Pages

Tuesday, August 8, 2023

அணுவும் மகாத்மாவும் (சிறுகதை) - க. நா. சுப்ரமண்யம்


நிர்மலமான வானத்திலே சூரியன் உதித்துவிட்டான். நகரின் மாடமாளிகைகள் கூடகோபுரங்களிலெல்லாம் காலை வெயில் தாக்கித் தங்கமுலாம் பூசியது.

அரசியல்வாதிகளும், நாட்டின் அன்றைப் பெரிய மனிதர்களும், ராணுவத்தைச் சேர்ந்த உயர் தர உத்தியோகஸ்தர்களும், மற்றுமுள்ள முக்கியஸ்தர்களும் முந்திய இரவே நகரைக் காலி செய்துவிட்டுப் போய்விட்டார்கள். விரோதிகளின் அணுக்குண்டு அன்று காலை நகரில் விழப்போகிறது என்று எச்சரிக்கை வந்தும் அவர்கள் அங்கே தங்குவார்களா என்ன? நகரில் மிஞ்சியிருந்தவர்கள் குழந்தைகளும், கிழவர்களும், பெண்களில் வயசு வராதவர்களும், அதிக வயசானவர்களுந்தாம்! எதிரியின் அணுக்குண்டு ஒன்று வீணாவதற்கு நாட்டுத் தலைவர்கள் செய்த சூழ்ச்சி இது.

நகரில் இருந்தவர்களுக்கெல்லாம் காபி சாப்பிட்ட பிறகுதான் எதிரியின் அணுக்குண்டைப் பற்றிய ஞாபகம் வந்தது. இவ்வுலகில் அதுவே அவர்களுடைய கடைசி நாள். ஆனால் அந்த ஊர்க் கிழவர்கள் அறிவாளிகள். அவர்கள் சாவை எண்ணி அஞ்சவில்லை. அணுக்குண்டை வரவேற்பது என்று தீர்மானித்து நகரின் தெருக்களில் கும்பல் கும்பலாக அண்ணாந்து பார்த்துக்கொண்டு நின்றார்கள்.

மணி ஏழு அடித்தது. எதிரிகளின் விமானம் ஆகாயத்தில் பறந்து சென்றது. ஓர் அணுக்குண்டை வீசிவிட்டு வேகம் வேகமாகப் பறந்து சென்றது. அதுவரையில் பத்திரமாகத் தன் அறையில் ஆடாமல் அசையாமல் குலுங்காமல் கொள்ளாமல் பதுங்கியிருந்துவிட்ட அணுக்குண்டு கீழே பூமியை நோக்கி விழத் தொடங்கியது. காலை வெயில் அதன் அழகைப் பன்மடங்காக்கிக் காட்டியது. பூமிக்கு முந்நூறு அடி வரையில் அது சாதாரணமாக விழுந்தது. பிறகு அது வீழ்வது தடைப்பட்டது. எவ்வளவு முயன்றும் அதற்குமேல் ஓர் அங்குலங்கூட நகர முடியவில்லை. அணுக்குண்டின் லட்சியம் பூர்த்தியாகவில்லை. தன்னுடைய வாழ்வின் லட்சியம் பூர்த்தியாகவில்லை என்பதை உணர்ந்தது, அந்த அணுக்குண்டு.

அணுக்குண்டின்மேல் எதுவும் பிசகில்லை. அதைச் சிருஷ்டித்தவர்கள் சரியானபடிதான் சிருஷ்டித்திருந்தார்கள். நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் ஆறு பேர் சேர்ந்து தயாரித்த அந்த அணுக்குண்டின் சூட்சுமத்திலே தவறு ஒன்றும் இல்லை. தவறு எதுவானாலும் அது அணுக்குண்டுக்கு வெளியேதான் இருந்தது. அணுக்குண்டிற்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று அதை மேலே நகரவொட்டாமல் தடுத்தது. முதல் இருபதினாயிரம் அடிகளை வெகு சுலபமாகக் கடந்துவிட்ட அணுக்குண்டுக்குத் தூக்கம் வருவதுபோல் இருந்தது. சட்டென்று ஏதோ குறுக்கிட்டு அதன் போக்கைத் தடைப்படுத்துவதுபோல் இருந்தது. திரிசங்குவைப்போல நடுவானத்தில் மிதந்தது அணுக்குண்டு. கண்ணில் படாத ஒரு கை, சக்தி வாய்ந்த ஒரு கை, அதை அப்படியே தன் உள்ளங்கையில் தாங்கிக் கீழே விழாதபடி தடுப்பது போல் இருந்தது. வெடிப்பதற்குக்கூட அதற்குச் சக்தியில்லாது போய்விட்டது.

சக்தி மிகுந்த அணுக்குண்டுக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. தன்னையும்விடச் சக்தி வாய்ந்தது எதுவும் உலகில் இல்லை என்று எண்ணி இறுமாப்புற்றிருந்த அணுக்குண்டை, யாரோ, எதுவோ, மிகவும் லாகவமாகத் தடுத்து நிறுத்திவிட்டதே! விஞ்ஞானத்தின் முடிவுகளெல்லாம், சக்தி வாய்ந்த முடிவுகளெல்லாம், இப்படிப் பிசுபிசுத்துவிடுவதா? அணுக்குண்டுக்கு அவமானமாகக்கூட இருந்தது. தன்னைத் தடுத்து நிறுத்தியது எந்த சக்தி, எப்படிப்பட்ட சக்தி என்று ஆராய்ந்து அறிந்துகொள்ள விரும்பியது அணுக்குண்டு.

சொந்த ஆசை அபிலாஷைகள் இல்லாமல்தான் அந்த அணுக்குண்டு அந்த நகரை அழிப்பதற்குக் கிளம்பியிருந்தது. கட்சிப் பிரதிகட்சி, நட்பு விரோதம், லாபம் நஷ்டம் எதுவும் அதற்கு இல்லை. போ என்று ஏவிவிட்டார்கள்; வந்தது. அதை அழி என்று யசமானர்கள், அதைச் செய்தவர்கள், உத்தரவிட்டார்கள். அழிக்க ஆவலுடன் வந்தது. அதன் காரியம் பூர்த்தியாகவில்லை; கடமை தவறிவிட்டது.

அந்தச் சூழ்நிலையில் அணுக்குண்டுக்கும் ஓர் ஆத்மா ஏற்பட்டுவிட்டது; நல்லது கெடுதல், சரி தப்பு என்று சிந்தித்துப் பார்க்கிற ஒரு மனம் ஏற்பட்டுவிட்டது. மகத்தான தோல்வியை ஏற்றுக்கொள்கிற விநாடியிலே அந்த அணுக்குண்டு ஆத்மவிசாரணையில் ஈடுபட்டது.

‘எல்லாம் வழக்கப்படி, சாதாரணமாக நடந்திருந்தால் என் காரியம் பூர்த்தியாகியிருக்கும்; என் வாழ்க்கை லட்சியம் நிறைவேறியிருக்கும். அழிக்கும் சிறியதொரு ருத்திரனாக நான் இந்த நகரை அழித்துவிட்டிருப்பேன். ஆனால் விதி வேறுவிதமாக இருந்தது.’ பெருமூச்சு விட்டது அணுக்குண்டு.

‘இந்த அசாதாரணமான காரியம் நடைபெறுவதற்குக் காரணம் என்ன? யார்? என்னோடு விளையாடத் துணிந்த மானிடன் யார்? எதுவும் தெரியவில்லையே! எனக்கோ வேலை கிடக்கிறது. அதை விட்டுவிட்டு நான் இப்படி நடுவானில் திரிசங்கு மாதிரி தொங்கிக்கொண்டிருக்க முடியுமா என் கடமை நிறைவேறாமல் தடுக்கும் படுபாவி யார் என்று அறிய நான் விரும்புகிறேன். கடவுளே! என்னைச் செய்த விஞ்ஞானிகளும் என்னை ஏவிவிட்ட அரசியல்வாதிகளும் என்னுடன் வந்திருந்தார்களானால், இப்போது என்ன செய்வது என்கிற பிரச்னையே எனக்கு இருந்திராது!’

அணுக்குண்டு இப்படிப் பலவாறாக தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தது. அதனுடைய கேள்விகளும் பெருமூச்சுகளும் ஆச்சரியக் குறிகளும் பிரசங்க ரீதியில் ஏற்பட்டவையே தவிர, அவற்றிற்கெல்லாம் பதிலையோ எதிரொலியையோ அது எதிர்பார்க்கவில்லை.

ஆனால் பதில் கிடைத்தது. முந்நூறு அடிக்கு அப்பால் இருந்த பூமியிலிருந்து பதில் கிடைத்தது.

“தம்பி, உன் மனத்துக்கு ஆறுதல் இருக்குமானால் நீ தெரிந்துகொள். நான்தான் உன்னை இப்படி அந்தரத்தில் தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறேன்” என்றது ஒரு மனிதக் குரல்.

“யார் நீ? தம்பி என்று என்னைக் கூப்பிட உனக்கு என்ன தைரியம்?” அணுக்குண்டுக்கு அளவு கடந்த கோபம் வந்தது.

மெல்லிய மெதுவான குரலில் பூமியிலிருந்து மிதந்து வந்தது இதற்குப் பதில்: “தம்பி, நான்தான். சில வருஷங்களுக்கு முன் நான் இந்த நகரில் மனிதர்களிடையே மனிதனாக நடமாடிக்கொண்டிருந்தேன். என் சகோதரர்கள் எனக்கு மகாத்மா என்று பட்டப்பெயர் கொடுத்து, சிலுவையில் அறைந்து கொன்று, கொளுத்திவிட்டு அழுது தீர்த்தார்கள். பின்பு என்னை வழிபட்டார்கள்.”

இந்த விஷயத்தைக் கிரகித்துக்கொள்ள அணுக்குண்டுக்குச் சில விநாடிகள் ஆயின.

பூமியிலிருந்து குரல் தொடர்ந்து சொல்லியது: “இந்த நகர் அழியா வண்ணம் காப்பது என் கடமை. அதனால்தான் என் கையை நீட்டி உன்னைத் தடுத்துக் கீழே விழாதபடி நிறுத்தியிருக்கிறேன்.”

எந்த மகாத்மாவையும் பற்றி அணுக்குண்டோ அதைச் செய்தவர்களோ கேள்விப்பட்டதில்லை. மகாத்மா என்றால் யார், என்ன, எப்படி, ஏன் என்கிற மாதிரியான கேள்விகள் எல்லாம் தோன்றின அதற்கு.

அணுக்குண்டு மனத்தால் நினைத்து வாயால் கேட்காத கேள்விகளுக்கெல்லாம் பதிலளித்தது பூமியிலிருந்து வந்த குரல். “மனிதனுக்கு நல்லது செய்யும் உத்தேசத்துடன் தலைமுறைக்குப்பின் தலைமுறையாக உலகில் தொடர்ந்து அவதரித்துக்கொண்டே இருப்பவன் நான்தான். சகோதரர்களுக்கிடையே அமைதி நிலவவேண்டும் என்று ஆதிமுதல் இன்றுவரை பாடுபட்டுவருபவன் நான்தான்...”

“இந்தத் தடவை நீ நல்லது செய்யவில்லை” என்றது அணுக்குண்டு தீர்மானமாக.

“அப்படியா நீ நினைக்கிறாய்? அது தவறு, தம்பி. மகாத்மாக்களால் கெடுதி செய்ய முடியாது” என்றது மகாத்மாவின் குரல்.

“அப்படியானால் இந்த நகரை அழிப்பதற்கென்று என்னைச் சிருஷ்டித்தவர்கள்தாம் தவறு செய்துவிட்டார்களா?”

“சந்தேகம் என்ன? தவறு செய்தவர்கள் அவர்கள்தாம்.”

“உனக்கு அதைப்பற்றிச் சந்தேகம் சிறிதும் இல்லையோ?” என்று வினவியது அணுக்குண்டு.

“அழிக்கப் பிறந்தது எதுவும் கெடுதலானதுதான். ஆக்கப் பிறந்ததே நல்லது.”

மகாத்மாவின் குரல் சிறிது நேரம் மௌனமாக இருந்தது. பிறகு சொல்லிற்று: “நல்லது கெடுதி என்று தீர்மானிக்க நான் யார்? கடவுள் உன்னையும் ஒரு காரணத்துக்காகவே சிருஷ்டித்திருக்கலாம்.”

அணுக்குண்டு வெற்றிச் சிரிப்புச் சிரித்தது. உரத்த குரலில் அகம்பாவத்துடன் சொல்லிற்று: “நகர்ந்து நில். வழியை விடு! கடவுள் என்னை ஒரே காரணத்துக்காகத்தான் சிருஷ்டித்தார் - இந்த நகரை அழிப்பதற்காக. நகர்ந்து நில்.”

“இந்த நகரமும் இதில் வாழும் மனிதர்களும் புனிதமானவர்கள்; அழகானவர்கள். இவர்களை அழிப்பதற்கு நான் சம்மதிக்கமாட்டேன். இவர்கள் எல்லோரும் பிறருக்குத் தீங்கிழைக்க மாட்டாத என் சகோதரர்கள்” என்றது மகாத்மாவின் குரல்.

“நகரம் அழகாகத்தான் இருக்கிறது.”

“மனிதன் சில சமயம் தவறு செய்துவிடுகிறான். ஆனால் மனிதன் அழகானவன், அழகில்லாதவன்; நல்லவன், கெட்டவன்; இரண்டுந்தான். இரண்டும் ஒருங்கே அழிந்துவிடுவது கூடாது. கெட்டதும் அழகில்லாததும் மட்டுந்தான் சிறுகச்சிறுக அழியவேண்டும்.”

“அப்படியா!” என்றது அணுக்குண்டு ஏளனமாக.

“உலகில் எங்கும் மனிதன் இன்னும் சரியான வாழ்வு வாழக் கற்றுக்கொள்ளவில்லை. எனக்கே சில சமயங்களில் சரி, தப்பு இன்னதென்று புரிவதில்லையே! சாதாரண மனிதனுக்கு அவ்வளவு சுலபமாகப் புரிந்துவிடுமா? எனக்குச் சரி என்று தோன்றுவதை நான் செய்கிறேன். இந்த நகர் அழியாமல் காப்பது சரி என்று எனக்குத் தோன்றுகிறது; காக்க முற்பட்டேன்” என்றது மகாத்மாவின் குரல்.

இந்தத் தத்துவமெல்லாம் அணுக்குண்டுக்குப் புரியத்தான் இல்லை. ஆனால் மகாத்மாவின் பேச்சிலே ஒலித்த ஒரு தொனி அதற்குத் தீர்மானமாகப்பட்டது. அந்தத் தீர்மானத்தை எதிர்த்துத் தான் செய்ய எதுவும் இல்லை என்று எண்ணியது அணுக்குண்டு.

“இந்த உலகமே அழகாக இருக்கிறது. உலகிலுள்ள ஒவ்வொன்றும் அழகாகவும் நல்லதாகவுந்தான் இருக்கிறது. மனிதன் ஒருத்தன்தான் அழகில்லாதவனாக, நல்லவனல்லாதவனாக இருந்துவிடுகிறான். சில சமயம் காரண காரியமே இல்லாமல் யுத்தங்களில் ஈடுபடுகிறான். அசட்டுக் குறிக்கோள்களுடன் வாழ்வை நடத்துகிறான்.”

“மனிதனின் அசட்டுத்தனங்களைச் சொல், கேட்கலாம்” என்றது அணுக்குண்டு.

“தம்பி, சொல்கிறேன் கேள். அதிகாரம் என்கிற ஆசை பிடித்து உந்த, மனிதன் தன் சகோதரனைத் தீர்த்துவிட முற்படுகிறான். உலகில் உள்ள அழகான விஷயங்களை எல்லாம் சிருஷ்டித்துத் தந்திருப்பது அன்பு என்கிற தத்துவம். எல்லாவற்றையும் அழிக்கும்படி தூண்டுவது அதிகாரத்தில் மனிதனுக்குள்ள ஆசை. அதிகாரம் என்பது என்ன? நிலைக்காத நீடிக்காத தாற்காலிகமான ஒரு நிலை. இதற்காகவா மனிதன் மடிந்து மாள்வது? சரித்திரத்தில் காணவில்லையா? ரோம் என்கிற சாம்ராஜ்யம் எங்கே இப்போது? பள்ளிப் பையன்களின் பாடப்புத்தகங்களிலே எட்டுப் பக்கங்களில் முடிந்துவிடுகிற ஓர் அத்தியாயம் அது. அப்படி ஒன்றும் சுவாரசியமான அத்தியாயங்கூட அல்ல. எகிப்திய பாரோக்களைவிட அதிக அதிகாரம் படைத்திருந்தவர்கள் உலகிலே இல்லை. அவர்கள் இருந்த சுவடே தெரியாமல் மறைந்துவிட்டார்கள். யாரோ ஓர் ஆராய்ச்சிக்காரன் மண்ணைத் தோண்டி அவர்கள் பெயரை மறுபடியும் அம்பலத்துக்குக் கொண்டுவரும் வரையில்!”

பள்ளிக்கூட வாத்தியார் மாதிரி மகாத்மா தொணதொணவென்று சரித்திரப் பாடங்கள் எல்லாவற்றையும் விடாமல் ஒப்பிப்பார் போல இருந்தது. ஆனால் அணுக்குண்டு குறுக்கிட்டுக் கேட்டது: “அதிகாரம் படைத்தவர்கள் சக்தி வாய்ந்தவர்கள் என்று யார் யாரையோ பற்றிச் சொல்லுகிறாயே! அவர்கள் உண்மையிலேயே சக்தி வாய்ந்தவர்கள்தாமா? அதிகாரம் படைத்தவர்கள்தாமா? அவர்களிடம் அணுக்குண்டு இருந்ததா? நான்...”

“மனிதன் ஆரம்ப முதலே இந்த நான், நான் என்று சொல்லிக்கொண்டேதான் உயிரை விட்டிருக்கிறான். சக்தி என்கிறாயே; ஒன்று கேட்கிறேன்; சொல் தம்பி. ஹைட்ரஜன் குண்டு என்கிறார்களே அதன் சக்தி...”

“அது எனக்கு ஒன்றுவிட்ட அண்ணா; வேறு என்ன?” என்றது பெருமையாக அணுக்குண்டு.

“தம்பி! கோபால்ட் குண்டு...”

“அதுவும்...”

“நீ உறவு கொண்டாடலாம். அவை உன்னோடு உறவு கொண்டாடமாட்டா என்பது நிச்சயம். மனித சுபாவமே இதுதான்” என்றது மகாத்மாவின் குரல்.

அணுக்குண்டுக்குக் கோபமே வந்துவிட்டது. அந்தக் கோபத்தில் பிரமாதமான முயற்சி செய்து பார்த்தது; பூமியை எட்டித் தொட்டு, அந்த நகரையும் அதில் வசித்த அந்த விவாதப் புலி மகாத்மாவையும் தீர்த்துவிடலாம் என்று இரண்டு அங்குலம் நகர்ந்திருக்கும்; அவ்வளவுதான்; அதற்குமேல் அதனால் நகர முடியவில்லை.

“மெதுவாக, தம்பி, மெதுவாக!” என்றது மகாத்மாவின் குரல். “உன்னால் ஆகாத காரியத்தைச் செய்ய முயலாதே! பலன் அளிக்காது! படார் என்று வெடிப்பதற்குப் பதில் பிசுபிசுவென்று போய்விடப் போகிறாய்; ஜாக்கிரதை!”

அணுக்குண்டு எதுவும் பதில் சொல்லவில்லை. சற்றுமுன் செய்த முயற்சியினால் அலுத்துப்போய் மேல்மூச்சுக் கீழ்மூச்சு வாங்கப் பேசாமல் இருந்துவிட்டது.

ஒரு விநாடிக்குப் பிறகு மகாத்மாவின் குரல் சொல்லிற்று: “நீயும் நானும்தான் போராடுகிறோம் என்றால் ஒரு வழியாக இதை முடித்துவிடலாம்.”

“நம் போராட்டம் தவிர இது வேறு என்ன?”

“அவ்வளவு எளிய பிரச்னையாக இருந்தால் உடனே சொல்லிவிடுவேனே! ‘உன் இஷ்டப்படியே தீர்த்துக்கொள், தம்பி. என் சகோதரர்களுக்காக நான் என்னையே தியாகம் செய்துகொள்ளுகிறேன். நீ என் உயிரை வாங்கிக்கொண்டு மற்றவர்களை விட்டுவிடு’ என்று சொல்லிவிடுவேனே! என் சகோதரர்கள் வாழ நான் என் உயிரைக் கொடுத்துவிடுவேனே!” என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே சொல்லியது மகாத்மாவின் குரல்.

அணுக்குண்டுக்கு விஷயம் புரியவேயில்லை. இந்த அசாதாரணமான மனிதன் யார்? தன் சகோதரர்களுக்காகத் தன்னையே தியாகம் செய்துகொள்ளத் தயாராக இருந்ததால்தான் மகாத்மா என்கிற பட்டப்பெயர் வந்ததோ?

“நீ யார்? எனக்குப் புரியும்படியாகத்தான் சொல்லேன்” என்றது அணுக்குண்டு, வேதனை தொனித்த குரலில்.

“நானா? நான் மிகவும் சாதாரணமான மனிதன். நூற்றிருபது பவுண்டு கனமுள்ள ஒரு மனிதன். கால் தடுக்கினால் போதும்; என் மூச்சு நின்றுவிடும். அவ்வளவு பலஹீனமான மனிதன். சிலுவையில் அறைந்து மனிதனால் என்னைச் சுலபமாகவே சாக விட்டுவிட முடியும். நகத்தால் கீறினால், எனக்கு ரத்தம் வரும். கிச்சுக்கிச்சு மூட்டினால் நானும் சிரிப்பேன். என்னை அடித்தால் அழுகை வரும், ‘பாவம்! அவன் தவறு செய்கிறானே!’ என்று. ஒரு துப்பாக்கிக் குண்டு போதும். ஓர் அறிவிலி எனக்கென்று நாலு குண்டுகளை வீணாக்கினான்!”

மகாத்மாவின் குரல் மௌனமாகியது. அணுக்குண்டும் சிறிது நேரம் மௌனமாகவே இருந்தது. இன்னது சொல்வது, இன்னது செய்வது என்று அதற்குத் தெரியவே இல்லை.

கடைசியில் அணுக்குண்டு கேட்டது: “இதெல்லாம் சரி. இப்பொழுது இந்த நிலைமையில் முடிவுதான் என்ன?”

“எனக்கு எப்படித் தெரியும்?” என்றது மகாத்மாவின் குரல்.

“அதுகூடத் தெரியாமல் நீ...”

“எனக்கு ஒன்று தெரியும். நீ அழிப்பதற்கென்று பிறந்தவன். நான் ஆக்குவதற்கு என்று பிறந்தவன்.”

“அழிக்கும் சக்திக்கு முன் ஆக்கும் சக்தி எம்மாத்திரம்!” என்று கூறி நகைத்தது அணுக்குண்டு.

“அப்படி நீ நினைப்பது தவறு. ஆக்கும் சக்திதான் மகத்தானது. உண்மையான சக்தி அதுதான்.”

“உன்னோடு பேசி பயன் எதுவும் இல்லை. என் காரியத்தைச் செய்வதுதான் எனக்கு முக்கியம்.

“செய்” என்றது மகாத்மாவின் குரல். தன்னுடைய அபரிமிதமான, விஞ்ஞான எல்லையை எட்டிய சக்தியை மதிக்காமல் பேசிய அந்த மகாத்மாவிடம் பிரமாதமான கோபம் வந்தது அணுக்குண்டுக்கு.

“நான் வெடிக்கப் போகிறேன். வெடித்து உன்னையும் உன் நகரையும், சகோதரர்கள் என்று கூறிக்கொள்கிறாயே அவர்களையும் அழிக்கப் போகிறேன், பார்!” என்று கூறிப் பயங்கரமாகச் சிரித்தது.

மகாத்மாவின் குரல் பதற்றம் இல்லாமல் பதிலளித்தது. “தம்பி, உன்னைத் தவிர வேறு எதையும் உன்னால் அழித்துக்கொள்ள முடியாது. வீணாகத் துள்ளாதே தம்பி! பெரிதாகப் பேசிச் சிறிதாகச் செய்துவரும் உலகத்தின் தத்துவஞானிகளின் கூட்டத்தைப் போலவே பேசுகிறாய் நீயும். உன் எல்லைகளை உணர்ந்தே பேசு. அதுதான் நல்லது.”

கடைசியாகச் சொன்ன வார்த்தைகளைக் காதில் வாங்காமலே அணுக்குண்டு வெடிக்க முயன்றது. தானாக ஊதி ஊதிப் பருத்தது. பருத்தது... பருத்தது...

முடிவுரை

அணுக்குண்டு வெடித்து அந்த நகரம் அழிந்ததா என்பதைச் சரித்திரம் நமக்குச் சொல்லவில்லை. சரித்திர ஏடுகளிலே அந்த நகரம் இருந்ததும் அழிந்ததும் மிகச் சின்ன விஷயங்கள்.

ஆனால் கவிகள் கூறுகிறார்கள், அன்று வானத்திலே ஒரு புதிய நட்சத்திரம் தோன்றியது என்று.

கவிகள் கூறுகிறார்கள்; மனிதன் மனிதனோடு சண்டை போடாமல் வாழும் சத்திய யுகம் அன்று தொடங்கியது என்று கூறுகிறார்கள்.

உண்மையோ, என்னவோ! யார் சொல்ல முடியும்?

***

கலைமகள், நவம்பர் 1953

[எமன்: தொகுக்கப்படாத படைப்புகள் - க. நா. சுப்ரமண்யம் | தொகுப்பு: விக்ரம்; அழிசி வெளியீடு, டிசம்பர் 2022]

No comments:

Post a Comment