்க்கூடாது என்கிறார். ஆசிரமத்தின் முக்கிய விதியாக்க் காந்தி அடுத்து விவரிப்பது, உடலுழைப்பு. ஆசிரமம் என்ற வகையில் இல்லாமல், தென்னாப்பிரிக்காவில் உருவாகி அமைந்த இரு குடியிருப்புகளிலும் உடலுழைப்பு என்பது உள்ளார்ந்த வாழ்முறையாகவே இருந்தது. அதையே காந்தி இங்கும் விரிவுபடுத்தினார். உடலுழைப்பு மற்றும் சில வகையான வேலைகள் சார்ந்த முகச்சுளிப்பு நிலவிய சமூகத்தில் அதை உடைப்பதாகவே ஆசிரமத்தின் இந்த விதி அமைந்தது. காந்தி அளவிற்கு வேறு எந்த தேசியத் தலைவரும் உடலுழைப்பை வலியுறுத்திப் பேசி அதைச் செயல்பாட்டிலும் கொணர்ந்ததைக் காண முடியவில்லை. அது கோடிக்கணக்கான இந்திய மக்களை மனதில் நிறுத்தி காந்தி கூறியதெனவே நாம் புரிந்து கொள்ள வேண்டும். காந்தி உடலுழைப்பையே மூலதனம் என்கிறார்.

அறிவுச் செயல்பாடுகளே உயர்ந்தவை உடல் சார்ந்த உழைப்பு என்பது சற்று கீழ்நிலையானதே என எண்ணி வந்த சமூகத்தில், இரண்டும் ஒன்றே இரண்டிற்கும் ஒரே மதிப்பே என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியவர் காந்தியே.


ஒரு கை தேர்ந்த சிற்பியைப் போல காந்தி ஒவ்வொரு பகுந்தியையும் துலக்கமாக விவரிக்கிறார். அடுத்து அவர் விளக்குவது ,சுதேசி. உள்ளூர், உள்நாட்டுப் பொருள்களையே உபயோகித்தல் என்ற பொருள் வெளிப்படையானதாக இதற்கு உண்டு என்றாலும் அதன் நுட்பங்களைக் காந்தி விவரிக்கிறார்.” சுத்த சுதேசி தர்மம் விதேசிக்கு விரோதமானதல்ல. ஆயினும், சுதேசியென்பது சர்வதேசப் பற்றுமல்ல” எனக் கூறும் காந்தி ,இரண்டுக்குமிடையே கைக் கொள்ள வேண்டியது எது என்பதைத் தெளிவுறுத்துகிறார். “ எவன் உலகமனைத்தையும் தன் குடும்பமென்று மதிக்கிறானோ அவனுக்குத் தானிருக்குமிடத்திலிருந்தே அனைவருக்கும் சேவை செய்ய சக்தியிருக்க வேண்டும். அது ்அண்டை அயலானுக்குச்்சேவை செய்வதன் மூலமாகவே சாத்தியமாகும் என்கிறார். எனவே, கோடிக் கணக்கான ஏழ்மையில் உழலும் இந்திய மக்களுக்குச் சேவை செய்ய விரும்புபவன் அதற்கான முதல்படியாகச் சுதேசியைக் கைக் கொள்ள வேண்டும் என்பதே காந்தியின் அறிவுறுத்தல்.


சத்தியத்தில் உறுதிகொண்ட அதன் பொருட்டு இறக்கும் கலையைப் பயிலவும் உறுதி பூண்ட ஆசிரமதர்மத்தில் தீண்டாமை என்பதற்கு சற்றேனும் இடமில்லை என்பதைக் காந்தி தெளிவுபடுத்திவிடுகிறார். ஆனால், ஆச்சரியமளிக்கக் கூடிய ஒன்றாக அவரது நெருங்கிய உறவினர்களே இதைக் கடைபிடிக்கப் பெரிதும் தயங்குகின்றனர், தொடக்கக் கட்டத்தில். ஆனால் அச்சோதனைகளைக் காந்தி தம் உறுதிப்பாட்டின் மூலம் கடந்துவிடுகிறார்.” இந்த உலகத்தில் எவனும் உயர்ந்தவனுமல்ல,தாழ்ந்தவனுமல்ல.ஆகையால், தன்னை உயர்ந்தவனென்று கருதுவோன் ஒருபொழுதும் உயர்ந்தவனாய் இருக்க முடியாது. தன்னைத் தாழ்ந்தவனென்று எண்ணிக் கொண்டிருப்பவன் அறியாமையினாலேயே அவ்வாறு எண்ணுகிறான்.அவனுக்குத் தான் தாழ்ந்தவனென்று எண்ணப் போதித்தவர்கள் தம்மை உயர்ந்தவனென்று எண்ணிக் கொண்டிருப்பவர்களே.” எனத் தீண்டாமையை வேரறுப்பதன் அடிப்படையை விளக்குகிறார் காந்தி. தீண்டாமையை எதிர்த்து வாழ்நாள் முழுக்க அவர் போராடினார். அதன் வெளிப்படை வடிவமாக ஆசிரமத்தின் கொள்கைத் திகழ்ந்தது.


ஆசிரமத்தில் விவசாயம் என்பதற்குக் காந்தி முக்கியத்துவம் தரவில்லை என்பதை அவரே குறிப்பிடுகிறார். எனினும் அதை வலியுறுத்தி நடைமுறைப் படுத்தியவர் மகன்லால் காந்தி.எனினும் ஆசிரம்ம் சுயதேவையைப் பூர்த்தி செய்து கொள்ளும் அளவு விவசாயத்தில் ஈடுபட முடியாமைக்குப் பல்வேறு காரணிகள் இருந்தன. அதனோடே சேர்த்து கோ சேவையையும் காந்தி விளக்குகிறார். விவசாய நாடான இந்தியா,அதற்கு அடிப்படையாக விளங்கும் மாடுகளைப் பாதுகாத்து அவற்றின் இறுதி வரை சரியானபடி பயன்படுத்தும் முறைகளை அறிவியல் முறைப்படி தொடர்ந்து பேசியபடியே இருந்திருக்கிறார். “ ஆசிரமம் பசுப் பாதுகாப்பு தர்மத்தை நம்புகிறது. பசு பாதுகாப்பு என்ற சொல்லில் கர்வமும் ஆடம்பரமும் தொனிக்கின்றன. மனிதன் பிராணியின் பாதுகாப்பாளனாக முடியாது. தன் பாதுகாப்புக்கே பிறர் உதவியை நாடுபவனால் பிறரைப் பாதுகாக்க முடியாது”

எனத் தெளிவுபடக் குறிப்பிடும் காந்தி,கோ சேவை யே வேண்டியது என்கிறார். அதனாலேயே தோல் பதனிடும் தொழில் ஆசிரமக் கற்பித்தல்களில் முக்கிய இடம் பிடித்தது. காந்தி அதை ஒரு பத்தியில் அழகுற விளக்கி விடுகிறார்.” இப்போதைக்கு ஆசிரமத்தின் நோக்கம் சிறியதே. அதாவது, ஆசிரமத்தில் ஒரு தலைசிறந்த கோசாலையை நடத்துதல்,பசுவையும் எருதையும் மேம்பாடுறச் செய்தல்,இறந்தபிறகு அவற்றின் எல்லா அங்கங்களையும் உபயோகித்து அவற்றினால் நமக்கு வீண் செலவு ஏற்படுவதில்லை என்று நிரூபித்ததல்,

கோசாலை நடத்துவதன் மூலமாகவே கோசேவகர்களைத் தயாரித்து அவ்வாறு தயாரானவர்களை வெவ்வேறு இடங்களில் நியமித்து வேலை செய்யச் செய்தல்” எனப் படிப்படியாக நிறைவேற்றப் படவேண்டியனவற்றை விளக்குகிறார்.


கல்வி ஆசிரமத்தின் முக்கிய அங்கம். எனவே தொடர்ந்து அது குறித்த உரையாடலைக் காந்தி நிகழ்த்திய வண்ணமே இருந்திருக்கிறார் அவர் ஆசிரம்த்திற்கு எழுதிய கடிதங்களைப் படித்துப் பார்த்தாலே அது விளங்கி விடும்.எதைக் கற்பிப்பபது,எப்படிக் கற்பிப்பது,பொருள் தேட உதவுவது கல்வியின் முக்கிய காரணியாக என்பதன்ற ஒழுக்கமும் சமூக உணர்வும் சேவை மனப்பான்மையும் கொண்ட மனிதர்களைக் கல்வி உருவாக்க வேண்டுமானால் ,அத்தகைய கல்வி எங்ஙனம் அமைய வேண்டும் எனக் காந்தி தொடர்ந்து உரையாடியபடியே இருந்தார். செயல்முறைக் கல்வியில் அதிக ஈடுபாடு கொண்டவரான காந்தி, கல்வியின் பல்வேறு கூறுகளை விளக்கிக் கொண்டே செல்வது வாசித்து மகிழத்தக்கது.


நிறைவுப் பகுதியான ,சத்தியாகிரகம் என்பது முழுமையாக எழுதி நிறைவு செய்யப்படவில்லை.எனினும், அது குறையன்று.இந்த நாட்டையே ஒரு ஆசிரம்ம் போல பாவித்து , அதில் சத்தியாகிரகி என்பவன் நொடி தோறும் தன்னை எதிர்நோக்கும் தருணங்களை எவ்வாறு எதிர்கொள்வான், கொள்ளவேண்டும் என்பதைக் காந்தி தம் வாழ்நாள் முழுதும் போதித்திருக்கிறார். சிறிய நூல் எனினும் காந்தி உருவாக்க விரும்பிய சமூகத்தின் ஆன்மாவை விளக்கும் நூல் எனும் வகையில் முக்கியமான ஒன்று.





No comments:

Post a Comment