பாபூ என் தாய் - மனு காந்தி - 5
6. காலம் காலம் தவறல் பாவம்
நவகாளியில் இருந்தபொழுது ஒவ்வொரு நாளும் காலை ஏழு மணிக்கு இரவு தங்கியிருந்த
கிராமத்திலிருந்து அடுத்த கிராமத்துக்கு யாத்திரை தொடங்கி வந்தார். ஏழு மணி அடித்த
பிறகு இரண்டு நிமிஷம் தாமதம் ஆகிவிட்டாலும் பாபூஜிக்கு மிகவும் வருத்தமுண்டாகிவிடும்.
ஒருநாள் மூட்டை முடுச்சுகளைக் கட்டுவதில் சிறிது நேரமாகிவிட்டது. இதற்குக் காரணம், பாபூஜி எழுந்த பிறகு அவருடைய சில
சாமான்களைக் கட்டவேண்டியிருந்தது. அவைகளைக் கட்டி வைப்பதற்கு ஐந்து நிமிஷம்
பிடித்தது. ஆகவே பாபூஜி, என்னைப் பார்த்து, “இதோ பார், வெளியே பஜனை கோஷ்டியாரும்
கிராமத்தவர்களும் எவ்வளவு நேரமாகக் காத்திருக்கிறார்கள். உனக்கு இன்னும் பொழுதாகவில்லையா?
ஐந்நூறு பேர்களுடைய ஐந்து நிமிஷத்தைப் பறித்துக்கொண்டுவிட்டாயே. இது
எப்படி சரியாகும்? நான் போகிறேன். நீ பின்னால் வா. இவ்வளவு
நேரம் வீணானது எனக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. இன்று நான் போவதால் இனி தினமும்
உனக்கு நேரமாகுமானால் பின்னால் வந்து சேர்ந்துகொள்ளலாம் என்று எண்ணாதே. நான்
கிழவன், நீ குழந்தையாகையால் ஓடி வந்து என்னை வழியில்
பிடித்துவிடலாம் என்ற எண்ணத்தினாலும் நீ பின்தங்கலாம். ஆனால் இது பாவமாகும்.
ஆகையால் எப்பொழுதும் காலம் தவறக்கூடாது. எல்லா வேலைகளும் அததற்குரிய காலத்தில்
நடைபெற்றே ஆகவேண்டும். நான் ஒருவரிடம் ஏழு மணிக்குப் புறப்படுவதாகச் சொல்லி,
புறப்படும்பொழுது ஏழடித்து இரண்டு
சகிண்டு ஆகிவிட்டாலும் அந்தத் தாமதம் என் மனத்தை உறுத்துகிறது.”
***
நவகாளியில் நாராயணபுரம் என்ற ஒரு கிராமம். வழக்கம்போல் பாபூ 7 மணிக்கு அங்கே போய்ச் சேர்ந்தார். ஒரு எளிய
கைகோளர் வீட்டில் நாங்கள் தங்கினோம். ஒரு கிராமத்திற்குச் சென்றதும் சுடுநீரினால்
தம் கால்களைக் கழுவச்செய்வதும் பிறகு தம் எழுத்து முதலிய வேலைகளை ஓரளவு
பார்ப்பதும் பாபூவின் வழக்கம். இதற்கிடையில் நான் அவருடைய ‘மாலிஷ்’, ஸ்நானம் முதலியவைகளுக்கு ஏற்பாடுகள் செய்துவிடுவேன்.
அன்றைய தினமும் அவ்வாறே செய்தேன். பாபூ ஸ்நானத்தில் ஸோப்பு தேய்த்துக்கொள்வதில்லை.
அதற்கு பதிலாக சொரசொரப்பான கல் ஒன்றை உபயோகிப்பது வழக்கம். இந்தக் கல் பல
வருஷங்களுக்கு முன் மீராபஹன் அவருக்குக் கொடுத்தது. நான் இதை முதல் நாள் தங்கிய
கிராமத்தில் வைத்து மறந்து வந்துவிட்டேன். ஸ்நான அறையில் பாபூவின் எல்லா
சாமான்களையும் கொணர்ந்து வைக்கும்பொழுது எனக்கு இதன் ஞாபகம் வந்தது. நான் பாபூவினிடம்,
“பாபூஜி, நான் உங்கள் கல்லை எங்கோ மறந்து வைத்துவிட்டேன்.
நேற்று தங்கியிருந்த அந்த கைகோளர் வீட்டில் அது தங்கிவிட்டதோ என்னவோ; இப்பொழுது என்ன செய்யலாம்?” என்றேன். பாபூ சிறிதுநேரம் ஆலோசனை
செய்தார். பிறகு, “நீ பிழை
செய்துவிட்டாய். நீயே திரும்பிப்போய் அதைத் தேடிக்கொண்டு வரவேண்டுமென்பதே என்
விருப்பம். நிர்மல் பாபுவிடம் சொல்லிவிடு. அவர் எனக்குச் சாப்பாடு தயாரித்துவிடுவார்.
ஆனால் கல்லைத் தேடுவதற்கு நீ தனியாகவேதான் போகவேண்டும். ஒருமுறை இவ்வாறு செய்தால்
இனி இது எப்பொழுதும் உனக்கு நினைவிருக்கும்” என்றார்.
நான் பயந்துகொண்டே, “பாபூஜி,
இந்த கிராமத்தில் இவ்வளவு தொண்டர்கள்
இருக்கிறார்களே, அவர்களுள்
ஒருவரை நான் துணைக்கு அழைத்துக்கொண்டு போகலாகாதா?” என்று கேட்டேன்.
அதற்கு பாபூ, “எதற்காக?” என்று கேட்டார். என்னால் இதற்கு பதில் சொல்ல
முடியவில்லை.
நவகாளியில் எங்கும் அடர்ந்த தென்னை, கமுகுமரக் காடுகள் அதிகம். புதிதாகப் போகிறவர்களுக்கு அவைகளிடையே போகவேண்டிய
வழியே புலனாகாது. மேலும் அப்பொழுது ஜாதிச் சண்டை உக்கிரமாயிருந்த காலம். அந்த
வழியெங்கும் முஸல்மான்கள் வீடுகளேயிருந்ததோடு கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில்
ஏனென்று கேட்பாரில்லாத பாழடைந்த பிரதேசம். அங்கே தனியாகப் போவதெப்படி? ஆனால் பிழையென்னவோ செய்யப்பட்டுவிட்டமையால்
போவதைத் தவிர வேறு உபாயமில்லை. ஆகையால் பாபூ “எதற்கு” என்று கேட்டதற்கு பதிலெதுவும்
சொல்லாமலே நான் ஆத்திரத்துடன் புறப்பட்டுவிட்டேன். துஷ்டர்கள் யாராவது வந்து தாக்காமலிருக்கவேண்டுமே
என்று மனதுக்குள் பயமாயிருந்தது. ஆனால் ராமஸ்மரணை செய்துகொண்டே நாங்கள் வந்த வழியை
அடிச்சுவட்டினால் நிதானித்துக்கொண்டு நடந்துகொண்டிருந்தேன்.
இறுதியில் அந்தக் கைகோளர் வீடு வந்தது. அந்த வீட்டில் ஒரு கிழவி மட்டுமே
இருந்தாள். அவளுக்கு அந்தக் கல்லின் மதிப்பு எப்படித் தெரியும்? அவள் அதை எடுத்து எறிந்துவிட்டாள். நான் எவ்வளவோ
சிரமப்பட்டு அதைத் தேடினேன். அது கிடைத்தபொழுது எனக்கு உண்டான ஆனந்தத்திற்கு
அளவேயில்லை. அதை எடுத்துக்கொண்டு உடனே நாராயணபுரத்திற்குத் திரும்பினேன். காலை 9
மணிக்குக் கிளம்பினவள் மத்தியானம் 1 மணிக்கு வந்து சேர்ந்தேன். பசியோ இவ்வளவென்று
சொல்லத் தேவையில்லை. ஆனால் இந்தப் பிழையினால் பாபூவுக்குச் சிறிதுநேரம் சேவை செய்ய
முடியாமற் போய்விட்டதைக் குறித்து அதிக வருத்தமாயிருந்தது. இதனால் பாபூவிடம்
கல்லைக் கொடுக்கும்பொழுது எனக்கு அழுகை வந்துவிட்டது.
பாபூ என்னிடம், “பார்,
இன்று நீ பரீட்சிக்கப்பட்டாய். கடவுள்
செய்வதெல்லாம் நம் நன்மைக்கே. உனக்கு நினைவிருக்கிறதல்லவா, நீ என்னிடம் வந்த முதல் நாளன்று நான் இந்த யாத்திரை
யக்ஞத்தில் கலந்துகொள்வது பெருத்த துணிச்சலான காரியமென்று உனக்கு இரவு 2 மணி
வரையில் விளக்கிச் சொன்னேனே? சிறிது
அதைரியமடைந்தாலும் பரீட்சையில் தவறிவிடுவாய் என்றேன். ஆகையால் இப்பொழுது
வேண்டுமானாலும் திரும்பிப்போய் விடலாம். ஆனால் யாத்திரை தொடங்கியான பிறகு நீ
எங்கும் போகமுடியாது. இந்தக் கல்லின் காரணமாக இன்று உனது முதல் பரீட்சை நடந்தது.
அதில் நீ தேறிவிட்டதைக் குறித்து எனக்குண்டாகும் மகிழ்ச்சியை என்னென்பேன்! இந்தக்
கல் எனது 25 வருஷத் தோழன்.
நான் சிறைக்கோ, மாளிகைக்கோ
எங்கு சென்றபோதிலும் இந்தக் கல்லும் என் கூடவே இருந்துவருகிறது. இது கெட்டுப்போயிருக்குமானால்
எனக்கும் மீராபஹனுக்கும் மிகுந்த வருத்தமுண்டாயிருக்கும். நீயும் ‘இம்மாதிரி
எவ்வளவோ கல் கிடைக்கும், வேறொன்று
வைத்துக்கொண்டால் போகிறது’ என்ற எண்ணத்தினால் அலட்சியமாக இருக்கக்கூடாது.
உபயோகமான ஒவ்வொரு பொருளையும் ஜாக்கிரதையாக வைத்துக்கொள்ளக் கற்கவேண்டும் என்ற
பாடத்தை இன்று படித்துக்கொண்டுவிட்டாய்” என்றார்.
நான், “ஆனால் பாபூஜி,
நான் ராமஸ்மரணையை முழுமனதுடன் எப்பொழுதேனும்
செய்தேனென்றால் அது இன்றுதான். அந்தக் காட்டு வழியே போகும்பொழுது என் உள்ளம்
நடுங்கிக்கொண்டிருந்தது” என்றேன். பாபூ சிரித்துவிட்டு, “ஆம் கஷ்டத்தில்தான் கடவுள் நினைவு வரும்” என்றார்.
***
came across this wonderful site filled with love on reading Manu s words
ReplyDelete