மஹாத்மா காந்தியின் 'ஆசிரம வாழ்க்கை' 3 | பிரார்த்தனை
7—5—32. (?)
காலைப் பிரார்த்தனையில் ‘ஆசிரம
பஜனாவளி’யில் அச்சிடப்பட்டுள்ள
சுலோகங்களும் ஒன்றிரண்டு பாட்டுகளும், நாமாவளியும், கீதை
பாராயணமும் நடக்கிறது. மாலையில் கீதை 2-வது அத்தியாயத்தின் இறுதி சுலோகங்கள் 19-ம் ஸ்தோத்திரப் பாட்டும், நாமாவளியும் நடப்பதோடு அநேகமாக ஏதாவது பாராயணமும்
செய்யப்படுவதுண்டு. ஆரம்பத்திலிருந்தே இப்படி இருந்ததில்லை. சுலோகங்கள் காகா சாகேப்
காலேல்கரினால் பொறுக்கப்பட்டவை. காகாசாகேப் ஆசிரமத்தில் ஆரம்பத்திலிருந்தே
சேர்ந்திருப்பவர். காகா சாகேபின் பழக்கத்தை மகன்லால் சாந்தி நிகேதனத்தில்
பெற்றார். நான் இங்கிலாந்திலிருந்தபொழுது மகன்லால் குழந்தைகளுடன் சாந்தி நிகேதனத்தில்
இருந்துவந்தார். தீனபந்து ஆண்ட்ரூஸும், காலஞ்சென்ற பியர்ஸனும் சாந்தி நிகேதனத்தில் இருந்துவந்தார்கள். ஆண்ட்ரூஸ்
தங்கச் சொல்லுமிடத்தில் தங்கும்படி நான் மகன்லாலுக்கு ஆலோசனை கூறியிருந்தேன்.
ஆண்ட்ரூஸ் சாந்தி நிகேதனத்தைத் தீர்மானித்தார். அந்தக் காலத்தில் காகா சாகேப்
சாந்தி நிகேதனத்தில் இருந்தார்; அங்கே அவர் ஆசிரியராக வேலை பார்த்துவந்தார். மகன்லாலுக்கும் காகா சாகேபுக்கும்
நெருங்கிய சம்பந்தம் ஏற்பட்டுவிட்டது. மகன்லாலுக்கு ஸம்ஸ்கிருதம் தெரிந்த
ஆசிரியரில்லாதிருப்பது ஒரு குறையாகத் தோன்றிக்கொண்டிருந்தது. அதை காகா சாகேப்
போக்கிவிட்டார். அதில் அங்கே இருந்த சிந்தாமணி சாஸ்திரியும் சேர்ந்துகொண்டார்.
காகா சாகேப் பிரார்த்தனையில் சுலோகங்களை சொல்லிக்கொடுத்துவந்தார். சாந்தி நிகேதனத்தில்
எல்லோருமே கற்றுக்கொண்ட சுலோகங்கள் இன்றுள்ளதைவிட அதிகமாகும். அவற்றில் சில
சுலோகங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக காகா சாகேபையும் கலந்துகொண்டு
அகற்றப்பட்டன. எஞ்சியுள்ளவைகளே இப்பொழுது வழங்குகின்றன. இவ்வாறு காலையில்
சொல்லப்படும் சுலோகங்கள் ஆசிரமத்தின் ஆரம்பகாலத்திலிருந்தே இன்றுவரையில் ஓதப்பட்டு
வருவதோடு இவை ஓதப்படாமல் ஒருநாள்கூட இருந்ததில்லையென்று சொல்லலாம்.
இந்த சுலோகங்களைக் குறித்து எவ்வளவோ விவாதங்கள் நடந்தன. ஒரு சமயம் நேரத்தை
மிச்சப்படுத்த வேண்டுமென்பதற்காகவும், இன்னொரு சமயம் இவற்றிலுள்ள சில சுலோகங்களை சத்தியத்தை வழிபடுவோன் ஓத முடியாது
என்று சொல்லியும் இன்னும் சில சமயங்களில் இந்த சுலோகங்களை ஹிந்துக்களைத் தவிர வேறு
எவரும் சொல்ல முடியாது என்ற காரணத்தினாலும் விவாதங்கள் நடந்திருக்கின்றன. இந்த
சுலோகங்களெல்லாம் ஹிந்து சமூகத்தில் மட்டுமே ஓதப்பட்டு வந்திருக்கின்றன என்பதில்
சந்தேகமில்லை. ஆனால் இவற்றை ஓதுவதனாலோ, ஓதப்படும்பொழுது இருந்துவருவதனாலோ வேறு மதத்தவருக்கு மனம் நோகும்படி செய்யக்கூடியது
எதுவும் இவற்றிலிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. இவற்றை காதால் கேட்ட முஸ்லிம்
நண்பர்களும் கிறிஸ்தவ நண்பர்களும் இவற்றை ஆட்சேபித்ததில்லை. அன்னிய மதங்களிடம்
மரியாதையுள்ளவர்களுக்கு இவற்றினால் மனம் நோகவும் கூடாது. மேலும், இங்கே அத்தகையவர்களைக் குறித்தே நாம் பேசக்கூடும்.
இந்த சுலோகங்களில் எவரையும் தூஷிப்பதாகவோ, அலட்சியம் செய்வதாகவோ எதுவும் காணவில்லை. ஆசிரமத்தில் ஹிந்து மதத்தைச்
சேர்ந்தவர்களே மிகவும் அதிகத் தொகையினராகையால் ஹிந்து மதத்தின் சுலோகங்களைத்தான்
பொறுக்க முடிந்திருக்கிறது. ஆனால் பிற மதங்களுடையது எதையும் பாடவோ, படிக்கவோ கூடாதென்ற விதியெதுவும் இல்லை. ஏன்,
பிரார்த்தனையில் சந்தர்ப்பம்
ஏற்படும்பொழுது இமாம் சாகேப் குரானின் ஆயத்துக்களை ஓதுவதுண்டு. இஸ்லாம்
ஸ்தோத்திரப் பாடல்களும் கஜல்களும் அடிக்கடி பாடப்பட்டுவந்திருக்கின்றன. கிறிஸ்தவ
மதப் பாடல்களின் விஷயத்திலும் இப்படியேதான் நடந்துவந்திருக்கிறது.
ஆனால் மிகுந்த பிடிவாதத்துடன் நடந்துவந்த எதிர்ப்பு சத்தியப் பற்றினால்
நடந்ததாகும். ஸரஸ்வதி, கணேசர்
முதலியோரை வழிபடுதல் சத்தியத்தை அழிப்பதாகும்; கமலாசனத்தில் வீற்றிருப்பவரும் கையில் வீணை
முதலியவைகளைத் தாங்கியிருப்பவருமான ஸரஸ்வதி என்ற பெயருள்ள தேவியே இல்லை; பருத்த தொந்தியும், துதிக்கையுமுள்ள கணேசர் என்ற தேவதையே கிடையாது. ஒரு
ஆசிரமவாசி மிகுந்த பணிவோடும், ஆனால் அதே அளவு அழுத்தமாகவும் இம்மாதிரியான கற்பிதமான தேவதைகளை வணங்குவதிலும்,
குழந்தைகளுக்கு போதிப்பதிலும்
சத்தியம் அழிக்கபப்படுகிறது என்று வாதித்தார். அவருக்கு மற்ற ஆசிரமவாசிகளின்
ஆதரவும் இருந்தது. இதுபற்றிய என் அபிப்பிராயத்தை நான் பின்வருமாறு தெரிவித்தேன்:
“நான் என்னை சத்தியத்தின் பக்தனென்று கருதுகிறேன். ஆயினும் எனக்கு இந்த
சுலோகங்களைச் சொல்வதனாலும், குழந்தைகளுக்கு
இவைகளைச் சொல்லிக்கொடுப்பதனாலும் என் நம்பிக்கை பாதிக்கப்படுவதாய்த் தோன்றவில்லை.
மேலே கூறியுள்ள வாதத்தின்படி ஆட்சேபகரமான சுலோகங்களையெல்லாம் அகற்றிவிடுவோமானால்
அவற்றில் அடங்கியுள்ள ஹிந்து மதத்தின் சாரமே தாக்கப்படும். ஹிந்து மதத்தில்,
எவ்வளவுதான் புராதனமாயிருந்தபோதிலும்
ஆட்சேபகரமாயுள்ளவைகளைத் தாக்கக் கூடாதென்று நான் சொல்லவில்லை. ஆனால் நான் இதை
ஹிந்து மதத்தின் பலஹீனமான அம்சமென்றோ, தாக்கத் தகுந்ததென்றோ கருதவில்லை. இதற்கு மாறாக ஹிந்து மதத்திலுள்ள இந்த
அம்சம் அதன் சிறப்பைக் குறிக்கிறதென்றே நான் நம்புகிறேன். நான் என்னைப்
பற்றியவரையில் ஸரஸ்வதி அல்லது கணேசர் என்ற தனி தேவதை எதையும் ஒப்பவில்லை. இந்த
வர்ணனைகளெல்லாம் அந்த ஒரே கடவுளின் ஸ்துதிகளேயன்றி வேறல்ல.
அவருக்குள்ள அனந்த குணங்களையே பக்த கவிகள் உருவகப்படுத்தியிருக்கிறார்கள்.
இதில் தவறெதுவுமில்லை. இத்தகைய சுலோகங்களில் தன்னையோ, பிறரையோ ஏமாற்றும் நோக்கம் எதுவும் இல்லை. உடலைத்
தாங்கியுள்ள மனிதன் கடவுளைத் துதிக்கத் தொடங்கும்பொழுது அவரை தனக்குப் பிரியமான
உருவத்தில் கற்பித்துக்கொள்கிறான். அவன் கற்பித்துக்கொண்ட இக் கடவுள் அவனைப்
பற்றியவரையில் இருக்கத்தான் செய்கிறார். நிர்க்குணரும், நிராகாரருமான கடவுளைத் துதிக்கும்பொழுது அவரிடம்
குணங்கள் ஏற்றப்பட்டுத்தான் போகின்றன. குணமும் ஒரு உருவமே. உண்மையில் கடவுளை
வர்ணிக்கவே முடியாது. அவர் வாக்குக்கு அப்பாற்பட்டவர். ஆனால் பாமர மனிதனிக்கு
அவரைப்பற்றிய கற்பனையே ஆதாரமாயிருக்கிறது. அதைக்கொண்டே அவன் கரையேறவும் அமுங்கவும்
செய்கிறான். கடவுளைக் குறித்து தூய நோக்கமும் நம்பிக்கையும் கொண்டு நீ எந்த
அடைமொழிகளை உபயோகிக்கிறாயோ அவை உனக்கு உண்மையானவையே. ஆனால் உண்மையில் அவரை
வர்ணிப்பதற்கு எந்த அடைமொழியும் போதுமானதல்லவாகையால் நாம் கூறுபவை பொய்யுமாகும்.
என் அறிவுக்கு இந்த விஷயம் தெளிவாயிருக்கிறது. ஆயினும் அவருடைய குணங்களை
வர்ணிக்காமலும் அவரைக் குறித்து தியானம் செய்யாமலும் என்னால் இருக்கமுடியாது. என்
அறிவு சொல்வது என் உள்ளத்தில் புகுவதேயில்லை. என்னுடைய பலமற்ற உள்ளத்திற்கு
குணங்களுள்ள கடவுளின் ஆதரவு தேவையாகவே இருக்கிறதென்பதை ஒப்புக்கொள்ள நான்
சித்தமாயிருக்கிறேன். நான் கடந்த 15 வருஷங்களாக எந்த சுலோகங்களை ஓதிவந்ததனால்
எனக்கு சாந்தி கிடைத்துவந்திருக்கிறதோ அவை எனக்கு உண்மையானவை என்றே கருதுகிறேன்.
அவற்றில் எனக்கு அழகும், கவிதையின்
இனிப்பும் அமைதி தரும் குணமும் இருப்பது தெரிகிறது. ஸரஸ்வதியையும் விநாயகரையும்
குறித்து வித்துவான்கள் எவ்வளவோ கதைகள் சொல்லுகிறார்கள். அவையெல்லாம் வீணல்ல.
அவற்றிலுள்ள ரகஸ்யம் எனக்குத் தெரியாது. அவைகளை நான் ஆழ்ந்து ஆராய்ந்ததுமில்லை.
என் மன அமைதிக்கு அந்த ஆராய்ச்சி தேவையென்றும் எனக்குத் தோன்றவில்லை. ஆகையால் என்
அஞ்ஞானமே என்னைக் காப்பாற்றி வருகிறதோ என்னவோ. சத்திய சோதனை செய்துவந்த எனக்கு
இவ்விஷயத்தில் ஆராய்ச்சி செய்யவேண்டிய அவசியமே தோன்றவில்லை. என் கடவுளை நான் அறிவேன்.
அவரை நான் இன்னும் அடைந்துவிடவில்லை. ஆனால் நான் அவரை நோக்கிப்
போய்க்கொண்டிருக்கிறேன் என்பதே எனக்குப் போதுமானது.”
இத்தகைய வாதத்தினால் தோழர்களுக்கு திருப்தி ஏற்பட்டுவிட வேண்டுமென்று நான்
பிடிவாதம் செய்வதற்கில்லை. இதனால் யாருக்கு எவ்வளவு சமாதானம் ஏற்பட்டதென்பது
எனக்குத் தெரியாது. இது விஷயமாக ஒரு சமயம் ஒரு சமிதி நியமிக்கப்பட்டது.
திருப்தியாகும் வரையில் விவாதம் நடத்திய பிறகு எந்த வகையில் பொறுக்கியபோதிலும்
எவரேனும் ஒருவருக்கு அதில் ஏதேனும் குற்றம் தோன்றத்தான் செய்யுமாகையால் இப்பொழுது
இருப்பவை அப்படியே இருக்கவேண்டியதே என்று முடிவாயிற்று. அந்த சுலோகங்களுக்கு
எல்லோரும் அவரவருக்குத் தோன்றிய வகையில் பொருள் கற்பித்துக்கொள்ளட்டும். நான் மேலே
விவரித்துள்ளவையெல்லாம் ஒரே சமயத்தில் நிகழ்ந்தவையல்ல. வெவ்வேறு சமயங்களில்
வெவ்வேறு விதமான எதிர்ப்புகள் தோன்றின. நான் அவை ‘அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துத்
தந்திருக்கிறேன்.
சுலோகங்களோடுகூட பாட்டுகளும் பாடப்பட்டுவந்தன. தென்னாப்பிரிக்காவில்
பாடல்களைக்கொண்டே பிரார்த்தனை ஆரம்பமாயிற்று. சுலோகங்கள் இந்தியாவுக்கு வந்தபிறகு
சேர்க்கப்பட்டன. பாட்டுகளைப் பாடுவதிலும், பாடச் செய்வதிலும் மகன்லாலே முக்கியஸ்தராயிருந்தார். இது எங்கள் இருவருக்குமே
திருப்தியளிக்கவில்லை. எதைச் செய்தாலும் நன்றாக, அதாவது உரிய முறையில் செய்ய வேண்டுமென்ற
ஆசையிருந்தது. ஆகையால், சங்கீத
வித்வான் ஒருவர் கிடைப்பாரானால் அவரிடம் எல்லோரும் கற்றுக்கொண்டு பாட்டுகளை
அனுபவித்துப் பாடலாமே என்று நினைத்தோம். பஜனையில் எல்லோரும் ஒரே ஸ்வரத்தில்
பாடவில்லையென்றால், அதில் மனத்தைச் செலுத்துதல் அசாத்தியமில்லையென்றாலும்
சிரமமானதே. ஆனால் வரும் சங்கீத வித்வான் ஆசிரமத்தின் விதிகளை அனுசரித்து நடப்பவராய்
இருக்கவேண்டும். இத்தகைய ஒருவர் கிடைப்பது அரிதென்று தோன்றிற்று. தேடிக்கொண்டே இருந்தபொழுது
மகன்லாலுக்கு காலஞ்சென்ற சங்கீத ஆசாரியர், விஷ்ணு திகம்பரர் தமது பிரமத சிஷ்யரான நாராயணன் கரேயை அன்புடன் உதவினார். அவர்
ஆசிரமத்தின் நோக்கப்படி பூர்ண திருப்தி அளித்துவந்ததோடு இப்பொழுது ஆசிரமத்தின்
சம்பூர்ண அங்கத்தினராகவே இருந்துவருகிறார். அவர் பாட்டுகளில் ரஸத்தைப் பொழிந்ததோடு
இன்று ஆயிரக்கணக்காணவர்கள் படிக்கும் ‘ஆசிரம பஜனாவளி’ பெரும்பாலும் அவருடைய சிருஷ்டியே ஆகும்.
பாடல்களோடு அவர் நாமாவளி சொல்வதையும் பழக்கத்திற்குக் கொண்டுவந்தார்.
இன்னும் பிரார்த்தனையில் நாலாம் பகுதியொன்று பாக்கி இருக்கிறது. அது கீதை
பாராயணமாகும். அவ்வப்பொழுது கீதை படிக்கப்பட்டுதான் வந்தது. எத்தனையோ வருஷங்களாக
ஆசிரமவாசிகள் தங்களுடைய நடத்தைக்கும் கருத்துகளுக்கும் கீதையையே ஆதார நூலாகக்
கருதிவந்திருக்கிறார்கள். ஏதேனும் ஒரு காரியம் அல்லது கருத்து தூயதா அல்லவா என்று
பார்க்கவேண்டுமானால் பாஷை கற்கும் மாணவன் எழுத்தையோ பொருளையோ அறிவதற்கு அகராதியைப்
பார்ப்பது போல ஆசிரமம் கீதையையே பார்த்துவந்திருக்கிறது. இந்த கீதையின் பொருளை
ஒவ்வொரு ஆசிரமவாசியும் தெரிந்துகொண்டிருத்தல் நலம். கீதை முழுதும் எல்லோருக்கும்
மனப்பாடமாயிருத்தல் இன்னும் நல்லது; இதில்லாவிட்டால் கீதையின் மூலத்தை சுத்த உச்சரிப்புடன் படிக்கத் தெரிந்தாலும்
சரியே என்ற இவ்வகையான கருத்துடன் பிரதி தினமும் கீதை பாராயணம் தொடங்கப்பட்டது.
முதலில் சில சுலோகங்கள் படிக்கப்படும். அவை பாடமாகும்வரையில் அவைகளே ஒவ்வொரு நாளும் படிக்கப்பட்டுவரும். இவ்வாறு
செய்ததிலிருந்து கீதைப் பாராயணம் வழக்கத்திற்கு வந்தது. இப்பொழுதோ 14 நாட்களில்
கீதை முழுமையும் ஒருமுறை படித்தாகும் வகையில் கீதையின் அத்தியாயங்கள் பாகுபாடு
செய்யப்பட்டிருக்கின்றன. இவ்வாறு ஒவ்வொரு ஆசிரமவாசியும் என்று எந்த சுலோகங்கள்
படிக்கப்படவேண்டும் என்று அறியமுடிகிறது. பிரதி இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று கீதையின்
முதல் அத்தியாயம் ஆரம்பிக்கப்படுகிறது. இது எழுதப்படும் நாளுக்கு அடுத்த வெள்ளியன்று
(10-6-1932) முதல் அத்தியாயம் ஆரம்பிக்கப்படும். 18 அத்தியாயங்களையும் 14
நாட்களில் படித்துவிடும் பொருட்டு 7+8, 12+13, 14+15, 16+17 என்ற அத்தியாயங்கள் ஒரே நாளில்
சேர்த்துப் படிக்கப்படுகின்றன.
மாலைப் பிரார்த்தனையில் பாடல்கள், நாமாவளி ஆகியவற்றைத் தவிர கீதை 2-வது அத்தியாயத்தின் இறுதி சுலோகங்கள் 19-ம் சொல்லப்படுவதுண்டென்று நான் ஏற்கெனவே கூறியிருக்கிறேன்.
இந்த சுலோகங்களில் ‘ஸ்திதப்பிரக்ஞ’னுடைய லக்ஷணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.
சத்தியாக்ரஹியின் லக்ஷணங்களும் இப்படியேதான் இருக்கவேண்டும். ஸ்திதப்பிரக்ஞன்
சாதிப்பதையே சத்தியாக்ரஹியும் சாதித்தாக வேண்டும். இது எப்பொழுதும் நினைவிலிருக்க
வேண்டி இந்த சுலோகங்கள் ஓதப்படுகின்றன.
ஒவ்வொரு நாளும் ஒரே பிரார்த்தனையைச்
செய்துவரும் விஷயத்தில் அது யந்திரவத்தாகத் ‘திரும்பத் திரும்ப சொல்’லப்பட்டுவருவதனால்
பயனில்லாமல் போகிறதென்று ஒரு ஆட்சேபனை எழுப்பப்பட்டிருக்கிறது. பிரார்த்தனை யந்திர
இயக்கம் போல் ஆகிவிடுகிறதென்பது உண்மையே. நாமே யந்திரங்கள்தாம். நாம் கடவுளை
யந்திரத்தை ஓட்டுகிறவரென்று கருதுகிறோமென்றால், நாம் யந்திரத்தைப் போல் இயங்கவேண்டியவர்களே. சூரியன்
முதலியவை தம் வேலைகளை யந்திரங்களைப் போல் செய்துவரவில்லை என்றால் இந்த உலகம் ஒருகணம்கூட
நடைபெறாது. ஆனால் யந்திரம் போல் செய்தலென்பதற்கு அறிவைப் பயன்படுத்தாது
மூடத்தனமாய்ச் செய்தல் என்று பொருள் கொள்ளக்கூடாது. நாம் அறிவு படைத்தவர்கள்;
அறிவு படைத்தவர்களுக்கு அழகு
அளிக்கக்கூடிய வகையில் அறிவுள்ள யந்திரங்களைப் போல் காரியங்களைச் செய்துவர
வேண்டும். பிரார்த்தனை ஒன்றே இருக்கவேண்டுமா, பலவா என்பது இரு கேள்விகளல்ல. பல பிரார்த்தனைகள்
இருந்தும் அவைகளினால் பயனில்லாதிருப்பது சாத்தியமே. ஹிந்துக்களுடைய அந்த ஒரே
காயத்திரியையும், முஸல்மான்களின்
அதே கல்மாவையும், கிறிஸ்தவர்களின்
அதே பிரார்த்தனையையும் இந்த மதங்களிலுள்ள லட்சக்கணக்கானவர்கள் எத்தனையோ
நூற்றாண்டுகளாக தினமும் ஓதிக்கொண்டு வருகிறார்கள். ஆனால், இதனால் அவைகளின் சக்தி வளர்ந்திருக்கிறதே தவிர
மங்கவில்லை. அவற்றுடன் மனிதனுடைய உணர்ச்சியும் சேருமானால் அவற்றின் சக்தி மேலும்
பெருகும். அதே காயத்திரியையும் கல்மாவையும் கிறிஸ்தவ பிரார்த்தனையையும் ஒரு நாஸ்திகனோ,
அல்லது ஒரு கிளியோ ஓதும்பொழுது
அவற்றினால் சிறிதும் பயன் விளையாது. ஆனால் அவைகளையே ஆஸ்திகன் ஒருவன் பிரதி தினமும்
ஓதிவருவனானால் அவற்றின் அழகிய சக்தி நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே போகும். நமது
முக்கியமான உணவு ஒவ்வொரு நாளும் ஒன்றாகவேதான் இருக்கிறது. கோதுமை
சாப்பிடுகிறவர்கள் மற்றப் பண்டங்களையும் உடன் சாப்பிட்டுவந்தபோதிலும் வியஞ்சனங்களை
மாற்றி மாற்றி உட்கொண்டபோதிலும் கோதுமை ரொட்டியை மட்டும் ஒவ்வொரு நாளும்
சாப்பிடத்தான் செய்வார்கள். இதனால் அவர்களுடைய உடல் வளருவதால் அவர்களுக்கு இதில்
திகட்டலே தோன்றாது. திகட்டல் தோன்றும்பொழுது உடலின் முடிவு அருகிலிருப்பதாகக்
கருதலாம். இதுவே பிராத்தனைக்கும் பொருந்தும். முக்கியமான பிரார்த்தனை
ஒன்றாகவேதானிருக்கும். ஆத்மாவுக்கு அதன் தேவையிருக்குமானால் அது ஒரே பிரார்த்தனையினால்
திகட்டல் உறுவதற்கு பதிலாக உறுதியே பெறும். பிரார்த்தனை நடைபெறாத தினத்தில் அதற்கு
அந்தப் பசி இருந்துவரும். உபவாஸமிருப்பதைவிட பிரார்த்தனையின்றி இருப்பது அதிக
பலஹீனத்தையளிக்கும். உடலுக்கு ஏதேனும் ஒருநாள் உபவாஸமிருப்பது அவசியமாகிறது;
ஆனால் ஆத்மாவுக்குப்
பிரார்த்தனையினால் அஜீரணம் ஏற்பட்டதாகக் கேட்டதேயில்லை.
உண்மை விஷயம் இதுவே. நம்மில் பலர் ஆத்ம தாகம்
இல்லாமலே பிரார்த்தனை செய்கிறோம். ஆத்மா உண்டு என்று நம்புவது ஒரு ‘பாஷனா’கவும்,
வழக்கமாகவும் இருப்பதாகச் சொல்லிக்கொள்ளுகிறோம்.
இம் மாதிரியான கொடிய நிலைமையில் பலர் இருந்துவருகிறார்கள். பலருக்கு ஆத்மா உண்டு
என்பதை அவர்களுடைய அறிவே முடிவுசெய்துவிடுவதால் இந்த முடிவு அவர்களின் உள்ளங்களைத்
தொடுவதில்லை. இதனால் அவர்களுக்குப் பிரார்த்தனையே அவசியமாயிருப்பதில்லை. இன்னும்
பலர் சமூகத்தில் பலர் செய்வதை நாமும் செய்யவேண்டியதே என்ற எண்ணத்தினால்
பிரார்த்தனையில் கலந்துகொள்ளுகிறார்கள். இத்தகையவர்களுக்குப் பிரார்த்தனையை
பலவகையில் மாற்றுதல் அவசியமென்று தோன்றுகிறது. ஆனால் உண்மையில் இவர்கள்
பிரார்த்தனையில் கலந்துகொள்வதற்காக வருவதில்லை. சங்கீதம் கேட்கவும், வேடிக்கை பார்க்கவும், பேசுவதைக் கேட்கவுமே வருகிறார்களே தவிர
கடவுளுடன் ஒன்றுவதற்காக அல்ல.
[1] 14 நாளில் பூர்த்தி செய்வதென்ற முறையும் பிறகு
மாறிவிட்டது. ‘கீதை விஷய அகராதி’ என்ற புஸ்தகத்தின் முன்னுரையில் காந்திஜி
பின்வருமாறு எழுதியிருக்கிறார். ‘...ஒரு நாளைக்கு ஒரு சுலோகம், பிறகு 2, பிறகு 5, பிறகு ஒரு நாளைக்கு ஒரு அத்தியாயம் என்று ஓதிவந்து பிறகு 14 நாளில் பூர்த்தியாகப் பாராயணம் செய்யப்பட்டுவந்தது.
கடைசியில் சில வருஷங்களாக எங்களில் சிலர் ஏழே நாளில் பாராயணம் செய்து பூர்த்தி
செய்யும் நிலைமைக்கு வந்திருக்கிறோம். அந்தந்தக் கிழமைகளில் அதற்குரிய அத்தியாயங்களின்
ஒலி காலை 4½ மணிக்கு அக்கம்
பக்கங்களில் கேட்கிறது. சிலர் - மிகவும் குறைவானவர்கள் - 18 அத்தியாயங்களையும் மனப்பாடம் செய்திருக்கிறார்கள்.
கிழமைகள் வாரியாக பின்வரும் முறையில் அத்தியாயங்கள் பகுக்கப்பட்டிருக்கின்றன:
வெள்ளி 1-2; சனி 3, 4, 5; ஞாயிறு 6, 7, 8; திங்கள் 9, 10, 11, 12; செவ்வாய் 13,
14, 15; புதன் 16, 17; வியாழன் 18.
இவ்வாறு பாகுபாடு செய்ததற்கு இதிலடங்கியுள்ள
ஒரு விசேஷக் கருத்து காரணமாகுமென்று இங்கே சொன்னால் போதும். இவ்வாறு ஓதி
சிந்திப்பது மிகவும் சௌகரியமாயிருக்கிறதென்று அனுபவத்தில் தெரியவந்திருக்கிறது.
வெள்ளிக்கிழமை ஏன் கீதை பாராயணம்
தொடங்கப்பட்டதென்ற கேள்வி எழக்கூடும். இதற்குக் காரணம் 14 தினங்களில் பூர்த்தி
செய்வதில் மிகவும் அதிகக் காலம் ஆகிவந்ததே. எரவாடா சிறையில் ஏழே நாளில்
பூர்த்திசெய்ய வேண்டுமென்ற எண்ணம் எனக்குத் தோன்ற அதன்படி ஒரு வெள்ளிக்கிழமையன்று
ஆரம்பிக்கப்பட்டது. ஆகையால் அதுமுதல் பாராயண வாரம் வெள்ளிக்கிழமையிலிருந்தே
ஆரம்பமாகிவருகிறது.
இங்கே பாராயணம் தேவையென்று கூறப்பட்டிருப்பதற்கு
இரு காரணங்களுண்டு. ஒன்று கீதை - பக்தியானது நம்முள் எத்தனை பேரை எந்த அளவுக்கு
அழைத்தேகியிருக்கிறது என்பதைக் காட்டுவதாயிருக்க, மற்றொன்றோ ஓதுகிறவர்களுக்கு பயிற்சி செய்துகொள்வதில்
உற்சாகம் உண்டாக்குவதற்கு வழியைக் கூறுதலாகும்” (24-9-36).
No comments:
Post a Comment