மஹாத்மா காந்தியின் 'ஆசிரம வாழ்க்கை' 15 | சத்தியாக்ரஹம்
(ஆசிரமத்தின் விதிகளிலிருந்து கீழே காணும்
பகுதி எடுத்துத் தரப்படுகிறது. இதில் உள்ள கருத்து இவை விரதங்களையும் விதிகளையும்
அனுசரித்து நடப்பவர்களுக்கு உதவியாய் இருக்கவேண்டுமென்பதே.)
1. சத்தியம்
அன்றாட விவகாரங்களில் பொய் பேசாமையோ,
பொய்யாக நடந்துகொள்ளாமை மட்டுமோ
சத்தியமென்பதன் பொருளல்ல. ஆனால் சத்தியமே கடவுள். அதைத் தவிர வேறு ஒன்றுமேயில்லை.
இந்த சத்தியத்தைத் தேடவும் வழிபடவுமே மற்ற எல்லா விதிகளும் அவசியமாகின்றன. மேலும்,
அதிலிருந்தே அவையெல்லாம்
தோன்றுகின்றன. சத்திய பக்தர்கள் தாம் தேச நன்மையென்று எதைக் கருதுகிறார்களோ
அதற்காகக்கூட ஒருபொழுதும் பொய் பேசவோ, பொய்யாக நடந்துகொள்ளவோ கூடாது. சத்தியத்தின் பொருட்டு அவர்கள் பிரகலாதனைப் போல
தம் பெற்றோர், பெரியோர் ஆகியோரின்
கட்டளையையும் பணிவுடன் மீறுவதைத் தம் கடமையென்று கருதவேண்டும்.
2. அஹிம்சை
இந்த விரதத்தை அனுஷ்டிப்பதற்கு பிராணிகளைக்
கொலை செய்யாமல் மட்டும் இருந்தால் போதாது. அஹிம்சை என்பதற்கு சிறு ஜந்துகள் முதல்
மனிதன் ஈறாயுள்ள எல்லா ஜீவன்களையும் ஒரே வகையில் பார்த்தல் என்பது பொருள். இந்த
விரதத்தை அனுஷ்டிப்பவர் கொடிய அநியாயம் புரிகிறவனிடத்திலும் கோபம் கொள்ளாது அவனை
நேசிக்கவும் அவனுடைய நன்மையைக் கோரவும் வேண்டும். ஆனால் அன்பு செலுத்திக்கொண்டே
அந்தக் கொடியோனுடைய அநியாயத்திற்கு அடங்காமல் அவனை எதிர்த்தும் வரவேண்டும்.
இவ்வாறு செய்யும்பொழுது அவன் தனக்கு என்ன கஷ்டம் அளித்தபோதிலும் மிகவும் தைரியமாக
அவனிடம் வெறுப்பு கொள்ளாமல் சகித்துக்கொள்ளவேண்டும்.
3. பிரம்மசரியம்
பிரம்மசரியத்தை அனுஷ்டிக்காதவரையில் மேலே
கூறிய விரதங்களை அனுஷ்டிக்க முடியாது. இதற்கு பிரம்மசாரி ஒரு பெண்ணையோ ஆணையோ கெட்ட
நோக்குடன் பாராதிருந்தால் மட்டும் போதாது. மனதிலும் விஷய போகங்களைப் பற்றி எண்ணவோ,
அனுபவிக்கவோ கூடாது.
விவாகமாகியிருந்தால் தன் மனைவி அல்லது கணவனுடன் போகத்தை அனுபவியாது அவளை அல்லது
அவனை தம் நண்பரென்று கருதி அவருடன் களங்கமற்ற சம்பந்தம் வைத்துக்கொள்ள வேண்டும்.
தன் மனைவியாயினும் சரி, வேறு
பெண்ணாயினும் சரி, தன்
கணவனாயினும் சரி, பரபுருஷனாயினும்
சரி, விகாரமுள்ள மனதுடன் அவர்கள் தொடுவதனாலும் அவ்வகையில் பேசுவதனாலும் அம்மாதிரியான
சேஷ்டைகளினாலும் ஸ்தூலமான பிரம்மசரியம் கெட்டுப்போகிறது. இந்தத் தீய சேஷ்டை இரு
ஆண்களினிடையே நிகழ்ந்தாலும் இரு பெண்களினிடையே நடந்தாலும் இருவருடைய ஏதேனும் ஒரு
பொருளுக்காக நடந்தாலும் ஸ்தூலமான பிரம்மசரியம் பாழாவது உறுதி.
4. நாவடக்கம்
மனிதன் நாவை அடக்காதவரையில் அவனுக்கு பிரம்மசரியத்தைக்
காப்பது மிகவும் சிரமமென்ற அனுபவத்தினால் நாவடக்கம் ஒரு தனி விரதமென்று
கருதப்பட்டிருக்கிறது. உணவு உடலை உயிர்வாழச் செய்வதற்காகக் கொள்ளவேண்டுமே தவிர
அதன் ஆனந்தத்தை அனுபவிப்பதற்காகவல்ல. இதன் பொருள் அதை மருந்தென்று கருதி அடக்கமாக
உண்ணுதல் அவசியம் என்பது. இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர் மஸாலை முதலியவைகளைப் போன்று
விகாரத்தை உண்டாக்கக்கூடிய பண்டங்களை உட்கொள்ளக் கூடாது. மாமிசம், கள், சாராயம்,
புகையிலை, அபின், கஞ்சா
முதலிய பொருள்களை ஆசிரமத்தில் உட்கொள்ளுவதில்லை. இந்த விரதத்தில் நாக்கு ருசிக்காக
விருந்து நடத்துவதும் சாப்பிட வற்புறுத்துவதும்கூட தடுக்கப்பட்டிருக்கிறது.
5. கள்ளாமை
இந்த விரதத்திற்கு பிறருடைய பொருளை அவருடைய
அனுமதியின்றி எடுத்துக் கொள்ளாமலிருந்தால் மட்டும் போதாது. ஒரு பொருள் ஒரு
காரியத்திற்காகக் கிடைத்திருக்க அதை வேறு காரியத்திற்கு உபயோகப்படுத்துவதும்
குறிப்பிட்ட காலத்திற்கு அது கிடைத்திருக்க அதற்கு அதிகமாக அதை வைத்திருப்பதும்
திருட்டே. இந்த விரதத்தின் அடிப்படையிலுள்ள உண்மை கடவுள் உயிர்களின் அன்றாடத்
தேவைகளுக்கு வேண்டிய பொருள்களையே எப்பொழுதும் உண்டாக்கித் தருகிறார், அதற்கதிகமாக அவர்
உண்டாக்குவதேயில்லையென்பதாகும். ஆகையால் மனிதன் தனது மிகமிகக் குறைந்த தேவைகளுக்கு
அதிகமாக எடுத்துக்கொள்ளும் எதுவும் திருட்டே.
6. வௌவாமை
வௌவாமை கள்ளாமையிலேயே அடங்கிவிடுகிறது.
அவசியமில்லாத பொருளை எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதுபோல அதைச் சேர்த்துவைக்கவும்
கூடாது. இதன் பொருள், எந்த
தானியம் அல்லது மேஜை நாற்காலி முதலிய தளவாடங்கள் நமக்குத் தேவையில்லையோ அவற்றைச்
சேர்த்துவைத்தல் இந்த விரதத்தை மீறுவதாகும் என்பது. நாற்காலியில்லாமல் ஒருவனுடைய
காரியங்கள் நடக்குமென்றால் அவன் நாற்காலியே வைத்துக்கொள்ளக் கூடாது. வௌவா விரதம்
பூண்டவன் தன் வழ்க்கையை எப்பொழுதும் எளியதாய்ச் செய்துகொண்டே இருக்கவேண்டும்.
7. உடலுழைப்பு
கள்ளாமை, வௌவாமை ஆகியவற்றை அனுஷ்டிப்பதற்கு உடலுழைப்பைப் பற்றிய
விதி அவசியமாகும். மேலும் எல்லா மனிதர்களும் தம் உழைப்பினாலேயே தம் ஜீவனத்திற்கு
வேண்டியதைச் சம்பாதித்துக்கொள்ளும் பொழுதுதான் அவர்களால் சமூகத்திற்கும் தமக்கும் துரோகம்
செய்துகொள்ளாதிருக்க முடியும். உடலில் சக்தி பெற்று அறிவு பெற்றுள்ள ஆண்களும்
பெண்களும் அன்றாடம் செய்யக்கூடிய வேலையை தாமே செய்துகொள்ள வேண்டுமே தவிர
காரணமில்லாமல் பிறரை ஏவக்கூடாது. ஆனால் குழந்தைகளுக்கும் அங்கஹீனர்களுக்கும்,
முதியோருக்கும் சேவை செய்யக்கூடிய
சந்தர்ப்பம் வரும்பொழுது சேவை செய்வது சமூக வாழ்க்கையின் பொறுப்பை உணரக்கூடிய
ஒவ்வொரு மனிதருடைய கடமையாகும்.
இந்த லட்சியத்தின்படி ஆசிரமத்தில்
வேலைக்காரர்களில்லாமல் வேலை நடப்பதற்கே இல்லையென்று தோன்றும் பொழுதுதான்
வேலைக்காரர்கள் அமர்த்தப்படுகிறார்கள். மேலும் அவர்களை வேலைக்காரர்களை எஜமானர்கள் நடத்தும்
முறையில் நடத்துவதில்லை.
8. சுதேசி
மனிதன் மற்ற எல்லாவற்றைக் காட்டிலும் அதிக
பலமுள்ள பிராணி. ஆகையால் அவன் தன் அயலானுக்குச் சேவை செய்யும் பொழுது
உலகத்திற்குச் சேவை செய்தவனாகிறான். இந்தக் கருத்துக்கே சுதேசியென்று பெயர். தன்
பக்கத்தில் உள்ளவர்களை விட்டு பிறருக்குச் சேவை செய்ய ஓடுகிறவன் சுதேசித்
தத்துவத்தை மீறுகிறான். இந்தக் கருத்து உறுதியாக்கப்படுமானால் உலகத்தில் ஒழுங்கு
முறை நிலவும். இது மீறப்படும்பொழுதே குழப்பம் தோன்றுகிறது. இந்த விதிப்படி
கூடியவரையில் நாம் நமது அக்கம்பக்கத்திலுள்ள கடைகளிலேயே சாமான்கள் வாங்கவேண்டும்;
நம் நாட்டில் தயாராவதோ அல்லது
தயாராகக்கூடியதோவான பொருள்களை வெளிநாட்டிலிருந்து தருவிக்கக்கூடாது. சுதேசியில்
சுயநலத்திற்கு இடமில்லை. தன்னைக் குடும்பத்தின் பொருட்டும், குடும்பத்தை நகரத்தின் பொருட்டும், நகரை நாட்டின் பொருட்டும், நாட்டை உலக நன்மையின் பொருட்டும் தியாகம்
செய்யவேண்டும்.
9. அஞ்சாமை
சத்தியம், அஹிம்சை முதலிய விரதங்களை அஞ்சாமை இல்லாதவரையில்
அனுஷ்டிக்க முடியாது. இன்று எங்கும் பயம் நிறைந்திருப்பதால் அஞ்சாமையைக் குறித்து
எண்ணுவதும் அதைப் போதிப்பதும் மிகவும் அவசியமாகிறது. இதனாலேயே அதற்கு விரதங்களுள்
இடமளிக்கப்பட்டிருக்கிறது. சத்தியத்தை வழிபட விரும்புகிறவர் ஜாதிக்
கட்டுப்பாடுகளுக்கோ, சர்க்காருக்கோ,
திருடனுக்கோ, ஏழைமைக்கோ, சாவுக்கோ அஞ்சலாகாது.
10. தீண்டாமை ஒழிப்பு
ஹிந்து மதத்தில் தீண்டாமை வேரூன்றியிருக்கிறது.
தீண்டாமையென்பது தர்மமல்ல, அதர்மமே
என்ற கருத்தினால் அதைப் போக்கும் பணியும் விதிகளில் ஒன்றாகக்
கருதப்பட்டிருக்கிறது. தீண்டாதோரென்று கருதப்படுகிறவர்களுக்கு ஆசிரமத்தில் மற்ற
ஜாதிக்காரர்களுக்குச் சமமான இடமே அளிக்கப்படுகிறது. ஆசிரமம் ஜாதிமத வேற்றுமைகளை மதிப்பதில்லை.
ஜாதி சமய வேற்றுமைகளினால் தர்மத்திற்குத் தீமையே விளைந்திருக்கிறதென்பது அதன்
கருத்து. அதிலுள்ள தீண்டாமையும் உயர்வுதாழ்வென்ற எண்ணங்களும் அஹிம்சா
தர்மத்திற்குத் தீங்கு விளைவிக்கக்கூடியவை. ஆசிரமம் வர்ணாசிரம தர்மத்தை
ஒப்புக்கொள்ளுகிறது. ஆனால் அந்த வர்ண ஏற்பாடு தொழிலைப் பற்றியதாகும் அதாவது
வர்ணத்தை மதித்து நடக்கிறவன் தன் பெற்றோருடைய தொழிலின் மூலமாகவே ஜீவித்திருந்து
எஞ்சிய நேரத்தை ஞானம் பெறுவதற்காகவும், ஞானத்தைப் பரப்புவதற்காகவும் செலவழிக்க வேண்டும். ஸ்மிருதிகளில்
ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள வர்ண ஏற்பாடு உலகத்திற்கு நன்மை செய்யக்கூடியதே. ஆனால்
வர்ணாசிரம தர்மத்தை ஒப்பியபோதிலும் ஆசிரம வாழ்க்கை கீதையினால் ஒப்புக்கொள்ளப்பட்டு
மிகவும் பரந்ததும் பாவனையை முக்கியமாகக் கொண்டதுமான சந்நியாச தர்மத்தின்
அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் அதில் வர்ணத்திற்கு இடமேயில்லை.
11. சகிப்பு
உலகத்திலுள்ள எல்லா தர்மங்களுமே சத்தியத்தை வெளியிடுகின்றனவென்பது ஆசிரமத்தின் கருத்து. ஆனால் அவையெல்லாம் பூர்ணத்துவம் பெறாத மனிதர்களினால் வெளியிடப்பட்டிருப்பதால் அவையெல்லாவற்றிலும் அசத்தியமும் கலந்துபோயிருக்கிறது. இதன் பொருள், நமக்கு நமது மதத்தினிடம் உள்ள பக்தியும் மதிப்பும் பிற மதங்களின் விஷயத்திலும் இருக்கவேண்டும் என்பது. இத்தகைய சகிப்பு உள்ள இடத்தில் ஒருவர் மற்றவருடைய மதத்தை எதிர்க்கவும் மாட்டார், பிற மதத்தவர்களை தம் மதத்தில் சேர்ப்பதற்கு முயற்சியும் நடைபெறாது. ஆனால் எல்லா மதங்களிலும் காணப்படும் குறைபாடுகள் நீக்கப்பட வேண்டும். இந்த பாவனையை எப்பொழுதும் உறுதிபெறச் செய்தல் அவசியமாகும்.
~ நிறைவு ~
No comments:
Post a Comment