Pages

Wednesday, September 27, 2023

பாபூ என் தாய் - மனு காந்தி - 1


மனு காந்தி எழுதிய குஜராத்தி கட்டுரைகளின் தொகுப்பை மொழிபெயர்த்து ‘பாபூ என் தாய்’ என்ற நூலாக ஸர்வோதைய பிரசுராலயம் வெளியிட்டுள்ளது. ‘காந்திக் காட்சிகள்’, ‘ஆசிரம வாழ்க்கை’ முதலிய நூல்களை தமிழில் மொழிபெயர்த்த கோ. கிருஷ்ணமூர்த்தி இந்நூலையும் தமிழில் வழங்கியிருக்கிறார். 1950ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியான இந்நூல் 3000 பிரதிகள் அச்சாகியுள்ளது. அதிலொன்று தஞ்சையில் பழைய புத்தகக் கடையில் கிடைத்தது.

***

முகவுரை

குமாரி மனுபஹன் காந்தி எழுதி ‘பவநகர் ஸமாசார்’இல் வெளிவந்திருந்த சுமார் டஜன் கட்டுரைகள் வாசகர்களுக்குப் பிடிக்காமலிருந்திருக்க மாட்டா. மனுபஹன் கட்டுரையெழுத இப்பொழுதுதான் முதன்முதலாக முயற்சி செய்திருக்கிறாரென்று நினைக்கிறேன். பூஜ்ய காந்திஜியின் சுபாவத்தையும் இறுதி நாட்களில் அவர் செய்த காரியங்களையும் இவை நன்றாக விளக்குகின்றன என்பதே இவற்றிலுள்ள சிறப்பாகும். 1946-இன் இறுதியில் மனுபஹன் பூஜ்ய பாபூஜியோடு இருந்துவரத் தொடங்கியது முதல் அவர் அங்கு நடந்தவைகளின் தினக்குறிப்பு எழுதிவந்திருக்கிறார். நவகாளியின் வேள்வி தொடங்கியதிலிருந்து இறுதிவரையில் இவர் பாபூஜியோடு இருந்துவந்திருக்கிறார். இதனால் இவருடைய தினக்குறிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். வாசகர்கள் இதை எழுதியதற்காக மனுபஹனுக்கு நன்றி செலுத்தத் தவறமாட்டார்கள்.

பூஜ்ய பாபூஜிதாமே மனுபஹனுக்குத் தாயானார். இதனால் புஸ்தகத்தின் பெயரின் பொருத்தமும் தெளிவாகிவிடுகிறது.

பம்பாய்

22-1-49.

கிசோர்லால் மச்ரூவாலா

***
1. பா - பாபூவின் மடியில்

எவ்வளவோ பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் பாபூஜி தந்தை; எவ்வளவோ சீடர்களுக்கு குருதேவர்; எத்தனையோ சகோதர சகோதரிகளுக்கு சகோதரர்; எத்தனையோ பேருக்கு சிறிய, பெரிய தகப்பனார்; எத்தனையோ பேரின் வைத்தியர், டாக்டர், ஊழியர்; எவ்வளவோ பேரின் நண்பர். துன்பமுற்ற எத்தனையோ பேர்களுக்கு ஆதரவளித்து கைதூக்கிவிட்டவர். ஏன், அவர் நாட்டின் தந்தையென்று அழைக்கப்பட்டதிலேயே இவையெல்லாம் அடங்கிவிட்டன. ஆனால் எனக்கோ அவர் தாயாய் இருந்தார். சாதாரணமாக ஆண் எவரும் தாயாக முடியாது. ஏனெனில் தாயின் அன்பு நிறைந்த உள்ளத்தை கடவுள் பெண்ணுக்குத் தந்திருக்கிறாரே தவிர ஆணுக்கு அளிக்கவில்லை. இது பிள்ளையைப் பெற்றெடுக்கும் தாய்க்கே உரிய தனிச்சிறப்பு. ஆனால் பாபூவோ ஆணாய்ப் பிறந்திருந்தும் ஆண்டவன் பெண்களுக்கென அளித்துள்ள இந்தச் சிறப்பியல்பை தாமே விழைந்து பெற்றிருந்தார்.

ஒரு தாய் தன் குழந்தையைப் போற்றி வளர்ப்பதைப் போலவே பாபூ என்னை வளர்த்தார். அவரிடத்தில் எவ்வளவோ பெண்கள் ஆதரவைப் பெற்றிருந்த போதிலும் அவர் என்னிடமே அடிக்கடி, “நான் உனக்குத் தாயாகிவிட்டேனல்லவா? நான் எத்தனையோ பேருக்குத் தந்தையாகியிருந்த போதிலும் உனக்கு மட்டுமே தாயாகி இருக்கிறேன்என்று சொல்வதுண்டு.

தந்தை தம் பிள்ளைகளின் வாழ்க்கையை, உருவாக்குவதில் எல்லா வகையிலும் பங்கு கொள்வது உலகின் ரீதி. ஆனால் பெண்களுக்கோ தாய் செய்யும் காரியங்களையே எல்லாம் பொறுத்திருக்கிறது. இன்றும் புருஷன் வீட்டுக்குப்  போகும் பெண்ணொருத்தி புத்திசாலியாக நடந்துகொள்ளாவிட்டால் அவளுடைய மாமியோ, நாத்தியோ, “உன் தாய் உனக்கொன்றுமே சொல்லித்தராமலா வளர்த்தாள்? என்று தாயைத் தூற்றுவாளே தவிர தந்தையைக் குறைகூறமாட்டாள்.

1942-ல் பூஜ்ய கஸ்தூரிபா சிறையிலிருந்த பொழுது நானும் நாகபுரி சிறையிலிருந்தேன். எனக்கு அப்பொழுது வயது 14. என்னைப் பெற்ற தாய் என்னை 12வது வயதிலேயே விட்டு இறந்துபோனார். ஆனால் அவருடைய இனிய ஆசியின் பயனாக சிறிது காலத்திற்குள்ளேயே எனக்கு கஸ்தூரி பாவின் ஆதரவு கிடைத்துவிட்டது. தாயில்லாக் குறையை நான் உணரவே பா விடவில்லை. 1942-ல் நடந்த புரட்சியில் சர்க்கார் பாவையும் பாபூவையும் சிறையிலிட்டுவிடவே நான் அவர்களிடமிருந்து பிரிந்து போனேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக ஒன்பது மாதச் சிறைவாசத்தை நான் நாகபுரியில் கழித்துக்கொண்டிருந்த பொழுது அந்த தெய்வீகத் தாய்க்கு ஊழியம் செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. நான் பாவை தரிசிப்பேனென்று கனவிலும் எண்ணாதிருந்த சமயத்தில் மீண்டும் அதே அதிர்ஷ்டம் குறுக்கிட்டு என்னை என் அன்புமிக்க தாயின் மடியில் கொண்டு சேர்த்தது. மனிதனுடைய நம்பிக்கை முற்றும் வீண் போவதில்லையல்லவா?

பாபூவின் உபவாசத்திற்குப் பிறகு பாவுக்கு இதயநோய் கண்டது. அது அடிக்கடி வந்து வருத்தத் தொடங்கிற்று. அப்பொழுது பா, “மனுவை அழைத்துவரமுடியுமானால், எனக்கு அந்தப் பெண்தான் வேண்டும்” என்று சொல்லுவாராம். இதே சமயத்தில் பாவுக்கு கடுமையாக இதயநோய் வந்தது. சுசீலாபஹன், டாக்டர் கில்டர் ஆகியோருக்கும் உதவிக்கு ஒரு நர்ஸ் வேண்டியிருந்தது. இருவரும்தான் பாபூவையும் பாவையும் கவனித்து வந்தார்கள். அவர்கள் சர்க்காரிடம் என்னைத் தருவிக்கும்படி கோரினார்கள். சர்க்காரின் போக்கோ இந்த சமயத்தில் விபரீதமாயிருந்தது. என்னைப்போன்ற ஒன்றுமறியாப் பெண்ணுக்கு அரசியல் விஷயங்கள் என்ன தெரியும்? என்னை மகாத்மாஜியுடன் வைப்பது ஆபத்தாகுமென்று அது அஞ்சுவானேன்? இறுதியில் ராஜாஜியும் தேவதாஸ் காந்தியும் ஸர் டாட்டன்ஹாமையும் லார்ட் லின்லித்கோவையும் கண்டு இதுவிஷயமாகக் கடுமையாகப் பேசியதில் அவர்களுக்கு இறுதியாக வெற்றியேற்படவே நான் நாகபுரி சிறையிலிருந்து ஆகாகான் மாளிகைக்கு அனுப்பப்பட்டேன். என்னிடம் பா - பாபூவிடம் போகும்படி சொல்லப்பட்ட பொழுது பலருக்கு வியப்பும் சிலருக்குப் பொறாமையும்கூட உண்டாயிற்று. சிலர் ‘நாங்கள் இவ்வளவு வருஷமாக பாபூவுடனிருந்து பழகியிருந்தும் எங்களுக்கு சந்தர்ப்பம் ஏன் கொடுக்கப்படவில்லை? இந்தச் சிறுமி பாவுக்கு என்ன உதவி செய்துவிடுவாள்? என்றெல்லாம்கூடப் பேசிக்கொண்டார்கள். ஆனால் கடவுளிடம் எனக்கு எவ்வளவு நம்பிக்கையுண்டோ அவ்வளவு நம்பிக்கை சிறுபிராயமுதலே பாபூவினிடமும் இருந்துவந்திருக்கிறது.

இதற்கு முன் பூஜ்ய பாபூ உபவாசமிருந்த சமயத்தில் என் தந்தை அவரைப் பார்க்கப் போயிருந்த பொழுது பா தந்தையிடம் என் யோக க்ஷேமங்களை விசாரித்தாராம். தந்தை, “மனு மிகவும் பலஹீனமாயிருக்கிறாள். அவளுடைய கண்கள் கெட்டுப் போயிருக்கின்றன” என்று சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான், அதுமுதலே பாவின் தாயுள்ளம் தன் குழந்தையைக் காணவேண்டுமென்று துடித்துக்கொண்டிருந்தது. நான் ஆகாகான் மாளிகையின் வாயிலை அடைந்தபொழுது பா அங்கேயே கருணை ததும்பும் முகத்துடன் காத்துக்கொண்டிருந்தார். சூப்ரிண்டெண்டெண்ட் சிறையின் விதிப்படி என் சாமான்களையெல்லாம் சோதித்துப் பார்த்து முடிக்கும் வரையில் பாவினால் தாளமுடியாமற் போகவே பா அவரிடம், “அவள் சாவியை வாங்கிக்கொண்டு விரைவில் அவளை உள்ளே அனுப்புங்களேன் என்றார்.

இந்த அன்புமிக்க பாவுக்கு பதிமூன்று மாதகாலம் இடையறாது சேவை செய்வதற்கு எனக்கு அதிர்ஷ்டம் ஏற்பட்டது. முன்புபோல என் சாப்பாடு, படிப்பு, வேலைகள் ஆகிய எல்லாம் பாவின் பார்வையில் நடந்துவரலாயின. கடவுள் என்னிடம் காட்டிய இந்தக் கருணைக்காக நான் அவருக்கு முழுமனதுடன் வந்தனம் செலுத்தி வந்தேன். குளிர் அதிகமாக இருந்தாலும் சுவாசம் வந்தாலும் தூக்கம் வராதிருந்தாலும் ஒன்று பா என் படுக்கைக்கு வந்து படுத்துக்கொள்வார் அல்லது என்னைத் தம் படுக்கையில் கொண்டு போட்டுக்கொண்டு, “குழந்தாய், நீ தூங்கம்மா. நாள்முழுதும் வேலைசெய்து களைத்திருக்கிறாய். எனக்கோ தூக்கம் வரவில்லை; நான் உன்னைத் தூங்கப் பண்ணுகிறேன்; தூங்கு” என்று சொல்லி தாய் தன் சிறு குழந்தையைத் தட்டுவதைப் போல் தட்டி என்னைத் தூங்கச் செய்வார்.

1944-ம் வருஷம் பிப்ரவரி மாதம் 22-ம் தேதி, கடவுள், அன்பே உருவான என் இந்த அன்னையைத் தம்மிடம் அழைத்துக்கொண்டுவிட்டார்! அன்று நான் கற்சிலையைப்போல அவருடைய தலைப்புறத்தில் நின்றவளாய் அவர் பாபூவின் மடியில் தலையை வைத்துக்கொண்டு ராம நாமத்தையும் கீதையின் புண்ணிய சுலோகங்களையும் சொல்லியபடியே இந்த உலகத்திலிருந்து இறுதியாக விடைபெற்றுப் போவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பா எல்லோரிடமும் மன்னிப்புக் கோரினார். என்னிடமும், “குழந்தாய், நீ எனக்கு எவ்வளவோ சேவை செய்திருக்கிறாய். கடவுள் உன்னை சௌக்கியமாக வைப்பாராக” என்றார். என் தந்தையிடம், “மனுவை இனி அழைத்துப் போய் படிக்க வை” என்றார். பாபூவிடம், “நான் போகிறேன்” என்றார். பாபூவின் கண்களிலிருந்தும் இரு நீர்த்துளிகள் உதிர்ந்தன.

(14-15 வயதிலேயே எவரேனும் இறப்பதையோ பிணத்தையோ சிதை எரிவதையோ நான் முதலில் பார்த்தது பூஜ்ய கஸ்தூரி பாவினுடையதையும் அடுத்தாற்போல் பாபூவினுடையதையுமே யாகும். என்னைப் பார்த்து உலகம், பாவுடனும் பாபூவுடனும் இறுதிவரையில் இருந்த இந்தப் பெண்ணின் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம் என்று சொல்லுகிறது. ஆனால் நான் அதிர்ஷ்டசாலியா, அதிர்ஷ்டமில்லாதவளா என்பதை என்னால் இன்னும் தீர்மானிக்க முடியவில்லை)

பாவின் மறைவுக்குப் பிறகு சிறிது காலத்திற்கு கடவுளிடம் எனக்கிருந்த நம்பிக்கை குறைந்துபோயிற்று. தன் இறுதி மூச்சு இருந்தவரையில் என்னை இவ்வளவு கவனித்துப் பாதுகாத்துவந்த தாயை கடவுள் ஏன் அழைத்துக்கொண்டாரென்று எண்ணலானேன். பாபூ என்னிடம் ஸ்தோத்திரப் பாடல்களை பாடச்சொன்ன பொழுது நான் அறியாமையினால், பாபூவினிடம், “கடவுள்தான் பாவை அழைத்துப் போய்விட்டாரே, நான் இனி அவர் பெயரையே சொல்லப்போவதில்லை” என்றேன். சில சமயங்களில் இத்தகைய அறியாமைக்கு வியக்கத்தக்க விளைவு ஏற்படுகிறது. எனக்கும் இதுவிஷயத்தில் நல்ல அனுபவம் ஏற்பட்டது.

அன்றிரவு பாவைக் கொளுத்தியான பிறகு பாபூ என்னைத் தம்மிடம் அழைத்து பா உபயோகித்துவந்த பல பொருள்களை என் கையில் கொடுத்தார். அவைகளில் அவர் ஆதிமுதலே அணிந்துவந்திருந்த தங்கக் குவளை கொண்ட யானை தந்த வளையல்கள் இரண்டும் துளசி மாலை ஒன்றும் தலை நாடாவும் உபயோகித்துவந்த குங்குமமும் செருப்புகளும் பிறவும் இருந்தன. அவைகளை என் கையில் கொடுத்தபடியே பாபூ, “இதோ பார், பா உன்னை எவ்வளவோ வியந்திருக்கிறாள். ஆகையால் அவளுடைய இந்தப் பொருள்களுக்குரியவள் நீயே. இவைகளை உனக்கே கொடுப்பதென்று முடிவு செய்திருக்கிறேன். பரதன் ராமனுக்குப் பதிலாக ராமனுடைய பாதுகைகளை சிம்மாசனத்தில் இருத்தி அவைகளின் ஏவலின்படி எல்லாம் செய்துவந்ததைப்போல நீயும் இவைகளைக் கேட்டு எல்லாவற்றையும் செய். பா எவ்வளவு பதிவிரதை பார்த்தாயா? அதற்கு ருஜு அவளுடைய இந்த வளையல்கள் மணிக்கணக்கில் விறகுகளை இட்டு எரித்த பிறகும் சிறிதும் எரியாமல் அப்படியே இருப்பதேயாகும்” என்றார்.

(மகாராஷ்டிர நாட்டு வழக்கப்படி நாங்கள் பாவின் மடியில் ஐந்து பச்சைக் கண்ணாடி வளையல்கள், தேங்காய், எள் ஆகியவைகளை முடிந்திருந்தோம். மறுநாள் அந்த வளையல்களெல்லாம் நாங்கள் வைத்திருந்தபடியே சிறிதும் பழுதுபடாமல் சாம்பலிலிருந்து கிடைத்தன. அவைகளுள் ஒன்றை நான் இன்றும் அந்தப் பதிவிரதைத் தாயின் பிரசாதமாக என்னிடம் வைத்திருக்கிறேன்.)

இப்போது சர்க்கார் என்னை பாபூவிடம் இனி வைத்திராது, பாவுக்காகவேதான் என்னை இங்கே வைக்கப்பட்டிருந்தது என்று பேசிக்கொண்டார்கள். மத்திய மாகாண சர்க்கார் என்னை வெகுகாலத்திற்கு முன்பே விடுவித்துவிட்டது. ஆனால் பா அசௌக்கியமாய் இருந்ததால் அவருக்கு சேவை செய்யும் பொருட்டு என்னை ஆகாகான் மாளிகையில் இருக்க அனுமதிக்க வேண்டுமென்று நான் சர்க்காரை வேண்டிக்கொள்ளவே சர்க்கார் அதை அனுமதித்திருந்தது. இனி நான் அங்கே இருக்கத் தேவையில்லை. ஆகவே பாவினிடமிருந்து என்னைப் பிரித்துவிட்ட தெய்வம் பாபூவினிடமிருந்தும் பிரித்துவிடுமோவென்று மனதிற்குள் சொல்லிக்கொண்டேன். எனக்கு மிகுந்த வருத்தமுண்டாகிவிட்டது. ஒருநாள் இரவு தூக்கத்தில் தூக்கிவாரிப்போட எழுந்தேன். ஒன்றிரண்டு முறை சுசீலாபஹனும் பாபூவும் என் கட்டிலுக்கு வந்து என்னைத் தட்டித் தூங்கவைத்துப் போனார்கள். மறுநாள் பாபூவின் மௌன தினம். அவர் அதிகாலையில் நான்கு மணிக்கே எழுந்து எனக்குப் பின்வரும் கடிதத்தை எழுதினார்:

“சிரஞ்சீவி மனுடீ.

நீ நன்றாகத் தூங்கவேயில்லை அல்லவா? உன்னையும் பிரபாவதியையும் (ஸ்ரீ ஜெயப்பிரகாச் நாராயணருடைய மனைவி) வைத்திருக்கும் விஷயமாக நேற்று நீண்ட கடிதமெழுதினேன். ஆனால் இரவில் சிந்தனைகள் காரணமாக தூக்கம் வரவில்லை. கடைசியில் ஒளி பிறந்தது. இந்த வேண்டுகோளைச் செய்துகொண்டிருக்கக் கூடாது. செய்துகொள்வதென்றால் இது எப்படி சிறையாகும்? நாம் பிரிவை சகித்துக்கொண்டுதான் ஆகவேண்டும். நீ புத்திசாலியாயிற்றே. துக்கத்தை மறந்துவிடு. நீ பெரிய பெரிய காரியங்களையெல்லாம் சாதிக்க வேண்டும். அழுவதை நிறுத்து; மகிழ்ச்சியுடனிரு. வெளியே போய் கற்க முடிந்ததை யெல்லாம் கற்றுக்கொள். செய்துள்ள சேவைகளினால் எந்த நிலைமையிலும் நன்மையே உண்டாகும். எனக்கு உன்னைப்பற்றி மிகுந்த கவலையுண்டு. உன்னைப் போன்றவள் நீயே. கள்ளங்கபடமில்லாமல் பரோபகாரத்தில் பற்று உள்ளவளாய் இருக்கிறாய். சேவை புரிவதையே தன் கடமையென்று கொண்டிருக்கிறாய். ஆனால் இப்பொழுதும் நீ படிப்பில்லாதவள். அறிவு விளக்கப் பெறாதவள். படிக்காமலே இருந்துவிட்டால் பின்னர் வருத்தப்படுவாய். உயிருடனிருந்தேனானால் எனக்கும் வருத்தமாயிருக்கும். நீ இல்லாதபொழுது எனக்கு என்னவோபோல்தான் இருக்கும். ஆனால் இப்பொழுது உன்னை என்னிடம் வைத்துக்கொள்ளுவது சரியென்று தோன்றவில்லை. ஏனெனில் அதில் குற்றமுண்டு. அதுவே மோகம் எனப்படும். நீ இப்பொழுது ராஜகோட்டுக்குப் போகவேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது. அங்கே உனக்கு நாரண்தாஸுடைய நற்பழக்கம் ஏற்படும். (நாண்தாஸ் காந்தி என்பவர் ராஜகோட் ராஷ்டிரீய சாலையின் நிர்வாகி) அங்கே நீ உபயோகமான தொழிற்பயிற்சி பெறுவதோடு சங்கீதமும் கற்றுக்கொள்ள இயலும். இன்னும் முடிந்தவைகளைக் கற்றுக்கொள். குறைந்தது ஒரு வருஷம் ராஜகோட்டில் இருப்பாயானால் புத்திசாலியாகிவிடுவாய். பிறகு கராச்சிக்கோ வேறு எங்கேனுமோ போய்க்கொள்ளலாம். (கராச்சியில் என் தந்தை இருந்தார். பாபூவிடம் வருவதற்கு முன் அவரிடம் இருந்துகொண்டு ஆங்கிலத்தில் ஐந்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன்.) கராச்சியில் குருதயால் மல்லிக் இருக்கிறார். ஆனால் அவரும் அங்கே இனி இருக்கப்போவதில்லை. ஆகையால் அங்கே படிப்பு மட்டும்தான் கிடைக்கும். அதுவும் உபயோகமானதே. பல பெண்களுடன் இருந்துவருவதும் நல்லதே. ஆனால் ராஜகோட்டில் கிடைக்கக்கூடியது வேறெங்கும் கிடைக்காது. மற்றவைகளை மௌனம் கலைந்த பிறகு சொல்லுகிறேன். உன் தாய் நானே அல்லவா? இவ்வளவு புரிந்துகொண்டால் போதுமானது.

ஆகாகான் மாளிகை

புனா, 27-2-44

பாபுவின் ஆசிகள்

இந்தக் கடிதத்தை பத்திரமாக வைத்துக்கொள்.”

ஆனால் என் அதிர்ஷ்டவசமாக நான் பாபூவினிடமிருந்து பிரிக்கப்படவில்லை! பாபுவுடன் கூடவேதான் ஆகாகான் மாளிகையிலிருந்து வெளிவந்தேன்.

***

பாபூ என் தாய் - மனு காந்தி - 2

No comments:

Post a Comment