பாபூ என் தாய் - மனு காந்தி - 4
5. இரண்டு வண்டிகளை வௌவியது
30-3-1947 அன்று பூஜ்ய பாபூ முதன்முதலாக லார்ட் மவுண்ட்பேட்டனைப்
பார்ப்பதற்குப் போய்க்கொண்டிருந்தார். நவகாளியிலும் பீஹாரிலும் சமூக ஒற்றுமைக்கான
வேள்வியில் இறங்கியபிறகு செய்த முதல் பிரயாணம் இதுவே. வைஸ்ராயோ, பாபுவை ஆகாய விமானத்தின் மூலமாக டில்லிக்கு
வரும்படி சொல்லியிருந்தார். ஆனால் பாபூ, “எதில் கோடிக்கணக்கான ஏழை மக்களினால்
யாத்திரை செய்ய முடியாதோ அதில் நான் எப்படி உட்காருவேன்” என்று சொல்லி ஆகாய விமானத்தில் போக மறுத்துவிட்டு
ரயில் பிரயாணத்திலேயே தம் காரியங்கள் நன்றாக நடந்துவிடுவதால் ரயிலிலேயே போவதென்று
முடிவு செய்தார்.
உஷ்ணம் அதிகமாயிருந்தது. சகிக்கவே முடியவில்லை. இருபத்துநான்கு மணிநேரம்
ரயிலில் போயாகவேண்டும். மேலும் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் நாட்டின் தந்தையை தரிசிப்பதற்காக
ஆயிரக்கணக்கான மக்கள் கூடிவந்தார்கள். ஆனால் பாபூவுக்கு இந்த சிரமங்களைப் பற்றிக்
கவலை ஏது? அவர் என்னை
அழைத்துச் சொன்னதாவது:
“இதோ பார், இந்த
வேள்வியில் நீ தனித்தே என்னுடன் இருக்கிறாய். வேள்வியில் இறங்கிய பிறகு நான்
இப்பொழுதுதான் முதன்முதலாக டில்லிக்குப் போகிறேன். நவகாளிக்குப் போகும்பொழுது நான்
‘செயல் அல்லது சாவு’ என்ற உறுதி கொண்டேன். இதனாலேயே எல்லா நண்பர்களையும் என்னிடமிருந்து
பிரித்தேன். உன்னை மட்டும் வேள்வியில் என்னுடனிருக்க அனுமதித்தேன். நீ என்னுடன்
இருக்கிறாய். ஆகையால் நவகாளியில் எல்லோரையும் விட்டு வந்திருப்பதைப் போல
தேவப்பிரகாஷ், ஹுனர் (ஒரு
முஸ்லீம் சகோதரர்), மிருதுளாபஹன் முதலிய பாக்கியுள்ளவர்கள் இங்கேயே இருப்பார்கள்.
ஆனால் நான் உன்னை விட்டுவிடவும் முடியாது. நீயும் அதை
விரும்பவில்லையாகையால் நீ என்னுடன் வரவேண்டியதே. எவ்வளவு குறைவாக முடியுமோ அவ்வளவு
சாமான்களை எடுத்துக்கொள். மிகவும் சிறிய மூன்றாம் வகுப்பு வண்டியொன்றைப்
பொறுக்கிக்கொள். ஆனால் இதில் உனக்குக் கடுமையான பரீட்சை நடக்கப்போகிறதென்பதை
நினைவில் வைத்துக்கொண்டு எல்லாம் செய்.”
நான் சாமான்களை கூடியவரையில் குறைவாகவே எடுத்துக்கொண்டபோதிலும் வண்டியைத்
தீர்மானிக்கும்பொழுது, ‘ஒவ்வொரு
ஸ்டேஷனிலும் தரிசனத்திற்கு வருவோரின் கூட்டம் ஏராளமாக இருக்குமாகையால் பாபூவினால்
சிறிதும் இளைப்பாற முடியாதே; மேலும்
ஹரிஜன நிதிப் பணத்தை நானே எண்ணவேண்டியிருக்குமாகையால் அந்தச் சத்தம் வேறு
உண்டாகுமே’ என்ற எண்ணத்தினால் இரண்டு பகுதிகளாகப் பிரிந்திருந்த வண்டியொன்றைப்
பொறுக்கினேன். அதன் ஒரு பகுதியில் சாமான்களை வைத்துவிட்டு மற்றதில் பாபூ
இருக்கவும் உறங்கவும் ஏற்பாடுகளைச் செய்தேன்.
பாட்னாவிலிருந்து டில்லிக்குப் போகும் வண்டி காலை 9-30 மணிக்குப் புறப்படும். பாபூவும் நானும் 9-25க்கு ஸ்டேஷனுக்கு வந்தோம். அங்கே ஜனங்களின்
கூட்டம் ஏராளமாக இருந்தது. ஆயினும் நாங்கள் வண்டியில் ஏறிக்கொண்டுவிட்டோம். பாபூதான்
ஒவ்வொரு நிமிஷத்தையும் பயன்படுத்துவோராயிற்றே. அவர் ஐந்து நிமிஷத்திற்குள் ஹரிஜன நிதிக்குப்
பணம் வசூலித்துவிடவே ஒன்பதரை மணிக்கு வண்டி புறப்பட்டது.
கோடை காலத்தில் பாபூ பத்துமணிக்கு உணவு அருந்துவது வழக்கம். நான் எல்லா
ஏற்பாடுகளையும் செய்வதற்காக வண்டியின் மறுபகுதிக்குப் போனேன். சிறிது நேரங்கழித்து
பாபூவினிடம் வந்தேன். பாபூ எழுதிக்கொண்டிருந்தவர், என்னிடம் “எங்கே இருந்தாய்?” என்று கேட்டார். நான், “உணவு தயாரித்துக்கொண்டிருந்தேன்” என்றேன்.
அப்பொழுது அவர் என்னை ஜன்னலுக்கு வெளியே கண்ணைச் செலுத்திப் பார்க்கச் சொன்னார்.
ஏதோ பிழை செய்துவிட்டேன் என்ற எண்ணம் எனக்கு ஓரளவு உண்டாயிற்று. வெளியில்
பார்க்கவே ஜனங்கள் வண்டியைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது.
என்னைச் செல்லமாக அதட்டும் முறையில், “நீ இந்த இரண்டாவது அறை வேண்டுமென்று சொன்னாயா?” என்று கேட்டார். நான், “ஆமாம். இந்த அறையிலேயே பாத்திரங்களைக் கழுவி
அடுப்பில் பால் காய்ச்சி என் வேலைகளைச் செய்துவருவேனானால் உங்களுக்குத் தொந்தரவாயிருக்குமே
என்றெண்ணி இரு அறைகளுள்ள வண்டியை எடுத்துக்கொண்டேன்” என்றேன்.
பாபூ சொன்னதாவது: “என்ன நொண்டிச் சாக்குச் சொல்லுகிறாய். இதற்குத்தான்
குருட்டுத்தனமான அன்பு என்று பெயர். எனக்கு சிரமம் ஏற்படாமல் இருக்கச்செய்யவேண்டுமென்பதற்காக
நான் ஆகாய விமானத்தை உபயோகிக்க மறுத்துவிட்ட பிறகு ‘ஸ்பெஷல்’
ரயிலில் வரும்படி என்னிடம்
சொல்லப்பட்டது உனக்குத் தெரியுமல்லவா? ஸ்பெஷல் ரயில் என்றால் அதற்காக எத்தனை வண்டிகளை நிறுத்தவும் ஆயிரக்கணக்கான
ரூபாய் செலவு செய்யவும் வேண்டியிருக்கும்? இதை நான் எப்படி ஏற்க முடியும்? நான்தான் பெரிய கஞ்சனாயிற்றே. இன்று நீ இரண்டாவது அறை மட்டும்தான் கேட்டாய்.
ஒரு தனி செலூனையே கேட்டிருந்தாலும் அது உனக்குக் கிடைத்திருக்கும். ஆனால் அது
உனக்கு அழகாகுமா? நீ இந்த
இரண்டாம் அறையைக் கேட்டது சலூன் கேட்பதைப் போன்றதே. உனக்கு என்னிடமுள்ள பெருத்த அன்பினாலேயே
நீ இதையெல்லாம் செய்கிறாய் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் உன்னை மேலே
தூக்கிவிட இருக்கிறேனே ஒழிய கீழே தள்ளுவதற்கல்ல. நீயும் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
புரிந்துகொண்டு வருகிறாய் என்றால் நான் இங்கே சொல்லிக்கொண்டு வரும்பொழுதே அங்கே
உன் கண்களில் கண்ணீர் வடிந்துகொண்டிருக்கிறதே, அது கூடாது. இப்பொழுது இவையெல்லாவற்றிற்கும்
செய்யவேண்டிய பிராயச்சிதமாக நீ எல்லா சாமான்களையும் இந்த அறையில் கொண்டுவந்து
வைத்துவிட்டு அடுத்த ஸ்டேஷனில் ஸ்டேஷன் மாஸ்டரை என்னிடம் அழைத்து வா.”
நான் வெடவெடவென்று நடுங்கிக்கொண்டிருந்தேன். சாமான்களையெல்லாம் மாற்றிவிட்டபோதிலும்
இனி பாபூவுக்கு என்ன நேருமோவென்ற கவலையாகவே இருந்தது. இரண்டாவதாக, பாபூ பல சமயங்களில் பிறர் செய்துவிட்ட சிறு
பிழைகளை தம்முடையதாகவே எண்ணி அவைகளுக்காக உபவாசம் செய்வதுண்டே, அம்மாதிரி இதற்காகவும் ஒன்றிரண்டு வேளை உணவை
நிறுத்திவிட்டால் என்ன செய்வது என்ற கவலையும் தோன்றிற்று. இதைத்தவிர படிப்பு,
எழுத்து, களிமண்பட்டி கட்டுதல், நூற்பு, எனக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தல் ஆகிய எல்லாக் காரியங்களும் வீட்டில் நடந்துவந்ததைப்போல்
ரயிலிலும் நடந்து வந்தன.
கடைசியில் ஸ்டேஷன் வந்தது. பாபூ ஸ்டேஷன் மாஸ்டரை அழைப்பித்து, “இந்தப் பெண் என் பேத்தி. பாவம், ஒன்றும் அறியாதவள். என்னை இவள்
புரிந்துகொள்ளாமையால் இரண்டு அறைகளை எடுத்துக்கொண்டுவிட்டாள். இதில் இவளுடைய
குற்றம் எதுவுமில்லை. பிழை என்னுடையதே. நான் அவளுக்கு சொல்லிக்கொடுத்ததிலேயே
கொஞ்சம் குறை இருந்திருக்கவேண்டும். இப்பொழுது அதற்கு பிராயச்சித்தத்தை நாங்கள்
இருவருமே செய்தாகவேண்டும். இரண்டாவது அறையை நாங்கள் காலி செய்துவிட்டோம்.
வண்டியைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறவர்களுக்கு அந்த அறையை உபயோகித்துக்கொள்ளுங்கள்.
அப்போதுதான் என் வருத்தம் குறையும்” என்றார்.
ஸ்டேஷன் மாஸ்டர் எவ்வளவோ மன்றாடினார். ஆனால் பாபூ எங்கே கேட்கப்போகிறார்?
ஸ்டேஷன் மாஸ்டர், “நான் அவர்களுக்காக புதிய வண்டியொன்றையே
இணைக்கச் செய்கிறேன்” என்றும் சொல்லிப் பார்த்தார். அதற்கு பாபூ, “ஆமாம், புது வண்டியை அவசியம் இணைக்கச் சொல்லுங்கள். ஆனால்
இந்த அறையையும் உபயோகித்துக் கொள்ளுங்கள். எந்தப் பொருள் நமக்குத் தேவையில்லையோ
அது நமக்கு அதிகமாகக் கிடைத்தபோதிலும் அதை உபயோகித்தல் ஹிம்சையாகும். கிடைக்கும்
வசதிகளை தவறாகப் பயன்படுத்தச் செய்து நீங்கள் இந்தப் பெண்ணை பாபத்திற்குத்
தூண்டுகிறீர்கள்” என்றார். பாவம், ஸ்டேஷன்மாஸ்டர் நாணித் தலைகுனிந்துவிட்டார். பாபூ சொன்னபடி அவர் செய்ய
வேண்டியதாயிற்று.
பாபூ இந்தியா முழுவதின் தந்தையாயிற்றே, அவர் சௌக்கியமாக உட்கார்ந்திருக்க அவருடைய
குழந்தைகள் தொங்கிக்கொண்டே பிரயாணம் செய்வதை அவரால் எப்படித் தாளமுடியும்? இதிலிருந்து தொங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு
இடம் கிடைத்ததோடு கிடைக்கக்கூடிய வசதிகளையும் மிகவும் குறைவாகவே தனக்கு
உபயோகித்துக்கொள்ளவேண்டுமென்ற மதிப்பிட ஒண்ணாத வாழ்க்கைப் பாடம் எனக்குக்
கிடைத்தது. அந்த சமயத்தில் எனக்கு அவர் கண்டித்தது வருத்தமளித்தபோதிலும் இன்று
வாழ்க்கையில் அது விலைமதிக்க முடியாத போதனை என்பதை உணர்ந்துவருகிறேன். பாபூ
இத்தகைய நுணுக்கமான முறையில் அஹிம்சையை அனுஷ்டித்து வந்ததன் மூலமாகவே தம்
வாழ்க்கையை உருவாக்கிக்கொண்டார். அதிலிருந்து பயன் பெறுவதற்கு எனக்குக் கிடைத்த
ஒருசில சந்தர்ப்பங்கள் என் ஆயுள் பூராவும் எனக்கு நன்மை அளித்துவரும்.
***
No comments:
Post a Comment