Pages

Sunday, February 23, 2025

தக்கர் பாபாவின் பயணம்-1- சித்ரா பாலசுப்பிரமணியன்


தக்கர் பாபா தம் வாழ்நாளையே ஒடுக்கப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக அர்ப்பணித்தவர். ஒவ்வொரு நொடியும் அம்மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது குறித்தே சிந்தித்தவர். அயராத உழைப்பின் அடையாளமாகத் திகழ்ந்தவர். ஓய்வறியாப் பெரும் பணியைச் சுமந்தவர். எங்கு இயற்கைப் பேரழிவுகள் நடந்தாலும் அங்கு முதல் ஆளாகச் சென்று நிற்கும் செயலூக்கம் அவருக்கு வாய்த்திருந்தது. நல்லெண்ணமும் ஊக்கமும் இருந்தால் செயல்களைச் செய்து முடிப்பதற்கான நிதியும் மக்கள் உதவியும் பறவையும் அதன் நிழலும் போலத் தொடர்ந்து வரும் என்பார் காந்தி.அதைத் தன் ஒவ்வொரு செயலிலும் நிரூபித்தவர் தக்கர் பாபா.



இந்தியா முழுக்க தக்கர் பாபா பயணித்திருக்கிறார். அவரது அனைத்துப் பயணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனவா எனத் தெரியவில்லை. காந்தி, தமது ஹரிஜன் யாத்திரையைத் தொடங்கும் முன் ஒடுக்கப்பட்டோர் தொடர்பாக இன்னும் பல செயல்பாடுகளைத் தொடங்கினார். சர்வன்ட்ஸ் ஆஃப் அன்டச்சபில்ஸ் சொசைட்டி என்று முதலில் தொடங்கப்பட்ட அமைப்பு பின்னர் ஹரிஜன் சேவக் சங் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பிரிட்டிஷ் இந்தியாவின் பல்வேறு மாகாணங்களில் அதற்குக் கிளைகள் துவங்கப்பட்டன.தன்னார்வலர்கள்,செயல்பாட்டாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவ்வப் பகுதியின் பிரச்சினைகளை

அந்தந்தப் பகுதியில் இயங்கிய ஹரிஜன் சேவக் சங் அமைப்புகள் கண்டுணர்ந்து கூடிய வரையிலான தீர்வுகளைக் கண்டறியவும் உதவிகளைச் செய்யவும் தலைப்பட்டன. இவ்வமைப்பின் செயலாளராகத் தக்கர் பாபா இந்தியா முழுக்க பயணம் மேற்கொண்டார். காந்தியின் ஹரிஜன் யாத்திரையைத் திறம்பட வடிவமைத்துக் காந்தியுடன் தக்கர் பாபாவும் ஏறக்குறைய அப்பயணத்தில் இணைந்திருந்தார். அந்த யாத்திரை முடிந்து காந்தி வார்தா சென்றடைந்ததும், தக்கர் பாபா மீண்டும் தம் பயணத்தைத் துவக்குகிறார். தமது இந்தப் பயணங்களை அவர் நிரல்படப் பதிவு செய்திருக்கிறார். என் பயண டைரி குறிப்புகள் என்ற பெயரில் ஹரிஜன் இதழில் பதிவு செய்யப்பட்ட இக்குறிப்புகள் ஆர்வமூட்டுபவை. அவை மிகச் சிறந்த சமூக ஆவணமாகவும் இந்தியாவின் சமூக நிலையை எடுத்துக் காட்டாகவும் விளங்குவதை வாசிக்கும் எவரும் உணர் முடியும்.


ஹரிஜன் இதழ் ,நவம்பர் 16, 1934 இல் பதிவான விவரங்களோடுத் தொடங்குவோம். தக்கர் பாபா கத்தியவார் பகுதியில் பிறந்தவர். அவரது இளமைக் காலம் அங்கேயே கழிந்தது. தமது, முதற்கட்ட ஏழுவாரப் பயணத்தில் முதல் இருவாரங்களை அவர் கத்தியவார் பயணத்தில் செலவிடுகிறார். சென்ட்ரல் பிராவின்ஸ் ,பேரார், கத்தியவாட், கட்ச் பகுதிகளில் அவரது பயணம் விரிகிறது. முன்னரே, தீண்டாமைக்கு எதிரான செயல்பாடுகள் நடைபெற்று வந்தன எனினும் சேவக் சங் கின் சார்பாக அவை அமைப்பு ரீதியிலான பணிகளாகத் தொகுக்கப் படுகின்றன. எனவே,தாம் கண்டனவற்றை இப்பதிவுகளில் எழுதுவதாக்க் குறிப்பிட்டு தம் டைரி குறிப்புகளை எழுதுகிறார் தக்கர் பாபா.


ஜான்ஸி- 30.10.1934


இங்கு ஐந்து , ஆறு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் அவர்களது வாழிடத்திலேயே மிகச் சிறப்பான கல்விப் பணிகளை ஹரிஜனங்களுக்குச்்செய்து வருகிறார்கள். அவர்கள் தொடங்கிய பள்ளியில் நூற்று அறுபத்து ஏழு குழந்தைகள் பயின்றனர். நான் சென்ற நாளில் பள்ளியில் நூற்றியெட்டு மாணவர்கள் இருந்தனர். அந்த ஆசிரியர்களுக்கு மாதம் மூன்று ரூபாய் தான் சம்பளம் வழங்கப்பட்ட போதும் அவர்கள் மனநிறைவோடு பணி செய்தனர். இப்போது மாநகராட்சி சில நிதிவுதவிகளை அளிக்க முன்வந்திருக்கிறது. எனவே,அவர்கள் சம்பளம் ஆறு ரூபாய்க்கு உயர்த்தப்படலாம். இயன்ற பெற்றோர் மாதம் இரண்டு ரூபாய் நன்கொடை வழங்குகின்றனர்.

இப்பகுதியில் நயம் பஸ்தி எனுமிடத்தில், சேவக் சங் சார்பாக ஒரு ஆசிரியர் தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்காக காலை பதினோரு மணி முதல் மூன்று மணி வரை கல்வி கற்பிக்கிறார். இன்னொரு இடத்தில் Barar எனும் சாதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு,மற்றொருவர் மாலை மூன்று முதல் ஆறு மணி வரை பாடம் எடுக்கிறார். இந்த சாதியினர் தூய்மைப் பணியாளர்களுடன் இணைய மாட்டார்கள். இன்னொருவர் பெரியவர்களுக்காக, இரவு ஏழு முதல் எட்டரை மணி வரை பாடம் எடுக்கிறார்.

வண்ணார்களும் கும்ஹார் என்ற பானை வனைபவர்களும் இங்கே தீண்டத்தகாதவர்களாகக் கருதப்படுகின்றனர். பொதுச் சமூகத்தால் இங்கு தச்சுப் பயிற்சிக் கூடம் ஒன்றும் அனாதை விடுதி ஒன்றும் நடத்தப்படுகின்றன. அரசாங்க உதவி சிறு அளவில் கிட்டுகிறது. தரமான அறைகலன்கள் உண்டாக்கப் படுகின்றன என்றாலும் அவற்றை விற்பனை செய்வதில் சிரமங்கள் உள்ளன.


ஹோஷங்காபாத் C.P -1.11.1934


இங்கு முனிசிபாலிட்டியில் துப்புரவு பணியாளர்களுக்காக கூட்டுறவு கடன் அமைப்பு ஒன்று தொடங்கப்பட்டிருக்கிறது. நூறு பணியாளர்களில் பத்து பேர் இணைந்திருக்கிறார்கள். மற்றவர்களும் விரைவில் இணைவார்கள்.இங்கு, முனிசிபாலிட்டியின் தலைவரே ஹரிஜன் சேவக் சங்கின் தலைவராகவும் இருப்பதால் வேலை எளிதாக முடியும். இங்கு சேவக் சங் சார்பாகத் தொடங்கப்பட்ட இரவுப்பள்ளி ஒன்றை முனிசிபாலிட்டி தன் வசம் எடுத்துக் கொண்டது. புத்தகம் சிலேட்டுகள் வழங்கப்படுகின்றன.எழுபது மாணவர்கள் பயில்கிறார்கள். சம்மர் சாதியினர் இங்கு செருப்பு தைக்கும் பணியோடு கல் கொத்தும் பணியும் செய்கின்றனர்.

துப்புரவு பணியாளர்கள் தனிப்பகுதியில்்மண் வீடுகளில் வசிக்கிறார்கள். அவர்களது குடியிருப்பு பகுதி தனியாக இருக்கிறது. வாழ்விடம் தூய்மையாக உள்ளது. குடிநீர்ப் பஞ்சம் இல்லை. அவர்களுக்கென கிணறு ஒன்று உள்ளது.



No comments:

Post a Comment