பாபூ என் தாய் - மனு காந்தி - 2
3. கீதையின் போதகன்
தமக்கிருந்த எத்தனையோ வேலைகளுக்கிடையில் பாபூ எனக்கு கீதை சொல்லிக்
கொடுப்பதற்காக ஒவ்வொரு நாளும் குறைந்தது பத்து நிமிஷமாவது செலவழித்து வந்தார்.
ஆகாகான் மாளிகையில் கணிதம், பீஜகணிதம், பூமிதி,
பூகோளம், சரித்திரம், விஞ்ஞானம், ஸம்ஸ்கிருதம்
முதலியவைகளை பாபூஜியிடம் கற்பதற்கு, எனக்கு அதிர்ஷ்டம் ஏற்பட்ட போதிலும் அவர் எனக்கு ஆங்கிலம் மட்டும்
கற்பித்ததில்லை. ஆகாகான் மாளிகையிலிருந்த மற்ற தோழர்கள் ஆங்கிலம் சொல்லிக்கொடுத்து
வந்தார்கள். பூஜ்ய கஸ்தூரிபாவின் நோயினாலும் நேரமில்லாமையிலும் பாபூஜியிடம்
ஒவ்வொரு விஷயம் படிக்க முடியாமல் போனதுண்டு; ஆனால் இறுதி வரையில் ஸம்ஸ்கிருதம் சொல்லிக்
கொடுப்பதை மட்டும் அவர் நிறுத்தவில்லை. அதாவது என் வாழ்க்கையில் கீதை போதனையை பாபூவே
ஆரம்பித்து வைத்தார். மற்ற விஷயங்களை பியாரேலால்ஜி, சுசீலாபஹன், டாக்டர் கில்டர் முதலிய என்னுடனிருந்த சகோதர சகோதரிகள்
சொல்லிக்கொடுக்கலானார்கள். ஆனால், “மனுவுக்கு கீதை மட்டும் நானேதான் போதிப்பேன்” என்று கூறி கீதையை கடைசி
வரையில் பாபூவேதான் போதித்துக்கொண்டிருந்தார். மற்ற விஷயங்களுக்கு நான்
பள்ளிக்கூடத்தில் படித்த காலத்திலும் பிறகும் எனக்கு எத்தனையோ குருக்கள்
இருந்திருக்கிறார்கள். ஆனால் கீதைக்கு மட்டும் பாபூவே குருவென்று நான் உரிமையுடன்
சொல்லக்கூடும். அதில் நான் பிறரிடமும் ஒரு சிறிது உதவி பெற்றிருக்கக்கூடுமென்பது
வேறு விஷயம்.
ஆகாகான் மாளிகையில்தான் நான் கீதையின் சொற்களை உச்சரிக்கவே தெரிந்துகொண்டேன்.
நவகாளிக்குப் போனவுடன் பாபூ எனக்கு ஒருநாள் ஓய்வளித்தார். மறுநாள், “நீ இப்பொழுது என்னிடம் வந்து
இருபத்துநான்கு மணிநேரம் ஆகிவிட்டது. அதாவது நீ பழகிப்போய்விட்டாய்.
கீதைப்படிப்பு இப்பொழுது எவ்வளவு தூரம் வந்திருக்கிறதென்று சொல்லு. இங்கே நீ என்
காரியங்களைச் செய்வதோடு நில்லாமல் படித்தும் வரவேண்டும்” என்றார்.
நான் சொன்னதாவது:
“சிறையிலிருந்து வெளிவந்த பிறகு இடையிடையே நானே கீதையை கொஞ்சம்
படித்திருக்கிறேன். ஆனால் உச்சரிப்பைத் திருத்தவோ அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவோ
நான் எவரையும் குருவாக வைத்துக்கொள்ளவில்லை. ஏனெனில் பிற விஷயங்களுக்கு எனக்கு
ஆயிரம் குரு இருந்தபோதிலும் கீதைக்கு மட்டும் உங்களைத் தவிர வேறு எவரும்
குருவாகக்கூடாது என்பது என் விருப்பம். ஆகையால் நானே தப்பும் தவறுமாக ஏதோ
உச்சரித்துக்கொண்டும் அர்த்தம் செய்துகொண்டும் வந்திருக்கிறேனே தவிர பிறருடைய உதவி கொண்டு
முன்னேறவில்லை.”
இதனால் பாபுவுக்கு வருத்தமுண்டாகிவிட்டது. அவர் சொன்னதாவது: “உன்னுடைய இந்த விருப்பத்தில்
தவறான மோகம் காணப்படுகிறது. நல்ல விஷயத்தைக் கற்றுக்கொள்ளுவதில் ஆயிரமென்ன லட்சக்கணக்கான
குருக்களை ஏற்றுக்கொண்டால்தான் என்ன? ஒரு சிறு குழந்தையிடமும் கற்றுக்கொள்ளுவதில் தவறேது? நல்ல விஷயத்தைக் கற்பதில் நாணம் எதற்கு? ஆனால் ‘நாம் விழிக்கும் பொழுதே நமக்குப்
பொழுது விடிகிறது’ என்று கருதி இன்று முதலே கீதைப் பாடத்தை மீண்டும் தொடங்கிவிடுவோம். இனி நீ
உச்சரிப்பைக் கற்கத் தேவையில்லை. ஆனால் நான் இதுவரையில் உனக்கு கீதையின்
அர்த்தத்தை சொல்லிக்கொடுக்காதிருந்துவிட்டது என் மனத்தை உறுத்துகிறது. இனி நீ
ஒவ்வொரு நாளும் கீதையிலிருந்து ஐந்து சுலோகங்களை எழுதிவரவேண்டும். (நான் பிரதி
தினமும் சுலோகங்களை எழுதிக்கொண்டுவர பாபூ தமக்கெத்தனை வேலைகளிருந்தபோதிலும் நான்
எழுதிய சுலோகங்களைப் பார்த்து என் பிழைகளைத் திருத்திக் கையெழுத்திட்டு வந்தார்.) எழுதும்
சுலோகங்களை பொருள் விளங்குவதற்காக சந்தி பிரித்து எழுது. கீதையின் மூன்றாவது
அத்தியாயம் யக்ஞத்தைப் பற்றியது. கீதை பயிலுவதும் ஒரு யக்ஞமே. யக்ஞம் என்பது என்ன
என்பதை நான் உனக்கு சிறிது சொல்லுகிறேன்.
“பகவான் யக்ஞம் செய்யாமல் சாப்பிடும் மனிதன் திருட்டுச்சோறு தின்கிறானென்று
சொல்லுகிறார். இது மிகவும் முக்கியமான விஷயம். திருட்டுச்சோறு பாதரசத்தைப்
போன்றது. புடம் செய்யாத பாதரசம் உடலில் கலக்காது. அதை உட்கொள்ளுவோமானால் அது நம்
உடலைப் பொத்துக்கொண்டு வெளிவந்துவிடும். திருடித் தின்னும் சோறும் இப்படியேதான்
செய்யும். மனிதன் யக்ஞம் செய்யாமல் கழிக்கும் ஒவ்வொரு கணமும் திருடனாகவேதான்
இருக்கிறான் என்பது தெளிவு. நாம் எல்லோரும் இந்த யக்ஞத்தைச் செய்யவேண்டும்.
அதிர்ஷ்டவசமாக எவனுடைய மனம் சரியாய் இருக்கிறதோ அவனுக்கு யக்ஞம் சுலபமாகிறது.
அவனுக்குப் பொருளோ புத்தியா படிப்போ தேவையாய் திருப்பதில்லை. யக்ஞம் என்பது
ஏதேனும் ஒரு பரோபகாரமான காரியமே. எவனுடைய வாழ்க்கை யக்ஞ மயமாக இருக்கிறதோ அவனை
திருட்டுச்சோறு தின்னாதவனென்று சொல்லலாம். சிறிது சிறிது யக்ஞம் செய்துவருபவன்
அதிகம் திருடுவதில்லையெனலாம். இவ்வகையில் எண்ணும்பொழுது நாம் அனைவரும் ஓரளவு
திருடுகிறவர்களே. சுயநலத்தை அறவே துறந்துவிடும்பொழுதுதான் பூர்ண யக்ஞம்
செய்யப்பட்டதென்று சொல்லமுடியும். சுயநலத்தை விடுதலென்பதற்கு ‘நான்’. ‘எனது’ என்பவைகளைத்
துறத்தல் என்பது பொருள். ‘இவன் என் சகோதரன்’, ‘அவன் அன்னியன்’, ‘இவள் என் சகோதரி’, ‘அவள் அன்னியை’ என்ற எண்ணம் மனதிலிருக்கவே கூடாது. எவன்
தன்னுடையதனைத்தையும் கடவுளிடம் அர்ப்பணம் செய்யக்கூடுமோ அவனே இதைச் செய்யக்கூடும்.
சேவை செய்பவன் கடவுளை தம்முன் இருத்தி தன்னை அவருடைய சேவகனாகக் கருதியே எல்லாவற்றையும்
செய்கிறான். அந்த மனிதன் சேவை எல்லாம் உணர்ச்சியுடனேயே செய்கிறான். இத்தகைய மனிதன்
எப்பொழுதும் சௌக்கியமாகவும் சாந்தியுடனும் இருப்பான். அவர்களுக்கு சுகமும் துக்கமும்
ஒன்றென்றே தோன்றும். அவர்கள் தம் உடலையும் மனதையும் அறிவையும் தம்மிடமுள்ள
எல்லாவற்றையும் பாரமார்த்திகத்தில் ஈடுபடுத்துவார்கள். இம்மாதிரியான உண்மை
யக்ஞத்தை நாம் எல்லோரும் செய்யமுடியாது. நம்முடைய மனதில் கூடுமானால் அகில
உலகத்திற்கும் சேவை செய்வோமென்ற ஆவல் இருக்குமானால் அகில உலகத்திற்கும்
பயன்படக்கூடியதும் பல மனிதர்கள் செய்யக்கூடியதுமான காரியம் எதுவாய் இருக்கக்கூடும்?
இவ்வாறு யோசிக்கும்பொழுது இத்தகைய
காரியங்களிலெல்லாம் நூற்பே முக்கியமானதென்று தெரியவருகிறது. பாரமார்த்திக
நோக்கத்துடன் கணக்கற்ற மனிதர்கள் இதைச் செய்துவரலாம். ஆகையால் இந்த உழைப்பு உலக சேவைக்காகச்
செய்யப்பட்டதென்றும் இதனால் எத்தனையோ ஏழைகளின் வயிறு நிரம்புகிறதென்றும்
சொல்லலாம். கண்ணில்லா குருடர்களும் இந்த வேலையைச் செய்யமுடியும். நூலை ஒவ்வொரு
தடவையும் இழுக்கும் பொழுதே ராமநாமத்தையும் ஜபித்துக்கொண்டிருக்கலாம்.
நான் உனக்கு இந்த முறையில் கீதையின் பொருளை விளக்கிக் கூறவிரும்புகிறேன்;
இலக்கண முறையிலல்ல. நான் இன்று ஒரு
உதாரணமாகவே யக்ஞத்தின் பொருளை விளக்கிச் சொன்னேன். ராட்டையில் யக்ஞமும் யக்ஞத்தில்
ராட்டையும் அடங்கும்.”
***
No comments:
Post a Comment