பாபூ என் தாய் - மனு காந்தி - 1
2. பாபூ தாயானது
அவ்வளவுதான், பா
இறந்தநாளிலிருந்து பாபூ ஒரு தாயைப்போல தம் பதினான்கு பதினைந்து வயதுள்ள பெண்ணைப்
பராமரிக்க ஆரம்பித்துவிட்டார். இந்த வயதுப் பெண் இயற்கையாகவே தாயுடன் இருக்க
விரும்புவாள். இதற்கு முன்னும் தாயுடனேயே இருந்துவந்தவளாயிருந்தால் இந்தப் பிராயத்தில்
அவள் தாயை மேலும் அணுகி இருக்க ஆசைப்படுவாள். ஆகையால் பாபூ என்னை தம் அருகிலேயே
வைத்துக்கொள்ளத் தொடங்கினார். என் சாப்பாடு, உடை, எங்கேனும் போய்வருதல், நோய்,
பயிற்சி ஆகியவைகளை கவனித்து வந்ததோடு
வாரத்திற்கு ஒருமுறை நான் எண்ணெய் தேய்த்துக் குளித்தேனா இல்லையா என்பதையும் அவர்
மிகவும் ஜாக்கிரதையாக கவனித்துவரலானார். இந்த கவனம் இறுதிவரையில் இருந்துவந்தது.
பாபூஜி நவகாளிக்குப் போனபொழுது நான் மஹுவாவில் (காத்தியவார்) இருந்தேன். நான்
அவருக்கு எழுதி அவரிடம் வந்து இருக்க விரும்புவதாகத் தெரிவித்தேன். ஆகவே அவர்
எனக்குத் தந்தி கொடுத்து வரவழைத்தார். நான் பாபூவினிடம் போன பொழுது சேலையே உடுத்தியிருந்தேன்.
சாதாரணமாக திறந்த தலையுடன் வளையவரும் பழக்கம் எனக்கில்லை. ஆனால் பாபூவைப்
பார்த்ததும் நான் நமஸ்காரம் செய்தபொழுது என் தலையிலிருந்த துணி நகர்ந்துபோய்விட்டது.
நான் அதை கவனிக்கக்கூட இல்லை. ஏனெனில் நான் பாபூவின் மடியில் தலையை வைத்து
வணங்கியபொழுது அவர் என் காதைப் பிடித்திழுத்து அன்புடன், “என்ன, வந்துவிட்டாயா?” என்றார். ஆனால் அதன்பிறகு
இரவில் (19-12-46 வியாழன், ஸ்ரீ
ராமபுரம்) பாபூ என்னிடம் சொன்னதாவது: “ஊஞ்சல் ஆடவும் மோட்டாரில் சுற்றவும் வேண்டிய
சேட்டுகளின் பெண்களுக்கே குஜராத்திப் புடவை உபயோகமாய் இருக்கும். மேலும்
குஜராத்திப் புடவை உடுத்திகொண்டு தலையைத் திறந்துகொண்டிருந்தால் பொருத்தமில்லாமல்
பார்ப்பதற்கு என்னவோ போல் இருக்கிறது. குஜராத்திப் புடவைதான் உடுத்த வேண்டுமென்றால்
பாவும் பழைய காலத்துப் பெண்களும் உடுத்திவந்ததைப்போல் உடுத்தவேண்டும். அவர்களுடைய
தலை ஒருபொழுதும் திறக்கவே செய்யாது. ஒருக்கால் திறந்தாலும் அவர்கள் கவனமாக
மூடிக்கொள்வார்கள். இவ்வளவு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்” (இவ்வளவெல்லாம் சொல்லிய
பிறகும் பாபூ இவைகளை சொல்லக் காரணமென்னவென்று எனக்குப் புரியவில்லை.) அவர் மேலும்
சொன்னதாவது: உடுத்துவதில் நீ பாவையும் அவளைப் போன்றவர்களையும் போல கவனமாக இருக்கமுடியாது
என்று நான் அறிவேன். ஆகையால் நீ இங்கே இருப்பதென்றால் ஆகாகான் மாளிகையில் பஞ்சாபி
ஆடை அணிந்து வந்ததைப்போல் இங்கும் அணியவேண்டும். அந்த உடுப்பிலும் தலையைத் திறந்துபோட்டுக்கொண்டிருப்பது
நன்றாயில்லைதான். ஆயினும் உன்னைப் போன்ற பெண் அந்த உடுப்பிலிருக்கும்போது தலையில்
ஒன்றும் இல்லாமலிருப்பது குஜராத்திப் புடவை அணிந்து தலையைத் திறந்துகொண்டிருப்பதைப்போல்
அவ்வளவு விகாரமாயில்லை. நான் உனக்குத் தாயாகியிருக்கிறேனல்லவா? ஆகையால் எல்லாவற்றையும் உனக்குச் சொல்லியே
ஆகவேண்டும். நீ தலையைத் திறந்துபோட்டுக்கொண்டு ஏன் வளைய வருகிறாய்? இந்தக் காலத்தில் கேசம் சிறியதாயிருந்தாலும்
சரி பெரியதாயிருந்தாலும் சரி எல்லாப் பெண்களுமே செயற்கை ரோமம் அல்லது ஆட்டு
ரோமத்தை வைத்துப் பின்னல் போட்டுக்கொள்கிறார்கள். தலையை மூடிக்கொண்டுவிட்டால் அவை
பிறருக்கு எப்படித் தெரியும்? நான் பெண்களினிடையில் இருந்து பழகிவருபவன். பெண்களை சமூகத்தில் முன்னுக்கு
வரச்செய்ததில் எனக்குப் பங்குண்டு. ஒருநாள் நானே பார்வைக்கு பார்ஸி
பெண்பிள்ளையைப்போல் இருக்கவேண்டுமென்று கால் உரை, பூட்ஸ் முதலியவைகளை அணிய பாவுக்குக்
கற்றுக்கொடுத்தேன். பாவம், அவளுக்கு
இவைகளிலெல்லாம் ஆசையேது? கடவுள்
எம்மாதிரி மயிரைக் கொடுத்திருக்கிறாரோ அம்மாதிரியே வைத்திருப்பதில்தான் அழகுண்டே
தவிர செயற்கை மயிரை வைத்துக்கொள்வதில் அழகில்லை. இந்தக் காலத்தில் புஷ்ப ஜாடிகளில்
காகிதப் பூக்களை வைக்கிறார்கள். அவற்றின் அருகிலேயே உண்மைப் புஷ்பங்களை
வைப்போமானால் உண்மைப் புஷ்பங்களே பார்வைக்கு இன்பமளிக்குமல்லவா?”
(இவ்வாறு பேசிவந்த பாபூ திடீரென்று ஆத்மீக விஷயமாகப் பேச ஆரம்பித்துவிட்டார்)
அவர் சொன்னதாவது: “சகோதரிகள் அதிகமாக வேஷம் போட ஆரம்பித்துவிட்டதால் அவர்கள்
கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. இமிடேஷன் வைர,
முத்து நகைகள் சிறிது காலத்திற்கு
பளபளப்பாயிருந்து பிறகு கறுத்துப்போகும். இம்மாதிரி வேஷம் போட்டுக்கொள்வதில்
அவர்களுக்குள்ள ஆசையினால் அவர்களுடைய வாழ்க்கையே உண்மையற்றதாகிவிட்டது. வெளி வேஷம்
போடுகிறவர்கள் உள்ளே உண்மையாய் இருப்பார்களென்பதை நான் ஒருபொழுதும் ஒப்பமாட்டேன்.
இதனாலேயே சகோதரிகள் இன்று இழிவுற்று வருகிறார்கள். அவர்களுக்கு தீமை இழைக்கப்பட்டு
வருகிறது. இன்று அவர்கள் கையில் ஆயுதமே கொடுக்கப்பட்டபோதிலும் அவர்களால் கூண்டாக்களை
எதிர்க்க முடியாது. அப்படியிருக்கையில் பாவம், ஆயுதமில்லாதவர்களிடம் ஒருவன் பலாத்காரம் செய்வானானால்
அவர்கள் எப்படி எதிர்க்க முடியும்? சீதையின் உடம்பில் ஒரு பிடி எலும்புகளே இருந்தன. அவளிடம் சாதனங்களுமில்லை.
ராவணனைப் போன்ற பலசாலி விரும்பியிருந்தால் அவளை தன் விரல்களினாலேயே நசுக்கி
இருக்கலாம். ஆனால் அவன் அவளைத் தொடவே துணியவில்லை. இதற்குக் காரணமென்ன? சீதையின் தூய்மை அவ்வளவு சக்தியுள்ளது. இப்பொழுது
அந்தத் தூய்மை எங்கே? எந்தப்
பெண் மீதாவது பலாத்காரம் நடந்தால் அவள் அவனுடைய வசமாகிவிடுகிறாள். இங்கே இம்மாதிரி
எத்தனையோ நடந்திருக்கின்றன. கூண்டாக்கள், ‘நான் சொல்வதைக் கேள்; இல்லையேல்
கொன்றுவிடுவேன்’ என்று சொல்லவே சாவுக்கு பயந்து எத்தனையோ சகோதரிகள் அவர்கள் வசம்
ஆகிவிட்டார்கள். ஆகையால் ராமாயணத்தில் வர்ணிக்கப்பட்டுள்ள ராமனும் சீதையும்
உண்மையாகவே இருந்தவர்களா இல்லையா என்று நாம் சந்தேகப்பட்டு அவர்களைக் கற்பிதமானவர்களன்று
கருதியபோதிலும் இந்தக் கற்பனை எவ்வளவு உயர்ந்ததாயும் அழகியதாயுமிருக்கிறது! மேலும்
நாம் அதை அனுஷ்டானத்திற்குக் கொண்டுவரலாம். உண்மையில் சீதையின் சரித்திரம் ஒவ்வொரு
சகோதரியும் புரிந்துகொள்ளத்தக்கதாகும்.” (செயற்கை கேசம், நகை, துணி ஆகியவைகளிலிருந்து தொடங்கி பாபூ என்னை எங்கே அழைத்தேகிவிட்டார்!) மேலும்
சொன்னதாவது: “மேலும் இந்தக் காலத்தில் நகங்களுக்கும் உதடுகளுக்கும் சாயம்
பூசிக்கொள்ளும் ‘பாஷன்’ தோன்றியிருக்கிறதே, அதைப்பற்றி என்ன சொல்வது?” நான் சிரித்துவிட்டேன். பிறகு, “பாபூஜி, நீங்கள் எனக்கு முன்னமேயே இவற்றின் பெயர்களைக்
கற்றுக்கொள்ளச் சொல்லியிருந்தால் கற்றுக்கொண்டிருப்பேன். உதடுகளுக்குப் பூசும்
சாயத்தை ‘லிப்ஸ்டிக்’ என்கிறார்கள். ஆனால் நகங்களில் பூசப்படுவது என்னவென்று
எனக்குத் தெரியாது” என்றேன்.
“ஆமாம்” என்று சொல்லிவிட்டு பாபூ மேலும் சொன்னதாவது: “இக்காலத்தில் சகோதரிகள் பாவம்,
‘லிப்ஸ்டிக்கி’னால் உதட்டுக்கும்
நகத்துக்கும் சாயம் பூசிக்கொள்கிறார்கள். ஆனால் தாம் எவ்வளவு, பலஹீனராயும் சோகைகளாகவும் ஆகிவிட்டோம்
என்பதை கவனிக்கவே அவர்களுக்குப் பொழுதில்லை. பழைய காலத்துப் பெண்களின் உடலில்
நிரம்ப ரத்தமிருந்ததால் அவர்களுடைய வாயும் நகங்களும் இயற்கையாகவே செக்கச்செவேலென்று
இருக்கும். நாம் மேல்நாட்டவர்களைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றியிருக்கிறோம்.
இதில் பெண்கள் ஆண்கள் ஆகிய இருவரும் குற்றவாளிகளே. ஆனால் சகோதரிகளை மன்னிப்பதற்கில்லை.
மேல்நாட்டவரின் கட்டுப்பாட்டுக்கு அடங்குதல், நாகரிகம், பணிவு, முறைப்படி நடத்தல்,
உழைப்பு, ஊக்கம், புதிய விஷயங்களைக் கற்பதில் ஆசை, சகஜமாகப் பழகுதல் முதலிய எத்தனையோ குணங்களைக் கற்றுக்கொள்ளலாம். ஆனால் நாம்
அவைகளெல்லாவற்றையும் விட்டுவிட்டு அவர்கள் தலைசீவிக்கொள்ளுவதையும் பைளடர்
பூசிக்கொள்ளுவதையும் மட்டும் ஏற்றிருக்கிறோம். இதனாலேயே நான் தொண்டை கிழியக் கத்தி,
‘சகோதரிகளே இந்தியாவுக்கு சுயராஜ்யத்தையும்,
சுராஜ்யத்தையும் கொண்டுவரக்கூடும்’ என்று சொல்லிவருகிறேன்.
ஏனெனில் பெண்ணில்லாத வீடு பாழாவதைப்போல சகோதரிகளின் கூட்டுறவு இல்லையானால்
நாட்டின் காரியங்களும் அரைகுறையாகவேதான் இருக்கும். ஆனால் அதற்கு சகோதரிகள் தூய்மை
பெற்றாகவேண்டும். தூய்மை என்பதற்கு நான் கொள்ளும் பொருள் உனக்குத் தெரியுமா?
எவள் தன்னை தூயவளென்று கருதுகிறாளோ
அவளிடம் இந்த குணங்களாவது இருக்கவேண்டும். இவையெல்லாம் पवित (பவித்ர = தூய) என்ற மூன்று எழுத்துக்களிலேயே அடங்கிவிடும். நான் கோஷா முறை
முதலியவற்றை எதிர்ப்பவன். ஆனால் ஒரு வரம்பு இருந்துவரவேண்டியதே. உள்ளும் புறமும்
சுத்தமாயிருக்கும் பொழுதுதான் தூய்மை ஏற்படும். உடலில் உறுதி உள்ளபொழுதுதான் தூய்மை
வரும். உண்மை இருக்கும்பொழுதுதான் தூய்மையும் வரக்கூடும். ஆடம்பரமும்
வெளிப்பகட்டும் இல்லாத இடத்தில்தான் தூய்மை இருக்கும். சுயமரியாதை
இருக்கும்பொழுதுதான் தூய்மையும் இருக்கும். பணிபுரிவதில் ஆவல் இருக்கும்பொழுதுதான்
புனிதத்தன்மை வரும். தூய்மை என்பதற்கு இம்மாதிரியான எத்தனையோ அர்த்தங்களுண்டு.
தூய்மையுள்ள இடத்தில் கடவுளைக் காணலாம் என்பதில் சந்தேகமில்லை. சகோதரிகளிடம் இந்த
ஒரு ஆயுதம் மட்டும் இருந்துவருமானால் அவர்களுக்கு வாளோ ஈட்டியோ தேவையில்லை.
இரும்பு ஆயுதங்களைக் கையாள்வதற்குப் பயில்வதைவிட தூய்மையில் பயிற்சி பெறுதல்
எவ்வளவோ சிரமமாகும். ஆனால் சரியாகப் புரிந்துகொண்டால் மிகவும் சுலபமாகிவிடும்.
பார்த்தாயா, புடவையைப்பற்றிச்
சொல்ல ஆரம்பித்து உனக்கு இவ்வளவு பெரிய பாடம் சொல்லிக்கொடுத்துவிட்டேன். நான்
உனக்குத் தாயாகியிருக்கிறேனல்லவா? ஆகையால் உனக்குப் படிப்பு சொல்லிக்கொடுத்தவர் உன் அப்பாவோ, தாத்தாவோ யாராயிருந்தாலும் தாயின் பொறுப்பு
எனக்கே ஏற்பட்டிருக்கிறது. பொறுப்பை ஏற்றுவிட்டால் அதை நிறைவேற்றியே தீரவேண்டும்.
இன்று நான் சொல்லிக்கொடுத்த பாடத்தை நீ தன் வாழ்க்கையில் அனுசரிக்கவேண்டும். ஆனால்
அதற்கு முன் நீ நாளைக்கே உன் தினக்குறிப்பில் எழுதிக் காட்டுவாயானால் நீ
புரிந்துகொண்டது எவ்வளவென்று எனக்குத் தெரியவரும்." (அந்தக் காலத்தில் நான்
பிரதி தினமும் தினக்குறிப்பு எழுதிவந்தேன். பாபூ ஒவ்வொரு நாளும் அதைப்
பார்த்துவிட்டுக் கையெழுத்திடுவார்.)
பாபூ என்னை எழுப்பியபொழுது இரவு பன்னிரண்டரை மணி. அதுமுதல் அவர் பேசிக்கொண்டே
இருக்கவே ஒன்றேகால் மணி ஆகிவிட்டது. ஆகவே, “நீ இனி தூங்கப்போ. எனக்குத் தூக்கம் வராமையினால்
உன்னை எழுப்பினேன். இந்தப் பெண்ணின் பொறுப்பை ஏற்று ஆபத்தை வாங்கிக்கொண்டிருப்பதால்
இவளை எச்சரித்துவிடவேண்டுமென்று எண்ணினேன். உன்னை எழுப்பியது அதனாலேயே. இனி தூங்கு”
என்றார்.
இவர் எனக்கு இப்படிப்பட்ட தாய். பாதி ராத்திரியில் எழுப்பி எழுப்பி எனக்குப்
பாடம் கற்பித்து வந்தார்.
இன்றோ கடவுள் என் மூன்று தாய்களையும் பறித்துக்கொண்டுவிட்டார். குஜராத்திக்
கவியான போடாதகர் என்பவர் தாயைக் குறித்துப் பின்வருமாறு பாடியிருக்கிறார்:
‘गंगाना नीर तो वधे-घटे
रे लोल
सरखो ओ प्रेमनो प्रवाह रे;
जननीनी जोड़ सखी नहीं जड़े रे लोल ।’
உண்மையில் இந்த மூன்று வரிகளின் கருத்தை நான் அனுபவத்தில் முழுதும் உணர்ந்தேன். என் மூன்று தாய்களின்
அன்பும் அவர்களின் இறுதி மூச்சு வரையில் சிறிதும் குறையவில்லை!
***
No comments:
Post a Comment