மஹாத்மா காந்தியின் 'ஆசிரம வாழ்க்கை' 5 | பிரார்த்தனையின் பொருளென்ன?
அஹிம்சையை அனுஷ்டிக்கும் விஷயத்திலேயே மற்ற
எதையும்விட அதிகமான சங்கடங்கள் விளைந்தனவென்று சொல்லலாம். சத்தியத்தைப் பற்றிய
புதிர்கள் இருக்கவே செய்கின்றன. பிரார்த்தனை உள்ளத்தில் இறங்குவதில்லை. ஆனால், இவை இரண்டிற்கும் என்ன
அர்த்தமென்பதைப் புரிந்துகொள்வதில் அதிக சிரமம் ஏற்படுவதில்லை. ஆனால் அஹிம்சையைப்
புரிந்துகொள்வதற்குள் திணறித் தத்தளிக்க வேண்டியதாகிவிடுகிறது. அஹிம்சை விஷயமாக
நடந்துள்ள அளவு ஆசிரமத்தில் வேறு எதையும் பற்றி அவ்வளவு வாத விவாதங்கள் நடத்திராதென்று
சொல்லலாம். ஒரு காரியம் செய்தோமென்றால், அது ஹிம்சையா,
அஹிம்சையா என்ற கேள்வி ஆசிரமத்தில் எழாதிராது. பல சமயங்களில்
ஹிம்சைக்கும், அஹிம்சைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்தும்கூட
அஹிம்சையை அனுஷ்டிக்க முடிவதில்லை. அனுஷ்டானத்தில் அடிக்கடி பலஹீனம்
புகுந்துகொள்ளும். அந்த பலஹீனத்தையும் சுளுவாகப் போக்கிக்கொண்டுவிடலாமோ என்றால்
அதுவும் சாத்தியமாயிராது. மனோவாக்கு காயங்களினால் - தனக்கும், பிறருக்கும் நன்மையையே கருதும்பொழுதும் - எந்த ஜீவனுக்கும் துக்கத்தை
அளியாதிருப்பதே அஹிம்சை எனப்படும். இதைப் பூரணமாக அனுசரித்தல் உடலைத் தாங்கியுள்ள
ஜீவர்களுக்கு சாத்தியமல்ல. மனிதன் மூச்சுவிடும்பொழுதே எண்ணற்ற நுண்ணிய
ஜீவன்களுக்கு ஹிம்சையளிக்கிறான். கண் இமையை அசக்குவதில் கண்மீது உட்கார விரும்பும்
உயிர்களை ஹிம்சைக்கு உள்ளாக்குகிறோம். விவசாயத்தில் சிறிதும் பெரிதுமான அனேக
பிராணிகள் ஹிம்சைக்கு உள்ளாகின்றன. கடிக்குமென்ற பயத்தினால் நாம் பாம்பு, தேளைக்
கொல்லுகிறோம் அல்லது பிடித்துத் தொலைவில் கொண்டுபோய் விட்டு வருகிறோம். அவற்றைப்
பிடிப்பதனால் அவைகளுக்குச் சிறிது துக்கம் விளையவே செய்கிறது. அதை நாம் தவிர்க்க
முடியாதென்று கருதிய போதிலும் மேலே கூறிய விளக்கத்தின்படி அது ஹிம்சையேயாகும்.
நான் சாப்பிடும் உணவையும், அடைத்துக்கொண்டிருக்கும் இடத்தையும்,
உடுத்திக்கொண்டிருக்கும் துணியையும்
மிச்சப்படுத்துவேனானால் என்னைவிட இவை அதிகம் தேவையுள்ள ஏழைகளுக்குப் பயன்படுமென்பது
தெளிவே. என்னுடைய சுயநலத்தினால் இவை அவர்களுக்குக் கிடைக்காதிருக்கின்றன. ஆகையால்
எனது நுகர்ச்சியினால் நான் ஏழையான என் அயலானை ஹிம்சிக்கிறேன். உயிர் வாழ்வதற்காக
நான் எத்தனையோ பயிர் பச்சிலைகளைச் சாப்பிடுவதால் தாவரங்களென்ற உயிரினம்
ஹிம்சைக்குள்ளாகிறது.
இவ்வாறு பரந்த ஹிம்சையில்
சிக்கிக்கொண்டிருக்கும் நான் அஹிம்சையை அனுஷ்டிப்பதெப்படி? அடிக்கடி புதிய புதிய பிரச்னைகள் எழுந்துகொண்டேதானிருக்கும்.
மேலே கூறிய ஹிம்சைகள் நமக்குப் புரியக்கூடியவை.
ஆனால் நாம் ஒருவரையொருவர் வெறுக்கிறோமே, அதற்கு என்ன செய்வது? உபாத்தியாயர்
பிள்ளைகளை அடித்தல், தாய்
குழந்தையை அதட்டுதல் என்பவை போன்ற ஒருவரையொருவர் கண்டிப்பதிருக்கிறதே, இவையும் ஹிம்சையே; சாதாரண ஹிம்சையல்ல, கொடிய ஹிம்சையாகும். இவற்றை அடக்கவே முடிவதில்லை. விருப்பு
வெறுப்பு உள்ள இடங்களில் ஹிம்சையும் இருக்கவேதான் செய்கிறது. இந்த ஹிம்சையைப்
போக்குவதெப்படி?
ஆகையால் நாட்டிற்காகவோ, குடும்பத்திற்காகவோ தனக்காகவோ எவரையும் கொலை
செய்தல்தான் ஹிம்சையாயிற்றே, கோபம்
முதலியவைகளினால் ஒவ்வொரு நாளும் செய்யப்பட்டுவரும் சூட்சுமமான ஹிம்சை இந்தப் பெரிய
ஹிம்சையைவிட அதிகத்தீயது என்பதை ஆசிரமத்தில் ஆரம்பத்திலேயே கற்றுக்கொள்ளுகிறோம்.
கணக்கிட்டுப் பார்த்தோமானால் ஒவ்வொரு நாளும் உலகத்தில் நடைபெறும் கொலைகளின் தொகை
சாதாரணமாகவே தோன்றும். உலகத்தின் ஜனத்தொகையைக் கருதும்பொழுது, பிற வழிகளில் விளையும் சாவுகளுடன்
ஒப்பிட்டுப் பார்க்கையில் கொலைகளின் தொகை பெயரளவுக்கே இருப்பதாகத் தோன்றும். ஆனால்
கோபம் முதலியவைகளினால் பிரதி தினமும் நிகழும் ஹிம்சையோ கணக்கிலெழுதத் தொலையாது.
இந்த எல்லா வகை ஹிம்சைகளையும்
கட்டுப்படுத்துவதற்கு ஆசிரமத்தில் ஒவ்வொரு நாளும் முயற்சி நடந்துகொண்டே
இருக்கிறது. எல்லோரும் தம்தம் குறைபாடுகளை உணர்கிறார்கள். பாம்பு முதலியவைகளிடம் நான்
உள்பட எல்லோருக்கும் பயமே. ஆகையால் அவைகளைப் பிடித்து ஒருவருக்கும் அவற்றினால்
தீங்கு நேருவதற்கிடமில்லாத இடத்தில் கொண்டுபோய் விட்டுவருவது சாதாரணமான வழக்கம்.
எவரேனும் பயந்து கொன்றுவிட்டாலும் அவரை எவரும் குறை கூறுவதில்லை. ஒரு சமயம் ஒரு
பயங்கரமான நாகம் கோசாலையில் எக்கச்சக்கமான இடமொன்றில் போய்ப் புகுந்துகொண்டது.
அதைப் பிடித்து வெளிக்கொணர்வதே அசாத்தியமாயிருந்தது. அப்பொழுது அங்கே மாடுகளைக்
கட்டுவது ஆபத்தாகுமென்று கருதப்பட்டது. ஏன், மனிதர்களும் அங்கே இருந்து வேலை செய்ய பயந்தார்கள்.
ஆகவே, வேறு வழி காணாமையால்
மகன்லால் அதைக் கொன்றுவிட அனுமதித்துவிட்டார். அவர் என்னிடம் இதைத் தெரிவித்தபொழுது
எனக்கும் அவர் செய்தது பிடித்தமாகவே இருந்தது. நானே ஆசிரமத்தில்
இருந்திருப்பேனானால் என்னாலும் வேறு உபாயமெதுவும் செய்திருக்க முடியாது என்று நான்
ஒப்புக்கொள்கிறேன். பாம்பையும் தம் சகோதர ஜீவனாகக் கருதியே பழகவேண்டுமென்று எனக்கு
என் புத்தி கூறுகிறது. அது கடிப்பதனால் உயிர் போனாலும் அந்த ஆபத்துக்குட்பட்டு அதை
கையால் பிடித்து பயப்படுகிறவர்களிடமிருந்து அகற்றவேண்டும். ஆனால் என் மனத்தில்
இவ்வளவு சகோதர உணர்ச்சியோ, அஞ்சாமையோ
பாம்பு முதலியவைகள் கடித்துச் சாவதுபற்றி அலட்சியமோ இல்லை. இந்த மூன்று
விஷயங்களையும் பெறுவதற்கு ஹிருதயத்தைப் பயிற்ற நான் முயற்சி செய்துகொண்டிருந்தபோதிலும்
எனக்கு இன்னும் வெற்றி கிட்டவில்லை. ஒருக்கால் பாம்பு என்னைக் கடிக்குமானால் அதை
சகித்துக்கொண்டு நான் அதைக் கொல்ல முற்படாமல் இருந்துவிடலாம்; ஆனால் பிறருடைய உடலை ஆபத்திற்குள்ளாக்க நான்
தயாராயில்லை.
ஒரு சமயம் குரங்குகளின் உபத்திரவம் மிகவும்
அதிகமாகிவிட்டது. அவை பயிர்களுக்கு கணக்கில்லாத நாசம் விளைத்துவந்தன.
காவல்காரர்கள் கவண்டிக் கல்லினால் அவைகளைப் பயமுறுத்திவந்தார்கள். ஆனால் அவை
பயந்தால்தானே! இறுதியில் அவர்கள் குரங்குகளைக் காயப்படுத்த ஆரம்பித்தார்கள். ஒன்று
நொண்டியாகிவிட்டது. எனக்கு இது கொலை செய்வதைவிட அதிக ஹிம்சையானதென்று தோன்றிற்று.
இதைப்பற்றி தோழர்களுடன் சர்ச்சை செய்ததன் பயனாக அவை போகவில்லையென்றால் கவண்டிக்
கல் முதலியவைகளினால் அவற்றைக் காயப்படுத்துவதைவிட ஏதேனும் சுளுவான வழிகளினால்
ஒன்றிரண்டு குரங்குகளைக் கொன்றே இந்த உபத்திரவத்திற்கு முடிவுகட்டலாமென்று
தீர்மானித்தோம். இவ்வாறு முடிவாகத் தீர்மானிப்பதற்கு முன் நான் ‘நவஜீவன்’ மூலமாகவும், நண்பர்களுக்கெழுதியும் இது விஷயமாக எல்லோருக்கும்
தெரியும்படி விவாதம் நடத்தினேன். ஆகையால் இங்கே எல்லா வாதங்களையும்
விவரிக்கவில்லை. இதுபற்றி இன்னும் அதிகமாக அறியவிரும்புகிறவர்கள் ‘நவஜீவ’னைப்
பார்ப்பார்களாக.
மனிதனைத் தவிர மற்றப் பிராணிகள் கொடிய தன்மையுள்ளவையாய்
இருந்தபோதிலும் அவற்றைக் கொல்லுதல் பாபமென்று இந்தியாவுக்கு வெளியே எங்கேனும்
கருதப்படுகிறதோ என்னவோ எனக்குத் தெரியாது. ஸெயிண்ட் பிரான்ஸிஸைப் போன்ற மகான்கள்
இத்தகைய தர்மத்தைக் கடைப்பிடித்து வந்தார்களென்று அறிகிறோம். ஆனால் பொதுமக்களும்
அதே வகையில் நடந்துவந்ததாக நான் கேள்விப்பட்டதில்லை. ஆசிரமம் இந்த தர்மத்தை
ஒப்புக்கொள்ளுகிறது. ஆயினும் இதை அனுஷ்டானத்திற்குக் கொண்டுவரும் விஷயத்தில் அது
இன்னும் பக்குவம் பெறாதிருப்பது வருந்தத்தக்க விஷயமே. இதை அனுஷ்டிப்பதற்குதவும்
வழி இன்னும் எங்களுக்குத் தெரியவில்லை. இம்முயற்சியில் அனேகருடைய உயிர் போனபிறகுதான்
இதற்கான உபாயம் தெரியவருமோ என்னவோ. இப்பொழுதைக்கு இது எங்களுடைய ஒரு குறிக்கோளாகவே
இருந்துவருகிறது. எவ்வளவோ காலமாக இது தர்மமென்றே மதிக்கப்பட்டு வந்திருந்தபோதிலும்
மிகவும் மெதுவாகவே இதன் அனுஷ்டானம் இருந்துவருகிறது. இதற்கான முக்கிய காரணம்
தர்மத்தை ஏற்றவர்கள் சோம்பலினாலோ, பிற காரணங்களினாலோ தம்மையே ஏமாற்றிக்கொண்டு வருவதே என்று கருதுகிறேன்.
பைத்தியம் பிடித்த நாய்களைக் கொன்றுவிடுவது
ஆசிரமத்தில் வழக்கம். இம்மாதிரி கொல்லவேண்டிய சந்தர்ப்பம் எனக்குத் தெரிந்து ஒரே
ஒருமுறை வந்திருக்கிறது. இவ்வாறு கொல்வதில் உள்ள கருத்து, பித்துப் பிடித்த நாய் மிகவும் கஷ்டப்பட்டு இறந்தே
போகும், அது குணமடையாது
என்பதே. அது வேறு எங்கேனும் போனாலும், அதைப் பிறர் கொல்வதற்கு பதிலாக ஹிம்சை செய்து தாங்கள் அஹிம்சை வழியில்
நடப்பதாக எண்ணித் தம்மையே ஏமாற்றிக்கொள்வார்கள். அவர்கள் அதிக ஹிம்சை
செய்கிறார்களென்பதே என் கருத்து. இவ்வாறு எண்ணி பித்தம் கொண்ட நாய்களைக் கொன்று
விடுவதே தர்மமென்று ஆசிரமம் கருதி வந் திருக்கிறது.
ஒரு பிராணியின் உயிரை உடலிலிருந்து
பிரிப்பதும், சில சமயங்களில்
அஹிம்சையாகக்கூடும் என்ற தெளிந்த நம்பிக்கை காரணமாக ஆசிரமத்தில் ஒரு பசுங்கன்று
கொல்லப்பட்டது. இது ஒரு பிரசித்தமான உதாரணமாகும். அந்தக் கன்றின் கால் ஒடிந்துபோய்
புண்ணாகிப் பூச்சி வைத்துவிட்டது. அதைத் தூக்கவோ, வேறு வகையில் அதற்கு உதவியளிக்கவோ முடியவில்லை. உடல்
மிகவும் பெரியதாகையால் அதை ஒருபுறத்திலிருந்து மறுபுறம் புரட்டிப் போடுவதோ,
கையால் தாங்கித் தூக்குவதோ சாத்தியமில்லாதிருந்தது.
அதன் உயிரைப் போக்காதிருந்தால் அது கஷ்டப்பட்டுக்கொண்டேயிருக்க நாங்கள் பார்த்துக்கொண்டே
இருந்திருப்போம். அது அதிக நாள் ஜீவித்திருக்குமென்றும் எண்ணுவதற்கில்லை.
இந்நிலையில் அதன் உயிரைப் போக்குவதிலேயே கருணை இருக்கிறதென்று எனக்குத்
தோன்றிற்று. துன்பமுற்றுள்ள பிராணியின் துன்பத்தை நீடிப்பதில் எனக்கு தர்மமிருப்பதாகத்
தோன்றவில்லை. எங்கே நம்முடைய சுயநலம் எதுவும் இல்லையோ, அந்த ஜீவனுடைய நன்மை இருக்கிறதோ, அங்கே அதன் உயிரைப் போக்குவதும் தர்மமேயென்று
எனக்கு சங்கையறத் தோன்றிற்று. இதைப்பற்றி ஆசிரமவாசிகளுடன் நீண்ட சர்ச்சைகள்
நடத்தப்பட்டன. எவ்வளவோ பேர் இதை எதிர்க்கவும் செய்தார்கள். ஆனால் இறுதியில்
உயிரைப் போக்குவதென்றே முடிவாயிற்று. நான் பிரபலஸ்தரான ஸேட் அம்பாலால் ஸாராபாயின்
உதவியைக் கோரினேன்; தம்மிடமிருந்த
துப்பாக்கிச் சேவகர்களை அனுப்பும்படி சொன்னேன். அவர் ஊசியினால் விஷத்திராவகத்தை
தோலில் ஏற்றுவது அதைவிடச் சிறந்ததென்று சொல்லவே நான் அதை ஒப்புக்கொண்டேன். அவருடைய
டாக்டர் வந்து திராவகத்தை ஏற்றி ஒரு இமைப்பொழுதில் வேலையை முடித்துவிட்டார். நான்
இதெல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதானிருந்தேன். இதை எழுதும்பொழுதும் எண்ணிப்
பார்த்ததில் எனக்கு எத்தகைய வருத்தமும் தோன்றவில்லை. இதற்கு மாறாக நான் செய்தது
புண்ணிய காரியமே என்று நம்புகிறேன். இதனால் எத்தனையோ ஹிந்துக்களின் மனம்
புண்ணாயிற்று; இதைப்
படிக்கும்பொழுதும் வருத்தமுண்டாகலாம். இவ்வாறு வருத்தம் தோன்றுவதற்குக் காரணம்
அஹிம்சையின் தன்மையை நாம் அறியாதிருப்பதேயென்று தோன்றுகிறது. இந்த சமயத்தில் இது
ஜீவனுள்ள தர்மமாய் இருக்கவில்லை. அஹிம்சை ஒரு சம்பிரதாயமாகிவிட்டது. அதன்படி
சிந்தனையெதுவும் புரியாமல் தமக்கு அதிகத் தொந்தரவு விளையாமலிருக்கும் அளவுக்கு
இந்தியாவிலுள்ள ஹிந்துக்கள் ஏதோ நடத்திக்கொண்டு போகிறார்கள். இந்தக் கன்றின்
விஷயமாகவும், இதிலிருந்து
கிளைத்த இன்னும் பல பிரச்னைகளின் விஷயமாகவும் ‘நவஜீவ’னில் ஏற்கெனவே பூர்ணமாக ஆராயப்பட்டிருக்கிறது.
இத்துடன் மனிதனைத் தவிர்த்து மற்ற
ஜீவராசிகளின் விஷயமாக ஆசிரமத்தில் நடந்துவந்துள்ள அஹிம்சைச் சோதனைகளின் விவரத்தை
முடித்துக்கொள்ளுகிறேன்.
ஆசிரம நோக்குடன் பார்க்கும் பொழுது இந்த ஜீவ
தயையுள் அடங்கியுள்ள அஹிம்சை அந்தப் பரந்த தர்மத்தின் – பெரியதாயினும் - ஒரு
பகுதியென்றே கொள்ளப்படும். அதைவிடப் பெரிய பகுதியெனக் கருதப்படுவது மனிதர்களின்
பரஸ்பர விவகாரமாகும்.
சாதாரணமான விவகாரம் ஒவ்வொன்றும் ஹிம்சை
கலந்ததாகவோ, அஹிம்சை
மயமாகவோதானிருக்கும். அதிர்ஷ்டவசமாக அஹிம்சையென்பது ஒரு பரந்த தர்மமாயிருப்பதால்
மனிதனால் அதை இயற்கையாகவே அனுசரித்து நடக்க முடிகிறது. மனிதர்கள் பரஸ்பரம் நன்கு
பழகி வாழ முடிந்திராவிட்டால் மனித ஜாதி எவ்வளவோ காலத்திற்கு முன் அழிந்துபோயிருக்கும்.
இம்மாதிரியான பெருநோக்கின் மூலமாகவே நாம் அஹிம்சை தர்மத்தை ஸ்தாபிக்க முடியும்.
ஆனால் இதிலிருந்தே நாம் அஹிம்சையை அனுசரித்து நடப்போர் என்ற சிறப்புக்கு உரியவராகிவிடமாட்டோம்.
நமது தாற்காலிக சுயநலம் குறுக்கிடும்பொழுதெல்லாம்
பெரும்பாலும் வேண்டுமென்றே நாம் ஹிம்சை வழியைப் பற்றி நடக்கிறோம். இது குடும்பம்,
கிராமம், தேசம் வெவ்வேறு மதங்கள் ஆகியவற்றின் விஷயத்தில்
அவ்வப்பொழுது காணப்படுகிறது. அஹிம்சையை புத்திபூர்வமாக அனுசரிக்கையில் மனிதனுக்கு
புனர்ஜன்மம் ஏற்படுவது போல் ஆவதால் அவனுடைய சுபாவமே மாறுகிறது. இந்த சிரம
சாத்தியமான தர்மத்தைப் பிடிவாதமாக அனுசரித்து நடக்கவேண்டி ஆசிரமத்தில் முயற்சி
செய்யப்படுகிறது. இதற்கு எத்தனையோ இடையூறுகளும், ஏமாற்றங்களும் ஏற்படுவதோடு பல சமயங்களில் நமது சிரத்தையே
சோதனைக்குள்ளாகிறது. பரஸ்பர விவகாரங்களில் தூய முறையில் நடந்துகொள்வதினால் மட்டுமே
திருப்தி ஏற்பட்டுவிடுவதில்லை. எவருக்கும் தீமையை விரும்பாதிருத்தல், ஒருவர் நமக்குப் பெருத்த தீங்கு விளைவித்திருந்தபோதிலும்
அவருக்குத் தீமை நேரவேண்டுமென்று கருதாமை, மனத்தால்கூட அவருக்கு வருத்தமளியாதிருத்தல் என்பது மிகவும் சிரமமாகும். ஆனால்
அஹிம்சையின் அனுஷ்டானத்திற்கு உரைகல் இதுவே.
ஆசிரமத்தில் திருடர்கள் வந்திருக்கிறார்கள்;
அங்கேயே திருடர்கள் தோன்றியிருக்கிறார்கள்.
அவர்களுக்கு தண்டனையளிப்பது ஆசிரமத்தின் முறையல்ல. போலீசுக்குத் தகவல் கொடுப்பதும்
வழக்கமில்லை. அவர்களுடைய தொந்தரவுகளை கூடியவரையில் பொறுத்துக்கொள்ளவே படுகிறது.
இந்த விதி எப்பொழுதுமே பூர்ணமாக அனுஷ்டிக்கப்பட்டதென்று சொல்வதற்கில்லை. ஒருநாள் பகல்
நேரத்திலேயே ஒரு திருடன் பிடிபட்டான். அவனைப் பிடித்தவன் அவனைக் கட்டிப்போட்டு
அவமானமும் செய்துவிட்டான். நான் அன்று ஆசிரமத்திலிருந்தேன். நான் அவனிடம் போய்
அவனைக் கண்டித்து விடுவித்தேன். ஆனால் உண்மையில் கவனிப்போமானால் அஹிம்சைவாதியினுடைய
கடமை இத்துடன் நிறைவேறியதாகாது. இத்தகைய உபத்திரவங்களைத் தடுப்பதற்குத் தேவையான
உபாயங்களைக் கண்டுபிடிக்கவும் அனுஷ்டிக்கவும் வேண்டும். ஒரு உபாயம், ஆசிரமத்தில் வௌவுதலுக்கும், சுகபோகங்களுக்கும் இடமே இல்லாமற் செய்வதனால்
எவருக்கும் அங்கிருந்து எதையும் எடுத்துச் செல்லவேண்டுமென்ற ஆசை உண்டாவதற்கே
இடமில்லாமற் செய்தலாகும். இரண்டாவது உபாயம், அக்கம் பக்கத்திலுள்ள கிராமங்களில் நல்ல நடத்தையைப்
பிரசாரம் செய்தல். மூன்றாவதோ, ஆசிரமம் பரந்த அளவில் செய்யும் சேவையினால் நல்லவர்கள் கெட்டவர்கள் ஆகிய எல்லோருக்குமே
ஆசிரமம் தம்முடையதே என்ற எண்ணம் உண்டாகும்படி செய்தல்.
இதிலிருந்து வெளவும் மனிதனால் அஹிம்சையை ஸ்தூலமான முறையில்கூட பூர்ணமாக அனுஷ்டிப்பது அசாத்தியமென்று தெரிந்திருக்கும். தன்னுடையதென்று சொத்து வைத்துக்கொண்டிருப்பவன் அதைப் பாதுகாப்பதற்கான உபாயங்களைச் செய்யாதிரான். அப்பொழுது தண்டனையளிப்பதற்கும் இடம் ஏற்படவேதான் செய்யும். தனது என்ற உணர்ச்சியை அறவே ஒழித்து, பாசத்தை முற்றிலும் களைந்து நடந்துகொள்ளக்கூடியவனே ஸ்தூலமான அஹிம்சையை முற்றிலும் அனுசரித்து நடக்கக்கூடும். எந்த சமூகத்தில் இம்மாதிரியான மனிதர்களும் ஸ்தாபனங்களும் அதிகமாயிருக்குமோ, அங்கே ஹிம்சைக்குச் செலாவணி கூடியவரையில் குறைவாயிருப்பது சாத்தியம். ஹிம்சை அடிப்படையில் அமைந்துள்ள சமூகத்தில் துப்பாக்கி ரவைக்கும் வெடிமருந்துக்கும் பெருத்த மதிப்பிருக்க, அதை உபயோகிப்பவன் சிறந்த வீரனென்றும் வெகுமதிகள் பெறுவதற்குத் தகுந்தவனென்றும் கருதப்படுவதைப்போல, அஹிம்சையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள சமூகத்தில் துப்பாக்கி ரவை, வெடிமருந்து ஆகியவற்றிற்கு பதிலாக தவமும் அடக்கமும் ஏற்றுக்கொள்ளப்பட அவற்றைக் கையாளும் வீரன் சமூகத்தைப் பாதுகாக்கிறான். இத்தகைய தர்மத்தை உலகம் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியாவில் ஓரளவு இது இடம்பெற்றிருந்த போதிலும் எங்கும் பரந்த அளவில் ஏற்கப்பட்டுவிட்டதாகச் சொல்லமுடியாது. ஆசிரமத்தில் இம்மாதிரியான அஹிம்சை எங்கும் பரவவேண்டும், பரவக்கூடும், சமூகத்தையும் இந்த அடிப்படையயிலேயே அமைக்கலாமென்ற நம்பிக்கை இருந்துவருவதால் இதையே ஆதாரமாகக் கொண்டு அங்கே பல சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரையில் ஒரு சிறிதே வெற்றி ஏற்பட்டிருக்கிறதென்று சொல்லவேண்டும். அஹிம்சை பக்தனுக்குச் சமாதானம் விளைவிக்கக்கூடிய உதாரணங்களை நான் இந்த அத்தியாயத்தில் அளிக்கமுடியவில்லை. அரசியல் துறையில், நடந்துள்ள அஹிம்சைச் சோதனையை நான் இதில் சேர்க்கவில்லை. அது பிரத்யேகமான தலைப்பின்[1] கீழ் விவரிக்கப்படும்.
[1] இந்த அத்தியாயம் எழுதப்படாமலே
இருந்துவிட்டது.
No comments:
Post a Comment