மஹாத்மா காந்தியின் 'ஆசிரம வாழ்க்கை' 6 | அஹிம்சை
19-6-32.
அஹிம்சையைப் போல் இந்த விரதம் பல தர்மசங்கடங்களையும்
புதிர்களையும் தோற்றுவிக்கக்கூடியதல்ல. சாதாரணமாக இதன் பொருள் என்னவென்று
எல்லோருக்கும் தெரியும். ஆனால் விஷயம் தெரிந்தும்கூட இதை அனுஷ்டிப்பதில்
எத்தனையோபேர் சொல்லமுடியாத அவதிக்குள்ளாயிருக்க, பலர் எவ்வளவோ முயன்றும் முன்னேற்றமே அடையமுடியாதிருந்திருக்கிறார்கள்.
சிலர் கீழே விழுந்துமிருக்கிறார்கள். பூர்ணத்துவத்தை எவரும் அடைந்துவிட்டதாகச்
சொல்வதற்கில்லை. எல்லோருக்குமே இதன் சிறப்பு தெளிவாகப் புலனாகியிருக்கிறது. நான் 1906-க்கும் முன்னமேயே இதற்கான முயற்சியைத் தொடங்கினேன். நான் விரதம் ஏற்றது 1906-ல். பலபடிகள் ஏறுவதும் வழுக்கி விழுவதுமாக இருந்தேன். பிரம்மசரியத்தின்
நுணுக்கமான பொருளை அனுபவத்திலிருந்தும், பலமுறை
குட்டுப்பட்டுமே நான் உணர முடிந்தது. இதன் ரகசியம் தெரிந்தபின் புஸ்தகத்தில்
படித்ததெல்லாம் அனுபவத்தில் உணராத வரையில் படிக்காதது போன்றதே என்று தெரியவந்தது.
நாம் புஸ்தகத்திலுள்ள ஒன்றுக்கு ஒரு அர்த்தம் கொண்டிருக்க அனுபவத்தில் பார்க்கும்பொழுது
அதன் பொருளே வேறு வகையாக மாறிவிடுகிறது. ராட்டையைப் போன்ற மிகவும் சாதாரணமான
கருவியை உபயோகிப்பது பற்றி படித்துத் தெரிந்துகொள்வது வேறு விஷயம்; அதை அமுலுக்குக் கொண்டுவருவது வேறு விஷயம். அமுலுக்குக் கொண்டுவரத்
தொடங்கியவுடனே புதிய ஒளி தோன்றுகிறது. கண்ணுக்குத் தெளிவாகப் புலனாகும் ராட்டையைப்
போன்ற சாதாரணப் பொருள்களின் விஷயமே இப்படி இருக்குமானால் புலனாகாத விஷயங்களின்
தன்மையைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.
மனம், வாக்கு, காயம் (கருத்து, பேச்சு,
நடத்தை) ஆகிய மூன்று வகையிலும்
புலன்களை அடக்குபவனே பிரம்மசாரி எனப்படுவான். இதன் பொருள் இவ்வகையில்
அனுஷ்டித்துப் பார்த்த பிறகே ஓரளவு விளங்கிற்றென்று சொல்லக்கூடும். நான் என்னைப்
பூர்ண பிரம்மசாரியென்று கருதவில்லையாகையால் இதன் முழுப் பொருளும் இன்றுவரையில்
எனக்கு விளங்கிவிட்டதாகச் சொல்வதற்கில்லை. மனோவிகாரங்களை அடக்க முடிந்த போதிலும்
அறவே ஒழிக்கமுடியவில்லை. ஆனால் எவனுடைய மனம் முற்றிலும் தீய்க்கப்படவில்லையோ அவனை
பூர்ண பிரம்மசாரியென்று சொல்வதற்கில்லை. நான் அந்த நிலையை எய்தும்பொழுது இந்த
விளக்கமே எனக்குப் புதியவகையில் தோற்றமளிக்கும். சாதாரண பிரம்மசரியமிருக்கிறதே,
அது எவ்வளவு சிரம சாத்தியமாகத்
தோன்றுகிறதோ அவ்வளவு சிரமமானதல்ல. நாம் அதற்குத் தப்பான அர்த்தம் கொண்டு
சிரமமானதாக்கியிருக்கிறோம். பிரம்மசரியத்தை விளையாட்டென மதிக்கும் பலர் தீயில்
கையை வைத்துவிட்டு வேகாமலிருக்க வேண்டுமென்று விரும்பவும், வெந்த பிறகு வெந்துவிட்டதே என்று குறைகூறவும்
செய்கிறார்கள். இதற்கு ஒரு புலனை மட்டுமல்ல, புலன்கள் அனைத்தையுமே அடக்கியாக வேண்டுமென்று உணருவோர்
வெகுசிலரே. பெண்கள் சேர்க்கையில்லாமல் இருப்பதிலேயே பிரம்மசரியம் அனைத்தும்
அடங்கிவிட்டதென்று எண்ணி நடப்பவர்கள் பிரம்மசாரிகளாகமாட்டார்கள். அவர்கள் பிரம்மசரியம்
மிகவும் சிரமமானது என்று சொல்வது ஒரு சாதாரண ருஜுவென்றே கருதப்படும். மற்ற எல்லா
போகங்களையும் அனுபவித்துக்கொண்டு எந்த ஆணோ அல்லது பெண்ணோ பெண் அல்லது ஆண்
சேர்க்கையிலிருந்து விலகியிருக்க விரும்புகிறார்களோ, அவர்களுடைய முயற்சி வீணே. வேண்டுமென்றே கிணற்றில்
இறங்கிய ஒருவன் தான் நீரில் நனையாதிருப்பதற்குச் செய்யும் முயற்சி போன்றதே
இவர்களுடைய முயற்சியும். ஆண் பெண் சேர்க்கையை துறப்பதற்காகச் செய்யப்படும்
முயற்சியை சுளுவாக்கிக்கொள்ள விரும்புகிறவர்கள் அதைத் தூண்டும் எல்லாப்
பொருள்களையும் துறந்துவிட வேண்டும். அவர்கள் நாவின் ருசியையும், அலங்காரங்களையும் கேளிக்கைகள் அனைத்தையும்
விட்டுவிட வேண்டும். இவ்வாறு செய்கிறவர்களுக்கு பிரம்மசரியம் சுலபமாயிருக்குமென்பதில்
சந்தேகமில்லை.
சிலர் தம் மனைவி அல்லது பிறர் மனைவியின்
விஷயத்தில் மனதில் விகாரமடைவதனாலும், விகாரமடைந்த மனதுடன் அவர்களைத் தீண்டுவதனாலும் பிரம்மசரியம் கெடுவதில்லையென்று
நினைக்கிறார்கள். இது மிகவும் கொடிய தவறாகும். இதில் நிதர்சனமாகவே
பிரம்மசரியத்திற்கு பங்கம் விளைகிறது. இம்மாதிரி வளையவரும் ஆண்களும் பெண்களும்
தம்மையும் உலகத்தையும் ஏமாற்றுவதோடு, அவர்களுடைய சக்தியும் நாளுக்கு நாள் குன்றுகிறது. இவர்கள் பலவகை நோய்களுக்கு
இரையாகிறார்கள். இவர்களுடைய முடிவு ஏற்படாமலிருப்பதற்கு நிலைமை காரணமே தவிர
இவர்கள் காரணமல்ல. முதல் பரீட்சையிலேயே இவர்கள் வழுக்கி விழுந்துவிடுவார்கள். இதை நான்
என் சொந்த அனுபவத்திலிருந்தும் பல நண்பர்களின் அனுபவத்திலிருந்தும் உணர்ந்தே
கூறுகிறேன்.
ஆசிரமத்தின் பிரம்மசரியத்தில் தன் மனைவியின்
சேர்க்கையும் விலக்கப்பட்டிருக்கிறது. தன் மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்துகொண்டிருந்தும்
பரஸ்திரீயிடமிருந்து விலகியிருப்பவன் சரியாக நடந்துகொள்பவனே. அவனுடைய பிரம்மசரியம்
ஒரு வரம்புக்கு உட்பட்டதென்று கருதப்படலாமாயினும் அவனை (பூர்ண) பிரம்மசாரியென்று
மதித்தல் இந்தப் பெருஞ்சொல்லைப் படுகொலை செய்வதாகும்.
இவ்வாறு பிரம்மசரியம் என்பதற்கு அதன் முழுப்பொருளே
கொள்ளப்பட்டிருக்கிறது. ஆயினும் ஆசிரமத்தில் ஆண்கள், பெண்கள் ஆகிய இரு சாராரும் வசித்துவருவதோடு அவர்கள்
ஒருவரோடொருவர் பழகுவதில் மிகுந்த சுதந்திரம் இருந்துவருகிறது. அதாவது, தாயும் மகனும் சகோதரனும் சகோதரியும் எவ்வளவு
சுதந்திரமாகப் பழகுகிறார்களோ, அவ்வளவு சுதந்திரமாக ஆசிரமவாசிகளும் பழகமுடிய வேண்டுமென்பது லட்சியமாக இருந்துவந்திருக்கிறது.
அதாவது பிரம்மசரியத்தை அனுஷ்டிப்பதற்கு எந்தெந்தக் கட்டுப்பாடுகள் தேவையென்று
சாதாரணமாகக் கருதப்படுகிறதோ அவை இங்கே மதிக்கப்படுவதில்லை. இதற்கு மாறாக எந்த
பிரம்மசரியத்திற்கு இந்தக் கட்டுப்பாடுகள் எப்பொழுதும் தேவையோ அது பிரம்மசரியமே
அல்லவென்று கருதப்படுகிறது. பிரம்மசரியத்திற்கான முயற்சியில் இந்தக்
கட்டுப்பாடுகள் அவசியமென்று கருதப்பட்டபோதிலும் இறுதியில் அவற்றைத்
தகர்த்தேயாகவேண்டும். இதற்கு, கட்டுப்பாடுகள் போனவுடனே பிரம்மசாரி பெண்களின் சேர்க்கையைத் தேடக் கிளம்பிவிடலாமென்பது
பொருளல்ல. ஆனால் பெண்களுக்குச் சேவை செய்யவேண்டிய சந்தர்ப்பம் வரும்பொழுது இது
அவன் விஷயத்தில் தடுக்கப்பட்டிருந்தும் அவன் அந்த சந்தர்ப்பத்திலிருந்து தப்பி
ஓடப் பார்க்கக்கூடாது.
பிரம்மசாரிக்கு பெண் வர்க்கம் தீமையின்
சுரங்கம் அல்லது நரகமல்ல. அவனுக்கு அவள் பெற்ற தாயும், லோகமாதாவுமாவாள். ஒரு பெண்ணைப் பார்த்தவுடனோ,
-திடீரென்றோ விரும்பியோ - சேவை
செய்யும்பொருட்டு தொட்டவுடனோ எவனுக்கு மனம் கல்மஷப்படுகிறதோ அவன்
பிரம்மசாரியாகமாட்டான். அவனுக்கு உயிருள்ள ஒரு பெண்ணும் மரத்தில் செய்த உயிரற்ற
ஒரு பெண்ணின் உருவமும் ஒன்றைப்போலவே இருக்கவேண்டும். ஆனால் பெண்ணென்று சொன்னவுடனே
ஒருவனுடைய மனத்தில் மாசு தோன்றுமானால் அவன் பிறகும் பிரம்மசரிய விரதத்தை
அனுஷ்டிக்க விரும்புவானாகில் மரபொம்மையினிடமிருந்தும் அவன்
தப்பியிருக்கவேண்டியவனே.
மேலே கூறியதன்படி பெண்ணும் ஆணும் ஒரே ஆசிர
மத்திலிருந்து சேர்ந்து வேலை செய்துகொண்டு பரஸ்பரம் சேவை செய்துவருபவர்களாய்
பிரம்மசரியத்தை அனுசரிக்கவும் முயற்சி செய்வார்களானால் அதில் ஆபத்திற்கு
இடமிருக்கிறது. இதில் ஓரளவுக்கு நாம் வேண்டுமென்று மேல்நாட்டாரைப்போல் நடந்துகொள்ள
விரும்புகிறோமென்றே சொல்லவேண்டும். இம்மாதிரியான சோதனையை நடத்துவதற்கு எனக்குத்
தகுதியிருக்கிறதா என்ற விஷயத்தில் எனக்குச் சந்தேகமாகவே இருக்கிறது. ஆனால் என்
சோதனைகள் எல்லாவற்றின் விஷயத்திலுமே இதைச் சொல்லலாம். இந்த சந்தேகம் மிகவும்
அதிகமாயிருப்பதால் நான் எவரையும் என் சிஷ்யரென்று கருதுவதில்லை. வேண்டுமென்றே
ஆசிரமத்தில் வந்து சேர்ந்துள்ளவர்கள், அதிலுள்ள ஆபத்துகளையெல்லாம் தெரிந்தவர்களாய் என் தோழர்களென்ற வகையிலேயே
ஆசிரமத்தில் வந்திருக்கிறார்கள். பிள்ளைகளையும் பெண்களையும் நான் என் குழந்தைகளென்றே
மதிப்பதால் இயற்கையாகவே அவர்களும் என் சோதனைகளுள் இழுக்கப்படுகிறார்கள். எல்லாச்
சோதனைகளும் சத்திய ரூபியான பரமேச்வரனுடைய பெயரால் செய்யப்படுகின்றன. அவர் குயவர்;
நாமெல்லோரும் அவர் கையிலுள்ள மண்
உருண்டைகள்.
இன்று வரையில் ஆசிரமத்திலேற்பட்டுள்ள அனுபவத்திலிருந்து
ஆபத்துக்களைப் பொருட்படுத்தாமல் அங்கே நடத்தப்பட்டுவரும் பிரம்மசரியத்திற்கான
முயற்சிகளில் நம்பிக்கையை இழப்பதற்கான காரணமெதுவும் ஏற்பட்டிருப்பதாகச்
சொல்வதற்கில்லை. மொத்தத்தில் பார்க்கும்பொழுது ஆண்களுக்கும் பெண்களுக்கும் லாபமே
விளைந்திருக்கிறது; ஆண்களைக்
காட்டிலும் பெண்களுக்கு மிகவும் அதிக லாபம் விளைந்திருக்கிறதென்று நான் நம்புகிறேன்.
சோதனைகள் நடத்துவதில் சில பெண்களும், சில ஆண்களும் தோல்வியுற்றிருக்கின்றனர். இன்னும் சிலர் விழுந்து
எழுந்திருந்திருக்கிறார்கள். சோதனையென்றாலே விழுவதும் காயமுறுவதும் சகஜமே. எதில்
பூர்ண வெற்றி ஏற்படக்கூடுமோ அது சோதனையே அல்ல; அது ஸர்வக்ஞன் அல்லது பூர்ண அறிவு படைத்தவனுடைய
சுபாவமென்றே அழைக்கப்படும்.
எதன் தரம் முதன்மையானதோ அதை இறுதியில்
குறிப்பிடுவதற்கென ஒதுக்கி வைத்திருக்கிறேன். கீதையின் 2-வது அத்தியாயத்தில், ‘உணவைத் துறந்தவனுடைய புலன்களின் ஆசை உணவு கொள்ளாதிருக்கும்
வரையில் அடங்கியிருப்பதாகத் தோன்றியபோதிலும் அதிலுள்ள ரஸம் அற்றுப்போவதில்லை. பரம்
அல்லது ஸத்தியம் அல்லது பிரம்மத்தைக் காணும்பொழுதுதான் அது அழியும்’ என்று
கூறப்பட்டிருக்கிறது. இதில் உணவு கொள்ளாதவன் என்ற சொல்லுக்கு பதிலாக புலன்களை
அடக்கியவன் என்று கொள்ளவேண்டும். புலன்கள் என்றது எல்லாப் புலன்களையுமேதான். இந்த
சுலோகத்தில் அனுபவம் வாய்ந்த கிருஷ்ண பகவான் முழு உண்மையையும் வெளியிட்டிருக்கிறார்.
உபவாஸத்திலிருந்து தொடங்கி புலனடக்கத்தில் பழகுவதற்குச் செய்யக்கூடிய
முயற்சிகளெல்லாம் கடவுளுடைய கிருபை இல்லையானால் வீணாகவே போகும். சத்தியம் அல்லது
பிரம்மத்தைக் காணுதல் என்றால் என்ன? இதில் இந்தப் புறக்கண்களினால் பார்க்கும் விஷயம் அல்ல கூறப்பட்டிருப்பது.
சாதாரணமானவர்கள் பார்க்கமுடியாத தெய்வீகக் காட்சியோவென்றால், அதுவுமில்லை. பிரம்மதரிசனமென்பதற்கு
பிரம்மம் அல்லது கடவுள் நம் உள்ளத்தில் வசிக்கிறான் என்பதை உணருதல் என்பதே பொருள்.
இந்த உணர்ச்சி ஏற்படாதிருக்கும் வரையில் புலன்களின் ருசி அழிவதில்லை. இந்த
உணர்ச்சி ஏற்பட்டவுடனே நுகர்ச்சியென்ற நைப்பு அறவே தீய்ந்துபோகிறது. இந்த ஞானத்திற்காகவே
எல்லா விரதங்களும் பிற சாதனைகளும் ஆசிரமங்களும் அமைந்திருக்கின்றன. இந்த ஞானம்
தொடர்ந்து செய்யப்படும் பயிற்சியினாலேயே விளையும். காதலன், காதலிக்காக அழிந்து போகச்சித்தமாயிருப்பதைப்
பார்க்கிறோம். ஆனால் அவன் அழிவது ஒரு கணப்பொழுதில் ஏற்படக்கூடிய இன்பநுகர்ச்சிக்காக.
ஆகையால் இறுதியில் அவன் கைக்கு வருவது ஒருபிடி சாம்பலைத் தவிர வேறெதுவுமில்லை.
ஆனால் எவ்வளவு ஊக்கத்துடனும் உத்சாகத்துடனும் காதலன் உழைக்கிறானோ, அதைவிட அதிகமான ஊக்கம் சத்தியத்தைக் காண விரும்புவோனுக்கு
இருக்கவேண்டும். சத்தியத்தை தரிசித்தானபிறகு கிட்டுவதே பேரானந்தம். ஆயினும்
உண்மைக் காதலனுடையது போன்ற ஊக்கமுள்ள ஞானதாகம் உடையவர்கள் மிகவும் சிலரே. ஆகவே
சத்தியத்தைக் காண்பது அசாத்தியமாயிருக்கிறதென்று குறைகூறுவதேன்? காதலி காதலனிருக்குமிடத்திலிருந்து ஆயிரக்கணக்கான
மைல் தூரத்தில் இருக்கலாம். ஆனால் பிரம்மமோ உள்ளத்திலேயே வதிகிறது. நகத்திற்கும்
விரலுக்கும் எவ்வளவு இடைவெளியுண்டோ அவ்வளவுகூட பிரம்மத்திற்கும் நமக்குமில்லை.
ஆனால் ‘இடையன் தோளில் ஆடு இருப்பதை அறியாமல் ஊரெல்லாம் தேடித் திரியும்’ கதையைப்போல் இருந்தால்
என்ன செய்வது?
25-6-32.
உணவைத் துறந்தவனுடைய பிரம்மசரியம் புறக்கணிக்கத்
தகுந்ததல்ல. அவனுடைய புலன்களின் ரஸம் இறுதியில் குறையத்தான் செய்யும்.
பட்டினியிருந்து, தலைதொங்கி,
கைகாலெல்லாம் சுருங்கி, எப்படியேனும் புலன்களின்
நுகர்ச்சியிலிருந்து விடுபட்டுத்தான் தீரவேண்டும். இவ்வாறெல்லாம் செய்துவந்ததன்
பயனாக புலன்களின் நுகர்ச்சி அனேகமாகப் பட்டுப்போகலாம். இதற்கிடையில் பிரம்மத்தைக்
கண்டுவிடுவானானால் புலன் நுகர்ச்சி அறவே அற்றுப்போகும்; அப்பொழுது கைதவறிப் போன மாணிக்கம் மீண்டும்
கிட்டியது போலாகும். இறுதி மூச்சுவரையில் முயற்சி செய்யாதவனுக்கு என்னால் பிரம்மத்தைக்
காணமுடியவில்லையென்று குறைகூற உரிமை கிடையாது. பிரம்மசரியத்தை அனுஷ்டிப்பதும்,
பிரம்மத்தைத் தேடுவதற்கு உதவும் ஒரு
உபாயமாகும். அதன் உதவியின்றி பிரம்மதைக் காணமுடியாது. பிரம்மத்தைக் காணாதவரையில்
பிரம்மசரியத்தைப் பூரணமாக அனுஷ்டிப்பதும் சாத்தியமில்லை. ஆகையால், இங்கே உணவை நிறுத்துதலினுடைய வரம்பு
குறிப்பிடப்பட்டிருக்கிறதே தவிர உணவை நிறுத்துவதே தவறென்று கூறப்படவில்லை.
ஆசிரமத்தில் சிறியோர் பெரியோர், கணவர் மனைவிமார் ஆகிய அனைவருமே பிரம்மசரியத்தை அனுஷ்டிப்பதற்கு முயற்சி செய்துவந்தபோதிலும்
ஆசிரமவாசிகள் அனைவரும் தம் ஆயுள் பூராவும் அதை அனுசரிப்பவர்களல்ல. இவ்வாறு
செய்பவர்கள் ஒருசிலரே. பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் வயதுவந்தவுடனே அவர்கள்
பிரம்மசரியத்தை அனுசரிக்க வேண்டுமென்ற நிர்ப்பந்தம் எதுவுமில்லையென்று
அறிவிக்கப்படுகிறது. அதன் கனலைச் சகிக்கமுடியாதவர்களுக்கு விவாகம் செய்துகொள்ள
உரிமையுண்டென்றும் அவர்கள் கோருவார்களானால் தகுந்த வரன் அல்லது பெண்ணைத் தேடித்
தருவதில் ஆசிரமம் உதவுமென்றும் சொல்லப்படுகிறது. இது எத்தனையோ தடவை
மிகமிகத்தெளிவாக அறிவிக்கப்பட்டு நடந்துவந்திருப்பதால் இதை எல்லோருமே நன்கு உணருகிறார்கள்.
இதற்கு மிகவும் நல்ல விளைவே ஏற்பட்டிருக்கிறது. வாலிபர்கள் பலர் நன்கு
நடந்துவருகிறார்கள். பெண்களும் நல்ல வயதாகும் வரையில் விவாகத்தை ஒத்திப்போட்டுக்கொண்டே
வருகிறார்கள். 15 வயதுக்குக்
குறைந்த பெண் எவளுக்கும் கலியாணம் செய்யப்படவில்லை. பெரும்பாலான பெண்களுக்கு 19
வயதுக்குச் சிறிது ஏற்றத்தாழ்வாக
இருக்கும்பொழுதே விவாகம் நடந்திருக்கிறது. ஆசிரமத்தின் ஆதரவில் விவாகம்
செய்துகொள்ள விரும்புகிறவர்கள் மிகவும் எளிய முறையில் செய்துகொள்ளச் சம்மதிக்க வேண்டியிருக்கிறது.
விருந்து முதலியவை நடத்தப்படுவதில்லை. சம்பந்தி என்ற ஹோதாவில் எவரும் அமுல் நடத்த
முடிவதில்லை. மேள தாளங்களுக்கும் இடமில்லை. மதசம்பந்தமான கிரியைகள் மட்டும்
செய்யப்படுகின்றன. வரனும் கன்னியும் கதராடையே உடுத்திக்கொள்ளவேண்டும். நகை நட்டு
என்று எதையும் அணியக்கூடாது. பெண்ணுக்கு வரனின் சார்பில் எதுவும் கொடுக்கவேண்டியிருப்பதில்லை.
பெண்ணுக்கு அவளுடைய பெற்றோர் அல்லது போஷகரின் சார்பில் உடுத்துவதற்குப்
புடவைகளையும், ராட்டை
முதலியவைகளையும் தவிர வேறு எதுவும் கொடுக்கப்படுவதில்லை. ஒரு கலியாணத்திற்கு ரூ.10
கூடச் செலவாவதில்லை. மந்திரக்கிரியைகளும் ஒருமணிநேரத்திற்குள் முடிந்துபோகின்றன. சப்தபதி
மந்திரத்தை வரனும் கன்னியும் தம் தாய் பாஷையில் சொல்லுகிறார்கள். அதன் பொருள்
அவர்களுக்கு முன்கூட்டியே உணர்த்தப்படுகிறது. விவாக நாளன்று விவாகச் சடங்குக்கு
முன்னதாக வரனும் கன்னியும் உபவாசமிருக்கவும், மரங்களுக்குத் தண்ணீர் ஊற்றவும் மாட்டுத்
தொழுவத்தையும், நீர்த்தொட்டியையும்
சுத்தம் செய்யவும், கீதை
பாராயணம் செய்யவும் வேண்டும். கன்னிகாதானம் செய்வோரும் அந்த தானம் செய்யும்
வரையில் உபவாஸமிருப்பார். இப்பொழுதோ ஆசிரமத்தின் ஆதரவில் ஒரே ஜாதியாரினிடையில்
விவாகம் செய்விப்பதில்லையென்ற ஒரு நிர்ப்பந்தமும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. உபஜாதிகளின்
நிர்ப்பந்தங்களைத் தளர்த்தும் நோக்கத்துடன் ஆசிரமத்தில் உபஜாதியினரின்
கலியாணத்திற்கு ஊக்கமளிக்கப்படுவதில்லை. ஆசிரமத்திற்குள் விவாகம் செய்துகொள்ள
விரும்புவோர் உபஜாதிகளுக்கு வெளியே விவாகம் செய்துகொள்ளத் தூண்டப்படுகிறார்கள்.
***
மஹாத்மா காந்தியின் 'ஆசிரம வாழ்க்கை' 8 | கள்ளாமையும் வௌவாமையும்
No comments:
Post a Comment