மஹாத்மா காந்தியின் 'ஆசிரம வாழ்க்கை' 13 | கோ சேவை
இங்கே கல்வியென்பது அதன் சிறப்பு, சாதாரணம் ஆகிய இரு பொருளிலும்
கையாளப்பட்டிருக்கிறது. இந்தக் கல்விச் சோதனையில் ஆசிரமத்திற்கு ஏற்பட்டது போன்ற
பரீட்சைகள் வேறு எதிலும் ஏற்படவில்லை.
ஆசிரமம் ஸ்தாபிக்கப்பட்டவுடனேயே ஆசிரமத்திலுள்ள
பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் படிப்புச் சொல்லிக் கொடுத்தல் தர்மமாகுமென்பதைக்
கண்டேன். பிற்காலத்திலோ ஆசிரமத்திற்கு படிப்பில்லாத ஆண்களும் வருவதால்
அவர்களுக்கும் கல்வியளிக்க ஏற்பாடு செய்யவேண்டுமென்று தெரிந்தது. ஆசிரமத்தில்
இருந்தவர்களினால் போதனையளிக்க இயலாதென்று தெளிவாகத் தெரிந்துவிட்டது.
போதனையளிக்கக்கூடியவர்கள் நம்முடன் இருப்பார்கள் என்று சிறிதேனும் நம்பிக்கை கொள்ளவேண்டுமென்றால்
ஆசிரியர்களின் விஷயத்தில் பிரம்மசரியத்தைப் பற்றிய விதிகளை கடுமையாக வைத்திருப்பதில்
பிரயோஜனமில்லை. இந்த எண்ணத்தினால் ஆசிரமம் இரு கூறுகளாகப் பிரிந்துவிட்டது. ஒன்று
ஆசிரியர் பகுதி, மற்றது
ஆசிரமப் பகுதி. கட்டடங்களும் தனித்தனியாகக் கட்டப்பட்டன.
மனித ஜாதி தன் சுபாவத்தை திடீரென்று எப்படி
விடும்? எவ்வளவோ
முயன்றும் இந்தப் பிரிவினை ஏற்பட்டவுடனே உயர்வு தாழ்வென்ற கருத்து பரவலாயிற்று.
ஆசிரமப் பகுதியிலிருந்தவர்களிடையே கர்வம் தலையெடுத்தது. ஆசிரியர் பகுதி இதை எப்படிப்
பொறுக்கும்? இந்த மமதை ஆசிரமத்தின் நோக்கத்திற்கே மாறானதாகையால்,
பொய்யுமாயிற்று. பூர்ண பிரம்மசரியம்
இன்றியமையாததென்றால் பிரிவினையும் இயற்கையானதே. ஆனால் பூர்ண பிரம்மசாரிகளாய் இன்று
இருப்பவர்கள் தம்மைப் பெரியவர்களென்று கருதிக்கொள்வதற்குக் காரணமெதுவுமேயில்லை.
பூர்ண பிரம்மசரியத்தை அனுஷ்டிப்பதாகச் சொல்லிக்கொள்வோர், தம் மனம் அல்லது கருத்தில் நாளுக்கு நாள்
வீழ்ச்சியுற்றுக்கொண்டிருப்பதும் பிரம்மசரியத்தைப் பாதுகாப்பதாகச் சொல்லிக்கொள்ளாவிட்டாலும்
அதை விரும்புகிறவர்கள் நாளுக்கு நாள் முன்னேறிக்கொண்டிருப்பதும் சாத்தியமே. அறிவுக்கு
இவையெல்லாம் புரிந்தபோதிலும் இவற்றின்படி நடத்தல் எல்லோருக்குமே சிரமமாகிவிட்டது.
குழப்பத்திற்குக் காரணமான ஒரு விஷயம் இதுவாயிருக்க,
மற்றொன்றும் தோன்றியது. போதனையின்
முறையின் விஷயத்தில் அபிப்பிராயபேதம் தோன்றிவிட அதனால் ஆசிரம நிர்வாகத்தில்
சிரமங்கள் ஏற்படலாயின. எவ்வளவோ விவாதங்களும் சண்டைகளும் நடந்து விரோதவிஷம்
தோன்றிவிடவே மனம் கசந்துபோயிற்று. இவ்வளவு நடந்தும் இறுதியில் எல்லாம் சாந்தமாகிவிட்டன;
அல்லது எல்லோரும் பரஸ்பரம் பொறுமையுடன்
பழகலானார்கள். இதில் ஆசிரமத்தின் மூலகாரணமான சத்தியத்திற்கு வெற்றியேற்பட்டதாகத்
தெரிந்தது. அபிப்பிராய பேதம் உள்ளவர்களின் மனதில் கல்மஷம் இருக்கவில்லை. எவரும்
ஆபாஸமான பூசல்களில் இறங்கவில்லை. ஏற்பட்டுவிட்ட வேற்றுமையை எண்ண வருத்தமாயிருந்தது.
உண்மையின்படி நடக்க விருப்பமிருந்தது. அவரவர் தம் அபிப்பிராயங்களையே
வற்புறுத்தியதனால் எதிராளியின் வாதங்களைப் புரிந்துகொள்ள முடியாமற் போய்விட
அதினின்றும் ஆவேசம் தோன்றிற்று. இதில் ஆசிரமவாசிகள் ஒருவர் மற்றவரிடம் எவ்வளவு
தாராளமாக நடந்துகொள்ளுகிறார்களென்பது பரீட்சிக்கப்பட்டது.
எத்தகைய கல்வியளிக்க வேண்டும், எவ்வளவு காலத்திற்கு அளிக்கவேண்டும் என்பது பற்றி
ஆசிரமத்தில் எவ்வளவோ சர்ச்சைகள் நடந்தன. இப்பொழுதும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாக
நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. இதுபற்றிய என் கருத்துகள் வேறு. இவ்விஷயத்தில் என்
தோழர்கள் அனைவரையும் நான் சொல்வதை ஏற்கச் செய்ய முடியுமென்று சொல்லமுடியாது.
ஆகையால் ஆசிரமத்தின் லட்சியம் இதுதானென்று ஓரளவேனும் உறுதியாகச் சொல்வது கடினம்.
என் கருத்தோ பின்வருமாறு உள்ளது:
1. பிள்ளைகளுக்கும், பெண்களுக்கும் சேர்த்தே கல்வி போதிக்கவேண்டும்.
8-வயது வரையில் பிள்ளைப் பருவமென்று கருதவேண்டும்.
2. அவர்களுடைய நேரத்தின் பெரும்பகுதி உடல்
உழைப்பில் கழியும்படி செய்யவேண்டும். உழைத்துச் செய்யும் அந்த வேலையும்
ஆசிரியருடைய பார்வையிலேயே நடைபெற வேண்டும். உடல் உழைப்பு படிப்பின் ஒரு பகுதி
என்று கருதப்பட வேண்டும்.
3. ஒவ்வொரு மாணவ மாணவியினுடைய மனப்போக்கைத்
தெரிந்து அவரவருக்குத் தகுந்த வேலை தரவேண்டும்.
4. ஒவ்வொரு வேலையையும் செய்யச் சொல்லும்பொழுது,
அதன் காரணத்தை அவர்களுக்கு விளக்கவேண்டும்.
5. குழந்தை விஷயங்களைப் புரிந்துகொள்ளும் வயதடைந்தது
முதல் அவனுக்கு (அவளுக்கு)ப் பொது அறிவு உண்டாகச் செய்யவேண்டும். இந்தப் போதனையை
எழுத்துக் கற்பிப்பதற்கு முன்னமேயே தொடங்கிவிட வேண்டும்.
6. எழுத்தறிவைச் சித்திரக்கலையின் ஒரு
பகுதியாகக் கருதி முதலில் குழந்தைக்கு ரேகைக் கணிதத்தின் உருவங்களை வரையக் கற்றுக்கொடுக்க
வேண்டும். விரல்கள் வசமாகி எழுத வந்தவுடன் எழுத்துகள் வரையக் கற்பிக்க வேண்டும்.
அதாவது, ஆரம்பம் முதலே
சுத்தமாக எழுத்துகளை எழுதக் கற்பிக்க வேண்டும்.
7. எழுதுவதற்கு முன் படிப்பதற்கு போதிக்க
வேண்டும். அதாவது, எழுத்துகளை
சித்திரங்களென்று கருதி அவற்றைத் தெரிந்துகொள்ளவும் பிறகு எழுதவும் கற்கட்டும்.
8. இவ்வாறு ஆசிரியரிடமிருந்து வாய்ப்பாடமாகவே
படிக்கும் குழந்தைக்கு 8-வயதுக்குள், அதன் வயதைக் கவனிக்கும்பொழுது, மிகவும் அதிகமான கல்வி வந்திருக்க வேண்டும்.
9. குழந்தைக்கு நிர்ப்பந்தமாக ஒன்றும்
கற்பிக்கலாகாது.
10. அவன் (அவள்) எதைக் கற்றாலும் ஆசையுடன்
கற்பது இன்றியமையாதது.
11. குழந்தைக்கு படிப்பு விளையாட்டைப்போல்
இருக்கவேண்டும். விளையாட்டும் படிப்பினுடைய இன்றியமையாத அம்சமாகும்.
12. குழந்தைகளுடைய படிப்பெல்லாம் தாய்
பாஷையிலேயே நடைபெறவேண்டும்.
13. குழந்தைகளுக்கு ஹிந்தி-உருதுவின் அறிவு
ராஷ்டிர பாஷை என்ற வகையில் அளிக்கப்படவேண்டும். இது எழுத்தைப் போதிப்பதற்கு
முன்னமேயே ஆரம்பமாக வேண்டும்.
14. மதபோதனை இன்றியமையாததாகக் கருதப்பட
வேண்டும். அது புஸ்தகத்தின் மூலமாகவல்ல, ஆசிரியருடைய நடத்தை, சொல்
இவற்றிலிருந்து கிடைக்க வேண்டும்.
15. 9-லிருந்து 16-வயது வரையில் இரண்டாவது பருவமாகும்.
16. இரண்டாவது பருவத்திலும் இறுதிவரையில்
பெண்களுக்கும் பையன்களுக்கும் சேர்த்தே போதனை செய்தல் நலம்.
17. இரண்டாவது பருவத்தில் ஹிந்துப்
பிள்ளைகளுக்கு ஸம்ஸ்கிருதமும், முஸ்லிம் பிள்ளைகளுக்கு அராபி பாஷையும் சொல்லிக் கொடுக்கவேண்டும்.
18. இந்தப் பருவத்திலும், உடலுழைப்பு நடைபெற வேண்டியதே. எழுத்தறிவு
பெறுவதற்குள்ள நேரத்தை, தேவையையொட்டி
அதிகமாக்கவேண்டும்.
19. இந்தப் பருவத்தில், பையனுடைய பெற்றோருக்கு நிச்சயமான தொழில்
ஒன்று இருக்குமானால், அதில் அவனைப்
பயிற்றி அதன் மூலமாகவே ஜீவிக்க விரும்பும்படியாக அவனைத் தயாரிக்கவேண்டும். இந்த
விதி பெண்களுக்கல்ல.
20. 16-வயதுக்குள்ளாக பிள்ளைகளுக்கு உலக
சரித்திரம், பூகோளம், வனஸ்பதி சாஸ்திரம், வானசாஸ்திரம், கணிதம், ரேகா கணிதம், பீஜ கணிதம்
ஆகியவை பொதுவாகத் தெரிந்துவிடவேண்டும்.
21. 16-வயதான பிள்ளைகள் தையலும், சமையலும் கற்கவேண்டும்.
22. 16 முதல் 25 வயது வரையில் உள்ள பருவத்தை
மூன்றாவது பருவமென்று கருதுகிறேன். இந்தப் பருவத்தில் ஒவ்வொரு யுவனுக்கும்
யுவதிக்கும் அவர்களுடைய விருப்பப்படி போதனை அளிக்கவேண்டும்.
23. 9-வயதுக்குப் பிறகு தொடங்கும் கல்வி, தன் செலவைத் தானே பூர்த்தி செய்வதாய்
இருக்கவேண்டும். அதாவது கல்வி பெறும் மாணவன், பாடசாலையின் செலவுக்கு உதவக்கூடியதான ஏதேனும் ஒரு
தொழிலில் ஈடுபடவேண்டும்.
24. பாடசாலையின் ஆரம்பம் முதலே வருமானம்
இருக்கவேண்டியதே; ஆனால் முதல்
வருஷத்தில் முழுச் செலவுக்கும் வேண்டிய வருமானம் இராது.
25. ஆசிரியர்களுக்குப் பெருத்த சம்பளங்கள்
இருக்கமுடியாது; ஆனால்
வயிற்றுக்குப் போதுமான பணம் கிடைக்கவேண்டும். அவர்கள் ஊழிய மனப்பான்மை உள்ளவர்களாக
இருக்கவேண்டும். கிடைத்தவர்களையெல்லாம் கொண்டு ஆரம்ப போதனை நடத்தச் செய்யும்
வழக்கம் சரியல்ல. எல்லா ஆசிரியர்களும் நன்னடத்தையுள்ளவர்களாய் இருக்கவேண்டும்.
26. பாடசாலைக்குப் பெரிய விலையுள்ள கட்டடம்
தேவையில்லை.
27. ஆங்கிலம், ஒரு பாஷையைப்போல் போதிக்கப்படவேண்டும்; பாட திட்டத்தில் அதற்கு இடம்
இருக்கவேண்டும். ஹிந்துஸ்தானி தேச பாஷையாக இருப்பதுபோல் ஆங்கிலம், வெளிநாட்டு விவகாரங்களுக்கும், வியாபாரம் செய்வதற்கும் உபயோகமாய்
இருக்கும்.
இதில் சாதாரணக் கல்வியைபற்றி நான் கொண்டுள்ள
கருத்துகளில் பெரும்பாலானவை வந்துவிட்டன. பெண்களுக்கான விசேஷக் கல்வியை எப்படி
எங்கிருந்து தொடங்குவது என்ற விஷயமாக என்னாலேயே முடிவெதுவும் செய்யமுடியவில்லை.
ஆணுக்குக் கிடைக்கும் வசதிகள் அவ்வளவும் பெண்ணுக்கும் கிடைக்கவேண்டுமென்ற
விஷயத்தில் எனக்குச் சந்தேகமில்லை. மேலும், பிரத்தியேகமான வசதிகள் தேவையானால் அவையும் கிடைக்கவேண்டியதே.
வயதுவந்த எழுத்தறிவில்லாத ஆண்பெண்களுக்கு
இரவு வகுப்புகள் அவசியமே. ஆனால் அவர்களுக்கு எழுத்தறிவு ஏற்பட்டுத்தான் ஆகவேண்டுமென்று
நான் எண்ணவில்லை. அவர்களுக்கு உபந்நியாசங்கள் ஆகியவற்றின் மூலமாக சாதாரண
ஞானமேற்படுவதற்கு வசதியிருக்க வேண்டும். எழுதப் படிக்கத் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கோ
அதற்கும் பூர்ண வசதிகள் செய்துதர வேண்டும்.
மேலே உள்ள வாக்கியங்களிலிருந்து, இந்த எல்லா அம்சங்களிலும் என்
அபிப்பிராயங்களும் என் தோழர்களின் அபிப்பிராயங்களும் ஒத்திருக்கவில்லை என்பதல்ல.
ஆனால் ஒருசில விஷயங்களில் நுணுக்கமான கருத்து வேற்றுமையிருப்பதால் மேலே கூறியவற்றை
என் அபிப்பிராயங்களென்று சொன்னேன். ஆசிரமத்தில் இன்றுவரையில் நாங்கள் செய்துள்ள
சோதனைகளிலிருந்து நாங்கள் உறுதியான முடிவுகளை அடைந்துவிட்டோமென்று சொல்வதற்கில்லை.
ஒரு விஷயத்தில் மட்டும் எங்கள் எல்லோருடைய அபிப்பிராயங்களும் ஒன்றே. அதாவது,
கல்வியில் கைத்தொழில்களுக்கு, அவற்றிலும் முக்கியமாக நூற்புக்கு அதிக இடம்
அளிக்கப்பட வேண்டும். கல்வி பெரும்பாலும் தன்செலவை தானே
சம்பாதித்துக்கொள்ளக்கூடியதாகவும், கிராம வாழ்க்கையை பலம்பெறச் செய்வதாகவும், கிராம வாழ்க்கையுடன் தொடர்புறச் செய்வதாகவும் இருக்கவேண்டும்
என்பது.
கல்வி சம்பந்தமான சோதனைகளில் ஆசிரமத்திற்கு
பெண்களின் விஷயத்திலேயே அதிக வெற்றி கிடைத்திருக்கிறதென்பது என் அபிப்பிராயம். அது
எவ்வாறென்றால் ஆசிரமப் பெண்களுக்கு சுதந்திர மனப்பான்மையும், தன்னம்பிக்கையும் எந்த அளவுக்கு
ஏற்பட்டிருக்கிறதோ அந்த அளவுக்கு இதே காலத்திற்குள் இதே வகுப்புப் பெண்களுக்கு
வேறெங்கும் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. இதற்குக் காரணம் ஆசிரமத்தின்
சூழ்நிலையே. ஆசிரமத்தில் புருஷர்களுக்கில்லாத எந்தக் கட்டுப்பாடும், நிர்ப்பந்தமும் பெண்களுக்கில்லை. பெண்களின்
மனதில் சமத்துவக் கருத்து ஆரம்ப முதலே உண்டாக்கப்படுகிறது. வேலைகளில் எல்லோரும்
சமமாகவே கலந்துகொள்ள வேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட ஒரு காரியத்தை பெண்களேதான்
செய்யவேண்டும், ஆண்கள் செய்யவே
கூடாதென்ற வேற்றுமை பாராட்டப்படுவதில்லை. சமையல் வேலையை பெண்கள் ஆண்களாகிய
இருவருமே செய்துவந்திருக்கிறார்கள்; செய்துவருகிறார்கள். பெண்ணினால் செய்யவே முடியாத உடலுழைப்பு அவளுக்குக்
கொடுக்கப்படுவதில்லை. இதைத்தவிர ஆண்களும் பெண்களும் சேர்ந்தே செய்யமுடியாதென்று
சொல்லக்கூடிய தொழில் ஒன்றுகூட இல்லை. முகத்தை மூடிக்கொள்ளுதல் அல்லது கோஷா முறை
ஆசிரமத்தில் கிடையவே கிடையாது. இவ்வாறு ஒரு பெண் எங்கிருந்து வந்தவளாயினும் சரி,
அவளுக்கு ஆசிரமத்திற்கு வந்ததுமே ஒரு
புதிதான சுதந்திரச் சூழ்நிலையின் அனுபவம் ஏற்படுவதால் இங்கே பயமெதுவும் இல்லை என்ற
உணர்ச்சி ஏற்படும்படி ஆசிரமம் அமைந்துள்ளது. இந்த விளைவுக்கு பெரும் பகுதியும்
பிரம்மசரிய விரதமே காரணமென்பது என் நம்பிக்கை. நல்ல வயதான பெண்கள் குமாரிகளாகவே
இருக்கிறார்கள். ஆசிரமத்தின் இந்தச் சோதனையில் பேராபத்துக்கு இடமுண்டு என்ற விஷயம்
ஆசிரமவாசிகளான எங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் இத்தகைய ஆபத்தை ஏற்காதவரையில்
பெண்கள் முன்னேறுவதும் அவர்களிடையே விழிப்பேற்படுவதும் அசாத்தியமென்று
தோன்றுகிறது.
தீண்டாமையைப் போக்குவது எவ்வாறு அவசியமோ
அவ்வாறே பெண்களின் விஷயத்தில் சில பிழைகளையும் எண்ணங்களையும்
வழக்கங்களையும் போக்குதல்
அவசியம். பாலர் விவாகம், ஒவ்வொரு
பெண்ணும் விவாகம் செய்துகொண்டுதான் ஆகவேண்டும்
என்று வற்புறுத்தும் தர்மம், வயது
வருவதற்கு முன்னமேயே விவாகமாகிவிட வேண்டுமென்று கருதப்படும் நிர்ப்பந்தம், விதவைகளுக்கு மீண்டும் விவாகம்
செய்யக்கூடாதென்று சமூகம் விதித்துள்ள கட்டுப்பாடு முதலிய வழக்கங்கள் நீங்காத
வரையில் பெண் சமூகம் முன்னேறுவதற்கில்லை. இந்த எண்ணத்தினால் ஆசிரமம் பெண்கள்
வந்தவுடனேயே மேலே கூறிய வழக்கங்கள் தவறானவை, தர்மத்திற்கு மாறானவை என்று போதிக்கத் தொடங்குகிறது.
அவர்கள் இந்த போதனையின்படி காரியமும் செய்யப்படுவதைப் பார்த்துக்கொண்டிருப்பதால்
அவர்களுடைய மனம் புண்படாததோடு இவையெல்லாம் ஏட்டுச் சுரைக்காய், கறிக்காகாது, இவையெல்லாம் சொல்லவும் கேட்கவுமே தவிர
நடத்துவதற்கில்லை என்று அவர்களுக்குத் தோன்றுவதில்லை.
நாம் எதைப் பொதுவாகக் கல்வியென்று
கருதுகிறோமோ அது ஆசிரமத்தில் அதிகமாகக் காணப்படுவதில்லை. ஆயினும் குழந்தைகள் முதல்
முதியோர் வரையில் ஆண்கள் பெண்கள் அத்தனை பேருக்கும் கல்வி கற்பதில் ஆசையுண்டாகி,
கல்வி பெறவேண்டுமென்ற விருப்பம்
அதிகமாகிக்கொண்டே வருவதால் அதற்குப் போதிய நேரம் இல்லாதிருக்கிறதே என்றும் குறை
கூறப்படுகிறதென்பது என் அபிப்பிராயம். எனக்கு இது நல்ல லட்சணமென்றே தோன்றுகிறது.
ஆசிரமத்திற்கு வருகிறவர்கள் கல்வியில் ருசியுள்ளவர்களாகவோ, கல்வி பெற்றுள்ளவர்களாகவோ இருப்பதில்லை. அனேகருக்கு
எழுதப்படிக்க மட்டுமே தெரியும். வெளியிலோ இதற்குமேல் போவதற்கு ஆசையுமிருந்ததில்லை.
ஆசிரமத்தில் சிறிது காலமிருந்த பிறகு எழுத்தறிவை வளர்த்துக்கொள்ள ஊக்கம்
பிறக்கிறது. எந்த ஸ்தாபனம் இதைச் செய்ய முடிகிறதோ அதற்கு மேலே செல்லவேண்டிய வழி
சுலபமாகிவிடுகிறது. ஏனெனில், முதல்படி பெரும்பாலும் படிப்பில் ஆசையுண்டாக்குவதே ஆகும். ஆசிரமத்தில்
சேருகிறவர்களுக்கு இது விரைவில் உண்டாகிவிடுகிறது. இந்த ஆசையைப் பூர்த்தி செய்துகொள்வதற்குத்
தேவையான வசதிகளை ஆசிரமத்தினால் கொடுக்க இயலாமையைக் குறித்து எனக்கு அதிக
வருத்தமில்லை. ஆசிரமத்தில் இடப்படும் நிபந்தனைகள் காரணமாக கல்வியளிக்கும்
காரியத்தைச் செய்யக்கூடியவர்கள் எந்தக் காலத்திலும் ஆசிரமத்திற்கு அதிகமாக
வரமாட்டார்கள். ஆகையால் ஆசிரமத்திலேயே இவ்வேலைக்காகத் தயாராவோரைக் கொண்டு
திருப்தியடைய வேண்டியிருக்கிறது. ஆனால் ஆசிரமத்தின் வேலைகள் காரணமாக இம்மாதிரியான
ஆசிரியர்கள் தயாராகமாட்டார்களென்பதோ தயாராவதற்கு அதிக காலம் பிடிக்குமென்பதோ அல்ல.
இவ்வாறு இருந்தபோதிலும் ஞானம், பெறவேண்டுமென்று உண்மையில் ஊக்கங்கொண்டுவிட்டவர்கள் பிற்காலத்திலும் அதைப்
பெற்றே தீருவார்கள். கல்வி பெறுவதற்கு காலத்தின் வரம்பெதுவும் கிடையாது. உண்மைக்
கல்வி பள்ளிக்கூடத்தை விட்ட பிறகுதான் தொடங்குகிறது. அதன் பெருமையை உணர்ந்தவன்
எப்பொழுதும் மாணவனாகவேதான்ரு இருப்பான். தன்னுடைய கடமையை நிறைவேற்றிக்கொண்டும் நிறைவேற்றும்
பொருட்டும் மனிதன் தன் அறிவை நாளுக்கு நாள் வளர்த்துக்கொண்டே இருக்கவேண்டும்.
எல்லாக் காரியங்களையும் புரிந்துகொண்டு செய்கிறவனுடைய அறிவு நாளுக்கு நாள்
வளர்ந்துகொண்டேதான் இருக்கவேண்டும். இந்த விஷயம் ஆசிரமத்தில் நன்றாகப்
புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.
கல்வியின் முன்னேற்றத்தில் ஒரு விஷயம் தடையை
உண்டாக்குகிறது. ஆசிரியரில்லாமல் கல்வி பெறவே முடியாது என்ற தவறான எண்ணம்
சமூகத்தின் அறிவை மழுங்கச் செய்துகொண்டிருக்கிறது. மனிதனுடைய உண்மையான ஆசிரியன்
அவனேதான். இந்தக் காலத்திலோ அவரவர் தாமே கல்வி பெறுவதற்கு உதவும் சாதனங்கள்
எத்தனையோ தோன்றிக்கொண்டிருக்கின்றன. கவனமிருக்குமானால் ஒவ்வொருவனும் எத்தனையோ
விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம். ஆசிரியன் தேவையாயிருந்தாலும் அவனையும்
தேடிக்கொண்டுவிடலாம். அனுபவமென்பது எல்லாவற்றிலும் பெரிய பள்ளிக்கூடம். எத்தனையோ
தொழில்களை அவை நடைபெறும் கடைகளிலும் தொழிற்சாலைகளிலும் கற்கமுடியுமே தவிர பள்ளிக்கூடங்களில்
கற்க முடிவதில்லை. பள்ளிக்கூடங்களில் கற்பிக்கப்படுவது பெரும்பாலும் கிளிப்பாடமே.
ஆகையால் வயதுவந்தவர்களுக்கு பள்ளிக்கூடத்தைக் காட்டிலும் விருப்பமும் உற்சாகமும்
தன்னம்பிக்கையுமே தேவை.
குழந்தைகளுக்குக் கல்வியளிப்பது பெற்றோரின்
கடமையாகும். இவ்வாறு எண்ணுவோமானால் ஏராளமான பள்ளிக்கூடங்களை அமைப்பதைவிட உண்மையான
கல்வியின் சூழ்நிலையைத் தோற்றுவித்தல் அதிக அவசியமாகும். அது தோன்றிவிடுமானால்
தேவையான இடங்களில் பள்ளிக்கூடங்களும் ஏற்பட்டே தீரும்.
ஆசிரமத்தின் கல்வி இந்த நோக்குடன் நடைபெறுகிறது.
இவ்வகையில் ஆலோசிக்கும்பொழுது ஓரளவுக்கு நல்ல வெற்றியும் ஏற்பட்டிருக்கிறது.
ஆசிரமத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒரு பள்ளிக்கூடமே.
***
No comments:
Post a Comment