26-6-32.
இந்த விரதங்களைப்பற்றி அதிகம் எழுதத்
தேவையில்லை. மஹா விரதங்கள் ஐந்தினுள் இவையும் அடங்கும். ஆத்மதரிசனத்தைக்
கோருவோருக்கு இவை இன்றியமையாதவை. ஆகையால் ஆசிரமத்தின் விரதங்களுள் இவைகளுக்கு
இடமளிக்கப் பட்டிருக்கிறது.
கள்ளாமை:- இந்த விரதத்தை அனுஷ்டிப்பதற்கு பிறருடைய பொருளை அவருடைய
அனுமதியின்றி எடுத்துக்கொள்ளாமலிருந்தால் மட்டும் போதாது. நமக்கு எந்தப் பொருள்
எந்தக் காரியத்திற்காகக் கிடைத்திருக்கிறதோ அதைத் தவிர்த்து வேறொரு காரியத்திற்காக
அதை உபயோகித்தலும் எவ்வளவு காலத்திற்கென்று ஒரு பொருள் கிடைத்திருக்கிறதோ அதைவிட
அதிகக் காலத்திற்கு அதை வைத்து உபயோகித்துவருதலும் திருட்டே. இந்த விரதத்தின்
அடிப்படையில் அடங்கியுள்ள நுணுக்கமான சத்தியம், கடவுள் எப்பொழுதும் உயிர்களுக்குத் தேவையான பொருள்களையே
சிருஷ்டிக்கிறார், கொடுக்கிறார் என்பதாகும். அதற்கதிகமாக
அவர் முதலில் உண்டாக்குவதேயில்லை. இதிலிருந்து மனிதன் கூடியவரையில் குறைந்த
தேவைக்கு அதிகமாக பொருள்களை உபயோகிப்பதெல்லாம் திருட்டேயென்று ஆகிறது.
வௌவாமை:- வௌவாமையென்பது கள்ளாமையின் ஒரு பகுதியே.
தேவையாயில்லாத பொருள்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பது போல அவைகளை சேமித்து
வைப்பதும் சரியல்ல. அதாவது எந்த உணவும், மேஜை நாற்காலி முதலிய தளவாடங்களும் நமக்கு அவசியமில்லையோ
அவற்றைச் சேர்த்து வைத்தல் இந்த விரதத்தை மீறுவதாகும். நாற்காலியில்லாமலே எவருடைய
காரியங்கள் நடைபெறக்கூடுமோ அவர் நாற்காலி வைத்துக்கொள்ளக்கூடாது. வௌவாவிரதத்தை
அனுஷ்டிப்பவர் தம் வாழ்க்கையை மேன்மேலும் எளிமை பொருந்தியதாகச் செய்துகொண்டே
போகவேண்டும்.
வௌவாமையும் கள்ளாமையும் மனதின் நிலைமையைப்
பற்றியவையாகும். உடல் படைத்த எந்த மனிதனாலும் அவைகளை முற்றிலும் அனுசரித்து நடக்க
முடியாது. உடலைத் தாங்கியிருப்பதே வெளவுதல் என்ற குற்றத்தைக் குறிக்கிறது. உடலுள்ள
வரையில் அது பிறபொருள்களை வௌவுவதே குறியாகத்தான் இருந்துவரும். எத்தனையோ பொருள்களை
வௌவாமலிருப்பது நமக்கு சாத்தியமல்ல. ‘எத்தனையோ’ என்பதின் அளவும் ஒவ்வொருவருடைய
மனோநிலையைப் பொறுத்திருக்கிறது. மனிதன் இந்த விரதங்களை எந்த அளவுக்கு ஏற்று நடக்க
முடிகிறதோ, அந்த அளவுக்கு
அவனுடைய உடல்பற்று குறைந்துவர அவனுடைய தேவைகளும் வரவரக் குறைக்கப்பட்டுவரும்.
எல்லோருக்கும் இவ்விஷயத்தில் ஒரே அளவை நிர்ணயிப்பதற்கில்லை. ஒரு எறும்பு வெளவும்
பொருளின் அளவு வேறாகவேதானிருக்கும். ஒரு சிறு துளிக்கு அதிகமாகச் சேர்த்து
வைக்கும் எறும்பு வௌவும் குற்றம் செய்ததாகக் கருதப்படும். ஆயிரக்கணக்கான
துணுக்குகளைவிட அதிகம் புல் ஒரு யானையின் எதிரில் குவிந்து கிடந்தபோதிலும் அந்த
யானையை வெளவும் குற்றம் செய்ததாகக் கருதுவதற்கில்லை.
இம்மாதிரியான சங்கடங்களிலிருந்தே தற்சமயம் வழங்கும்
சந்நியாசமென்ற கருத்து எழுந்திருப்பதாகத் தோன்றுகிறது. இத்தகைய சந்நியாசத்தை
அனுஷ்டிப்பது ஆசிரமத்தின் நோக்கமல்ல. எவரேனும் ஒருவருக்கு இத்தகைய சந்நியாசம்
தேவையாகலாமென்பது வேறு விஷயம். எவரேனும் ஒருவருக்கு திகம்பரராய் சமாதியிலமர்ந்து
குகையுள் இருந்துகொண்டு நினைத்த மாத்திரத்தில் உலகம் அனைத்திற்கும் நன்மையை
விளைவிக்கும் சக்தி இருக்கலாமென்பதும் வேறு விஷயம். எல்லோரும் குகையைத் தேடிப்போய்
உட்காருவதென்று வந்துவிட்டால் அதன் விளைவு தீமையாகவே முடியும். சாதாரணமான பெண்கள்
ஆண்கள் ஆகியோருக்கு மனோசந்நியாசம் அல்லது உள்ளத்துறவே சாத்தியம். உலகத்தில்
வாழ்ந்துகொண்டே சேவை மனப்பான்மையுடன், சேவைக்காக வாழ்பவரே சந்நியாஸி.
இத்தகைய சந்நியாசத்தைப் பெறவேண்டுமென்று
ஆசிரமம் விரும்புகிறது. இந்த இலக்கைக் குறித்தே ஆசிரமம் சென்றுகொண்டிருக்கிறது.
இந்த மனோசந்நியாசத்தில் தேவையான பொருள்கள் பலவற்றைச் சேர்த்து வைத்துக்கொள்ள
வேண்டியிருந்தபோதிலும் வௌவுதல் அனைத்தையும் (உடலைக்கூட) துறப்பதற்கு
சித்தமாயிருக்க வேண்டும். அதாவது நம்மிடமுள்ள எந்தப் பொருள் போய்விட்டபோதிலும்
நமக்கு வருத்தமுண்டாகக் கூடாது. மேலும், உடல் உள்ள வரையில் சேவை செய்வதற்கு வரும் சந்தர்ப்பங்களையெல்லாம்
பயன்படுத்திவரவேண்டும். உணவும் உடையும் கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரியே, இம்மாதிரியான சோதனைகள் வரும்பொழுது எந்த
ஆசிரமவாசியும் மனம் தளரக்கூடாது. இவ்வாறு மனதைப் பக்குவப்படுத்துவதற்கான முயற்சி
தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
***
No comments:
Post a Comment