Pages

Tuesday, March 4, 2025

தக்கர் பாபாவின் பயணம்- 2- சித்ரா பாலசுப்பிரமணியன்

 

கராஞ்சியா- கோண்ட் சேவா மண்டல். 3.11.1934-5.11.1934


மூன்று நாட்கள் சிறப்பானதாகக் கழிந்தன. இரண்டு நாட்கள் போய் வரவும் ஒருநாள் அங்கு தங்கியிருக்கவும். பாதிரியார் எல்வின் அவர்களுடைய பணிகளைப் பார்வையிட வேண்டும் என இரண்டு வருடங்களாக மிகுந்த ஆவலோடு இருந்தேன். அது தற்போது தான் நிறைவேறியது. பிலாஸ்பூர்- கட்னி வழிப்பாதையில் பெந்த்ரா சாலை நிலையத்திலிருந்து இருபத்து ஐந்து மைல்கள் தள்ளி உள்ள அந்த இடத்திற்கு ஒருவர் நடந்தோ குதிரையிலோ அல்லது டோலி சும்ப்பவர்கள் மூலமாகவோ தான் செல்ல முடியும். பிபரவரி முதல் ஜூன் வரை சுற்றுப் பாதையிலான முப்பத்தாறு மைல்கள் கடந்து மோட்டாரில் செல்ல முடியும். நடந்து செல்ல இயலாதவர்கள் அந்த இடத்தை அடைய முடியாது. நான் பாதி தொலைவு நடந்தும் மீதித் தொலைவை டோலி மூலவாகவும் கடந்தேன்.





அமர்கோண்டகா- ரேவா சமஸ்தானத்தில் அமர்கோண்டகா சமவெளியின் உச்சியிலிருந்து பாய்கிறது நெர்புடா ஆறு. ( நர்மதா ந்தியே இவ்வாறு குறிக்கப்படுகிறது. நெர்புடா, ரேவா என்றும் பல் பெயர்கள்.) இந்தச் சமவெளி இறக்கத்தில் இருக்கும் கராஞ்சியா இந்துக்களுக்குப் புனித தலம். 

ஐம்பத்துமூன்று வருடங்களுக்கு முன் என் பெற்றோர் இங்கு வந்திருக்கின்றனர். கபில்தரா இன்னும் இரண்டு மைல் தொலைவில். பாதை கடினமானது என்பதால் என்னால் செல்ல இயலவில்லை. மத்திய மாகாணப் பகுதியில் கோண்டுகள் பழங்குடியினர். அங்குள்ள பைகாஸ் இன்னும் பல பழங்குடியினருடன் சேர்த்து அவர்களது எண்ணிக்கை மூன்று மில்லியன்கள் இருக்கலாம். பஸ்தார் முதல் மண்டலா வரை கிழக்காகவும் பேதுல் மற்றும் நிமார் வரை மேற்காகவும் விரிந்திருந்த அவர்களது பகுதியைத் தனிப்பட்ட அரசர்கள் ஆண்டு வந்தனர். தற்போது, மிக்க் குறைவான நிலப்பரப்பிலேயே வசிக்கின்றனர் அதோடு உணவுபற்றாக்குறையும்உள்ளது.

கோண்டுகளை விட பைகா பழங்குடியினர் இன்னும் உட்புறமான நாகரிகம் தீண்டாத பகுதிகளில் வசிப்பவர்கள்.

இவர்கள் அனைவரும் தங்களை இராமனின் வமிசத்தோடு குறிப்பாக அவரது தம்பி இலட்சுமணனோடு தொடர்பு படுத்தித் தங்களை லட்சுமண ஜாதி என்றே அழைத்துக் கொள்கின்றனர். பிறரோடு எந்த வித்த்திலும் கலந்து பழகாமல் தனித்ததொரு வாழ்க்கையை மேற்கொள்பவர்கள்.

தறபோதைய நிலையில் கோண்டுகளின் முன்னேற்றத்திற்காக உழைப்பது சவாலான பணி. சென்ற நூற்றாண்டுகளின் நாற்பதுகளில் இங்கு பணியாற்ற வந்த நான்கு ஜெர்மன் மிஷினரிகள் இங்கேயே மரணமடைந்து புதைக்கப்பட்டனர்.

கோண்டுகளால் பெரிய அண்ணன் சின்ன அண்ணன் என அன்போடு அழைக்கப்படும் ஃபாதர் எல்வின் மற்றும் பிரதர் ஷாம்ராவ் இருவரும் தான் கடந்த இரு வருடங்களாக இங்கு தொடர்ந்து பணி புரிகின்றனர். மலேரியா அதிகமாக இருக்கும் இப்பகுதியில் நல்ல உடல் நலத்தோடு மட்டுமின்றி சமூக சேவை ஆற்ற வேண்டும் என்ற தீவிர பற்று உடையவர் மட்டுமே இங்கு பணிபுரிய இயலும் . கிறுத்துவரான ஃபாதர் எல்வின் ,இங்கு கோண்டு மக்களுக்கு சேவை செய்ய மாத்திரமே பணி புரிகிறார். அவர்களிடம் மதமாற்ற செயல்கள் எதையும் செய்வதில்லை. அவருடைய இந்து உதவியாளர்களோடு சேர்ந்து அவரும் இந்து பிரார்த்தனைப் பாடல்களையும் கிறுத்துவத் தோத்திரங்களையும் பாடிப் பிரார்த்தனை நடத்துகிறார். இப்படி நடந்து கொள்ளும் அவரை கிறுத்துவர்களோ இந்துக்களோ எவரும் பாராட்டுவதில்லை. ஆசாரமான வழிகளில் இருந்து விலகி விட்டார் எனக் கிறுத்துவர்களும். அதெப்படி மதமாற்றம் பற்றி பேசாத கிறுத்துவர் என இந்துக்களும அவரை நம்ப மறுக்கின்றனர். அவருடைய சில நண்பர்கள் நன்கொடையாகத் தரும் சொற்ப தொகையைக் கொண்டு  அவர் பணி புரிகிறார்.


குழந்தைகளுக்கான பள்ளிக்கூடம், தொழுநோயாளிகள் இல்லம், மருத்துவ உதவி ஆகிய தளங்களில் எல்வின் சேவை புரிகிறார். எவரும் வரத் தயங்கும் இந்த இடங்களில் பணிபுரிய இளையோர் ஏழு எட்டு பேருக்கு எல்வின் பயிற்சி தந்து பணியாற்ற வைத்திருக்கிறார். இரண்டு முதல் பத்து மைல் தொலைவில் உள்ள கிராமங்களில் இருந்து பணிபுரிய வரும் இவர்களில் பங்கா பழங்குடியைச் சேர்ந்த அகல்யா என்ற பெண்ணும் ஒருவர்.

கோண்டு பழங்குடியினரின் வீடுகளின் அமைப்பில் கட்டப்பட்ட சிறு குடிசைகளில் பள்ளி நடக்கிறது. ஓராசியர் பள்ளிகளை நடத்த மாதமொன்றுக்குப் பதினைந்து ரூபாய் வரை செலவாகிறது.

தொழுநோயாளிகளுக்கான இல்லத்தில் தற்போது பன்னிரெண்டு பேர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். Chalmogrm எண்ணையை ( ஆயுர்வேத்த்திலும் சீன மருத்துவ முறையிலும் பயனபடுத்தப்பட்ட ஒரு தாவர மருந்து) ஊசி மூலம் உட்செலுத்துவது தான் அப்போதய சிகிச்சை முறை. ஷாம்ராவ் முறையான மருத்துவப் படிப்பு படித்தவர் இல்லையென்றாலும் அவரும் இப்போது இந்த இல்லத்தைக் கவனித்து வருகிறார். மத்திய மருந்துக் கூடம் கராஞ்சியாவில் உள்ளது. ஒவ்வொரு ஆசிரியரும் தம் கைகளில் ஏந்திச் செல்லும் சிறு பெட்டிகளில் சின்னம்மைக்கான மருந்து முதல் சாதாரண நோய்களுக்கான மருந்துகளையும் வைத்திருக்கிறார்கள். தொலைதூரத்தில் இருந்தும் கோண்டுகள், மலேரியா, கட்டிகள், பால்வினை நோய்களுக்கான மருந்துகள் வேண்டி இங்கு வருகிறார்கள்.

வருவதற்குக் கடினமான வழி என்றாலும் வந்து பார்க்க வேண்டிய இடம் இது. நான் அங்கு இருபது மணி நேரம் தான் இருக்க முடிந்தது. ஆயினும. மிகச் சிறந்த அனுபவம் கிடைத்தது. ஆரவாரமின்றி ,எவரும் கவனிக்கவில்லையெனினும் உண்மையான அன்போடும் சேவை மனப்பான்மையோடும் செய்யும் பணி தன்னளவில் மிகச்சிறந்தது. இளைய இந்தியா, சோசலிஸ்டு, இந்து பண்டிட் , நகரத்தில் பணி புரிவோர் என எவருக்கும் இப்பணியே சிறந்த முன்மாதிரி. வெரியர் எல்வின் செயிண்ட் பிரான்ஸிஸின் உண்மையான சீடர். பிற உலக நுகர்வுகளை எல்லாம் மொத்தமாக ஒதுக்கி வைத்துவிட்டு ,கதர் அணிந்து ,நம் மக்களுக்காக சேவை புரியும் இவர் ஒரு உண்மையான கிறுத்துவர். சர்வதேச மனப்பான்மை கொண்டவர். காண்பதற்கு அரியவர். மனித குலத்திற்கு உண்மையான தொண்டு புரியும் இவரிடம் தங்கி சமூக சேவை ஆற்ற விரும்பும் இளைஞர்கள் சில நாட்களேனும் பயிற்சி பெற வேண்டும்.


பென்ட்ரா சாலை-6.11.1934


பெரிய நகர்ப்புறமாக இந்த இடம் மாறி வருகிறது. காசநோய்க்கான சுகாதார நிலையம் ஒன்று, கிறித்துவ மிஷனரியால், ரயில் நிலையத்திலிருந்து ஒரு மைல் தூரத்தில் நடத்தப்பட்டு வருகிறது. முப்பத்திமூன்று சம்மார் குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன. இறந்த மாடுகளின் தோலை உரிப்பது மற்றும் காலணி செய்யும் தொழிலில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முப்பத்து ஏழரை சதவீத வட்டியில் நகைகளை அடைமானம் வைக்கின்றனர்.வட்டியைச் செலுத்துவதற்கான சிறு தொகையைக் கூட அவர்களால் ஈட்ட முடிவதில்லை.

கூட்டுறவு அமைப்பு ஒன்றைத் தொடங்கினால் பயன் ஏற்படும். இங்குள்ள பள்ளிகள் ,கிணறுகள் பொதுவானவையாகவே உள்ளன. சம்மார்களுக்குத் தனிக் கிணறும் உள்ளது. இங்குள்ள சுகாதார கமிட்டிக்குத் துப்புரவு பணியாளர் சாதியிலிருந்து ஒருவர் நிறுத்தப்பட்டார். ஆனால்,ஆசாரவாதிகளான பிற வகுப்பினர் அதை ஒப்புக்கொள்ளவில்லை.


பிலாஸ்பூர்-6.11.1934

நான்கு மணி நேரம் இங்கு செலவழித்தேன். சம்மார்( இங்கு இவர்கள் விவசாயத் தொழிலாளர்கள்). காஸியா (இவர்கள் இங்கு டோங்கா இழுப்பவர்கள்,புல் விற்பவர்கள்). மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களைச் சந்தித்தேன்.

மேக்தார் மற்றும் அட்ஹோலி பிரிவினர் இங்கு பன்றி மேய்ப்பவர்கள். நகர்ப்புறத்தினருக்கு இந்தப் பன்றிகள் பெருந்தொல்லை. தனியார் ஒருவரிடமிருந்து நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து ,துப்புரவுப் பணியாளர்கள் தங்களுக்கென குடிசைகள் கட்டிக் கொண்டுள்ளனர். எல்லா முனிசிபாலிட்டிகளிலும் துப்புரவுப் பணியாளர்களுக்கெனத் தூய்மையான வசிப்பிடம் கட்டித்தரப் படவேண்டும் என்ற சட்டம் கட்டாயமாக்கப்பட வேண்டும். இவர்கள் வசிக்கும் கர்பேலா மொகல்லா பகுதி மிக மோசமான தரத்தில் உள்ளது. இவர்களின் கடன் நிலை குறித்த சர்வே ஒன்றினை உள்ளூர் சங்கம் எடுத்திருக்கிறது. அவர்களது ஆறு மாத வருமானத்தை அவர்கள் வட்டியாகவே கட்டி விடுகிறார்கள். பதான்கள் அல்லது கான்கள் மிக்க் கடுமையான வட்டியில் கடன் தருகின்றனர். கூட்டுறவு அமைப்பு ஒன்றைத் தொடங்கினால் இத்தொழிலாளர்கள் நன்மை அடைவர்.


சர்க்கந்தா ஊரகம்.

பிலாஸ்பூரிலிருந்து ஒரு மைல் தள்ளி இருக்கும் கிராமம் இது. நடுவில் ஆறு ஒன்று ஓடுகிறது. இங்கு வசிக்கும் ஓய்வுபெற்ற கூட்டுறவுத்துறை தணிக்கையாளரான ஷாமைய்யாவின் உதவியால் இந்த கிராமத்தில் பல முக்கியமான நலத்திட்டப் பணிகள் முன்னெடுக்கப் பட்டுள்ளன. முன்பு இந்த ந்திக்கரை மனிதக் கழிவுகளால் அசுத்தம் நிறைந்தத்தாக இருந்தது. இப்போது இரண்டு அடி குழி தோண்டி கழிவுகளுக்காகப் பயன்படுத்துவதால் ந்திக்கரை சுத்தமாக உள்ளது. இங்கு வசிப்பவர்கள் பொரும்பாலோர் சம்மார் பிரிவைச் சேர்ந்தவர்கள்.தனியாகப் பள்ளி எதுவும் இல்லை. ஷாமைய்யா பள்ளி தொடங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்.முழு கிராமமும் பெருக்கிச் சுத்தம்செய்யப்பட்டுத் தூய்மையாக்க் காட்சியளிக்கிறது. ஊரகம் சுகாதாரம், கிராம மேம்பாட்டிற்கு இவரைப் போல அடக்கமாகவும் உண்மையான பற்றோடும் பணியாற்றுவோர் ஒரு நூறு பேர் இருந்தால் போதாதா?



நவம்பர் 7,8. 1934


இந்த இரு தினங்களையும் காந்திஜியுடன் கழித்தேன். அவருடன் நேரிடையாகப் பேசினால் தான் சில விஷயங்களில் தெளிவு பிறக்கும். சபர்மதியில் உள்ள ஹரிஜன் ஆசிரமம் குறித்து விவாதித்தோம். அதில் உள்ள மாணவிகளுக்கான விடுதியை விரிவாக்கினால்,கூடுதலாக முப்பது மாணவிகளைச் சேர்க்கலாம் என்றும் அங்கேயே தங்கிப் பெண்குழந்தைகள் வீட்டு வேலைப் பயிற்சியோடு தொழிற் பயிற்சியும் பெற ஏதுவாகும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

பல்வேறு மாகாணப் பிரதேசங்களிலிருந்து அனுப்பப்பட்டிருந்த வரவு செலவு விவரங்களைக் காந்தி உன்னிப்பாக்க் கவனித்தார். சில மாகாணச் செலவுகளில் பரப்புரைக்காக ஏதும் செலவு செய்யப்படாததைக் கவனித்துக் குறிப்பிட்டுத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களின் கணக்கில் உதிரிச் செலவு எனக் கணிசமான தொகை குறிப்பிடப்பட்டிருந்தது.அவரது கழுகுப் பார்வையில் அது தப்பவில்லை.

அங்கு கான்அப்துல் கபார் கான்,அவரது தம்பி மற்றும் பிருந்தாவனின் பிரேம் மகா வித்யாலயாவின் ஆச்சார்ய. ஜே.கே.அகர்வால் ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது என் பாக்கியம். அங்கு தங்கியிருந்த கல்கத்தாவின் சதீஷ் பாபுவுடனும் ஹரிஜனங்களின் பிரச்சினைகள் குறித்து உரையாட வாய்த்தது.


அம்ரோடி- 9.11.1934

இங்கு ஒரு அரை நாள் கழிந்தது. தீபாவளிப் பண்டிகை என்பதால் ,திருமதி.பட் அவர்களால் நடத்ததப்படும் ஒருங்கிணைந்த இருபாலாருக்கான ஹரிஜன மாணவ விடுதியைப் பார்வையிட முடியவில்லை.முன்பு இப்பகுதியில் மூன்று ஹரிஜன சாதியிருக்கான மூன்று தனித்தனி விடுதிகள் இயங்கி வந்தன. ஆனால், இணை ஆணையரின் முயற்சியால் தற்போது அவை ஒருங்கிணைக்கப்பட்டு விட்டன.மஹாஜன்புராவில் இருந்த மாநகராட்சி வட்டாரப் பள்ளியில் ,ஹரிஜன்களோடு சிறுய உரையாடல் நடத்தப்பட்டது. கேள்விகளும் பதில்களும் சுவாரஸ்யமாய் இருந்தன. இந்தப் பள்ளி டிப்ரஸ்டு கிளாஸ் மிஷனின் வி்.ஆர்.ஷிண்டேவால் தொடங்கப்பட்டது. தற்போது மாநகராட்சி இதை நடத்துகிறது. நான்கு ஆசிரியர்கள் கொண்ட அப்பள்ளியில் நூற்றம்பது மாணவர்கள் பயில்கின்றனர். அப்பகுதியின் ஹரிஜனத் தலைவர்களோடு உரையாடியதன் மூலம் ஹரிஜன் சேவக் சங் மேற்கொள்ளும் பணிகள் குறித்த அவர்களது ஐயங்கள் களையப்பட்டன.


மோர்ஷி.


1933 இல் , தம் தீண்டாமை யாத்திரையின் ஒரு பகுதியாக காந்தி இந்த இடத்திற்கு வந்திருந்தார். அவரிடம் அப்போது சிறிய நன்கொடையும் வழங்கப்பட்டது. திரு. அகார்டே, பதினைந்து மாணவர்கள் தங்கிப் பயிலும்படியான மாணவர்விடுதி ஒன்றை நடத்துகிறார். அரசுப் பணியில் இருக்கும் ஹரிஜன் ஒருவர், முன்பக்கம் விசாலமான இடம் கொண்ட தனது சிறிய பங்களாவை கட்டணம் ஏதும் இன்றி இவ்விடுதிக்காக்க் கொடுத்து உதவியிருக்கிறார். இந்த மாணவர்கள் அரசிடமிருந்து எட்டு ரூபாய் உதவிக் கட்டணமாகப் பெறுகின்றனர்.

விடுதியின் உணவுக் கட்டணம் இரண்டு ரூபாய். மீதி அவர்களது எதிர்காலப் படிப்புச் செலவுக்குப் பயன்படும். துப்புரவுப் பணியாளர்களின் குடியிருப்புக்கும் சென்றேன். ஏறக்குறைய நூற்றம்பது சதவீத வட்டி கொடுத்து இவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இவர்களைக் கடன்களில் இருந்து மீட்டெடுக்க ஒரு கூட்டுறவு அமைப்பைத் தொடங்குவது எப்படி என நான் ஆணையரிடம் விளக்கினேன். அவர்கள் வீடு கட்டிக் கொள்ள கடன் வழங்கப்படுகிறது, எனினும் பதிமூன்று வீடுகளே கட்டப்பட்டுள்ளன.

இங்கிருந்து பதினான்கு மைல் தொலைவில் உள்ள பெனோடா என்ற கிராமத்திற்குச் சென்றேன்.மில் துணியிலிருந்து காத்திரமான நாடாக்கள் இங்கு தயாராகின்றன. கிஸன்ராவ் என்ற ஹரிஜன் வீட்டில்,முன்புறம் இருந்த அழகான தோட்டத்தில் நானும், அம்மக்களுக்காகப் பணியாற்றும் அம்ருத்கரும் சிறு உரை ஒன்றை நிகழ்த்தினோம்.


புஷாவல் -11,நவம்பர்


அம்ரோட்டியில் உள்ள ஹரிஜன சேவையில் ஆர்வமுள்ள நண்பர்களைப் பார்த்து உரையாடியபின் நான் பின்னிரவில் புஷாவல் வந்து சேர்ந்தேன். காலையில் துப்புரவுப் பணியாளரின் குழந்தைகள் பயிலும் பள்ளிக்குச் சென்று பார்த்தேன்.அப்படியே, துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் மாங் பிரிவினரின் குடியிருப்புகளையும் பார்வையிட்டேன். இந்தி மொழியைப் பேசும் இப்பணியாளர்கள் ஜெய்ப்பூர், ஆல்வர் பிரதேசம் மற்றும் ஹவாப் மாநிலங்களிலிருந்து இங்கே குடியேறியுள்ளனர்.இங்கும் ரயில்வே காலனி மற்றும் டவுன் பகுதியிலும் ஏராளமான ஹரிஜன்கள் வசிப்பதால், நாம் செய்ய வேண்டிய பண ஏராளம் உள்ளது. உள்ளூரில் செயல்படும் நமது சங் அமைப்பு வி்.வி. தஸ்தானே வின் மேற்பார்வையில் செயல்படுகிறது. எனினும் செய்யப்பட வேண்டியவை ஏராளம் உள்ளன.


சபர்மதி- 12, நவம்பர்.


சபர்மதி ஆசிரமத்தில் செப்பல் பணிகளைக் கற்றுக் கொள்ளும் மாணவர்களைச் சந்தித்தேன்.அங்குள்ள பல்வேறு கட்டடங்களும் பார்த்துவிட்டு,குடும்பத்தோடு அங்கு தங்கியுள்ள நண்பர்களைச் சந்தித்து உரையாடினேன். வாடகைக்கு விடப்பட்டிருந்த தோல்பதனிடும் இடம்,மாடுகள் கொட்டில் ஆகியவற்றையும் சென்று பார்த்தேன். அகமதாபாத்தில் உள்ள சங்கின் தன்னார்வலர்களுடன் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த விவாதம் நடைபெற்றது.


கத்தியவாட்- லக்தார்-13, நவம்பர்


ஒரு மாத காலம் எனத் தீர்மானிக்கப் பட்டிருந்த பயணம் லக்தாரிலிருந்து தொடங்கியது.பிரதேச அரசின் உதவியுடன் கடந்த பத்து வருடங்களாக நடத்தப்பட்டு வரும் ஹரிஜனப் பள்ளியைப் பார்வையிட்டேன்.

பள்ளியின் மேம்பாடு சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை.கடந்த இரு வருடங்களாகத் துப்புரவு பணியாளர் ஆண் குழந்தைகளுக்காக தனியான வகுப்பு ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. ஹரிஜனங்களுக்கும் துப்புரவு பணியாளர்களுக்கும் இடையில் நிலவும் பிளவு கத்தியவாடில் மிகப் பெரியதாகவே இருக்கிறது.இவர்களை இணைக்கும் வித்த்தில் பணிகள் ஒருங்கிணைக்கப் பட வேண்டியது அவசியம். கடந்த சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டிருந்த ஆண்கள் பள்ளியிலிருந்து மாணவர்கள் ஓரிடத்தில் திரண்டிருந்தனர்.அவர்களுக்கு ஆடைகள் வழங்கப்பட்டன.ஹரிஜன மக்களிடையே ,இறந்த விலங்குகளை உண்ண வேண்டாம் என்பது குறித்தும் சிறு உரை நிகழ்த்தினேன்.இந்தப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்காக உள்ளூர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.


No comments:

Post a Comment