மஹாத்மா காந்தியின் 'ஆசிரம வாழ்க்கை' 9 | உடலுழைப்பு
சுதேசியை ஆசிரமம் ஒரு உலக தர்மமென்று கருதுகிறது. ஒவ்வொரு மனிதனும் தன் அயலானிடம் முதலில் கடமைப்பட்டிருக்கிறான். இதில் அன்னிய நாட்டுப் பொருளினிடத்தில் துவேஷமுமில்லை, சுதேசிப் பொருள்களினிடத்தில் பட்சபாதமுமில்லை. உடல் தாங்கிய மனிதனுடைய சேவைத் திறனுக்கு ஒரு வரம்புண்டு. அவன் தன் அண்டை அயலானுக்குச் செய்யவேண்டிய கடமையைப் பூர்த்தி செய்வதே சிரமம். எல்லோரும் தம் அண்டை அயலாரிடம் கடமையைச் சரிவர நிறைவேற்றிவருவார்களானால் உலகத்தில் உதவுவாரின்றி எவரும் துன்புறவேமாட்டார்கள். ஆகையால் மனிதன் அயலானுக்குச் செய்யும் சேவையின் மூலமாக உலகத்திற்குச் சேவை செய்கிறானென்று சொல்லலாம். உண்மையில் இந்த சுதேசியில் தனது, அன்னியனுடையது என்ற வேற்றுமையே கிடையாது. அயலானிடம் தன் கடமையை நிறைவேற்றுதல் என்பதற்கு உலகத்தினிடம் தன் கடமையைச் செய்தலென்றே பொருள். வேறு எந்த வகையிலும் உலகத்திற்கு சேவை செய்வதே சாத்தியமில்லை. எவன் உலகமனைத்தையும் தன் குடும்பமென்று மதிக்கிறானோ அவனுக்குத் தானிருக்குமிடத்திலிருந்தே அனைவருக்கும் சேவை செய்ய சக்தியிருக்க வேண்டும். அது அண்டை அயலானுக்குச் சேவை செய்வதன் மூலமாகவே சாத்தியமாகும். டால்ஸ்டாயோ இதற்கும் ஒருபடி மேலே சென்று, ‘இப்பொழுது நாம் ஒருவர் மற்றவர் தோளில் ஏறிக்கொண்டிருக்கிறோம். பிறர் தோளிலிருந்து இறங்கினாலே போதும்’ என்று சொல்லுகிறார். இந்தக் கூற்று இதே கருத்தை வேறுவகையில் வெளியிடுகிறது. எவனும் தனக்குச் சேவை செய்துகொள்ளாமல் பிறருக்குச் சேவை செய்வதேயில்லை. பிறருக்குச் சேவை செய்யாமல் தன் சேவைக்கெனவே வேலை தொடங்குவோன் தனக்கும் உலகத்திற்கும் தீங்கு இழைக்கிறான். காரணம் இதுவே: உயிர்களாகிய நாம் எல்லோருமே பரஸ்பரம் மிகவும் நெருங்கிக் கிடப்பதால் ஒருவன் செய்யும் காரியத் ஞதின் நல்லதோ, கெட்டதோவான விளைவை உலகம் பூராவும் அனுபவிக்க நேருகிறது. நமது குறுகிய பார்வை காரணமாக நமக்கு இது புலனாகாதிருந்தபோதிலும் தனிமனிதனொருவனுடைய காரியத்தின் விளைவு இந்த ஸம்ஸார சாகரத்தில் ஒரு திவிலைக்குச் சமமாயிருந்தபோதிலும் விளைவு என்னவோ நிச்சயம். நமது பொறுப்பைப் புரிந்துகொள்வதற்கு நமக்கு இவ்வளவு தெரிந்திருந்தால் போதுமானது.
ஆகையால் சுத்த சுதேசி தர்மம் விதேசிக்கு
விரோதமானதல்ல. ஆயினும் சுதேசியென்பது ஸர்வதேசப் பற்றுமல்ல. இதற்குக் காரணம்,
அவ்வாறு இருப்பது
அசாத்தியமாயிருப்பதே. எல்லோருடையதையும் செய்யத் தொடங்குவோமானால் அது நடைபெறாது
போவதோடு தன்னுடையதும் போய்விடுகிறது. தன்னுடையதைச் செய்துகொண்டிருக்கும்பொழுது
எல்லோருடையதும் நடந்துகொண்டிருக்கிறது. எல்லோருடையதையும் செய்வதற்கு ஒரே ஒரு வழிதான்
உண்டு. ‘எனக்கு எல்லோரும் ஒன்றே’ என்று சொல்வதற்குத் தன் அண்டை அயலானிடம் தன்
கடமையை நிறைவேற்றியவனுக்கே உரிமை யுண்டு. ‘எனக்கு எல்லோரும் ஒன்றே’ என்று
சொல்லிக்கொண்டு எவன் தன் அயலானை அலட்சியம் செய்கிறானோ, தன் ஆசைப்படி நடந்துகொள்ளுகிறானோ, அவன்வரை முறையற்றவன், நீதி வழுவியவன், சுயநலத்திற்காகவே வாழ்பவன்.
நாம் எத்தனையோ சாது, மகாத்மாக்கள் தம் இடத்தை விட்டு உலகெங்கும் சுற்றி
அன்னிய நாட்டினருக்குச் சேவை செய்வதைப் பார்க்கிறோம். அவர்கள் செய்வது தவறென்பதோ,
அவர்களின் செயல் சுதேசி தர்மத்திற்கு
விதிவிலக்கென்பதோவல்ல. அவர்களுடைய சக்தி அவர்களை அதிகமாகச் சேவை செய்விக்கிறது.
எந்த மனிதனுக்கும் அவனுக்கு அருகாமையிலுள்ளவனே அயலானாவான்; இன்னொருவனுக்கு தன் கிராமம் வரையில் வரம்பிருக்கலாம்;
மற்றொருவனுக்கோ அக்கம்பக்கத்திலுள்ள
பத்து கிராமங்கள் வரையில் வரம்பு நீடிக்கலாம். இவ்வாறு எல்லோரும் அவரவருடைய
சக்திக்குத் தகுந்தவாறு வேலை செய்வார்கள். சாதாரண மனிதன் செய்யக்கூடியது சாதாரண வேலையே.
அவனுடைய நிலைமைக்குப் இந்த விதி விளக்கப்பட பொருந்தும் வகையிலேயே வேண்டும். அதன்
சொற்பொருளுக்கு மாறாயில்லாத எல்லாம் இந்த விளக்கத்தின் கருத்துடன்
பொருந்தக்கூடியவையே. சாதாரண மனிதன் சுதேசி விரதம் அனுஷ்டிப்பதன் மூலமாகத் தான்
எவருக்கும் சேவை செய்வதாக எண்ணமாட்டான். அவன் தன் அயலானுடன் வியாபாரம்
செய்வதற்குக் காரணம் அதில் தனக்கு அனுகூலமிருப்பதே. இவ்வாறு கருதுதல் சரியே. ஆனால்
இந்த அனுகூலத்தில் பல சமயங்களில் தொந்தரவுகளும் ஏற்படுகின்றன. சுதேசி தர்மத்தைப்
புரிந்துகொண்டவன் அம்மாதிரியான சமயங்களிலும் அதை அனுஷ்டித்தே வருவான்.
தற்காலத்தில் பலருக்குத் தம் நாட்டில் தயாரான பொருள்களினால் திருப்தி
ஏற்படுவதில்லை. பலவகை ஆசைகள் காட்டப்படுவதால் எத்தனையோ பேர் அன்னிய நாட்டுப்
பொருள்களை வாங்குவதிலேயே நன்மையிருப்பதாகக் கருதுகிறார்கள். இம்மாதிரியான சமயங்கள்
சுதேசி என்பது வசதியானது மட்டுமல்ல, தர்மமுமாகுமென்று எடுத்துச்சொல்லவேண்டியிருக்கிறது. இன்று இந்தியாவிலுள்ள
நிலைமை இப்படித்தான் இருக்கிறது. இதனாலேயே இங்கே சுதேசி தர்மத்தை
அறிந்துகொள்வதற்கு அவசியமேற்பட்டிருக்கிறது. சுதேசியின் ஹிம்சை கலந்த பொருள் – பிறநாட்டு
மக்களை வெறுக்கவேண்டுமென்ற பொருள் - ஏற்கத்தக்கதல்ல. எவருக்கும் தீமை செய்வதோ,
தீமையை விரும்புவதோ தர்மம் ஆகாது.
இந்த சுதேசி தர்மத்தை அனுஷ்டித்தல் ஆசிரம விரதங்களுள் ஒன்றாகும்.
இந்த சுதேசி நிதர்சனமாக கதர் உருவில்
தென்படுவதாக நான் கருதுகிறேன். ஏனெனில் இதை விட்டதனாலேயே இந்தியா கொடிய பாவத்தைச்
செய்தது; தன் இயற்கையான
தர்மத்தைத் துறந்திருந்தது. கதரின் அவசியத்தைப் பற்றி வேறொரு இடத்தில் வேறொரு
சமயத்தில் வெகுவாக எழுதப்பட்டுவிட்டது. இங்கே அதற்கு ஆசிரமத்துடன் எப்படி
சம்பந்தம் ஏற்பட்டது என்பதைக் குறிப்பிடுவதற்காகவே இது பிரஸ்தாபிக்கப்பட்டது.
ஆனால் இதிலேயே கதர் வேலையின் ஆரம்ப சரித்திரம் வந்துவிடுகிறது.
1908-ல் எனக்கு கதர் தர்மம், ராட்டை தர்மம் மனதில் உதித்தது. அதுவரையில்
ராட்டை எப்படி இருக்குமென்பதே எனக்குத் தெரியாது. ராட்டைக்கும் தறிக்குமுள்ள
வேற்றுமையையும் நான் உணர்ந்தவனல்ல. எனக்கு இந்தியாவின் கிராமங்களின் நிலைமை ஒரு
சிறிதே தெரிந்திருந்தது. ஆனால் இந்திய கிராமங்கள் பாழானதற்கு முக்கியக் காரணம்
ராட்டையின் அழிவே என்பதை நான் தெளிவாகக் காணமுடிந்தது. இந்தியாவுக்குப் போனவுடன்
ராட்டையைப் பரப்புவதென்று நான் மனதில் உறுதி செய்துகொண்டேன்.
1915-ல் நான் நாட்டிற்குத் திரும்பியபொழுது
என் மனதில் இந்தக் கருத்து பூர்ணமாக இடம்பெற்றிருந்தது. ஆசிரமம் ஆரம்பமானது முதலே
சுதேசி விரதம் தொடங்கப்பட்டது. ஆனால் எங்களில் எவருக்கும் நூல் நூற்பதெப்படி
என்பது தெரியாது. ஆகையால் கைத்தறி அமைத்ததோடு திருப்தியடைந்தோம். மெல்லிய
ஆடையிலிருந்த ஆசையை எல்லோருமே துறந்துவிடவில்லை. பெண்களின் புடவைக்குத் தகுந்த
நூல் கிடைக்கவேயில்லை. ஆகையால் சிறிது காலம் வரையில் விதேசி நூலையே நெய்துவந்தோம்.
நாட்டு ஆலையின் மெல்லிய நூலை வாங்கிக்கொண்டு விதேசி நூலை நிறுத்தினோம்.
ஆசிரமத்தில் தறி அமைப்பதிலும் மிகுந்த
கஷ்டமேற்பட்டது. எங்களில் எவருக்கும் நெசவு தெரியாது. நண்பர்களின் மூலமாக தறிக்கு
ஏற்பாடு செய்து நெசவு கற்றுக்கொடுப்பதற்கு நெசவாளரைத் தேடினோம். நெசவைக்
கற்றுக்கொள்ளவேண்டியவர் மகன்லால் என முடிவாயிற்று.
ஆசிரமத்தில் நான் எப்படி ஒன்றின் பின் ஒன்றாகச் சோதனைகள் நடத்திக்கொண்டிருந்தேனோ அப்படியே நாட்டில் சுதேசிப் பிரசாரத்தையும் செய்துவந்தேன். ஆனால் நூற்கப்படாத வரையில் எல்லாம் மாப்பிள்ளை இல்லாமல் கலியாணம் நடத்தும் கதையாகவே இருந்தது. கடைசியில் ராட்டை கிடைத்து, அதில் நூற்பவரும் கிடைக்கவே ஆசிரமத்தில் ராட்டை இடம்பெற்றது. இந்த விவரம் [1]சத்திய சோதனை’யில் தரப்பட்டிருக்கிறது.
ராட்டை கிடைத்தவுடன் எல்லா சிரமங்களும்
தீர்ந்துவிட்டதாக எவரும் எண்ணிக்கொண்டுவிட வேண்டாம். சிரமங்கள் நுணுக்கமாகத்
தெரியவந்ததனால் ஏற்கெனவே மறைந்திருந்த சிரமங்கள் இப்பொழுது எதிரில் வந்தன; பெருகின என்றும் சொல்லலாம்.
நாட்டில் சுற்றிவந்த பொழுது
ராட்டையைப்பற்றிச் சொல்வதுதான் தாமதம், உடனே அதை மக்கள் ஏற்றுக்கொண்டுவிடுவார்களென்பது சரியல்ல என்பதை உணர்ந்தேன்.
அதிலிருந்து கிடைக்கக்கூடிய வருமானம் குறைவாகத்தான் இருக்கும் என்பது
தெரிந்திருந்ததாயினும் எவ்வளவு குறைவானதென்று தெரியாது. அதிலிருந்து நூல்
சமமாகவும், மெல்லியதாகவும்
உடனே வரவில்லை. பல பெண்கள் கரடுமுரடாகவேதான் நூற்பார்கள்; நூல் முறுக்குக் குறைவாய் இருப்பதுண்டு என்பதும்
தெரிந்தது. கிடைத்த பஞ்சைக்கொண்டு நூற்கலாமே என்றால் அதுவும் நடப்பதாயில்லை. அதைக்
கொட்டியாக வேண்டும், பட்டை
சுருட்டியாக வேண்டும். ஆனால் நன்கு கொட்டமுடிவதும் பஞ்சின் தன்மையை பொறுத்ததாய் இருக்கிறது.
ராட்டையும் எப்படியிருந்தாலும் உபயோகப்படுமென்று சொல்லமுடியவில்லை. ஆகையால்
ராட்டையைப் புதுப்பித்தாக வேண்டும். அதாவது ஒரு பெரிய திட்டமே வகுத்தாக வேண்டும். வெறும்
பணமிருந்தால் மட்டும் போதாது. வேலை ஒருவரிருவர் சேர்ந்து செய்துவிடக்கூடியதாகவும்
இல்லை. நூற்றுக்கணக்கில் ஊழியர்கள் கிடைத்தால்தான் உருவான வேலை நடைபெறும்.
ஊழியர்களும் சாதாரணமானவர்களாயிருந்தால் பயனில்லை. அவர்கள் புதிய சாஸ்திரமொன்றைக்
கற்பதற்குச் சித்தமாயும் சிறிய ஊதியத்தைக் கொண்டு திருப்தியடைவோராயும் நாட்டுப்புற
வாழ்க்கையை நடத்துவோராயும் இருக்கவேண்டும். இவை இருந்தாலும் போதாது. கிராம
மக்களிடையே சோம்பலும் ஏமாற்றமும் அவநம்பிக்கையும் குடிகொண்டிருக்கின்றன; இவை அகலாவிட்டால் ராட்டை நிலைக்காது.
ஆகையால் ராட்டையை வெற்றிபெறச் செய்வதற்கு ஆண்களும் பெண்களும் பூர்ணமாக உழைத்தல்
அவசியம். இதோடுகூட கலங்காத தைரியமும் அசையாத நம்பிக்கையும் இல்லாதவிடத்து ராட்டை
நிலைக்காது.
முதன்முதலில் எனக்கு மட்டுமே இத்தகைய
நம்பிக்கை இருந்தது என்பதைச் சொல்லிவிட வேண்டும். ஆனால் என்னிடத்தில் சிரத்தை ஒன்றைத்
தவிர வேறு பொருளில்லை. சிரத்தையுள்ள இடத்தில் மற்ற சாதனங்களெல்லாம் தாமே வந்து
சேருகின்றன என்பதைக் கண்டேன். சிரத்தையையொட்டியே அறிவும், அறிவுக்கு உண்மையும் உழைப்பும் வருகின்றன.
எல்லாச் சோதனைகளும் ஆசிரமத்திலும் ஆசிரமத்தின் மூலமாகவுமே நடந்தாகவேண்டுமென்பது
தெளிவு. ஆசிரமமிருந்ததே இதற்காகத்தான். ஆசிரமம் புறத்தே செய்யக்கூடிய முக்கியமான
வேலை ராட்டையே என்பதைக் கண்டேன். ராட்டையின் சாஸ்திரத்தை அமைப்பதற்கு வேறு வழியே
இல்லை. ஆகையால் இறுதியில் நூற்பு மஹா யக்ஞமென்று கருதப்பட, ஆசிரமத்திற்கு வருகிறவர்கள் நூற்கக் கற்றுக்கொண்டு
இந்த யக்ஞத்தைச் செய்துவரவேண்டியதாயிற்று.
ஆனால் யக்ஞமென்பதற்கு வேலையில் திறமை என்பது
பொருள். தோன்றியபடி வேலை செய்யப்படுவதை யக்ஞமெனக் கூறல் சரியல்ல. ஆகையால் முதலில்
குறைந்தது ஒருமணிநேரம் நூற்பதென்று முடிவாயிற்று. ஆனால் ராட்டை கெட்டுப்போகுமானால்
அரைமணிநேரத்தில் 3 தார் நூல்கூட இழுக்க முடியாது என்று விரைவில் தெரியவந்தது.
ஆகையால் குறைந்தது 160 தாராவது நூற்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. 1 தார்
என்பது 4 அடி. ஆனால் நூல் மேடுபள்ளமாயிருந்தால் என்ன பிரயோஜனம்? ஆகையால் நூலின் சமதை, உறுதி ஆகியவையும் வற்புறுத்தப்படலாயின. இப்பொழுது 20
நெம்பருக்குக் குறைவான நூலாயிருக்குமானால் அது யக்ஞத்தைச் சேர்ந்ததல்லவென்று
கருதுமளவுக்கு முன்னேறியிருக்கிறோம்.
ஆனால் மிகச்சிறந்த நூலை உபயோகிப்பது யார்?
ஆரம்பத்திலிருந்தே யக்ஞத்திற்காக
நூற்பவர்கள் தம் யக்ஞ நூலை ஒருபொழுதும் உபயோகித்தலாகாதென்று எண்ணிவந்திருக்கிறேன்.
ஆனால் எல்லோரையுமே இதை ஒப்புக்கொள்ளும்படி செய்ய என்னால் இயலவில்லை. நூலுக்குள்ள
கூலியைக் கொடுத்து நூலை விலைக்கு வாங்கிக்கொள்வதில் தவறென்ன? இவ்வாறு சொல்வதனால் நல்ல நேர்த்தியான நூல்
நூற்க முடியுமே என்ற ஆசையினால் கூலியைக் கொடுத்துத் தான் நூற்ற நூலை விலைக்கு
வாங்கிக்கொள்வதும் யக்ஞமென்றே கருதப்படுமென்று சொல்லி நான் என் மனதை
சமாதானப்படுத்திக்கொண்டேன். இந்தக் குற்றத்தை இந்த வரிகளை எழுதும்பொழுதுகூட
முற்றிலும் நீக்கமுடியவில்லை. ஆரம்பத்திலேயே அகற்றப்படாத குறைபாடுகள் சிறிது
சிறிதாக வேரூன்றிப் போகின்றன. நீடித்த நோயைப் போக்குவது சிரமசாத்தியமாய் இருப்பதைப்
போலவே இம்மாதிரியான குறைபாடுகளைப் போக்குவதும் இருக்கிறது.
இந்த யக்ஞத்தின் விளைவாகவே ஏறக்குறைய
இந்தியா முழுவதிலும் ராட்டை பரவியிருக்கிறதென்று சொல்லக்கூடும். ஆனால் அது கிராமந்தோறும்
பரவிவிட்டதாகச் சொல்ல இயலவில்லை. இதன் காரணத்தை என்னால் நன்கு உணரமுடிகிறது.
எனக்கிருந்த சிரத்தையின் அளவுக்கு எனக்கு விஷயஞானம் இல்லை. பிழைகள் செய்து
குட்டுகள் பல பட்டதன் பயனாக ஓரளவு ஞானம் ஏற்பட்டிருக்கிறது. தோழர்கள்
கிடைத்தார்கள்; ஆனால் இந்த பிரம்மாண்டமான
காரியத்திற்குப் போதுமானவர்களாய் இல்லை. நூற்றுக்கணக்கில் தொண்டர்கள்
தயாராகியிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு அசையாத சிரத்தையோ விஷயஞானமோ
இருப்பதாகச் சொல்லமுடியாது. அடிப்படை வேலையே உறுதி பெறாதிருக்கும் பொழுது பூரணப்
பயனை எதிர்பார்ப்பதற்கில்லை.
ஆனால் என் அபிப்பிராயம், யாரையும் குறைகூறுவதற்கில்லை என்பது. வேலையோ
புதிது, சமுத்திரத்தைப்போல்
விஸ்தாரமானது; அதிலுள்ள
சிரமங்களுக்கு எல்லையில்லை. ஆகையால் நடந்துள்ளதைக் கொண்டு
திருப்திப்படுவதற்கில்லை. ஆனால் நம்பிக்கையைப் பாதுகாப்பதற்கு அது போதுமானதே.
வெற்றியைப்பற்றி பூரண நம்பிக்கை கொள்ளலாம். கிடைத்துள்ள ஞானத்தையும் தோன்றியுள்ள
நம்பிக்கை கொண்ட ஆண் பெண் ஆகிய இருவகை ஊழியர்களையும் கருதும்பொழுது இந்த வேலை இனி
அழிந்து போகாது என்று நிச்சயமாகச் சொல்லலாம்.
இந்த ஒரு வேலையுடன் ஆசிரமத்திலும்
நாட்டிலும் தோன்றியுள்ள பிற சிறு வேலைகளின் சரித்திரத்தையும் வரைவோமானால் இந்த
முயற்சியின் எல்லையை ஒருவாறு காணலாம். ஆசிரமத்தின் வரலாற்றை விவரித்து வருகையில்
அதன் எல்லாப் பகுதிகளின் சரித்திரத்தையும் விவரிக்கத் துணியலாமென்று நான்
எண்ணவில்லை. ஆனால் சுருக்கமாக, அதோடுகூட பருத்தி வியவசாயமும், தச்சுப் பட்டறையும், சாயவேலையும்
பஞ்சரைப்பது முதல் நெசவு வரையில் தேவையாயுள்ள கருவிகளின் உற்பத்தியும்
நடக்கின்றனவென்று இங்கே சொல்லி வைக்கிறேன். அவைகளில் திருத்தங்கள்
செய்யப்பட்டிருக்கின்றன; இப்பொழுதும்
செய்யப்பட்டு வருகின்றன. ராட்டையின் வகையைத் திருத்தி அமைக்கும் முயற்சியில்
ஏற்பட்டுள்ள முன்னேற்றம் எனக்கு ஒரு ரஸமான காவியத்தைப் போலவே தோன்றுகிறது.
No comments:
Post a Comment