மஹாத்மா காந்தியின் 'ஆசிரம வாழ்க்கை' | முன்னுரை
5-4-32.
ஆசிரமம் என்பதற்கு இங்கே பாரமார்த்திக - சமுதாய வாழ்க்கையென்பது பொருள்.
இன்றைய நோக்குடன் சென்றுபோனவைகளை கவனிக்கையில் இத்தகைய ஆசிரமம் என் இயற்கையிலேயே
அமைந்திருந்ததென்று எனக்குத் தோன்றுகிறது. நான் தனியாகக் குடித்தனம் நடத்தத்
தொடங்கியதிலிருந்து என் வீடு மேலே உள்ள விளக்கத்தின் இரு நிபந்தனைகளின்படி
ஆசிரமத்தைப் போன்றே அமைந்திருந்தது. ஏனெனில், கிருஹஸ்தாசிரமம் இன்ப நுகர்ச்சிக்காகவன்றி
தர்மத்திற்காகவே அமைந்ததென்று சொல்லலாம். மேலும், அதில் குடும்பத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர யாரேனும்
ஒரு நண்பர் இருந்துகொண்டுதான் வந்தார். அவர் பாரமார்த்திக சம்பந்தம் காரணமாக
வந்திருந்தார்; அல்லது அவர்
வந்த பிறகு அதை பாரமார்த்திக சம்பந்தமாக ஆக்க நான் முயன்றுவந்தேன். இவ்வாறு 1904
வரையில் என்னை அறியாமலே நடந்துவந்தது. 1904-ல் நான் ரஸ்கினுடைய ‘ஸர்வோதய’த்தைப்[1] படிக்கவே அது மின்சாரம்
பாய்ந்தது போன்ற விளைவைத் தந்தது.
‘இந்தியன் ஒபினியன்’ காரியாலயத்தை காட்டுப்புறத்திற்கு மாற்றிக்கொண்டு போய்
அங்கே தொழிலாளர்களுடன் ஒன்றுசேர்ந்து ஒரே குடும்பம்போல் வாழ்க்கை நடத்துவதென்று
தீர்மானித்தேன். 100
பீகா (1100 ஏகர்) நிலத்தைப் பெற்று ஆசிரமம் அமைத்தேன். அந்த சமயத்தில்
எங்களுடைய இந்த ஸ்தாபனத்தை அதன் அகத்திலோ புறத்திலோ ஆசிரமம் என்று உணரத் தெரிந்துகொள்ளவில்லை.
தர்மம் இதன் பகுதியாயிருந்தது உண்மையே. ஆனால் வெளிப்படையான
லட்சியம் உள்ளும் புறமும் துப்புரவாயிருத்தல், பொருளாதார
சமத்துவம் ஆகியவற்றை எய்துவதாகவே இருந்தது. இந்த சமயத்தில் பிரம்மசரியத்தின்
இன்றியமையாமை ஒப்புக்கொள்ளப்படவுமில்லை; புரிந்துகொள்ளப்படவுமில்லை.
இதுமட்டுமல்ல, இதற்கு
மாறாக தோழர்களெல்லோரும் குடும்ப வாழ்க்கை நடத்தி பிள்ளை குட்டிகளைப் பெற்றுக்கொண்டிருக்க
வேண்டுமென்றும் எண்ணப்பட்டு வந்தது. பினிக்ஸின் சரித்திரத்தின் சுருக்கம் ‘தென்னாப்பிரிக்க
சத்தியாக்ரஹம்’ என்ற நூலில் தரப்பட்டிருக்கிறது.
இதை நாம் முதல் அடி எடுத்துவைத்ததாகக் கொள்ளலாம்.
இரண்டாவது அடி எடுத்துவைத்தது 1906-ல் என்று சொல்லவேண்டும். ஊழியராக வாழ்க்கை நடத்துவதற்கு பிரம்மசரியம்
அவசியமானதென்று அனுபவத்திலிருந்து தெரியவந்ததாகச் சொல்லலாம். அதுமுதல் நான் பினிக்ஸை
வேண்டுமென்றே ஒரு மதஸ்தாபனமென்று கருதத் தொடங்கியதோடு என் மனத்திலும் அதன்
மதத்தன்மை உருவாகத் தொடங்கிற்று. அரசியல் சத்தியாக்ரஹம் இதே வருஷத்தில்தான்
ஆரம்பமாயிற்று. அதன் மூலமும் தர்மமே. அதற்கு அடிப்படையாயிருந்தது சத்திய ரூபியான
பரம்பொருளிடம் அசையாத நம்பிக்கை. இங்கே தர்மமென்று சொல்வதற்கு குறுகிய பொருள்
கொள்ளக்கூடாது. வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படும் எல்லா மதங்களையும் ஒன்றாக
இணைப்பதும் ஒன்றேயென்று கருதுவதுமான எந்தப் பரமதர்மமுண்டோ அதுவே இங்கே நாம்
தர்மமென்று சொல்வதின் பொருள்.
1911 வரையில் இவ்வாறு நடந்துகொண்டு வந்தது. இவ்வளவு
வருஷங்களுக்கிடையில் பினிக்ஸ் ஆசிரமமானது. அதை நான் ஆசிரமமென்று
உணராதிருந்தபோதிலும், ஆசிரம
முறையிலேயே முன்னேறி வந்ததென்று நம்புகிறேன்.
1911-ல் மூன்றாவது அடி எடுத்து வைக்கப்பட்டது. இதுவரையில்
அச்சு யந்திரசாலைக்கு உபயோகப்படக் கூடியவர்களே பினிக்ஸில் நிலைத்து இருந்துவர
முடிந்தது. ஆனால் இப்பொழுது சத்தியாக்ரஹக் காரியத்திற்காக சத்தியாக்ரஹிகளின்
குடும்பங்கள் இருந்துகொண்டு தார்மிக வாழ்க்கை நடத்திவருவதற்கு அனுகூலமான ஆசிரமம்
ஒன்று தேவையென்று தோன்றிற்று. இதற்கு முன்னரே நான் ஜர்மானிய நண்பரான கலன்பாக்கிடம்[3] பழக்கம் பெற்றுவிட்டேன்.
நாங்கள் இருவரும் ஒருவகை ஆசிரம வாழ்க்கை நடத்திவந்தோம். நான் வக்கீல் தொழில்
செய்துகொண்டிருக்க கலன்பாக் தமது கட்டட நிர்மாணத் தொழிலை நடத்திவந்தார். ஆயினும்
நாங்கள் வெகுதொலைவில் ஜனநெருக்கமில்லாத ஒரு இடத்தில் மிகவும் எளிய வாழ்க்கை
நடத்திவந்தோமென்றும், எங்கள்
மனம் தர்மத்தில் பெரிதும் ஈடுபட்டிருந்ததென்றும் சொல்லலாம். எங்களுக்குத்
தெரியாமல் பிழைகள் பல நடந்திருக்கக்கூடுமாயினும் நாங்கள் ஒவ்வொரு காரியத்தின்
மூலத்தையும் தர்மத்திலேயே தேட முயன்றுவந்தோம். பிறகு கூட்டமாக வந்து
சத்தியாக்ரஹிகளின் குடும்பங்கள் சேர்ந்துவிடவே எல்லோரையும் ஒரே இடத்தில் சேர்த்து
வைத்தல் அவசியமென்று தோன்றிற்று. ஆகவே, கலன்பாக் 1100 ஏகர் நிலம் வாங்கிவிடவே அங்கே சத்தியாக்ரஹிகளின் குடும்பங்கள்
வசிக்கலாயின. அங்கே ஒவ்வொரு காரியத்திலும் தார்மிகப் பிரச்னைகள் தோன்ற ஸ்தாபனமனைத்தும்
தார்மிக முறையில் நடந்துவரலாயிற்று. அதில் ஹிந்துக்களும், முஸல்மான்களும், கிறிஸ்தவர்களும், பார்ஸிகளும் வசித்துவந்தபோதிலும் இந்தக்
காரணத்தினால் என்றேனும் வருத்தமோ, சச்சரவோ தோன்றியதாக எனக்கு நினைவில்லை. இவ்வாறே, அங்கே இருந்துவந்தவர்கள் தம் தம் மதங்களில் அதிகப் பற்றில்லாதவர்களோவென்றால்
அப்படியுமில்லை. எங்கள் எல்லோருக்கும் மற்றவர்களின் மதங்களிடம் மரியாதை இருந்ததோடு
அனைவருமே மற்றவர்களை தம் மதப்படி நடந்து ஆத்மீக வளர்ச்சி பெறுவதற்குத்
தூண்டிவந்தோம்.
ஆனால் இந்த ஸ்தாபனத்தை நாங்கள் சத்தியாக்ரஹ ஆசிரமமென்று கருதவில்லை. இதற்கு
டால்ஸ்டாய் பாரம் என்று பெயரிட்டிருந்தோம். கலன்பாக்கும் நானும் டால்ஸ்டாய்
பக்தர்கள். அவருடைய கருத்துகள் பலவற்றை அனுஷ்டிப்பதற்குப் பெரிதும் முயன்றுவந்தோம்.
1912-ல் இந்த ஸ்தாபனம் சத்தியாக்ரஹிகளின் விடுதி என்றிருந்தது நிறுத்தப்பட்டுவிட்டது.
ஒன்று சேர்ந்து இருக்கவேண்டியவர்களெல்லாம் பினிக்ஸுக்குப் போய்விட்டார்கள்.
டால்ஸ்டாய் பாரத்தின் சரித்திரத்தையும் அறிய விரும்புவோர் ‘தென்னாப்பிரிக்க
சத்தியாக்ரஹம்’ என்ற புஸ்தகத்தைப் பார்க்கலாம்.
6-4-32.
பினிக்ஸ் இப்பொழுது ‘இந்தியன் ஒபினியன்’ சம்பந்தமாக அமைக்கப்பட்ட ஸ்தாபனமாயிராமல்
சத்தியாக்ரஹ ஸ்தாபனமாகத் தொடங்கிற்று. இது இயற்கையே. ஏனெனில் ‘இந்தியன் ஒபினிய’னை நடத்தும் பொறுப்பும்
அதையே சேர்ந்திருந்தது. ஆனால் இந்த மாறுதல் சாதாரணமானதல்ல. பினிக்ஸில்
இருந்தவர்களுடைய வாழ்க்கை ஸ்திரமாயில்லாதிருந்ததனால் இந்த ஸ்திரமில்லாத
நிலைமையினிடையிலேயே சத்தியாக்ரஹிகளைப் போல அவர்களும் ஸ்திரத்தன்மையைத் தேடுவதற்கு
சந்தர்ப்பம் வாய்த்தது. இதனால் அவர்கள் சளைக்கவில்லை. இங்கும் டால்ஸ்டாய்
பாரத்தில் போலவே பொது போஜன சாலையின் அவசியத்தை உணர்ந்தேன். ஒருசிலர் அதில்
சேர்ந்தார்கள். சிலர் சேரவில்லை. மாலை சமூகப் பிரார்த்தனைக்கு வரவர அதிக
முக்கியத்துவம் ஏற்பட்டுவந்ததோடு சத்தியாக்ரஹத்தின் இறுதிப்போரை பினிக்ஸ் வாசிகளே
ஆரம்பித்தார்கள். இது நடந்தது 1913-ல். 1914-ல் போர் முடிந்துவிடவே, நான் ஜூலை
மாதத்தில் தென்னாப்பிரிக்காவிலிருந்து கிளம்பினேன். இந்தியாவுக்குப் போகவேண்டுமென்று
விரும்பியவர்கள் போவதென்று முடிவாயிற்று. நான் இங்கிலாந்துக்குப் போய் கோகலேயை
சந்தித்தபின் (இந்தியாவுக்கு) போகவேண்டியிருந்தது. இந்தியாவில் தனியாக ஸ்தாபனமொன்று
ஏற்படுத்தி, எல்லோரையும் என்னுடனேயே வைத்துக்கொண்டு தென்னாப்பிரிக்காவில் எந்த
சமூக வாழ்க்கையை நான் ஆரம்பித்திருந்தேனோ அதைத் தொடர்ந்து நடத்திவரவேண்டியிருந்தது.
ஆகையால் ஆசிரமம் என்ற பெயரில்லாமலே ஆசிரமம் ஒன்றை ஸ்தாபிக்கும் தீர்மானத்துடன்
1914-ன் இறுதியில் நான் இந்தியாவுக்கு வந்துசேர்ந்தேன்.
இந்தியாவில் ஒருவருஷகாலம் நன்றாகச் சுற்றினேன். எவ்வளவோ ஸ்தாபனங்களைப்
பார்த்ததில் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. எத்தனையோ இடங்களிலிருந்து
ஆசிரமம் ஸ்தாபிப்பதற்கு அழைப்பு வந்ததோடு பலவகையில் உதவியளிப்பதாகவும் பலர் வாக்குத்
தந்தார்கள். கடைசியில் அஹமதாபாத்தில் ஆசிரமம் ஆரம்பிப்பதென்று முடிவு செய்தேன்.
இதை நான் நான்காவதும் கடைசியுமான அடியென்று கருதுகிறேன். இதுதான் கடைசியா இல்லையா
என்பது வருங்காலத்திலேயே தெரியும். இந்த ஸ்தாபனத்திற்குப் பெயர் என்ன வைப்பது,
இதன் விதிகள் எப்படி இருக்கவேண்டும்
என்ற விஷயங்களைக் குறித்து நான் நண்பர்களுடன் விவாதித்ததோடு கடிதப் போக்குவரத்தும்
நடத்தி, விதிகளின் நகலொன்றைத்
தயாரித்து நண்பர்களுக்கு அனுப்பிவைத்தேன். கடைசியில் ஸ்தாபனத்திற்கு ‘சத்தியாக்ரஹ
ஆசிரமம்’ என்று பெயரிடப்பட்டது. நோக்கத்தைக் கருதும்பொழுது இந்தப் பெயரிட்டது சரியென்றே
தோன்றுகிறது. என் வாழ்க்கை சத்திய சோதனைக்கே அர்ப்பணம் செய்யப்பட்டதொன்றாகும்.
அதைத் தேடும் பொருட்டே வாழவும், தேவையானால் இறக்கவும் எனக்கு உறுதியுண்டு. இந்தச் சோதனையில் கிடைக்கக்கூடிய தோழர்களையெல்லாம்
ஏற்றுக்கொள்ளவும் விரும்புகிறேன்.
7-4-32.
1915-ம் வருஷம் மே மாதம் 22-ம் தேதி கோசரப்பில் ஒரு வாடகைக் கட்டடத்தில் இந்த
ஆசிரமம் ஆரம்பமாயிற்று. அதற்கான செலவுகளுக்கு ஏற்பாடு செய்யும் பொறுப்பை அஹமதாபாத்
வாசிகள் சிலர் ஏற்றுக்கொண்டார்கள். ஆசிரமம் ஆரம்பமான காலத்தில் அதில் சுமார் 20
பேர் இருந்தனர். அவர்களில் அதிகமானபேர் தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்தவர்கள்.
அந்த சமயத்தில் பெரும்பாலோர் தென்னாட்டினர்; அதாவது தமிழ் அல்லது தெலுங்கு பேசுகிறவர்களே.
அப்பொழுதெல்லாம் ஆசிரமத்திலிருந்த பெரியோர், சிறியோர் ஆகிய அனைவருக்கும் பாஷைகள் கற்பதே, அதாவது ஸமஸ்கிருதம், ஹிந்தி, தமிழ் ஆகியவற்றைப் படிப்பதே முக்கியமான வேலை. குழந்தைகளுக்கு வேறு சாதாரணப்
படிப்பு நடந்துவந்தது. கைத்தறி நெசவு முக்கியத் தொழிலாயிருக்க அதோடு கூடவே
படிப்பும் நடந்துவந்தது. வேலைக்காரர்கள் வைத்துக்கொள்வதில்லையென்ற பிடிவாதமிருந்துவந்ததால்
சமையல், துப்புரவு, தண்ணீர் நிரப்புதல் முதலிய எல்லா
வேலைகளையும் ஆசிரம வாசிகளே செய்துவந்தனர். சத்தியம், அஹிம்சை, பிரம்மசரியம், நாவடக்கம்,
கள்ளாமை, வௌவாமை முதலிய விரதங்கள் எல்லா ஆசிரம வாசிகளும்
அனுஷ்டிக்கவேண்டியவை. ஜாதிமத வேற்றுமைகள் சிறிதும் கவனிக்கப்பட்டதில்லை. தீண்டாமைக்கு
ஆசிரமத்தில் சிறிதும் இடமிருந்ததில்லை. இதுமட்டுமல்ல, ஹிந்து ஜாதிகளிலிருந்து தீண்டாமையைப் போக்கும்
முயற்சிக்கு ஆசிரமத்தின் காரியங்களில் முக்கியமான இடம் அளிக்கப்பட்டிருந்தது.
தீண்டாமையைப் போலவே ஹிந்து ஜாதிகளில் பெண்களுக்கு இருந்த பலவகைக் கட்டுகளையும்
தகர்ப்பதற்கு ஆசிரமத்தின் ஆரம்பத்திலிருந்தே உறுதிகொள்ளப்பட்டிருந்தது. ஆகவே,
ஆசிரமத்தில் பெண்களுக்கு பூரண
சுதந்திரம் இருந்துவந்திருக்கிறது. இதோடு கூட ஹிந்து முஸ்லிம் முதலிய வெவ்வேறு
மதத்தவரிடையே எவ்வளவு சகோதரபாவம் இருக்க முடியுமோ, அவ்வளவும் வைத்துக்கொள்ளப்பட வேண்டுமென்பது
ஆசிரமத்தின் ஒரு விதியாகவே இருந்துவந்தது.
ஆனால் ஒரு விஷயத்திற்கு மட்டும் நானே பொறுப்பாளி. இதற்கு நான் மேல்நாடுகளுக்குக்
கடமைபட்டிருக்கிறேன். இது உணவின் விஷயத்தில் நான் நடத்திவரும் சோதனைகளாகும்.
இந்தச் சோதனைகள் ஆரம்பம் செய்யப்பட்டது 1888-ல் நான் இங்கிலாந்துக்குப் போயிருந்த சமயத்தில்.
என் சோதனைகளில் என் குடும்பத்தவர்களையும், மற்ற தோழர்களையும் நான் இழுத்துக்கொண்டே வந்திருக்கிறேன். இதன் அடிப்படையில்
மூன்று முக்கியமான காரணங்கள் இருந்தன. (1) ருசி அல்லது நாவையும், அதன் மூலமாக மற்ற புலன்களையும் வசமாக்குதல்.
(2) மிகவும் எளியதும், மலிவானதுமான
உணவைத் தேடிக் கண்டுபிடிப்பதன் மூலமாக இவ்விஷயத்தில் பரம ஏழைகளுடனும் போட்டியிடும்
சக்தி பெறுதல். (3) உணவுக்கும் ஆரோக்கியத்திற்கும்
நெருங்கிய சம்பந்தமுண்டு என்ற கருத்தினால் பூர்ண ஆரோக்கியம் பெறுவதற்கு எந்த உணவு
உதவுமென்பதை சோதித்துக் கண்டுபிடித்தல்.
இந்த மூன்று காரணங்களினாலேயே நான் உணவைப் பற்றிய சோதனைகள் செய்ய ஆசைப்பட்டேன்
என்பது நான் சொல்லவந்ததன் கருத்தல்ல. நான் மாமிசம் சாப்பிடுவதில்லையென்ற
உறுதியுடன் இங்கிலாந்திற்குச் சென்றிராவிட்டால் உணவைப் பற்றிய சோதனைகளிலேயே என்
மனம் செல்லாதிருந்திருக்கலாம். ஆனால் நான் இந்தச் சோதனைகளைச் செய்ய நேரவே இந்த 3 காரணங்களுமாகச் சேர்ந்து என்னை வெகு
ஆழத்திற்கு இழுத்துக்கொண்டு போய்விட அது எத்தனையோ விதமான அனுபவங்களைப்
பெறுவதற்குத் தூண்டுதலாயிற்று. இவ்வாறு ஆசிரமமும் என் உணவுச் சோதனைகளில் கலந்துகொண்டது.
ஆனால் இந்தச் சோதனைகள் ஆசிரம வாழ்க்கையின் அங்கமல்ல.
8-4-32.
ஆசிரமம் நாட்டிலும் சமூகத்திலும் எந்தக் குற்றங்களிலிருக்கின்றனவென்று
கருதிற்றோ அவைகளை ஆசிரமத்திலிருந்து அகற்றும் விருப்பமிருந்ததென்று இதிலிருந்து
தெரிந்திருக்கும். இவைகளில் மதம், பொருளாதாரம், அரசியல் ஆகிய
எல்லாத் துறைகளிலும் காணப்பட்ட தீமைகள் சேர்ந்திருந்தன. அனுபவம் வளர வளர
சந்தர்ப்பத்திற்கேற்ப புதுப்புதுக் காரியங்கள் ஆரம்பிக்கப்பட்டு வந்தன. இன்று நான்
இதைச் சொல்லிவரும்பொழுதும் என் மனதில் உள்ள எல்லாக் காரியங்களையுமே ஆசிரமத்தில்
சேர்க்க முடிந்துவிட்டதென்று சொல்வதற்கு இயலவில்லை. ஆரம்பத்திலிருந்தே ஒன்றிரண்டு
தீர்மானங்களையொட்டி ஆசிரமத்தின் நடவடிக்கைகள் நடந்துவந்திருக்கின்றன. (1)
வரவுக்குத் தகுந்த செலவு செய்தல்; அதாவது ஆசிரமத்திற்கு சுலபமாக நண்பர்களிடமிருந்து கிடைத்துவரக்கூடிய உதவியைக்
கொண்டே ஜீவனம் நடத்துதல். (2) எந்தக் காரியத்தையும் நாமாக அவசரப்பட்டு எடுத்துப்
போட்டுக்கொள்ளாதிருத்தல்; ஆனால்
தகுந்த காரியமொன்று தானாகவே வரும்பொழுது அதைச் சிறிதும் தயங்காமல், தேவையானால் எத்தகைய ஆபத்துகளுக்கும்
உட்படும் கருத்துடன் ஏற்றுச் செய்தல்.
இந்த இரு தீர்மானங்களுக்கும் பாரமார்த்திகப் போக்கே காரணமாயிருந்ததென்று நான்
நம்புகிறேன். பாரமார்த்திகப் போக்கென்றால் கடவுளினிடம் நம்பிக்கையோடிருத்தல்
என்பது பொருள். ஆகையால் எல்லாவற்றையும் அவனையே நம்பி அவனுடைய ஏவலினாலேயே செய்தல்.
இவ்வாறு செய்துவருபவன் கடவுளினால் அனுப்பப்படும் பொருளைக்கொண்டு அவனே ஏவும் காரியத்தைச்
செய்வான். கடவுள் தான் செய்யும் எதையும் நாம் பார்க்கவோ அறியவோ விடுவதில்லை. அவன்
மனிதனை ஏவி அவன் மூலமாகத் தன் காரியங்களைச் செய்விக்கிறான். நாங்கள் எண்ணியே இராத
இடத்திலிருந்து உதவியும், நாங்கள்
கேட்காமலிருக்கும்பொழுதே நண்பர்களிடமிருந்து ஆதரவும் வரும்பொழுது என்னுடைய நம்பிக்கை
அவற்றை கடவுளே அனுப்பிவைத்தவை யென்றே கொள்ளும். இவ்வாறே ஒரு வேலை வந்து சேர அதை
ஏற்றுச் செய்யாமலிருப்பது பயங்காளித்தனம், சோம்பல் அல்லது இவைபோன்ற வேறு ஏதேனும் ஒரு தீய காரணமே யென்று தோன்றுமானால் என்
நம்பிக்கை அந்தக் காரியத்தையும் கடவுளால் அளிக்கப்பட்டதென்றே கருதும்.
எது பணம் காசின் விஷயத்திலும் வேலையின் விஷயத்திலும் உண்மையோ, அதுவே தோழர்களின் விஷயத்திலுமாகும்.
பணமிருந்து வேலையும் வந்திருந்தும், தோழர்கள் என்ற சாதனமில்லாத பொழுதும் அந்த வேலையைச் செய்வதற்கில்லை. இந்த
சாதனமும் சுலபமாகக் கிடைக்கவேண்டும். எங்கே வெறும் கற்பனையோடு நில்லாமல்
நம்பிக்கையும், ஆசிரமம்
கடவுளுடையதே யென்ற சமர்ப்பணக் கருத்துமிருக்கிறதோ அங்கே எந்தெந்தப் பணிகளுக்கு
கடவுள் ஆசிரமத்தைக் கருவியாகப் பயன்படுத்த விரும்புகிறானோ அவைக்களுக்கான எல்லாச்
சாதனங்களையும் அவனே அனுப்பிவைக்கிறான். கடந்த 16 வருஷங்களாக மட்டுமல்ல, பினிக்ஸ் ஸ்தாபிக்கப்பட்டது முதலே
தெரிந்தும் தெரியாமலும், சிறிதும்
பெரிதுமான அளவுகளில் இதே விதிகளின்படி ஸ்தாபனம் நடந்துவந்திருக்கிறது. ஆரம்பத்தில்
தளர்ந்திருந்த விதிகள் வரவர கண்டிப்புடையவையாக, இப்பொழுதும் அவை மேலும் அதிகக் கடுமையாகி வருகின்றனவென்பது
என் கருத்து.
சிறிது காலத்திற்குள் ஆசிரமத்திலிருந்தவர்களின் தொகை இருமடங்காகிவிட்டது.
கோசரப்பின் பங்களாவின் அமைப்போ ஆசிரமத்திற்குத் தகுந்ததாயில்லை. பங்களா பங்களாதானே.
அதில் ஒரு பணக்காரக் குடும்பம் மேல்நாட்டு முறையும் கீழ்நாட்டு முறையும் கலந்த ஒரு
கதம்ப வாழ்க்கையை நடத்திவருதல் சாத்தியம். இத்தகைய இடத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகிய எல்லோருமாகச் சேர்ந்து மொத்தம் 60
பேர் பல தொழில்களை நடத்துவதும் பிரம்மசரியம் முதலிய விரதங்களை அனுசரித்துவருவதும்
சிரம சாத்தியமானதே. ஆனால் கிடைத்த வீட்டில் இருந்துவரவேண்டியதாயிற்று. ஆயினும்
சிறிதுகாலத்திற்குள்ளேயே பல காரணங்களினால் அங்கே இருப்பது அசாத்தியமானதாய்ப்
போயிற்று. ஆகையால் கடவுளே எங்களை அங்கிருந்து வெளியேற்றிவிட்டது போன்று நாங்கள்
திடீரென புதிய இடத்தைத் தேடவும் பங்களாவைக் காலி செய்யவும் நேர்ந்தது. இந்த
சம்பவங்கள் ‘ஆத்ம கதை’[4]யில் வருவதால் இங்கே அவற்றைத்
திரும்பவும் எழுதவில்லை. கோசரப்பில் முன்னாலிருந்தே ஒரு குறை தோன்றிக்கொண்டிருந்தது.
அது சபர்மதிக்கு வந்ததும் நீங்கிற்று. பழமரங்கள், விவசாயம், மாடுகள் ஆகியவை இல்லாத ஆசிரமம் அறைகுறையானதென்றே சொல்லப்படும். சபர்மதியில் விவசாயம்
செய்வதற்கு வேண்டிய நிலமிருந்ததனால் உடனே விவசாயத்தை ஆரம்பிக்க முடிந்தது.
இதுவரையில் ஆசிரமத்தின் வரலாற்றை மேனோக்காக கவனித்தேன். இனி விரதங்களை அனுஷ்டிப்பதற்கும், காரியங்களைச் செய்வதற்கும் செய்யப்பட்ட முயற்சிகளில் எனக்கு நினைவிலிருப்பவைகளைக் குறிப்பிடுவதாக உத்தேசம். என்னுடைய தினக்குறிப்பு என்னிடமில்லை. அதிலும் ஆசிரம வாசிகளின் வாழ்க்கையின் நாசூக்கான சம்பவங்கள் எப்பொழுதுமே எழுதப்பட்டதில்லை. ஆகையால் ஞாபகத்தைக் கொண்டே இந்த சரித்திரம் எழுதப்படுகிறது. எனக்கு இவ்வாறு எழுதுவது புதிதல்ல. ‘தென்னாப்பிரிக்க சத்தியாக்ரஹ சரித்திரம்’ இவ்வாறே எழுதப்பட்டது. ‘சத்திய சோதனை’ எழுதப்பட்டதும் இப்படித்தான். இந்த சரித்திரத்திலும் உள்ள இந்தக் குறைபாட்டை வாசகர்கள் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.
***
[1] காந்திஜி
தென்னாப்பிரிக்காவிலிருந்தபொழுது ஒரு சமயம் நேடாலுக்குப் போய்க்கொண்டிருந்தார்.
அப்பொழுது அவருடைய நண்பரான போலக் என்பவர் ரயிலில் பொழுதுபோக்காகப் படிப்பதற்கென்று
ஆங்கில ஆசிரியர் ஜான் ரஸ்கினுடைய ‘Unto this Last’ என்ற புஸ்தகத்தைக் கொடுத்துப் போனார். அதைப்
படித்ததும் அதிலிருந்த கருத்துகள் காந்திஜிக்கு மிகவும் பிடித்தமாயிருக்கவே
அவற்றின்படி தம் வாழ்க்கையை நடத்துவதென முடிவுசெய்துகொண்டார். இதன் விளைவாக
பினிக்ஸ் ஆசிரமம் ஸ்தாபிக்கப்பட அவருடைய வாழ்க்கையிலும் மாறுதலேற்பட்டது. பிறகு
காந்திஜி ‘இந்தியன் ஒபினியன்’ என்ற தம் பத்திரிகையில் ‘ஸர்வோதயம்’ என்ற பெயருடன் அந்தப்
புத்தகத்தை வெளியிட்டார்.
இதன் தமிழ்ப் பதிப்பு ஏற்கெனவே நம்மால்
பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.
[2] ‘ஆத்ம கதை’ பாகம் 4. அத்தியாயம் 19.
[3] ஹர்மான் கலன்பாக் ஜர்மானிய யூதர்
வகுப்பைச் சேர்ந்தவர். அவர் தென்னாப்பிரிக்காவில் கட்டடங்கள் நிர்மாணிக்க உதவும்
எஞ்சினியராக இருந்துவந்தார். அவர் குடும்பமெதுவுமின்றி தனித்தே இருந்துவந்தபோதிலும்
வீட்டு வாடகையைத் தவிர மாதத்தில் ரூபாய் 1200 செலவு செய்துவந்தார். காந்திஜியுடன் பழக்கமுண்டாகவே
அவருக்கும் எளிய வாழ்க்கையில் ருசியுண்டாகிவிட்டது. அதுமுதல் மாதச் செலவை ரூ.120-க்குக் குறைத்துக்கொண்டார். காந்திஜி
செய்துவந்த ஒவ்வொரு சோதனையிலும் கலந்துகொள்வது அவர் வழக்கம். அவர் காந்திஜியின்
மதிக்கவொண்ணாத நண்பராயிருந்துவந்தார்; ஒருதடவை சிறைக்கும் சென்றார். காந்திஜி இந்தியாவுக்கு வந்தபிறகு அவரும் இங்கே வரவிருந்தார்.
ஆனால் அதற்குள் முதல் மகாயுத்தம் தொடங்கிவிடவே ஜர்மானியர் என்ற காரணத்தினால் அவர்
யுத்தக் கைதியாக்கப்பட்டார். ஆகவே, அப்பொழுது அவரால் இந்தியாவுக்கு வரமுடியாமற் போய்விட்டது. பிறகு 1937-ல் அவர் இந்தியாவுக்கு வந்தார்.
அந்த சமயத்தில் ‘ஹரிஜன பந்து’வில் அவரைக் குறித்து
மகாதேவ் பாய் எழுதியிருந்த கட்டுரையிலிருந்து ஒருபகுதி கீழே தரப்படுகிறது.
இதிலிருந்து காந்திஜிக்கும் அவருக்கும் இருந்துவந்த சம்பந்தத்தை ஒருவாறு உணர்ந்துகொள்ளலாம்:
‘இந்த நண்பர்களின் தினசரி வாழ்க்கையில்
நடந்த நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்த்து கலன்பாக், ‘எவ்வளவோ முறை இவர் (காந்திஜி) என்னை அழவும்
வைத்திருக்கிறார்’ என்றார்.’
‘நான் அவருக்கு மோட்டார், தூரதிருஷ்டிக் கண்ணாடி ஆகியவற்றைப் பற்றிய
சம்பவங்களை நினைவுறுத்தினேன். அவற்றை அவர் எவ்வளவு தத்ரூபமாக விவரித்தாரோ அவ்வளவு
அழகாக காந்திஜியின் ‘சுயசரிதை’யிலும் அவை நமக்குக் காணக் கிடைக்கவில்லை. அதில்
இந்த சம்பவங்கள் குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும், நடந்ததை நடந்ததுபோல் விஸ்தாரமாக வர்ணிக்கப்பட்டிருக்கவில்லை.
கலன்பாக் சொன்னதாவது: ‘காந்திஜி சிறையிலிருந்து விடுதலையாகவிருந்த தினத்தன்று நான்
அவரை வீட்டுக்கு அழைத்துவருவதற்காக ஒரு மோட்டார் விலைக்கு வாங்கினேன். இவர் அதில்
என்னவோ உட்கார்ந்தாராயினும் இவருக்கு அதனால் உண்டான வருத்தத்தை இவர் முகபாவத்திலிருந்தே
கண்டுகொண்டேன். அந்த சமயத்தில் இவர் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு
இருந்துவிட்டபோதிலும் வீட்டையடைந்ததும் என்னுடைய முட்டாள்தனத்திற்காக என்னை மிகவும்
கண்டித்தார். இந்த மோட்டாரை தீயிட்டுக் கொளுத்து என்றார். “எப்படித் தீயிடுவேன்?
புதிதாக வாங்கிய மோட்டாரைக்
கொளுத்திவிடக்கூடிய அளவுக்கு நான். பணக்காரனில்லையே” என்றேன். பெருந்தர்க்கம் நடந்தது. பிறகு
கொளுத்துவதற்கு பதிலாக மோட்டாரை விற்றுவிடலாமென்பதை இவர் ஒப்புக்கொண்டார்.
மோட்டார் ஒரு வருஷம் பூராவும், ‘ஷெட்டி’லேயே பூட்டப்பட்டுக் கிடந்தது. பிறகு அதை விற்றுவிட்டேன். இந்த
சம்பவத்தின் விளைவாக இதன்பிறகு 11 வருஷம் வரையில் நான் மோட்டாரே வாங்கவில்லை.’
‘நான் சாப்பிடும்பொழுது உபயோகிக்கும்
கைக்குட்டைகளைத் தொங்கவிடுவதற்கு வெள்ளிக் கொக்கிகள் வாங்கிவருவதுண்டு. இம்மாதிரியான
சிறுசிறு விஷயங்களுக்கெல்லாம் இவரைக் கேட்கவேண்டும் என்று எனக்குத் தோன்றுவதில்லை.
அந்தக் கொக்கிகளை இவர் குப்பைக்கூடைகளில் எறிந்துவிட்டு, மிகுந்த வருத்தத்துடன், “நீ இன்னும் என்னைப் புரிந்துகொள்ளவில்லையா?” என்று கேட்பார். ஆனால் இந்தச் சிறு
விஷயங்களினால் இவருக்குண்டான துக்கம் எனக்குத் தெரிந்திருந்ததுதான். அவர் என்னிடம்
மிகுந்த அன்பு கொண்டிருந்ததனால் மற்றவர்களைக் காட்டிலும் என்னிடம் மிகவும்
கடுமையாக நடந்துகொள்வார். இது இவருடைய அன்பிலிருந்து விளைந்த கொடுமையாகும். ஆனால்
எனக்கு இந்த அன்பு கிடைத்ததை நான் என் அதிர்ஷ்டமென்றே நினைக்கிறேன்.’ (‘ஹரிஜன பந்து’,
30-5-37)
[4] ‘ஆத்மகதை’, பாகம் 5, அத்தியாயம் 10, அத்தியாயம்
21.
*
No comments:
Post a Comment