Pages

Monday, February 20, 2023

மஹாத்மா காந்தியின் 'ஆசிரம வாழ்க்கை' 9 | உடலுழைப்பு


மஹாத்மா காந்தியின் 'ஆசிரம வாழ்க்கை' 8 | கள்ளாமையும் வௌவாமையும்

ஒவ்வொரு ஆணும் பெண்ணும் உடலாலுழைத்து வேலை செய்வதை ஆசிரமம் ஒரு தர்மமென்று கருதுகிறது. இந்தத் தத்துவம் எனக்கு டால்ஸ்டாயின் ஒரு கட்டுரையிலிருந்து தெரியவந்தது. அவர் ரஷ்ய ஆசிரியரான பாண்டாரேபைப்பற்றி எழுதுகையில் உணவுக்காக உழைப்பதின் அவசியத்தைக் கண்டுபிடித்ததானது இந்த யுகத்திலேயே இந்த ஆசிரியர் சாதித்த பெரிய சாதனையென்று சொல்லியிருக்கிறார். அதன் கருத்து, ஆரோக்கியமுள்ள மனிதன் ஒவ்வொருவனும் தன் வயிற்றை வளர்ப்பதற்குத் தேவையான உடலுழைப்பைச் செய்தேயாக வேண்டுமென்பது. மனிதன் தன் புத்திக்குள்ள சக்தியை தன் ஜீவனோபாயத்திற்கோ அதைவிட அதிகமானதெதையும் பெறுவதற்கோ பயன்படுத்தாமல் சேவையின் பொருட்டும், பரோபகாரத்திற்காகவும் செலவழிக்க வேண்டும். இந்த விதி உலகம் முழுவதிலும் அனுஷ்டிக்கப்படுமானால் வெகு சுலபமாக எல்லோரும் சமமென்ற நிலைமை ஏற்பட்டுவிடுமாகையால் எவரும் பசியினால் சாகவேண்டியிராது. அப்பொழுது உலகத்தைப் பீடிக்கும் எத்தனையோ பாபங்களும் விலகிப்போம்.

இந்தத் தலைசிறந்த விதியை எந்தக் காலத்திலும் உலகத்தினால் அனுசரிக்கவே முடியாதிருக்கலாம். இந்த விதியை அறியாதிருந்தும் கோடிக்கணக்கானவர்கள் வேறு வழியில்லாமையால் அனுசரித்தேதான் நடந்துவருகிறார்கள். அவர்களுடைய மனம் இதற்கு மாறாய் இருப்பதால், அவர்களுடைய உள்ளம் வருந்தவே அவர்களுடைய உழைப்பினால் உலகத்திற்கு ஏற்படவேண்டிய நன்மை ஏற்படாது போகிறது. இந்த விதியைப் புரிந்துகொள்ளுகிறவர்களுக்கு இந்த அறிவினால் அதை அனுஷ்டிப்பதற்கு வேண்டிய ஊக்கம் கிட்டுகிறது. இந்த விதியை அனுசரிப்பவர்களுக்கு வியக்கத்தக்க அற்புதமான விளைவு ஏற்படுகிறது. ஏனெனில், அவர்களுக்கு பெருத்த அமைதியேற்பட அவர்களுடைய ஆரோக்கியமும் சேவை செய்வதற்குள்ள திறனும் பெருகுகின்றன.

டால்ஸ்டாயினால் நான் பெரிதும் ஆட்கொள்ளப்பட்டதால் நான் தென்னாப்பிரிக்காவிலிருந்த காலத்திலேயே அவர் கூறியவற்றை என்னால் ஆனவரையில் அனுஷ்டிக்கத் தொடங்கிவிட்டேன்.

ஆசிரமம் ஸ்தாபிக்கப்பட்டது முதல் உணவுக்காக உழைப்பதென்பது முக்கியமானதாகி விட்டது.

கீதையைப் படிக்க ஆரம்பித்ததும் இதே விதி கீதையின் 3-வது அத்தியாயத்தில் யக்ஞம் என்ற பெயரில் கூறப்பட்டிருப்பதாகக் கருதினேன். யக்ஞம் என்பதற்கு உடலுழைப்பு என்பதே பொருளாகுமென்று நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் யக்ஞத்திலிருந்து பர்ஜன்யம் ஏற்படுகிறது என்று சொல்லப்பட்டிருப்பதால் எனக்கு உடலுழைப்பு தர்மமே காணப்படுகிறது. ‘யக்ஞத்திலிருந்து மிஞ்சும் அன்ன’மென்பது உழைப்பின் பயனாகக் கிடைக்கும் உணவே. ஜீவனத்திற்கு உதவும் உழைப்பை கீதை யக்ஞமென்று அழைத்திருக்கிறது. போஷணைக்குத் தேவையானதைவிட அதிகமாக உண்பவன் திருடுகிறான். ஏனெனில் மனிதன் தன் ஜீவனத்திற்கு வேண்டிய உழைப்பையும் சிரமப்பட்டேதான் செய்கிறான். மனிதனுக்குத் தன் ஜீவனத்திற்குத் தேவையானதைவிட அதிகமாக எடுத்துக்கொள்ள உரிமையே இல்லையென்று நான் நம்புகிறேன். உழைப்பவர்கள் எல்லோருக்கும் தம் உடல் நிலைப்பதற்கு எவ்வளவு உணவு தேவையோ அவ்வளவை எடுத்துக்கொள்ள உரிமையுண்டு.

இதிலிருந்து இதில் தொழில் பாகுபாட்டிற்கு இடமே இல்லையென்று எவரும் சொல்லத் தேவையில்லை. மனிதனுக்கு அவசியமான தேவைகளுக்கெனத் தயாராகும் எல்லாப் பொருள்களுக்கும் உடலுழைப்பு வேண்டித்தானிருக்கிறது. ஆகையால் எந்த அவசியமான துறையில் ஒருவர் உழைத்தபோதிலும் அவருடைய அந்த உழைப்பு உணவுக்கான உழைப்பென்றே கருதப்பட வேண்டும். இந்த அளவுக்குக்கூட எல்லோரும் உழைப்பதில்லையாகையால் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பொருட்டு தேகாப்பியாசம் என்ற பெயரால் பிரத்யேகமாக உடலுழைப்பைச் செய்யவேண்டி வருகிறது. அன்றாடம் அவசியமான வயல் வேலைகளைச் செய்துவருகிறவருக்கு தேகாப்பியாசத்திற்கென்று தனியாக உழைப்பெதுவும் செய்யவேண்டியிருப்பதில்லை. விவசாயி ஆரோக்கியத்திற்கு உதவும் பிற விதிகளையும் அனுசரித்துவருவானானால் நோயுறவே மாட்டான்.

இந்த உலகத்தில் மனிதனுக்கு அன்றாடம் எவ்வளவு தேவையாயிருக்கிறதோ அவ்வளவை இயற்கை உற்பத்தி செய்துவருவதைக் காண்கிறோம். அதிலிருந்து ஒருவன் தன் தேவைக்கு அதிகமாகப் பண்டங்களை எடுத்து உபயோகிப்பானானால் அவனுடைய அயலான் பட்டினியாயிருக்கவே நேரும். பலர் தம் தேவைக்கு அதிகமான பண்டங்களைப் பற்றிக்கொள்வதனாலேயே உலகத்தில் பட்டினியால் சாவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுகிறது. நாம் இயற்கையின் கொடையை எந்த வகையில் பயன்படுத்தியபோதிலும் இயற்கையென்னவோ பற்றையும் வரவையும் சரிசமமாகவே வைத்துக்கொண்டு வருகிறது. இயற்கையின் கணக்குப் புஸ்தகத்தில் வரவும் செலவும் நேராக இருக்கிறதே தவிர ஒன்றுக்கொன்று ஏற்றத்தாழ்வாக இருப்பதே இல்லை. அதில் அன்றாடம் வரவுசெலவு சரிபார்க்கப்பட்டு மிச்சம் பூஜ்யமென்றே முடிவுகட்டப்படுகிறது. இந்தப் பூஜ்யத்தில் நாமும் ஒரு பூஜ்யமாக அடங்கிவிடவேண்டும். மனிதன் பல ரஸாயனங்கள், யந்திரங்கள் ஆகியவற்றின் உதவிகொண்டு பூமியிலிருந்து அதிகமான பயிர்களை விளைவிப்பதற்கும் உழைப்பினால் விதவிதமான பண்டங்களைத் தயாரிப்பதற்கும் மேலே கூறிய விதிக்கும் முரண்பாடு எதுவுமில்லை. இது இயற்கையின் சக்தியை வேறு வகையில் பயன்படுத்துவதேயன்றி வேறல்ல. எல்லாம் இறுதியில் போய் பூஜ்யமாக முடியவேண்டியதே. இந்த அன்றாடக் கணக்குகளை சரிவர ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு நம்மிடத்தில் போதிய சாதனங்களில்லை. ஆனால் நமக்கு ஒவ்வொரு நாளும் ஏற்படும் அனுபவங்களையே தரவாரியாகப் பிரித்து ஆராய்வோமானால் அதிலிருந்து தராசின் இரு தட்டுகளும் சமமாயிருக்கின்றன என்ற முடிவுக்கே வருவோம்.

இயற்கை இவ்வாறு செய்கிறதோ இல்லையோ, நான் கூறிய பிற வாதங்களில் சாரமுண்டோ இல்லையோ, ஆசிரமத்தில் உணவுக்காக உழைத்தலென்ற விதி வரவர அதிகமாகவே அனுஷ்டிக்கப்படுகிறது. இதில் ஆச்சரியப்படுவதற்கும் ஒன்றுமில்லை. அனுஷ்டானத்தில் சாதாரணமான பிடிவாதம் மட்டும் இருக்குமானால் அனுஷ்டானம் சுலபமாகிவிடுகிறது. குறிப்பிட்ட சில நேரங்களில் உடலுழைப்பு வேலைகளைத் தவிர வேறு எதற்கும் இடமில்லாதிருக்குமானால் அவ்வேலைகள் நடக்கவேதான் செய்யும். அதில் சோம்பல் காணப்படுகிறது, திறமையைக் காணோம், மனதைச் செலுத்துவதில்லை என்பதெல்லாம் வேறு விஷயம். ஆனால் சில மணிநேரமாவது வேலைகளுக்கென செலவிடப்பட்டுத்தான் வரும். மேலும், சில வேலைகள் உடனுக்குடன் பயன் தருபவையாகையால் அவற்றில் அதிகச் சோம்பலுக்கும் இடமிராது. உடலுழைப்பையே முக்கியமாகக் கருதும் ஸ்தாபனங்களில் வேலைக்காரர்கள் இருக்கமாட்டார்கள். இருந்தாலும் ஒருசிலரே இருப்பார்கள். தண்ணீர் நிரப்புதல், விறகு உடைத்தல், விளக்குத் துடைத்தல், கக்கூஸ் - நடைபாதைகளை சுத்தி செய்தல், வீடு கட்டுதல், தம் ஆடைகளைத் துவைத்தல், சமையல் செய்தல் முதலிய எத்தனையோ வேலைகளைச் செய்துதான் ஆகவேண்டும்.

இவைகளைத் தவிர விவசாயம், நெசவு ஆகியவற்றுடன் தொடர்புள்ளதும் வேறு வகையினதுமான தச்சு வேலை, பசுப் பாதுகாப்பு, தோல் பதனிடுதல் முதலியவை ஆசிரமத்துடன் இணைந்தேதானிருக்கின்றன. இவைகளிலும் ஆசிரமவாசிகள் ஓரளவாவது கலந்துகொள்ளாவிட்டால் வேலை நடப்பதற்கில்லை.

இந்த வேலைகளனைத்தும் உணவுக்காக உழைத்தலென்ற விதியை அனுஷ்டிப்பதற்குப் போதுமானதென்றே கருதப்படும். ஆனால் யக்ஞத்தின் மறுபகுதி பாரமார்த்திகம் அல்லது சேவையை நோக்கமாகக் கொண்டது. அதை இவ்வேலைகளுடன் இணைக்கும்பொழுது ஆசிரமத்தின் குறைபாடு நிச்சயமாகப் புலனாகும். ஆசிரமத்தின் குறிக்கோள் சேவையின் பொருட்டு உயிர்வாழ்தல் என்பது. இவ்வகையில் நடைபெறும் ஸ்தாபனத்தில் சோம்பலுக்கோ, வேலைக்குத் தப்பி வாழ விரும்புவதற்கோ இடமில்லை. அங்கே எல்லாக் காரியங்களுமே முழு மனதுடன் நடைபெறுபவையாய் இருக்கவேண்டும். எல்லோரும் இவ்வாறு செய்துவருவார்களானால் இன்று ஆசிரமம் சேவை செய்வதற்குப் பெற்றுள்ள தகுதி எவ்வளவோ உயர்ந்திருக்கும். ஆனால் இத்தகைய அழகிய நிலையிலிருந்து ஆசிரமம் இன்றும் வெகுதொலைவில்தான் இருக்கிறது. ஆகையால் ஆசிரமத்தின் ஒவ்வொரு வேலையும் யக்ஞமாகவே இருந்துவந்தபோதிலும் நமது லட்சியத்தைக் கருதி தரித்திர நாராயணனுக்கென்று பிரதி தினமும் குறைந்தது ஒருமணிநேரம் நூற்புக்கென ஒதுக்குவது அவசியமெனக் கருதப்பட்டிருக்கிறது. இந்த நூற்பை உடல்நலமுள்ளவர்கள் அனைவரும் கட்டாயம் செய்தே தீரவேண்டும். இந்த நிலையை எய்துவதற்குள் எவ்வளவோ சிரமப்பட நேர்ந்ததுண்டு. ஆனால் கதர் வேலையைப் பற்றி விவரிக்கும்பொழுது இதைப்பற்றிய விவரங்களைத் தருதல் அதிகப் பொருத்தமுடையதாய் இருக்கும்.

உடலுழைப்பை முக்கியமாகக் கருதும் ஸ்தாபனத்தில் அறிவு வளர்ச்சிக்கு இடமிராதென்று சிற்சில சமயங்களில் ஆட்சேபம் செய்யப்படுவதை நான் கேள்விப்பட்டதுண்டு; இப்பொழுதும் கேள்விப்படுகிறேன். இந்த ஸ்தாபனம் உயிரற்றதாகிவிடுகிறதென்று சொல்லுகிறார்கள். என் அனுபவமோ இதற்கு நேர்மாறாயிருக்கிறது. ஆசிரமத்தில் வந்துசேர்ந்துள்ள அத்தனை பேர்களின் அறிவும் கொஞ்சமாவது தீட்சண்யமாகியிருக்க வேண்டுமே தவிர மழுங்கிப்போனதாகத் தெரியவில்லை.

27-6-32.

உலகத்தின் பல நிகழ்ச்சிகளின் ஒப்பப்பட்ட வெளியறிவே புத்தியென்று பெரும்பாலும் கருதப்படுகிறது. இத்தகைய புத்தி ஆசிரமத்தில் அதிகமாக வளர்க்கப்படுவதில்லை என்பதை நான் ஒப்புக்கொண்டாகவேண்டும். ஆனால் புத்தி என்பதற்கு பகுத்தறிவு, விவேகம் என்பவையே பொருள் என்போமானால் அது போதிய அளவு ஆசிரமத்தில் வளர்ச்சி பெறுகிறது. ஜீவனத்தின் பொருட்டே ஒரு மனிதன் கூலியாளாக வேலை செய்வானானால் அவன் தன் அறிவை இழந்து ஜடமாகிவிடுவது சாத்தியம். குறிப்பிட்ட ஒரு பொருள் எதற்காக, எப்படிச் செய்யப்படுகிறது என்ற விஷயம் அவனுக்குத் தெரிவதுமில்லை, தெரிந்துகொள்ளவேண்டுமென்ற ஆசையுமிருப்பதில்லையாகையால் அவனுக்குத் தன் வேலையில் ருசியே ஏற்படுவதில்லை. ஆசிரமத்திலோ இதற்கு நேர்மாறாக நடக்கிறது. ஒவ்வொரு வேலையையும், கக்கூஸ் சுத்தியையும்கூட, விஷய அறிவுடன் செய்யவேண்டியிருக்கிறது. அதில் ருசி உண்டாகும்படி செய்யப்படுகிறது. அது கடவுளுக்கு அர்ப்பணமென்ற வகையில் நடக்கிறது. ஆகையால் அதைச் செய்யும்பொழுதே புத்தியின் வளர்ச்சிக்கு இடமிருக்கிறது. ஒவ்வொருவரும் தாம் செய்யும் வேலையை பூரணமாக அறிவதற்கு வேண்டிய தூண்டுதல் அளிக்கப்படுகிறது. இந்தப் பூரண ஞானத்தைப் பெறுவதற்கு முயற்சி செய்யாதிருப்பவர்கள் குற்றம் செய்பவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஆசிரமத்தில் உள்ளவர்கள் அனைவருமே கூலிகள்; அல்லது எவருமே கூலியல்லவென்று சொல்லலாம்.

மேஜை நாற்காலிகள் போட்டுக்கொண்டு புஸ்தகங்களை வைத்துப் படித்தால்தான் ஞானமேற்படும், அறிவு வளரும் என்ற கருத்து அறியாமையை, அஞ்ஞானத்தைக் காட்டுவதாகும். நாம் இந்த அறியாமையிலிருந்து வெளியேறியாக வேண்டும். வாழ்க்கையில் படிப்பிற்கு இடம் நிச்சயமாய் இருக்கிறது. ஆனால் அது அதற்குரிய இடத்தில் இருந்தால்தான் அழகு பெறும். உடலுழைப்பைக் கெடுத்து அதுமட்டும் செய்துவரப்படுமானால் அதை எதிர்த்துக் கிளம்புவது கடமையாகிவிடுகிறது. உடலுழைப்புக்காக நாளின் அதிக நேரத்தையும் படிப்பு முதலியவைகளுக்குக் குறைந்த நேரத்தையும் செலவழிக்க வேண்டும். இந்தக் காலத்தில் இந்நாட்டில் பணக்காரர்கள் அல்லது உயர்ந்த வகுப்பினரென்று கருதப்படுவோர் உடலுழைப்பை அவமதிப்பதால் உடலுழைப்பிற்கு உயர்ந்த ஸ்தானமளித்தல் அவசியமாகும். அறிவை நன்கு இயங்கச் செய்வதற்கும் உடலுழைப்பில் அல்லது உபயோகமான ஏதேனுமொரு கைத்தொழிலில் உடலை இயங்கச்செய்தல் அவசியம்.

படிப்புக்கு ஆசிரமம் சிறிது அதிக நேரம் முடியுமானால் அளிக்கவேண்டியதே. படிப்பில்லாத ஆசிரமவாசிகளுக்கு ஆசிரியர்களின் உதவி கிடைக்கச்செய்ய முடியுமானால் அதற்கு ஏற்பாடு செய்யவேண்டியதே. ஆயினும் ஆசிரமத்தில் நடந்துவரும் வேலைகளைக் கெடுத்துக்கொண்டு படிப்பு முதலியவைகளில் நேரம் செலவழிக்கத் தேவையில்லையென்று தோன்றிக்கொண்டிருக்கிறது. சம்பளம் கொடுத்து ஆசிரியர்களை நியமிப்பதற்கில்லை. தற்காலக் கல்வி அளிக்கக்கூடியவர்களாக அதிகப் பேரை ஆசிரமம் தன்னிடம் இழுத்துக்கொள்ள முடியாதிருக்கும் வரையில் உள்ளவர்களைக்கொண்டே வேலை நடத்தப்பட்டுவருகிறது. ஸ்கூல்களிலும், கல்லூரிகளிலும் படித்த எவர்கள் ஆசிரமத்தில் சேர்ந்திருக்கிறார்களோ அவர்களுக்கு உடலுழைப்புடன் கல்வியை இணைக்கும் கலை பூர்ணமாகக் கைவரவில்லை. எங்கள் எல்லோருக்கும் இது ஒரு புதிய சோதனையாகும். ஆனால் அனுபவத்திலிருந்து இணைப்பு முயற்சி வரவரப் பெருகிக்கொண்டு வருகிறது. நிர்வாகத் திறமை வளர வளர இப்பொழுது சாதாரணக் கல்வி பெற்றவர்களுக்கும் தமது உழைப்பினால் கிடைத்துள்ள அறிவைப் பிறருக்கு உதவுவதற்கான உபாயம் தோன்றக்கூடும்.

***

மஹாத்மா காந்தியின் 'ஆசிரம வாழ்க்கை' 10 | சுதேசி

மஹாத்மா காந்தியின் 'ஆசிரம வாழ்க்கை' | தொகுப்பு

No comments:

Post a Comment