Pages

Sunday, October 8, 2023

பாபூ என் தாய் - மனு காந்தி - 4

பாபூ என் தாய் - மனு காந்தி - 3

4. உண்மைக் கல்வி யாது?

சென்ற அத்தியாயத்தில் நான் கூறியுள்ளபடி பூஜ்ய பாபூஜி எனக்குக் கற்பித்து வந்தார். ஆயினும் நான் சில சமயங்களில், (கராச்சியிலிருந்து என்னை தம்மிடம் அழைத்துக்கொண்டதைக் குறிப்பிட்டு) “நீங்கள் என் படிப்பை நிறுத்தச் செய்துவிட்டீர்கள். நான் பரீட்சைகள் எழுதியிருக்கவேண்டும்” என்று சொல்வதுண்டு. ஏனெனில் அந்த சமயத்தில் தற்காலப் பெண்களைப்போல எனக்கு பட்டங்களில் மோகம் இருந்தது. எனது அந்த மோகத்தைப் போக்கி உதவிய கடவுளின் கிருபையை என்னென்பேன்! எனது பரமகுருநாதர் எனக்கு அளித்த பாடங்களினால் நான் பெற்ற பயனை பி.ஏ., எம்.ஏ. அல்லது லண்டனின் பெரிய பெரிய பட்டங்களினாலும் பெறமுடியாதென்றும் இதனால் என் வாழ்க்கை பயனுள்ளதாயிற்று என்றும் நான் சொல்வேனானால் அது என் அறியாமை என்று கருதப்படமாட்டாது என்பது என் நம்பிக்கை. ஆனால் இந்த புத்தியெல்லாம் தோன்றியிருப்பது இப்பொழுதே. அந்தக் காலத்திலோ நான் பாபூஜியிடம் “நீங்கள் என்னைப் படிக்காமல் செய்துவிட்டீர்களே” என்றே சொல்லிவந்தேன்.

அதற்கு பாபூ “ஆனால் நான் உனக்கு படிப்பு, நற்குணம் ஆகிய இரண்டும் போதித்தாகவேண்டுமே. அது எந்த கதியாவது?” என்று கேட்டார்.

நான் அதற்கு, “பாருங்கள் மகாதேவ் காகா இவ்வளவு படித்தவராய் இருந்ததாலல்லவா, உங்களுக்குக் காரியதரிசி ஆகமுடிந்தது? பெரியவர்கள் ஆகியுள்ள மற்றவர்களும் பட்டங்களினாலல்லவா முன்னுக்குவர முடிந்திருக்கிறது? என்று கேட்பேன். பாபூ சிரித்துவிட்டு, “எவ்வளவு பெரியவர்களோ அவ்வளவு பொய்யர்கள். நீ டிக்ரி என்பதற்கு பதிலாக ‘உபாதி’ என்ற சொல்லை உபயோகி. இந்த உபாதி (பட்டம்) இருக்கிறதே அது உண்மையில் உபாதைதான் (கவலை தரும் விஷயம், நோய்). நான் பாரிஸ்டர் ஆனதைக் குறித்து இன்றும் எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. உண்மையைக் கேட்பாயானால் நான் ஒரு பாரிஸ்டர் என்ற எண்ணமே. எனக்கு வருவதில்லை.

ஆகையால் நான் என் அனுபவத்தை ஆதாரமாகக்கொண்டே பிறரை இந்த உபாதியினின்றும் காப்பாற்ற முயற்சி செய்கிறேன். ஆம். பாஷையைப் பற்றியவரையில் எவ்வளவோ தெரிந்துகொள்ளவேண்டியதுதான். ஆனால் இன்று சர்வகலாசாலைகளில் நடந்துவரும் பொட்டைநெட்டுருவும் அதனால் மாணவர்களுக்கு ஏற்படும் கஷ்டமும் எனக்கு வருத்தமளிக்கின்றன. நம் நாட்டில் இன்று நிர்மாண வேலைகளுக்கு அவசியமிருக்கிறது. கிராமங்களில் எத்தனையோ காரியங்கள் கிடக்கின்றன. மாணவர்கள் படிப்பில் செலவழிக்கும் நேரத்தை நிர்மாண வேலைகளில் செலவழிப்பார்களானால் நாட்டின் சொரூபமே மாறிவிடும். ஆனால் அறிவு வளர்ச்சிக்காக கல்வி அளிக்கப்படுமானால் அது வேறு விஷயம். அப்பொழுது அறிவுக்காகப் படிப்பு, படிப்புக்காக அறிவு என்பது மந்திரமாக இருக்கவேண்டும். ஆனால் இன்றோ பரீட்சைக்காகப் படிப்பும் படிப்புக்காகப் பரீட்சையும் இருந்துவருவதைக் காண்கிறோம். அப்புறம்? பெற்ற அறிவு பணம் சம்பாதிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. ஒருவன் டாக்டரானால் இன்னொருவன் வக்கீலும் மற்றொருவன் இன்ஜினியரும் ஆகிறான். ‘பாஸ்’ செய்வதுதான் தாமதம், உத்தியோக வேட்டை ஆரம்பமாகிவிடுகிறது. உத்தியோகமென்றால் உழைத்து உழைத்து வயிறு நிரம்புவதற்குக்கூட வழியில்லாமல் சாதலே! பார்க்கப்போனால் நாம் படிக்கும் படிப்புகளுக்கெல்லாம் நல்ல நல்ல உத்தியோகங்களைப் பெறுவதே லட்சியமாக இருந்துவருகிறது. இதற்கு விதிவிலக்குகள் இருக்கவேதான் செய்யும். நான் இவ்வாறு சொல்வதன் கருத்து நாற்பதுகோடிப் பேரில் எல்லோருமே இப்படிச் செய்கிறார்கள் என்பதல்ல. இன்றையப் படிப்பின் முறையே இப்படித்தான் அமைந்திருக்கிறது. குறிப்பிட்ட ஒரு வகுப்பு வரையில் படித்தான பிறகு சேவை செய்துகொள்ளலாம் என்பது முற்றிலும் தவறான எண்ணமாகும். எந்த நிலைமையிலிருந்தபோதிலும் மனிதனால் சேவை செய்யமுடியும். கடவுள் மனிதனுக்கு ஏராளமான சக்திகளைத் தந்திருப்பதால் அவன் சேவையிலிருந்து தப்புவதற்கு சாக்குப்போக்கு எதுவும் சொல்லமுடியாது. இவ்வாறு இல்லாவிட்டால் துஷ்ட சுபாவமுள்ள மனிதனால் வேலையைத் தட்டிக் கழிப்பதற்கு ஏதேனும் ஒரு காரணத்தைக் கண்டுபிடித்துவிடமுடியும். ஒருவன் தன் பணத்தைக்கொண்டும் இன்னொருவன் தன் உறுதியான உடலினாலும் மற்றொருவன் தன் அறிவினாலும் சேவை செய்யக்கூடும் என்பதை நீ பார்ப்பாய். நாக்கு, கை, கால், கண், காது, மூக்கு ஆகிய எல்லா அங்கங்களும் சேவைக்கு உதவக்கூடும். நான் இவைகளை உதாரணத்திற்காகவே சொன்னேன்.

ஆகையால் நமக்குள்ள சக்திகளையெல்லாம் நாம் கடவுளுக்கு அர்ப்பணம் செய்துவிட வேண்டும். அப்பொழுதுதான் நமக்கு முழு ‘மார்க்கு’ கிடைக்கும். ஒரு கோடி ரூபாய் கொடுப்பதற்கு சக்தியுள்ள ஒருவன் அரைக்கோடியே கொடுத்தானானால் அவனுக்கு நூற்றுக்கு ஐம்பது மார்க்கே கிடைக்கும். ஆனால் ஒருவனுக்கு காலணா கொடுப்பதற்கே சக்தியிருக்க, அவன் அந்தக் காலணாவைக் கொடுத்துவிட்டால் அவனுக்கு முழு மார்க்கு கிடைத்துவிடும்.

நடத்தை சுத்தமாயிருக்கவேண்டும் சுயநலத்தினாலோ பயத்தினாலோ மனிதன் செய்யும் காரியம் சேவை என்று சொல்லப்படமாட்டாது. கடவுளிடம் எல்லாவற்றையும் அர்ப்பணம் செய்துவிடும் கருத்துள்ள இடத்தில் சுயநலத்திற்கே இடமில்லை. சேவை புரிபவன் இவ்வாறு ஒவ்வொரு நாளும் தன் சக்தியை வளர்த்துக்கொள்ளுகிறான். செய்யும் முயற்சிகளையும் சேவை மனப்பாங்குடனேயே செய்கிறான். இவ்வாறு சேவையிலேயே கவனமாயிருப்பவன் சிரிப்பதிலும் சாப்பிடுவதிலும் நீர் அருந்துவதிலும் விளையாடுவதிலும், பேசுவதிலும் - ஒவ்வொரு செயலிலும் சேவை உணர்ச்சி அடங்கியேதானிருக்கும். அதாவது அவனுடைய எல்லாக் காரியங்களும் குற்றமற்றவைகளாய் இருந்துவரும். இத்தகைய பக்தர்களுக்கு கடவுள் தேவையான எல்லா சக்திகளையும் அளிக்கிறார். இதனாலேயே கீழே காணும் சுலோகங்கள் தோன்றின:

अनन्याश्चिन्तयन्तो मां ये जनाः पर्युपासते ।

तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम् ॥

मच्चित्ता मद्गतप्राणाः बोधयन्तः परस्परम् ।

कथयन्तश्च मां नित्यं तुष्यन्ति च रमन्ति च ॥

तेषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वकम् |

ददामि बुद्धियोगं तं येन मामुपयान्ति ते ॥

(எவர்கள் வேறு எவரையும் எண்ணாமல் என்னைப் பற்றியே சிந்தித்து என்னிடத்திலேயே லயித்திருக்கிறார்களோ, அவர்களுடைய யோக க்ஷேமத்தின் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்ளுகிறேன். அதாவது பயனைக்கருதாமல் என் பணியைச் செய்யவேண்டும். என்னிடம் மனதைச் செலுத்தி தம் ஆவியையே என்னிடம் அர்ப்பணம் செய்து ஒருவர் மற்றவருக்கு புத்திபுகட்டிக்கொண்டு என் வழிபாட்டிலேயே திருப்தியும் மகிழ்ச்சியும் கொண்டு அவர்கள் இருப்பார்கள். இவ்வாறு என்னிலே மகிழ்ந்து என்னை அன்புடன் வழிபடுகிறவர்களுக்கு நான் ஞானத்தை அளிக்க அதனால் அவர்கள் என்னைப் பெறுகிறார்கள்.)

இந்த சுலோகங்களைச் சிறிது சிந்தித்துப் பார். இவற்றில் கடைசி சுலோகம் இருக்கிறதே, அது மிகவும் முக்கியமானது. அதில் ஆழ்ந்த நம்பிக்கை வற்புறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் நான் உன் மூளையில் புகுத்த விரும்பும் விஷயம் இத்தகைய கடவுள் பணியில் நீ பெறக்கூடிய பட்டங்களை எப்படிப் பயன்படுத்த முடியும் என்பதையே. இன்று நீ படித்திருந்து கல்லூரிக்கும் போய்க்கொண்டிருப்பாயானால் நீ எங்கே இருப்பாய்? என் மனம்போல் என்னால் செய்யமுடியுமானால் காலேஜுகளிலுள்ள எல்லா பிள்ளைகளையும் பெண்களையும் இந்தப் போரில் சேர்த்துவிடுவேன். உண்மையில் நமது மாணவர்களின் மனதிலுள்ள இந்த ‘டிக்ரி’ மோகம் போய்விடுமானால் உலகப்படத்தில் இன்று ஒரு துளியைப்போல் இருந்துவரும் இந்திய நாடு கடலைப்போல் பெருகிவிடும். தம் சக்திக்குத் தகுந்தபடி வேலை செய்யவேண்டுமென்று சொல்லப்படுகிறதே அது சிறு குடும்பங்களுக்கு மட்டுமல்ல, பெருத்த தேசங்களுக்கும் பொருத்தமுடையதே. தேசம் எப்படி இருக்கிறதோ, அப்படியே அதன் பழக்க வழக்கங்களும் நடவடிக்கைகளும் இருக்கவேண்டும். ஆங்கிலேயர்களை நாம் குருட்டுத்தனமாகப் பின்பற்றுவோமானால் வீழ்ச்சியுறுவது திண்ணம்.

அன்னம் காக்கையைப்போல் நடந்திருந்தால் செத்தேப்போயிருக்குமல்லவா? அது தன் இயற்கையான நடையில் நடந்ததாலேயே ஜயித்தது. இந்தக் கதைதான் உனக்குத் தெரியுமே. கதைகளும் காரணமில்லாமல் தோன்றுவதில்லை. அவற்றில் ஆழ்ந்த படிப்பினைகள் நிரம்பியிருக்கின்றன. இந்தியாவில் எத்தனையோ கெட்ட வழக்கங்கள் இருந்துவந்தபோதிலும் அது தன் வழியிலேயே போய்க்கொண்டிருக்குமானால் இப்பொழுது நம்மால் கற்பனையே செய்யமுடியாத உயர்ந்த பதவியை அடைந்துவிடும். ஏனெனில் இந்தியக் கலாசாரம் ஒப்பற்றது. நான் உனக்கு கீதையை விளக்கிக்கொண்டு வரும்பொழுதே அதற்கு புதிய புதிய பொருள்கள் தோன்றிக்கொண்டிருக்கும். இன்று இவ்வளவை நீ புரிந்துகொண்டால் போதுமானது. இவற்றையெல்லாம் எழுதிவிடு. ஆனால் எழுதுவதோடு திருப்தி அடைந்து இருந்துவிடக்கூடாது. கீதையின் பொருளைத் தெரிந்துகொள்வது அதன்படி யொட்டி நடப்பதற்கே. இன்றையப் பாடம் முழுதும் கீதையைப் பற்றியதே.”

என்னைப் நான் பாபுவினிடம் படிக்க வைக்காததைப் பற்றிக் குறை கூறியதற்காக எனக்கு இந்த உபதேசமெல்லாம் அளிக்கப்பட்டது. அதற்குப் பிரதியாக இன்று என்னால் எதையும் தரமுடியாது. பாபூ மிகவும் தயையுள்ளவராகையால் அவரை எவரேனும் கடுமையாகத் திட்டினால்கூட அந்தத் திட்டலை அவர் பானகம் குடிப்பதுபோல் வாங்கிக் குடித்துவிடுவார். பாபுவினிடம் மனதில் எழும் எதையும் விட்டுச் சொல்லுவதற்கு எங்களுக்கு சுதந்திரம் இருந்தபோதிலும் சிறுபிள்ளைத்தனமாக நான் வாயில் வந்தவைகளைச் சொன்னது பெரிய முட்டாள்தனம் என்பதை இப்பொழுதுதான் உணருகிறேன். என்னுடைய துரதிர்ஷ்டத்தை என்னென்பது! ஆனால் பிள்ளை எவ்வளவுதான் அயோக்கியனாய் இருந்தபோதிலும் தாய் கெட்ட தாயாக இருக்கமாட்டாள்.

இந்த அற்புதமான பாடத்தை சொல்லிக் கொடுத்ததில் அவருடைய நோக்கமென்ன என்பது கடவுளுக்குதான் தெரியும். அவர், நான் அவர் வேலைகளைச் செய்துகொண்டிருந்தாலும் அவற்றை நிறுத்தச் சொல்லி என் தினக்குறிப்பை தவறாமல் எழுதச் செய்வார். ஒரு வருஷத்திற்குப் பிறகு ‘நான் போய்விட்டேனானால்’ என்ற எண்ணம் அவருடைய மனதில் இருந்திருக்குமோ? இந்த முன்நோக்கு அவருக்கு நிச்சயமாக இருந்திருக்கும்! இதனாலல்லவா என்னுடைய இந்த தினக்குறிப்பு, பாபூவின் உயிலாகியுள்ளது!

***

பாபூ என் தாய் - மனு காந்தி - 5

No comments:

Post a Comment