Pages

Saturday, February 25, 2023

மஹாத்மா காந்தியின் 'ஆசிரம வாழ்க்கை' 13 | கோ சேவை

மஹாத்மா காந்தியின் 'ஆசிரம வாழ்க்கை' 12 | விவசாயம்

ஆசிரமத்தின் லட்சியமோ பாலில்லாமல் ஜீவிப்பதாகும். மாமிசத்தை மனிதனுடைய உணவல்லவென்று ஆசிரமம் கருதுவதைப்போலவே மிருகங்களின் பாலையும் கருதுகிறது. ஒரு வருஷம் வரையில் மிகவும் பிடிவாதமாக ஆசிரமத்தில் பாலும் நெய்யும் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால் பிறகு இந்தச் சோதனையை நிறுத்தவேண்டியதாயிற்று. ஆசிரமத்தில் பாதுகாக்கப்படும் குழந்தைகளின் உடல் பலஹீனமாகி வந்தது. அவர்கள் வயதில் வளர்ந்துவந்தார்களே தவிர, அவர்களின் பலம் வரவரக் குன்றலாயிற்று. ஆகையால் சிறிது சிறிதாக நெய்யும், பிறகு பாலும் சாப்பிடுவது ஆரம்பமாகிவிட்டது. இது தொடங்கியவுடனே பசுக்களை வளர்க்காமல் காரியம் நடைபெறாது என்ற முடிவேற்படுவது இயற்கையே.

ஆசிரமம் பசுப் பாதுகாப்பு தர்மத்தை நம்புகிறது. ‘கோ ரட்சை’ அல்லது ‘பசுப் பாதுகாப்பு’ என்ற சொல்லில் கர்வமும் ஆடம்பரமும் த்வனிக்கின்றன. மனிதன் பிராணியின் பாதுகாப்பாளனாக முடியாது. தன் பாதுகாப்புக்கே பிறர் உதவியை நாடுபவனால் பிறரைப் பாதுகாக்க முடியாது. எல்லா உயிர்களையுமே பாதுகாப்பவர் அந்த ஒரு கடவுளே. இத்தகைய எண்ணத்தினால் ஆசிரமம் 'கோ ரட்சை' என்பதற்குப் பதிலாக ‘கோ சேவை’ என்ற சொல்லை பிரயோகிப்பதை விரும்புகிறது. ஆனால் தான் பால், நெய் ஆகியவற்றை விட்டு வெறும் பாரமாத்திக நோக்குடன் கோ சேவை செய்யவேண்டுமென்ற ஆசிரமத்தின் விருப்பம் நிறைவேறாமல் போகவே மாடுகள் வளர்க்கப்படலாயின. ஆரம்பத்தில் பசுக்களும் எருதுகளும் மட்டும் வைத்திருப்பதே தர்மமென்று தெளிவாகவில்லை. ஆகையால் பசுக்கள் எருதுகளுடன் எருமைகளும் வளர்க்கப்பட்டு வந்தன.

ஆனால் இந்தக் காலத்தில் கோ சேவை செய்வதனாலேயே மனிதனைத் தவிர மற்ற எல்லாப் பிராணிகளுக்கும் சேவை செய்ததாகிவிடுகிறது என்பது வரவரத் தெளிவாயிற்று. கோ சேவை மனிதனுக்கு வழி துலக்குவதாகும். இதற்கு மேலே போவதற்கு அவனிடம் சாதனமில்லை. இதைத் தவிர கோ வதையே ஹிந்து முஸ்லிம் சண்டைக்கு ஒரு காரணமாகிவிடுகிறது. முஸல்மானிடமிருந்து பலவந்தமாகப் பசுவைப் பறிப்பதற்கு ஹிந்துவுக்கு அதிகாரமில்லை; இது அவனுடைய கடமையல்லவென்பது ஆசிரமத்தின் அபிப்பிராயம். பிறரை நிர்ப்பந்தப்படுத்தி அவரிடமிருந்து பசுவை விடுவிப்பதனால் கோ சேவையோ, கோ ரட்சையோ நடப்பதற்கு பதிலாக அதன் கொலை விரைவில் நடந்துவிடக்கூடும். தானே பசுவுக்குச் செய்யவேண்டிய கடமையை நிறைவேற்றி - பசுவை மதிப்புள்ளதாகச் செய்வதன் மூலமே ஹிந்து பசுவுக்கும் அதன் கன்றுகளுக்கும் சேவை செய்யவோ பாதுகாப்பளிக்கவோ முடியும். இந்தக் காரியத்தை தற்காலத்தில் ஹிந்து சமூகம் விட்டுவிட்டது. பசுவின் தேவை குறைவே. பசுவைவிட எருமை அதிக பால் தருகிறது. அதன் பாலில் நெய் அதிகமாயிருக்கிறது. அதை வைத்திருப்பதில் செலவு குறைகிறது. மேலும், எருமையின் கன்று கடாவாக விருந்தால் பலருக்கு அது எந்த கதியாயிற்று என்ற கவலையே இருப்பதில்லை; ஒருக்கால் இருந்தாலும் வெகுகுறைவே; ஏனென்றால் எருமையைப் பாதுகாப்பதோ அதற்கு வேண்டியதைச் செய்வதோ அவர்களுடைய தர்மமே அல்ல. இத்தகைய இழிவான கணக்கிட்டு ஹிந்து சமூகம் கோழைத்தனத்தினாலும் அறியாமையினாலும் சுயநலத்தினாலும் பசுவை அலட்சியம் செய்து எருமைக்கு இடங்கொடுத்ததன் மூலமாக இரண்டுக்குமே தீமை விளைவித்திருக்கிறது. எருமையை வளர்ப்பதால் அதன் நலனும் பாதுகாக்கப்படுவதில்லை. எருமைக்கு தான் சுதந்திரமாயிருப்பதில்தான் நன்மையுண்டு. எருமையை வளர்ப்பதென்றால் அதன் கடாக் கன்றுக்குத் துன்பமளித்துக் கொல்வதென்றே பொருள். இது எல்லா மாகாணங்களிலும் நடக்கவில்லை; ஆனால் குஜராத்திலோ கடாவை விவசாயத்தில் உபயோகிப்பதில்லையாகையால் அதன் தலையில் எழுதியிருப்பது மோசமான சாவே.

இந்த எண்ணத்தினால் ஆசிரமத்திலிருந்து எருமைகளை அகற்றிவிட்டு பசுவையும் எருதையும் மட்டும் வளர்ப்பதில் உறுதி காட்டப்படுகிறது. பசுவின் தரத்தை உயர்த்துதல், வெவ்வேறு வகை தீவனமளித்து பாலைப் பெருக்குதல், பாலின் தரத்தை உயர்த்துதல் ஆகியவை சம்பந்தமான சோதனைகள் நடத்துதல், பாலை கெடாமல் பாதுகாக்கும் முறையைக் கற்றுக்கொள்ளல், அதிலிருந்து சுளுவாக வெண்ணெய் எடுத்தல், எருதுகளுக்கு அதிகக் கஷ்டம் தராமல் காயடித்தல் முதலிய விஷயங்களில் கவனம் செலுத்தப்படுகிறது. இப்பொழுதைக்கு எல்லாம் சோதனை முறையிலேயே நடைபெறுகின்றன. ஆனால் பசுவைப் பூர்ணமாகவும், கருணையுடனும் உபயோகிப்போமானால் அதனால் நஷ்டமேற்படுவதற்கே காரணமில்லையென்பது ஆசிரமத்தின் அபிப்பிராயம்.

இன்று பசுவினால் நஷ்டமே ஏற்படுகிறதென்று ஒருக்கால் பலருக்குத் தெரியாமலிருக்கலாம். அதை நஷ்டத்திற்கே வளர்க்கவேண்டியிருப்பதால் அது கொல்லப்பட்டுத்தான் வரும். தன் உயிரைக் கொடுத்துப் பசுவைப் பாதுகாக்குமளவுக்கு, அதாவது பசுவை தன்னையே தின்னச் செய்யும் அளவுக்கு மனிதன் பரோபகாரியாக இருக்கவில்லை. இன்றைய கணக்கின்படி உள்ள பசுக்களையெல்லாம் சரிவர வளர்த்துவருவதென்றால் மனிதனுக்குத் தேவையான உணவு கிடைக்காமல் போய்விடும். இது சரியல்லவென்று நிரூபிப்பதற்கு பசுவையும் எருதையும் இன்னும் நன்றாக வளர்ப்போமானால் அவற்றின் உற்பத்தி சக்தி பெருகக்கூடுமென்று சொல்லவேண்டும். இதைச் செய்துகாட்ட முடியும் என்பது ஆசிரமத்தின் கருத்து.

ஆனால் இதை ருஜுப்படுத்துவதற்கு ஹிந்து சமூகத்தில் மதத்தின் பெயரால் புகுந்துள்ள அறியாமையைப் போக்கவேண்டும். ஹிந்து சமூகம் பசுவின் எலும்புகளையும் குடல் முதலியவைகளையும் உபயோகிப்பதில்லை. இறந்த பிறகு என்னவாகிறதென்று கவனிப்பதேயில்லை. சக்கிலியனுடைய தொழில் புனிதமானதென்று கருதப்படுவதற்கு பதிலாக அசுத்தமானதென்று கருதப்படுகிறது. மற்ற மிருகங்களின் எலும்புகள் உபயோகப்படுத்தப்பட்டாலும் பசுவின் எலும்புகளை உபயோகிப்பதில்லை. ஒருக்கால் எலும்புரம் வாங்கினாலும் அது ஹிந்து சமூகத்தார் தயாரித்ததாயிராது. பசு எலும்பும் தோலுமாகி ஆஸ்திரேலியாவுக்குப் போய் கொலையுண்டு அதன் எலும்புகள் உரமாகவும், அதன் தோல் செருப்பு முதலியவைகளாகவும் இங்கே வரும்பொழுது அவையெல்லாம் உபயோகிக்கப்படும். அதன் மாமிசத்தின் சத்து மருந்தாக வந்தால் அதுவும் சாப்பிடப்படும்.

இவ்வாறு செய்வதால் பசு பாழாகிறது; ரூபாய் அழிகிறது; மதத்தின் பெயரில் கொள்ளை நடக்கிறது. ஆகையால் ஆசிரமத்தில் பெருமுயற்சி செய்து சக்கிலித் தொழில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அதில் இதுவரையில் எவரும் தேர்ச்சி பெற இயலவில்லை. வெளியிலிருந்து படித்தவனாகவும், ஆசிரமத்தின் விதிகளை அனுசரித்து நடக்கக்கூடியவனாயுமுள்ள சக்கிலியன் எவனும் கிடைக்கவில்லை. ஒருவனிருந்தான், ஆனால் அவனை நாங்கள் வைத்துக்கொள்ள முடியவில்லை. சாதாரணச் சக்கிலியர்களை வந்து தங்கச் செய்யும் முயற்சியும் வெற்றி பெறவில்லை. ஆயினும் சக்கிலியத் தொழில் ஆசிரமத்தின் ஒரு அங்கமாக அமைந்திருக்கிறது. ராட்டையைப் போலவே இந்தக் கலையையும் நன்கு பயின்று இதையும் பிரசாரம் செய்யவேண்டுமென்பது ஆசிரமத்தின் ஆசை. ஏனெனில் இறந்த பசுவின் எல்லா அங்கங்களும் உபயோகப்படுத்தப்படும்பொழுதுதான் பசு நமக்கு பாரமாயிருப்பது நீங்கும். அதனிடமிருந்து நமக்கு ஒருபொழுதும் லாபம் கிட்டாது. அறம், பொருளின் விரோதியல்ல, அது எப்பொழுதும் லாபத்தின் விரோதி. ஆனால் பசுவுக்காகும் செலவை அதனிடமிருந்தே பெறவேண்டுமென்றால், இன்று அதன் உடல் பாழாகிறதே, அது வியாபாரிகளின் வியாபாரத்தைப் பெருக்குவதற்குச் சாதனமாகிறதே அது நின்று போக வேண்டும். ஆனால் ஹிந்து சமூகம் பசுவை தன்னிடம் வைத்துக்கொண்டு உயிர்வாழும்பொழுது அதையும் அதன் கன்றையும் நன்றாக வளர்த்து முதுமையிலும் அதைப் பராமரித்து இறந்தபிறகு அதன் உடல் முழுவதையும் சரியாக உபயோகிக்கும் பொழுதுதான் அது தப்பும்; அப்பொழுதுதான் அதைப் பாதுகாப்பதன் மூலமாக எல்லா உயிர்களையும் காக்கவும் நாம் ஒருக்கால் கற்போம். இன்றோ நமது அறியாமையினாலும் சோம்பேறித்தனத்தினாலும் துவேஷத்தினாலும் நாளுக்கு நாள் பசுவின் நிலைமை சீர்கெட்டு வருகிறது. அப்பொழுது மற்ற கால்நடைகளைப்பற்றிக் கேட்கவே தேவையில்லை.

நாட்டிலுள்ள கோசாலைகளும் ‘பிஞ்ராபோல்’களும் பசுக்களை தார்மிக நோக்குடனும் சாஸ்திரீய முறையிலும் உபயோகிக்க வேண்டும். பணக்காரர்கள் தங்கள் வீடுகளில் கோசாலைகள் அமைத்து பசும்பாலையும் நெய்யையும் உபயோகிப்பதென்று உறுதி கொள்ளவேண்டும். பணக்காரர்கள் பசும்பால் வியாபாரத்தை இழிந்ததாகக் கருதி வரவும் செலவும் நேராயிருக்கும் வகையில் பொதுஜன கோசாலைகள் நடத்திவர வேண்டும். இவையெல்லாம் செய்யப்படுமானால் விரைவில் பசுப்பாதுகாப்பு நடந்துவிடுமென்பது ஆசிரமத்தின் கருத்து.

இப்பொழுதைக்கு ஆசிரமத்தின் நோக்கம் சிறியதே. அதாவது ஆசிரமத்தில் ஒரு தலைசிறந்த கோசாலையை நடத்துதல், பசுவையும் எருதையும் மேம்பாடுறச் செய்தல், இறந்தபிறகு அவற்றின் எல்லா அங்கங்களையும் உபயோகித்து அவற்றினால் நமக்கு வீண் செலவேற்படுவதில்லை என்று நிரூபித்தல், கோசாலை நடத்துவதன் மூலமாக கோ சேவகர்களைத் தயாரித்து அவ்வாறு தயாரானவர்களை வெவ்வேறு இடங்களில் நியமித்து வேலை செய்யச் செய்தல் என்பவையே. இந்த வேலை நடந்துவருகிறது. எவ்வளவோ இடையூறுகள் குறுக்கிடுகின்றன. ஆனால் வெற்றியேற்படுமென்ற பூர்ண நம்பிக்கை இருக்கிறது.

***

மஹாத்மா காந்தியின் 'ஆசிரம வாழ்க்கை' 14 | கல்வி

மஹாத்மா காந்தியின் 'ஆசிரம வாழ்க்கை' | தொகுப்பு

No comments:

Post a Comment