மஹாத்மா காந்தியின் 'ஆசிரம வாழ்க்கை' 2 | சத்தியம்
26-4-32. (?)
சத்தியத்தில் உறுதி ஆசிரமத்தின் வேரிலேயே இருப்பதென்றால் பிரார்த்தனை
அந்த வேரின் முக்கிய ஆதாரமாகும். ஆசிரமம் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்தே
பிரார்த்தனையுடனேயே ஆசிரமத்தின் தினசரி வேலை ஆரம்பிக்கப்பட்டு பிரார்த்தனையுடனேயே
முடிக்கப்பட்டு வந்திருக்கிறது. நான் அறிந்து பிரார்த்தனை இல்லாமல் ஒருநாள்கூடக்
கழிந்ததில்லை. பிரார்த்தனை ஸ்தலத்தில் மழை அல்லது இதைப்போன்ற ஏதோ ஒரு காரணத்தினால்
ஒரே ஒரு பொறுப்புள்ள மனிதர் மட்டும் வந்திருந்த சந்தர்ப்பங்கள் எனக்கு நினைவிருக்கின்றன.
ஆரம்பத்திலிருந்தே நோயில்லாத, நோயைப் போன்ற வேறு பலமான காரணமெதுவும் இல்லாத எல்லா சுய அறிவுள்ள மனிதர்களும்
பிரார்த்தனையில் கலந்துகொள்ள வேண்டுமென்பதே விதியாய் இருந்துவந்திருக்கிறது.
மாலைப் பிரார்த்தனையின் சமயத்தில் இந்த விதியின் நிர்ப்பந்தம் பூர்ணமாக
ஒப்புக்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் காலைப் பிரார்த்தனையின் விஷயத்திலும் இவ்வாறே
இருந்துவந்ததாகச் சொல்வதற்கில்லை.
காலை பிரார்த்தனையின் நேரம் ஆரம்பத்தில் இதுதானென்று நிர்ணயமாகவில்லை. அதுபற்றி
நான் சோதனைகள் செய்தேன். 4 மணிக்கும்
5, 6, 7 மணிக்கும்கூட பிரார்த்தனை
செய்துபார்க்கப்பட்டது. ஆனால் பல சமயங்களிலும் நான் வற்புறுத்திவந்ததன் காரணமாக 4.10 அல்லது 4.20 என்ற சமயமே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதாவது
தூங்கி விழிக்கும் மணி 4-க்கு அடிக்கப்பட அதன்பிறகு கைகால் கழுவி பல் துலக்கிவிட்டு
4.20-க்குள் எல்லோரும் வந்து சேர்ந்துவிட வேண்டும்.
27-4-32. 4-6-32.
இந்தியாவைப் போன்ற சமசீதோஷ்ண பிரதேசத்தில் மனிதர்கள் எவ்வளவு சீக்கிரம்
எழுந்திருக்கிறார்களோ, அவ்வளவுக்கு
நல்லதென்று நான் நம்புகிறேன். கோடிக்கணக்கான மனிதர்கள் சீக்கிரமாகவே எழவேண்டியிருக்கிறது.
விவசாயி நேரந்தாழ்த்தி எழுவானானால் அவனுடைய விவசாயம் கெட்டுப்போகும். ஆடுமாடுகளை
அதிகாலையில் எழுந்தே பராமரிக்க வேண்டியிருக்கிறது. பசுவும் அதிகாலையிலேதான்
கறக்கப்படுகிறது. எந்த நாட்டில் இவ்வாறெல்லாம் நடக்கிறதோ அங்கே சத்தியத்தைத்
தேடுவோரும் மோக்ஷத்தைக் கோருவோரும் ஊழியரும் துறவிகளும் காலை 2, 3 மணிக்கு எழுவார்களானால் அவர்கள் ஏதோ பெரிய
காரியம் செய்துவிடுவதாகச் சொல்வதற்கில்லை. அவர்கள் எழாதிருப்பதே
வியப்புக்குரியதாகக்கூடும். எல்லா நாடுகளிலுமே தர்மத்தைக் கடைபிடிப்போரும்
கடவுளின் பக்தரும் எளிய விவசாயிகளும் விரைவில்தான் எழுகிறார்கள். பக்தர்கள்
கடவுளுடைய தியானத்தில் ஆழ்ந்துவிட, விவசாயிகள் தம் வயல் வேலைகளை கவனித்துத் தமக்கும், உலகத்திற்கும் சேவை செய்கிறார்கள். இருவரும் பக்தர்
என்பதே என் அபிப்பிராயம். முன்னவர் அறிந்தே பக்தி புரிய, விவசாயிகள் அறியாமலே தம் உழைப்பின் மூலமாக கடவுளை
வழிபடுகிறார்கள். ஏனெனில், உலகம்
அவர்களை அண்டியே வாழ்ந்துவருகிறது. அவர்கள் உழைப்பை விடுத்து தியானத்தில் அமர்ந்துவிடுவார்களானால்
தம் கடமையில் தவறியவர்களாகித் தாமும் அழிந்து, உலகத்தையும் அழித்தவராவார்கள்.
ஆனால், விவசாயியை நாம்
பக்தனென்று கொண்டாலும் சரி, கொள்ளாவிட்டாலும்
சரி விவசாயிகளும் தொழிலாளரும் மற்ற ஏழை எளியோரும் விரும்பியோ விரும்பாமலோ
அதிகாலையில் எழவேண்டியிருக்கையில்; எவன் சேவையையே தன் கடமையாகக் கொண்டு சத்திய நாராயணனை வழிபடுகிறானோ அவன்
எப்படித் தூங்கிக்கொண்டிருப்பது? மேலும், ஆசிரமத்திலோ சக்தி,
சேவை ஆகியவற்றிற்காக உத்தியோகத்தைப்
பொருத்த முயற்சி நடந்துவருகிறது. ஆகையால், எவ்வளவுதான் இடையூறுகள் இருந்துவந்தபோதிலும் ஆசிரமத்தில் சக்தி
உள்ளவர்களெல்லோரும் விரைவில் எழுந்துதானாகவேண்டும். இது எனக்கு எப்பொழுதுமே
விளக்கைப் போலத் தெளிவாகத் தெரிந்துவந்திருப்பதால், நான் 4 மணிக்கு எழுந்திருப்பதென்பதை விரைவில் எழுவதென்று
கருதாமல், எவ்வளவு முடியுமோ அவ்வளவு தாமதமாக எழுவதென்றே கருதியிருக்கிறேன்.
எவ்வளவோ சோதனைகளுக்குப் பிறகு, இப்பொழுது பல வருஷங்களாக காலையில் எழும் மணி 4 மணிக்கு அடிக்கப்பட்டு 4-10 அல்லது 4-20-க்குப் பிரார்த்தனை ஆரம்பமாகிறது.
5-6-32.
பிரார்த்தனையை எங்கே செய்வது? கோயில் ஒன்றை அமைத்தா, அல்லது
வெளியே ஆகாசத்தின் கீழேயா? அங்கும்
மேடையொன்று அமைத்துக்கொள்ளலாமா, அல்லது மணல் அல்லது மண்தரையே இருக்கலாமா? ஏதேனும் விக்கிரகம் ஒன்றை பிரதிஷ்டை செய்யலாமா
வேண்டாமா? - என்ற கேள்விகளும் முடிவு செய்யவேண்டியவையாகவே
இருந்தன. இறுதியில் ஆகாசத்தினடியில் மண் அல்லது மணல் தரையில் உட்கார்ந்து விக்கிரகமெதுவும்
இல்லாமல் பிரார்த்தனை செய்வதென்று முடிவாயிற்று. ஆசிரமத்தின் நோக்கம் எளிய
வாழ்க்கை நடத்தி பட்டினியால் வாடும் கோடிக்கணக்கானவர்களுக்கு சேவை செய்வதாகும்.
ஆசிரமத்தில் பரம தரித்திரனுக்கும் இடமுண்டு. விதிகளுக்கு உட்பட்டு நடக்க
ஒப்பக்கூடியவர் அனைவரும் ஆசிரமத்தில் சேரலாமென்று சொல்லலாம். இத்தகைய ஆசிரமத்தில்
பிரார்த்தனை செய்யப்படும் கோயில் கல்லும் சுண்ணாம்பும் கொண்டு எழுப்பப்பட்ட
கட்டடமாயிருக்க முடியாது. அதற்கு ஆகாசம் கூரையாகவும், திசைகள் தூண்கள் - சுவர்களாகவும் இருந்தாலே போதும்.
மேடை அமைக்கலாமென்று இருந்த எண்ணமும் விடப்பட்டது. தொகையை நிர்ணயிக்க முடியாமலிருக்கையில்
மேடையின் அளவைத் தீர்மானிப்பதெப்படி? மிகவும் பெரிய மேடை அமைப்பதென்றால் செலவு அதிகமாகும். கட்டடமோ, மேடையோ அமைக்காதிருப்பதே சரியென்று
அனுபவத்தில் தெரியவந்தது. ஆசிரமத்திற்கு வெளியே உள்ள ஜனங்களும் பிரார்த்தனைக்கு
வரலாம். இதனால் ஜனக்கூட்டம் மிகவும் அதிகமாகிவிடும்பொழுது எவ்வளவுதான் பெரிய
மேடையாய் இருந்தபோதிலும் சில சமயங்களில் பற்றாமல் போவதற்கு இடமுண்டு.
மேலும், வர வர ஆசிரமப்
பிரார்த்தனையை அனுசரித்துப் பலவிடங்களிலும் பிரார்த்தனை செய்யப்பட்டுவருவதால்,
ஆகாசக் கோயிலே சரியென்று முடிவாகியிருக்கிறது.
நான் போகுமிடங்களிலெல்லாம் காலையிலும் மாலையிலும் பிரார்த்தனை நடக்கிறது. அதிலும்
மாலைப் பிரார்த்தனைக்கு வரும் கூட்டத்தை திறந்த வெளிகளிலேயே கூட்ட முடியும்.
எனக்குக் கோயில்களிலேயே பிரார்த்தனை செய்யும் பழக்கம் ஏற்பட்டிருக்குமானால்
யாத்திரையில் பொதுஜனப் பிரார்த்தனை செய்யும் எண்ணமே தோன்றியிருப்பதற்கில்லை.
மேலும், ஆசிரமத்தில் எல்லா
மதங்களுக்கும் சமமான மதிப்பளிக்கப்படுகிறது; எல்லா மதத்தவரும் சேர்ந்துகொள்வதற்கு அனுமதியுண்டு.
அவர்களில் விக்கிரக ஆராதனையை ஒப்புக்கொள்கிறவர்களும் இருக்கலாம், ஒப்புக்கொள்ளாதவர்களும் இருக்கக்கூடும்.
எவருடைய மனமும் புண்படக் கூடாதென்ற எண்ணத்தினால் ஆசிரமத்தின் சமூகப்
பிரார்த்தனையில் விக்கிரகம் எதுவும் வைக்கப்படுவதில்லை. தம் அறையில் வைத்துக்கொள்ள
விரும்புகிறவரைத் தடுப்பதுமில்லை.
***
மஹாத்மா காந்தியின் 'ஆசிரம வாழ்க்கை' 4 | பிரார்த்தனையில் நடப்பதென்ன?
No comments:
Post a Comment