Pages

Monday, February 6, 2023

மஹாத்மா காந்தியின் 'ஆசிரம வாழ்க்கை' 5 | பிரார்த்தனையின் பொருளென்ன?


12—6—32.

பிரார்த்தனை என்பதற்கு யாசித்தல் அல்லது இரத்தல் என்பது மூலப் பொருளாகும். கடவுளிடமோ பெரியோரிடமோ பணிவுடன் வேண்டிக்கொள்ளுதலே பிரார்த்தனை. இங்கே இந்தப் பொருளில் பிரார்த்தனை என்ற சொல் கையாளப்படவில்லை. பிரார்த்தனை என்பதற்கு கடவுளைத் துதித்தல், பஜித்தல், பாடுதல், உபாஸித்தல், நல்லோருடன் சேர்ந்திருத்தல், தனித்திருந்து தியானித்தல், ஆத்ம சுத்தி ஆகியவையே இங்கே பொருள்களாகும்.

ஆனால் கடவுளென்பது யார்? அவர் நமது உடலுக்கோ, உலகத்திற்கோ புறத்தே இருந்துவரும் நபரல்ல. அவர் எங்கும் நிறைந்தும் எல்லாம் அறிந்தும் சர்வசக்தியும் பொருந்தியும் இருப்பவர். அவருக்கு ஸ்தோத்திரத்தின் அவசியமென்ன? எங்கும் இருந்துகொண்டு எல்லாவற்றையும் அவர் கேட்கிறார். நம்முடைய எண்ணங்கள் அவருக்குத் தெரியும். உறக்கக் கூவி அவர் காதில் நாம் எதை விழச்செய்யப்போகிறோம்? அவர் நம் உள்ளங்களிலேயே இருந்துவருகிறார். நகத்திற்கும் சதைக்கும் எவ்வளவு நெருக்கமுண்டோ அதைவிட அவர் நமக்கு நெருங்கியவர். இங்கே பிரார்த்தனையினால் என்ன ஆகும்?

இம்மாதிரியான சந்தேகங்கள் தோன்றுவதால் பிரார்த்தனை என்பதற்கு ஆத்ம சுத்தி என்றும் பொருள்கொள்ளப்பட்டிருக்கிறது. வாயினால் சொல்லி கடவுளுக்கு எதையும் தெரிவிக்கத் தேவையில்லை. சொல்லியோ, பாடியோ நமக்கே தான் நாம் அறிவுறுத்த வேண்டியிருக்கிறது. நம்மையேதான் உறக்கத்திலிருந்து எழுப்பிவிட வேண்டியிருக்கிறது. நம்மில் பலர் கடவுளை புத்திபூர்வமாக உணருகிறார்கள். பலருக்கு இவ்விஷயத்திலும் சங்கையிருக்கிறது. எவரும் கடவுளை கண்ணால் கண்டதில்லை. நாம் அவரை உள்ளத்தால் உணரவேண்டும், தரிசிக்கவேண்டும். அவருடன் ஒன்றிவிடவேண்டும். இதற்காகவே பிரார்த்தனை செய்கிறோம்.

நாம் காண விரும்பும் கடவுளே சத்தியம்; அல்லது சத்தியமே கடவுளென்றும் சொல்லலாம். சத்தியமென்பதற்கு உண்மையே பேசுதல் என்பது மட்டும் பொருளல்ல. இந்த உலகில் தன் உருவிலேயே எப்பொழுதுமே எது இருந்துவந்ததோ, இன்றுமிருக்கிறதோ, இனியும் இருக்குமோ, எதுவொன்றைத்தவிர வேறு எதுவுமே இல்லையோ, எது தன் சக்தியினாலேயே இருந்துவருகிறதோ, எதற்கு வேறு எந்த உதவியும் தேவையில்லையோ; ஏன், உலகத்தில் உள்ளவை அனைத்தும் எதன் ஆதரவினால் இருந்து வருகின்றனவோ, அதுவே சத்தியமெனப்படுவது. சத்தியமொன்றே என்றென்றும் இருப்பது; மற்றவையெல்லாம் ஒரு கணமிருந்து மறுகணத்தில் மரிப்பவை. அதற்கு எந்த உருவமும் தேவையில்லை. அதுவே சுத்த அறிவும், சுத்த ஆனந்தமுமாகும். அதை ஈச்வரன் என்கிறோம். ஏனெனில், அதன் சக்தியினாலேயே எல்லாம் நடக்கிறது. அதுவும் அதன் சட்டமும் ஒன்றாகையால் சட்டமும் அறிவுமயமானதே. இந்தச் சட்டத்தின் உதவியினால் எல்லாம் நடந்துவருகின்றன. இந்த சத்தியத்தை வழிபடுவதற்கே பிரார்த்தனை என்று பெயர்; அதாவது தாமும் சத்தியமயமாக ஆவதைத் தீவிரமாக விரும்புதல். இந்த விருப்பம் அல்லும் பகலும் 60 நாழிகையும் இருந்துவரவேண்டும். ஆனால் நமக்கு இவ்வளவு விழிப்பு ஏற்படாமையால் குறிப்பிட்ட சமயங்களில் மட்டும் பிரார்த்தனை, வழிபாடு அல்லது உபாஸனையைச்செய்துகொண்டே வந்து 60 நாழிகையும் சத்தியத்தை மறவாமல் இருந்துவரவேண்டியதே.

ஆசிரமம் இம்மாதிரியான பிரார்த்தனையை கைவரச்செய்ய விரும்புகிறது. இப்பொழுதோ அது அதிலிருந்து வெகு தொலைவிலேயே இருக்கிறது. மேலே கூறப்பட்டவை அனைத்தும் புற உபாயங்கள்; ஆனால் எந்த வகையிலேனும் பிரார்த்தனையை உள்ளத்தில் இறக்கும் கருத்து இருந்துவருகிறது. ஆசிரமத்தின் பிரார்த்தனை இதுவரையில் கவர்ச்சியுள்ளதாய் ஆகவில்லையென்றால், இன்றும் ஆசிரமவாசிகளை பிரார்த்தனைக்கு வரும்படி தூண்டவேண்டியிருக்கிறதென்றால், அதன் பொருள், நான் மேலே கூறிய வகையில் எங்களில் எவரிடத்திலும் பிரார்த்தனை அதன் உண்மை உருவில் இன்னும் இடம் பெற்றாகவில்லை என்பதே.

உள்ளத்தில் நன்கு இறங்கிய பிரார்த்தனையை ஒருவர் செய்யும்பொழுது அவர் மெய்மறந்த தசையில் இருப்பாராகையால் அப்பொழுது அவருக்கு வேறு எதன் நினைவோ உணர்ச்சியோ இராது. உண்மை பக்தன் விஷய போகத்தை விரும்புகிறவனை ஒத்தவனென்று சொல்லப்பட்டிருப்பது சரியே. போகத்தை விரும்புகிறவனுக்குத்தான் விரும்பும் போகப்பொருள் கிடைத்துவிடும்பொழுது அவன் தன்னையே மறந்து அந்தப் பொருளுடன் ஒன்றிவிடுகிறான். அவன் புலன்கள் அனைத்தையும் அதிலேயே செலுத்திவிடுவதால் அவனுக்கு வேறு எதுவும் தோன்றுவதேயில்லை. இதைவிட அதிகமான கலப்புணர்ச்சி உபாஸகனுக்கு இருக்கவேண்டும். இதை எவ்வளவோ முயன்று தவம் புரிந்து அடக்கத்தில் தேறிய பிறகு உரிய சமயத்திலேயே எய்தமுடியும். இத்தகைய பக்தன் இருக்குமிடத்தில் பிரார்த்தனைக்கு வாவென்று கூவி எவரையும் அழைக்கவே தேவையிராது. அவனுடைய பக்தியே எல்லோரையும் வலித்திழுத்து வரும்.

இதுவரையில் சமூகப் பிரார்த்தனையைப்பற்றி எழுதப்பட்டது. ஆனால் ஆசிரமத்தில் தனித்து சொந்தமாகச் செய்யப்படும் பிரார்த்தனையும் வற்புறுத்தப்படுகிறது. ஏகாந்தத்தில் பிரார்த்தனை செய்யாதவன் சமூகப் பிரார்த்தனையில் கலந்துகொண்டபோதிலும் அதனால் அவனுக்கு அதிக லாபமில்லை. சமுதாயத்திற்கு சமூகப் பிரார்த்தனை மிகவும் அவசியமாகும். ஆனால் தனிமனிதர்களின்றி சமூகம் ஏற்பட முடியாததைப் போல தனிப்பிரார்த்தனை இல்லாதபொழுது சமூகப் பிரார்த்தனையும் சாத்தியமில்லை. ஆகையால் ஆசிரமவாசி ஒவ்வொருவரும் உறக்கத்திலும் விழிப்பிலும் தனித்தே தம்முள் மனதைச் செலுத்தி தியானம் செய்தல் அவசியமென்று அடிக்கடி எச்சரிக்கப்படுகிறார். இதைச் செய்கிறார்களா இல்லையா என்று கண்காணிப்பதோ கணக்கு வைத்துக்கொள்வதோ சாத்தியமில்லை. ஆசிரமத்தில் இந்தப் பிரார்த்தனை எந்த அளவுக்கு நடக்கிறதென்று என்னால் சொல்ல முடியாது. எல்லோருமே இவ்வகையில் தம் தம் சக்திக்கு உகந்த வகையில் முயன்றுவருகிறார்களென்றே நான் நம்புகிறேன்.

***

மஹாத்மா காந்தியின் 'ஆசிரம வாழ்க்கை' 6 | அஹிம்சை

மஹாத்மா காந்தியின் 'ஆசிரம வாழ்க்கை' | தொகுப்பு

No comments:

Post a Comment