மஹாத்மா காந்தியின் 'ஆசிரம வாழ்க்கை' 1 | மேனோக்கு
ஆசிரமத்தில் பொய் பேசப்பட்ட பொழுதெல்லாம் அதை ஒரு கொடிய நோயாகக் கருதிப்
போக்குவதற்குக் கடுமையான உபாயங்கள் கையாளப்பட்டன. ஆசிரமத்தில் குற்றம் செய்தவர்களை
தண்டிப்பதென்ற முறை சிறிதும் அனுசரிக்கப்பட்டதில்லை. ஏன்? குற்றம் செய்தவர்களை ஆசிரமத்திலிருந்து விலக்கிவிடுவதிலும்
தயக்கமே இருந்துவந்தது. குற்றமே நடைபெறாதிருக்க மூன்று உபாயங்கள் செய்யப்பட்டு
வந்தன; செய்யப்பட்டு வருகின்றன.
முதலாவது, முக்கியமான
ஊழியர்கள் தம்மையே சுத்தி செய்துகொள்வதாகும். இதற்குக் காரணமாயிருந்த கருத்து,
ஊழியரிடம் குறையெதுவுமில்லையென்றால் அவருடைய அக்கம்பக்கத்திலும் எல்லாம்
சுத்தமாகவேதான் இருக்குமென்பது. சூரியனுக்கு முன்னால் இருளினால் நிற்க
முடியாதிருப்பதைப் போல சத்தியத்தின் எதிரில் அசத்தியமும் நிற்காது.
இரண்டாவது உபாயம், நடந்த
தவறை வெளியிட்டுவிடுவதாகும். எவரேனும் பொய்யான முறையில் நடந்துகொண்டதாகத்
தெரியவருமானால் அதை எல்லோர் முன்னிலையிலும் வெளியிட்டுவிடுதல் வழக்கம். இந்த உபாயத்தைப்
பகுத்தறிவோடு கையாளும்பொழுது இதற்கு நல்ல பயன் விளைகிறது. இதில் இரண்டு
விஷயங்களில் எச்சரிக்கையாயிருக்க வேண்டும்: ஒன்று, குற்றம் செய்தவன் எல்லோருக்கும் முன்னிலையில் தன்
குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி தன்னை ஏதோ நிர்ப்பந்தம் செய்வதாக எண்ணுவதற்குச்
சிறிதும் இடமிருக்கக் கூடாது. இரண்டாவதாக, குற்றத்தை வெளியிட்டதனால் குற்றம் செய்தவனுக்கு அதைக் குறித்து பிறகு வெட்கமே
தோன்றாமலும் இருந்துவிட வசதியளிக்கக் கூடாது. குற்றம் வெளியானவுடனே பாபம் நீங்கிவிட்டது
என்ற எண்ணம் தோன்றிவிடுமானால் குற்றம் செய்வதில் வெட்கமே பெரும்பாலும் இல்லாமற்
போய்விடும். மிகச் சிறிய பொய்யும், கொடிய நோயே என்ற எண்ணம் எப்பொழுதும் இருந்து வரவேண்டும்.
25—4—32.
மூன்றாவது உபாயம், பிரதான
ஊழியரும் குற்றம் செய்தவரும் பிராயச்சித்தமாக உபவாஸம் செய்வதாகும். குற்றம்
செய்தவர் உபவாஸம் செய்வதோ, செய்யாமலிருப்பதோ
அவர் இஷ்டத்தைப் பொறுத்தது. பிரதான ஊழியரோ, தெரிந்தோ தெரியாமலோ தம் ஸ்தாபனத்தில் நடக்கும்
குற்றத்திற்குப் பொறுப்பாளியாவார். அசத்தியம் விஷக்காற்றைவிட அதிகத் தீமை
செய்வதும் சூட்சுமமானதுமாகும். பிரதான புருஷர் பாரமார்த்திக நோக்கமுள்ளவராயும்,
விழிப்புடனும் இருக்குமிடத்தில் இந்த
நுண்ணிய விஷம் புகுவதற்கில்லை. புகுவது தெரியுமானால் நிர்வாகி இதை தமக்கெனத்
தோன்றியுள்ள எச்சரிக்கையாகக் கொள்ளவேண்டும். இந்த விஷம் புகுந்ததற்குத் தாமும் ஏதோ
ஒரு வகையில் பொறுப்பாளியே என்று அவர் உணரவேண்டும். பௌதிக சாஸ்திரத்தில்
குறிப்பிட்ட பொருள்களைக் கலக்கும் பொழுது எந்த விளைவுகள் நமக்குத் தெளிவாகப்
புலனாகின்றனவோ அவ்வாறே, ஏன்,
அதைவிட அதிகத் தெளிவாக, ஆத்மீகக்
கிரியைகளில் நாம் பார்க்கக்கூடும் என்பது என் கருத்து. ஆனால் அதை அளந்து
பார்ப்பதற்கு நம்மிடம் கருவியெதுவும் இல்லாதிருப்பதே இதிலுள்ள குறை. இதனாலேயே
இத்தகைய விளைவுகளைக் குறித்து நமக்கு விரைவில் நம்பிக்கை உண்டாவதில்லை. ஒருக்கால்
உண்டானாலும், அது
உறுதியாயிருப்பதில்லை. மேலும் பெரும்பாலும் சொந்த விஷயங்களில் நாம் தாராளமாக
நடந்துகொள்ளுகிறோம். இதன் பயனாக நமது சோதனைகளில் நமக்கு வெற்றியேற்படாமற் போவதோடு
செக்கு மாடுகளைப் போல நாம் ஒரே வட்டத்தில் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கிறோம்.
இவ்வாறு அசத்தியத்தின் வண்டி தன் நடையில் ஊர்ந்துகொண்டேயிருக்க இறுதியில்
அசத்தியத்தைத் தவிர்ப்பதற்கில்லை என்ற முடிவுக்கு வருகிறோம். தவிர்க்க
முடியாதென்று எது கருதப்படுகிறதோ அது சுலபமாக இன்றியமையாததாகிவிடுகிறது. இவ்வாறு
சத்தியத்திற்கு பதிலாக அசத்தியத்தின் மதிப்பு பெருகத் தொடங்குகிறது. ஆகையால்
ஆசிரமத்தில் அசத்தியம் தென்பட்ட பொழுதெல்லாம் நான் என் குற்றத்தை ஒப்புக்கொண்டுதான்
வந்திருக்கிறேன். அதாவது நான் கூறும் அர்த்தத்தில், சத்தியத்தை என்னால் அடைய முடியவில்லை. அறியாமை
காரணமாகவே என்றாலும், நான்
சத்தியத்தைப் பூர்ணமாகப் புரிந்துகொள்ளவில்லையாகையால் அதைச் சிந்திக்கவும்
வெளியிடவும் இல்லை என்னும்பொழுது அதன்படி நடப்பது எப்படிச் சாத்தியமாகும்? ஆனால், இவ்வாறு குறையை ஒப்புக்கொண்ட பிறகு அங்கிருந்து ஓடிவிடுவதா,
குகையில் போய்ப் புகுந்துகொள்வதா,
மௌனமாகவே இருந்துவிடுவதா? இதை நான் கோழைத்தனமென்று எண்ணுகிறவன்.
குகையில் உட்கார்ந்து சத்தியத்தைத் தேடுவது சாத்தியமில்லை. பேசுவது அவசியமாயிருக்குமிடத்தில்
மௌனமாயிருப்பதெப்படி? குகைக்கும்
விசேஷ சந்தர்ப்பங்களில் இடமுண்டு. ஆனால் சாதாரண மனிதர்களை சமூகத்தில்தான்
பரீட்சிக்க முடியும்.
அப்படியானால் அசத்தியத்தை அகற்றுவதற்கு நான் செய்யக்கூடிய உபாயந்தானென்ன?
இதைக் குறித்து ஆலோசித்ததில் உடலை
அடக்குவதைத் தவிர எனக்கு வழியொன்றும் தோன்றவில்லை. உடலை அடக்குதல் என்றால் உபவாஸம்
முதலியவைகளே. உடலை அடக்குவதனால் மூன்று பயன்கள் விளைகின்றன. ஒன்று தன் மீது,
இரண்டாவது குற்றம் செய்தவர் மீது,
மூன்றாவது சமூகத்தின் மீது. உடலை
அடக்குவதனால் மனிதன் அதிக விழிப்பெய்தி உள்ளத்தினுள்ளே இழிந்து ஆத்ம தரிசனம்
செய்வதோடு தன் குறைபாட்டை உணருவதனால் அதைப் போக்குவதற்கும் வழி செய்கிறான்.
குற்றம் புரிபவன் ஈரமுள்ள நெஞ்சத்தவனாய் இருந்தால் தன் பிழை தெரியவரவும் நாணமுற்று
அதே குற்றத்தை மறுமுறை செய்வதில்லையென்ற உறுதி கொள்ளுகிறான். அக்கம்பக்கத்திலுள்ள
சமூகம் தன் குற்றங்குறைகளை ஆராய்ந்து பார்க்கத் தொடங்குகிறது. ஆனால் உடலடக்கம் ஒரு
கருவியேயன்றி குறிக்கோளாகாது. அதற்கு மனிதனைத் திருத்துவதற்குச் சிறிதும் சக்தி
கிடையாது. அதற்குப் பின்பலமாக கருத்தொன்று இருக்கும்பொழுதுதான் அதனால் பயன் விளையக்கூடும்.
அந்தக் கருத்து என்னவென்றால், மனிதன் உடலுக்கு அடிமையாயிருக்கிறான்; உடலைத் திருப்தி செய்வதற்காகப் பல தொழில்களில் புகுந்து பல பாபங்களைச்
செய்கிறான்; ஆகையால் பாபங்கள்
நேரும்பொழுதெல்லாம் உடலை தண்டிக்க வேண்டும். உடலின் போகங்களில் ஆழ்ந்துள்ள
மனிதர்கள் மெய்ம்மறந்த தசையிலேயே இருப்பார்கள். உணவு என்ற போக வஸ்துவை ஓரளவு
துறப்பதனால் மயக்கத்தைக் குறைப்பதற்கு உதவியேற்படும். உபவாஸத்தின் இந்த விளைவைக்
கருத்தில் கொண்டு அதன் பொருளை விவரிப்பது அவசியமாகும். உபவாஸமென்பதற்குத் தமது
அல்லது பிறருடைய ஆத்ம சுத்திக்காகச் செய்யப்படும் புலன்கள் அனைத்தின் அடக்கம் என்பது
பொருள். உணவை மட்டும் நிறுத்திவிடுதல் உபவாஸமென்று கருதப்படமாட்டாது. நோய்க்குப்
பரிகாரமாக உணவுகொள்ளாமல் இருப்பதை உபவாஸமென்றே கருதுவதற்கில்லை.
இடையிடையே செய்யப்படும் உபவாஸத்தினால் அதிகப் பயன் விளைவதில்லையென்று நான்
அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். அடிக்கடி செய்யப்படும் உபவாஸம் யந்திரவத்தாக
செய்யப்படும் சடங்கைப்போல் ஆகிவிடுவதே இதற்குக் காரணமென்று தோன்றுகிறது. அதற்குப்
பக்கபலமாக கருத்தெதுவும் இருப்பதில்லை. ஆகையால் ஒவ்வொரு உபவாஸத்தையும் விழிப்புடன்
கருத்துணர்வோடு செய்தல் அவசியமாகிறது.
நான் என் விஷயத்தில் ஒரு விசேஷப் பயனை உணர்ந்திருக்கிறேன். நான் எத்தனையோ தடவை
உபவாஸம் செய்திருப்பதால் என் தோழர்களுக்கு எப்பொழுதும் திகில்தான். இவைகளினால் என்
உடலுக்கு ஆபத்து வந்துவிடக்கூடாதே என்று அவர்கள் அஞ்சுவதுண்டு. ஆகையினால் இந்தக்
காரணத்தினாலேயே என் தோழர்களில் பலர் புலனடக்கத்துடன் வாழ்ந்துவருவது தெரிகிறது.
நான் இதை உபவாஸத்தின் விபரீதமான பயனென்று கருதுகிறேன். ஆயினும் இவ்வாறு பயத்திலிருந்து
விளைந்துள்ள புலனடக்கத்தினால் தீமையேற்படுமென்று நான் நம்பவில்லை. இந்த பயம்
அன்பின் பயமாகும். பயந்தாவது மனிதன் தீமை செய்யாமல் இருப்பானானால் அது நல்லதே.
தானே விரும்பி அறிவுடன் செய்யப்படும் நல்ல காரியமே தலைசிறந்தது. ஆனால் பெரியவர்களுக்கு
பயந்தோ, அவர்களுக்கு வருத்தமுண்டாகுமென்ற
அச்சத்தினாலோ பாவம் செய்யாமலிருப்பதை நாம் அலட்சியம் செய்வதற்கில்லை. இதில்
மிருகவத்தான பலாத்காரம் மெதுவுமில்லை. தமக்கு வேண்டிய பெரியவர்களை திருப்தி
செய்வதற்கென தொடங்கப்பட்ட நல்ல காரியங்கள் பிறகு நிலைத்ததற்கு எத்தனையோ உதாரணங்களுண்டு.
உபவாஸம் முதலியவைகளினால் ஒரு வருந்தத்தக்க பயன் விளைவதையும் நாம் கவனத்தில்
கொள்ளவேண்டும். உபவாஸம் முதலியவைகளுக்கு அஞ்சி தீமை செய்வதைத் தவிர்ப்பதற்குப்
பதிலாக அதனால் பாதிக்கப்படும் சிலர் தாம் செய்யும் பாபத்தை மறைப்பதற்கு முயலுவதைப்
பார்க்கிறோம்.
25—4—32. (?)
நன்மை தீமைகள் ஆகியவற்றை எண்ணிப் பார்த்த பிறகு சில சந்தர்ப்பங்களில் உபவாஸம்
முதலிய பிராயச்சித்தங்கள் அவசியமேயென்ற முடிவுக்கு நான் வந்திருக்கிறேன்.
மொத்தத்தில் இதனால் ஆசிரமத்திற்கு நன்மையே விளைந்திருக்கிறதென்பது என் கருத்து.
ஆனால் உபவாஸம் முதலிய பிராயச்சித்தங்களைச் செய்வதற்குத் தகுதி தேவையென்பதை
நினைவில் வைத்தல் அவசியம். நினைத்தவருக்கெல்லாம் நினைத்த சந்தர்ப்பங்களில் பிராயச்சித்தமாக
உபவாஸம் செய்வதற்கு உரிமையே கிடையாது.
சந்தர்ப்பத்தையும், தகுதியையும்
கருதி இந்த உரிமையை நிர்ணயிக்கக்கூடும். பொதுவாக உரிமையை நிர்ணயிப்பதில்
கீழ்க்கண்ட நிபந்தனைகளை கவனிக்க வேண்டும்:
31-5-32.
1. குற்றம் செய்தவனுடைய மனதில் பிராயச்சித்தம்
செய்வோனிடம் அன்பு இருக்கவேண்டும். பிராயச்சித்தம் செய்வோனுடைய மனதில் குற்றம்
செய்தவனிடம் அன்பு இருந்தபோதிலும், குற்றம் செய்தவனுக்கு இந்த அன்பு தெரியாமலோ, அல்லது அவன் வேண்டுமென்றே சத்துருவாகித் திரிந்துகொண்டிருப்பதாகவோ
இருக்குமானால் அவனுக்காகவும் பிராயச்சித்தம் செய்வதற்கில்லை. எவன் தன்னை சத்துருவென்று
நினைக்கிறானோ அவன் பிராயச்சித்தம் செய்பவனை அலட்சியமாகக் கருதுவான். ஆகையால்
பிராயச் சித்தத்தினால் அவன் விஷயத்தில் விபரீதமான பயன் விளையவோ, உபவாஸம் அவன் விஷயத்தில் மிருகவத்தான
பலாத்காரமாக மாறவோ கூடுமென்பதோடு அது தவறான பிடிவாதம் அல்லது துராக்ரஹம் என்றும்
கருதப்படக்கூடும். இதைத் தவிர, எவனுடன் குறிப்பிடத்தக்க அன்பின் சம்பந்தமில்லையோ, அவனுடைய குற்றத்திற்காகப் பிராயச்சித்தம் செய்வதற்கு
எல்லோருக்குமே உரிமையுண்டாகையால் மனிதனுக்குப் பிராயச்சித்தத்திலிருந்து ஓய்வே
இல்லாமற் போய்விடும். எல்லா உலகத்திற்காகவும் பிராயச்சித்தம் செய்வதென்பது மகா
புருஷர்களுக்கே தகும். ஆனால் நாம் இங்கே சாதாரண மனிதர்களைப் பற்றியே ஆலோசித்து வருகிறோம்.
2. குற்றம் பிராயச்சித்தம் செய்வோனுக்கும் இழைக்கப்பட்டிருக்க
வேண்டும். இங்கே சொல்ல வந்ததன் கருத்து, குற்றம் செய்தவனுடன் எவனுக்கு யாதொரு சம்பந்தமுமில்லையோ அவன் குற்றம்
செய்தவனுக்காகப் பிராயச்சித்தம் செய்யவேண்டியதில்லை. உதாரணமாக, ‘அ’வுக்கு, ‘ப’வுடன் நட்பிருக்கிறது. ஆனால் ‘ப’ ஆசிரமவாசியாக
இருக்க, ‘அ’வுக்கு ஆசிரமத்துடன் யாதொரு சம்பந்தமுமில்லை. ‘ப’ ஆசிரமத்திற்கு ஏதோ
குற்றமிழைத்திருக்கிறான். இங்கே ‘அ’வுக்கு பிராயச்சித்தம் செய்வதற்கு நியாயமோ,
உரிமையோ கிடையாது. ‘அ’ இதில் குறுக்கிடப்
போவானானால் ஆசிரமத்தின் நிலைமையும், ‘ப’ வின் நிலைமையும் கெடக்கூடும். ‘அ’விடம் ‘ப’வின் குற்றத்தைத் தீர்மானிப்பதற்கு
உதவும் சாதனமும் இருப்பதற்கில்லை. ‘ப’ ஆசிரமத்திலிருப்பதைச் சகித்து ‘ப’வின் நடத்தைக்கும்
பிராயச்சித்தத்திற்கும் தனக்கிருந்த பொறுப்பை ‘அ’ ஆசிரமத்திற்கு அளித்துவிட்டவன் ஆகிறான்.
3. பிராயச்சித்தம் செய்வோன் தன்னிடம் அதே
குற்றமில்லாதவனாக இருக்கவேண்டும். ‘ஊமையன் உளறு வாயனைப் பார்த்துச் சிரிக்கலாமா?’ என்பது இங்கே பொருத்தமுடைத்து.
4. பிராயச்சித்தம் புரிவோன் மற்ற வகைகளிலும்
தூயவனாயிருக்க வேண்டும். அப்பொழுதுதான் குற்றம் செய்தவனுக்கு அவனிடம் மரியாதை
இருக்கும். பிராயச்சித்தத்தின் உள்ளேயே தூய்மை அடங்கியிருக்கிறது. குற்றம்
செய்தவனுக்கு பிராயச்சித்தம் செய்தவனிடம் மரியாதை தோன்றவில்லையானால் உபவாஸத்தினால்
அவனிடம் தவறான விளைவுகள் தோன்றுவது இயற்கையே.
3-6-32.
5. பிராயச்சித்தம் செய்வோன் சொந்த லாபத்திற்காக அதைச்
செய்வதாயிருக்கக் கூடாது. உதாரணமாக ‘அ’, ‘ப’வுக்கு ரூ. 10 தருவதாய்ச் சொல்லியிருக்கிறான். அதன்படி
செய்யாதது குற்றமேயானாலும் ‘அ’ சொன்னபடி செய்யாததற்காக ‘ப’ பிராயச்சித்தம் செய்யக்கூடாது.
6. பிராயச்சித்தம் புரிவோன் ஆத்திரத்தினாலும் அதைச்
செய்யக்கூடாது. பிள்ளை குற்றமொன்றைச் செய்ய அதனால் கோபமடைந்த தகப்பன் உபவாஸமிருப்பானானால்
அது பிராயச்சித்தமாகாது. பிராயச்சித்தத்தில் தயையே இருக்கவேண்டும். ஏனெனில் தான்
சுத்தி பெறுவதும் குற்றம் செய்தவனை சுத்தி செய்வதுமே அதற்குக் காரணமாயிருக்க
வேண்டும்.
7. குற்றம் நிதர்சனமாயும், எல்லோரும் ஒப்புக்கொள்ளக்கூடியதாயும் ஆத்மாவை
அழிக்கக்கூடியதாயும் இருக்கவேண்டியதோடு அது அதைச் செய்வோனுக்கே தெரிந்ததாயும் இருக்கவேண்டும்.
உத்தேசமாக எவரையேனும் குற்றம் செய்தவனென்று கருதி பிராயச்சித்தம் செய்யக்கூடாது.
இவ்வாறு செய்வதனால் பல சமயங்களில் ஆபத்தான விளைவுகள் ஏற்படுகின்றன. குற்றத்தைப்
பற்றிச் சந்தேகமே இருக்கக்கூடாது. மேலும், தான் குற்றமென்று கருதிய ஒன்று பிராயச்சித்தத்திற்குக் காரணமாயிருக்கக்
கூடாது. மனிதன் இன்று குற்றம் நிறைந்ததாகக் கருதும் ஒன்றை நாளைக்கே குற்றமற்றதாக
எண்ணிவிடலாம். ஆகையால் நாம் குற்றமென்று கருதுமொன்று சமூகத்தினாலும் அவ்வாறே
கருதப்படுவதாயிருக்க வேண்டும். கதர் உடுத்தாமை என் அபிப்பிராயத்தில் பெரிய
குற்றமாக இருந்தபோதிலும் என் நண்பனுக்கு இதில் குற்றமெதுவும் தோன்றாமலிருந்தாலும்,
அல்லது அதற்கு மகத்துவம் எதுவுமே
அளியாதவனாய் கதர் உடுத்தினாலென்ன, உடுத்தாவிட்டாலென்ன என்று நினைத்தானானாலும் அதைக் குற்றமென்று கொண்டு
நான் உபவாஸம் செய்யத் தொடங்கிவிடுவேனானால் அது பிராயச்சித்தமாகாது; நியாயமற்ற பலவந்தமென்றே கருதப்படும். மேலும்,
குற்றம் செய்வோனுக்கு தான் செய்வது குற்றமென்றே
தெரியாதிருக்கையில் அதற்காகப் பிராயச்சித்தம் செய்தல் சரியல்ல.
எங்கே தண்டனை முதலியவைகளுக்கு இடமில்லையோ, எங்கே ஒவ்வொரு காரியத்தையும் தர்மத்தின் உதவி கொண்டு
செய்ய முயற்சி செய்யப்படுகிறதோ அத்தகைய ஸ்தாபனங்களை நடத்துகையில் இந்தச் சர்ச்சைகளெல்லாம்
அவசியமே. ஏனெனில் அவற்றின் நிர்வாகிகள் செய்யும் பிராயச்சித்தம் அங்கே தண்டனையின்
ஸ்தானத்தை ஏற்கிறது. வேறு எந்த வகையிலும் ஸ்தாபனத்தை நல்லொழுக்க மணம் கமழும்படி
செய்தல் அசாத்தியமே. தண்டனைகளினால் வெளித்தோற்றமும் ஒழுங்கும் கட்டுப்பாடும் சரியாக
இருந்துவருவதோடு ஸ்தாபனத்தின் வேலைகளும் சரியாய் நடந்துவருவதாகத் தோன்றியபோதிலும்
வேறு எதையும் அவைகளினால் அளிக்க முடியாது. பிராயச்சித்தத்தினாலோ ஸ்தாபனம் உள்ளும்
புறமும் பாதுகாக்கப்பட்டு நாளுக்கு நாள் அதிக உறுதி பெற்று வளரும். ஆகையால் மேலே
கூறியவை போன்ற சில விதிகள் இருந்துவருதல் அவசியமே.
4-6-32.
உபவாஸம் முதலிய பிராயச்சித்தங்கள் இருந்துவந்தபோதிலும் ஆதர்ச சத்தியத்திற்கும் ஆசிரமத்திற்கும் தூரமதிகமிருப்பதால் இப்பொழுது நாம் அதை ‘உத்தியோக மந்திரம்’ என்ற பெயரினாலேயே அழைத்து வருகிறோமென்பது பின்னர் தெரியவரும். நிர்வாகிகள் விழிப்புடனிருக்கிறார்கள் என்று மட்டும் நிச்சயமாகச் சொல்லலாம். அவர்களுக்குத் தம் குறைகள் தெரிந்திருப்பதோடு அசத்தியமெதுவும் புகுந்துவிடாதிருக்கும் பொருட்டு முயன்றுவருகிறார்கள். ஆனால் எதில் அவ்வப்பொழுது புதிய மனிதர்கள் வந்து சேர்ந்துகொண்டே இருக்கிறார்களோ, எங்கு பலரை நம்பிக்கையின் மீதே சேர்த்துக்கொள்ளப்படுகிறதோ, எங்கே எல்லா மாகாணங்களிலிருந்தும் நாடுகளிலிருந்தும் மனிதர்கள் வந்துபோய்க்கொண்டே இருக்கிறார்களோ, அங்கே எல்லோரிடத்திலும் சத்தியம் இருந்துவருவது சுலபமல்ல. அங்கே சத்தியம் சோதனைக்குள்ளாகிறதென்று கருதுவதே உசிதமாகும். ஆனால் நிர்வாகிகள் உண்மையுடனிருப்பார்களானால் எத்தகைய கடினமான பரீட்சை ஏற்பட்டபோதிலும் அதில் ஆசிரமம் தேறவே செய்யும். சத்தியத்தை அனுஷ்டிப்பவனுடைய சக்திக்கு ஒரு அளவு இருந்தபோதிலும் சத்தியத்தின் சக்திக்கு அளவெதுவுமே கிடையாது. ஆனால் சத்திய பக்தனும் விழிப்புடனிருப்பானானால் அவனுடைய சக்திக்கும் எல்லை இராது.
***
No comments:
Post a Comment