மெத்தனமான வாசிப்புதான். இருப்பினும் Lloyd I. Rudolph and Susanne Hoeber Rudolphன் "Postmodern Gandhi and other essays - Gandhi in the World and at Home" புத்தகத்தின் இறுதி அத்தியாயங்களை நெருங்கி விட்டேன் - இன்னும் இரண்டுதான் இருக்கின்றன என்று எண்ணும்போது நிறைவாக இருக்கிறது: வாசிப்பிலும் பகிர்விலும் செலவழிக்கப்பட்ட காலம் வீணாகவில்லை. பல புதிய புரிதல்களை இந்தப் புத்தகம் எனக்கு அளித்திருக்கிறது.
காந்தி மகாத்மாவாகப் போற்றப்பட்ட காலத்திலும் கடுமையான விமரிசனங்களை எதிர்கொண்டுள்ளார். காந்திக்கு நெருக்கமாக இருந்தவர்களும்கூட அவரைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுபவர்களாக இருந்திருக்கவில்லை. அப்படியானால் மற்றவர்களைப் பற்றி பேசவே வேண்டாம். சர்ச்சைக்குரிய மனிதராகத் தன் வாழ்நாளெல்லாம் இருந்த காந்தி, மறைந்து இத்தனை காலமானபின்னும் புதுப்புது சர்ச்சைகளில் வாழ்கிறார். இவையனைத்துக்கும் காரணமாக இருப்பது காந்தியின் வெளிப்படையான வாழ்க்கையே என்பதை நாம் மறக்கக் கூடாது.
அவர் தனது ஒவ்வொரு செயலையும் பொதுவெளியில்தான் நிகழ்த்தியுள்ளார்- காந்தியின் படுக்கையறையும்கூட எந்தவிதத் தடையுமில்லாமல் அனைவரும் புழங்கும் பொது இடமாகவே இருந்தது. ஆக, நாம் தனிப்பட்ட வாழ்க்கை என்று சொல்வதும்கூட காந்தியால் நான்கு பேருக்கு நடுவிலேயே வாழப்பட்டிருக்கிறது. தவிரவும் அது குறித்த தன் கவலைகளையும் எண்ணங்களையும் காந்தி கடிதங்களாகவும் கட்டுரைகளாகவும் தொடர்ந்து பகிர்ந்து கொண்டே இருந்திருக்கிறார். காந்தியின் ஒளிவுமறைவற்ற திறந்த வாழ்வு முறையே இன்றும் அவர் குறித்த சர்ச்சைகள் அனைத்துக்கும் காரணமாக இருக்கிறது.
காந்தியின் வாழ்க்கையில் நமக்குப் புரியாத புதிராக இருப்பது அவர் தனது இறுதி ஆண்டுகளில் தன் பேத்தி மனுவுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டு நிகழ்த்திய 'சத்திய சோதனை'தான். எத்தகைய மனநிலை அவரை இந்த சோதனைகளுக்கு உட்படுத்தியது? காமத்தை வெல்ல பல வழிகள் உள்ள நிலையில், இது போன்ற விபரீத சோதனைகளை ஒருவர் மேற்கோள்கிறார் என்றால் அவரது ஒழுக்கம் மட்டுமல்ல, மனநிலையும் சந்தேகத்துக்கு இடம் தருவதாக இருக்கிறது. "சுய கட்டுப்பாடும் அரசியல் ஆளுமையும்" (Self control and political potency) என்ற அத்தியாயத்தில் ருடால்ப் இந்தப் பிரச்சினையை நேரடியாக எதிர்கொள்கிறார். இவரது கருத்துகளையும் முடிவுகளையும் நாம் ஏற்றுக் கொள்கிறோமோ இல்லையோ, இந்த முயற்சி நிச்சயம் கவனிக்கத் தகுந்தது.
இந்திய விடுதலைப் போராட்டத் தலைமையேற்றிருந்தவர்கள் பெருந்திரளாய் மக்களைத் திரட்டக் கூடிய தகுதிகள் எவை என்பது குறித்த தெளிவற்று இருந்தனர் என்பதை முந்தைய பதிவுகளில் பார்த்திருக்கிறோம். சுருங்கச் சொன்னால், கிராமப்புறம் சார்ந்த, ஆதிக்க சாதிகளைச் சாராத, கல்வியறிவற்ற, பெரும்பாலும் ஏழ்மையான பெருவாரி மக்களைத் தலைமை தாங்கும் தகுதி நகர்ப்புறம் சார்ந்த, ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த, ஆங்கிலக் கல்வி பெற்ற, பொருளாதார சுதந்திரம் கொண்ட ஒரு சிலருக்கு எப்படி உரித்தாக இருக்க முடியும்? அதிலும் இந்தத் தலைமை, ஆங்கில அரசுக்கு ஊழியம் செய்த வகுப்பில் தன் வேரைக் கொண்ட ஒன்று. ரானடே, கோகலே, ஸ்ரீனிவாச ஐயங்கார், சுரேந்திரநாத் பானர்ஜி போன்றவர்கள் தனிப்பட்ட வாழ்வில் இந்தியர்களாக இருந்தாலும், அவர்களது சிந்தனை, மொழி, உடை, பாவனைகள் ஆங்கிலேயக் கனவான்கள் என மதிக்கக்கூடியதாக இருந்தன. இவர்கள் சட்டத்தின் ஆட்சியிலும், பாராளுமன்ற அதிகாரத்திலும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர். அவற்றை இந்தியர்கள் தீர்மானிக்க வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக இருந்தது- ஆங்கிலேய நிர்வாகம், சட்டம், அரசியல் அதிகாரம் என்று அனைத்துமே பொதுமக்களுக்கு அறிமுகமற்றவை. நன்மை செய்யாதவை. பெருவாரி மக்களின் ஆதரவை இவர்களின் சுதந்திரப் போராட்ட இயக்கம் திரட்ட முடியாமல் தேங்கிக் கிடந்தது.
காந்திக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த திலகர், அரவிந்தர், லாலா லஜபதி ராய், பி சி பால் போன்றவர்கள் பாரத பாரம்பரியம் சார்ந்த அரசியல் தலைமையைக் கொடுக்க முனைந்தனர். இவர்களின் பெரும்பாலானவர்கள் இந்து மரபையொட்டி செயல்படும்போது அது சமய இடைவெளிகளை அதிகரிப்பதாக இருந்தது. காந்தி இந்து மரபுக்கு மட்டுமேயுரிய அடையாளங்களைத் தவிர்த்து, சர்ச்சைக்கிடமில்லாத, இந்து இசுலாம் ஒற்றுமையை வலுப்படுத்தக்கூடிய வகையில் சீர்திருத்தக் கருத்துகளை முன் வைத்தார். இவை அனைத்தினும் மேலாக, இந்து சமயத்தின் புற அடையாளங்களைப் பயன்படுத்துவதைவிட, இந்திய மக்களின் ஆன்மிகம் சார்ந்த அகவுணர்வுகளோடு உரையாடினார்.
காந்தியும் மீரா பெண்ணும் |
இந்தியர்கள் எப்போதும் புற ஒழுக்கத்தைவிட அக ஒழுக்கத்துக்கே முக்கியத்துவம் தந்திருக்கின்றனர் என்று எழுதுகிறார் ருடால்ப். மேலை நாடுகளில் பொதுவாழ்வில் ஒழுக்கத்தை உறுதி செய்யத் தேவையான அமைப்புகள் உருவாக்கப்பட்டிருகின்றன - ஆனால் இந்தியாவில் சாஸ்திரங்கள் துவங்கி சமகால மக்கள்வரை, அறம் சார்ந்த தனி மனித தார்மீக ஒழுக்கத்தையே போற்றுவதாக இருக்கின்றன. இந்த ஒழுக்க நியதிகள் அரசர்களையும் கட்டுப்படுத்துவதாக இருந்தன. ஒரு தேசத்தின் வளமும் வாழ்வும் அரச ஒழுக்கத்தையொட்டியே இருப்பதாக நம்பப்பட்டது. ஒரு அரசனின் பிழைக்காக மதுரையை எரித்த கண்ணகியின் கதை எனக்கு இங்கே நினைவுக்கு வருகிறது.
மனுகாந்தியுடன் காந்தி |
காந்தி இந்த மண்ணின் உணர்வுகளில் தன் அரசியல் நடவடிக்கைகளுக்கான உந்துதலையும் உத்வேகத்தையும் பெற்றவர். அவரது வேர்கள் இந்திய மக்களின் இதயங்களின் ஆழத்துக்குத் துழாவிச் சென்று கொண்டே இருந்தது. மக்களோடு மக்களாக, மக்களுக்குரியவராக அவர் இருந்ததால்தான் அதன் ஆன்மிக மையத்தை அவரால் தொட முடிந்தது - அதைத் தொட்டபின் அவருக்கு அரசியல் சரிகளோ ஒழுக்க விதிகளோ பொருட்டாக இருக்கவில்லை. அவர் தனது அந்தராத்மாவின் குரலுக்கு மட்டுமே செவி சாய்க்கக்கூடியவராக இருந்திருக்கிறார்.
அதனால்தான் காந்தி, "எனக்கு என் ஆன்மிக சோதனைகளில் கிடைத்த ஆற்றலே அரசியல் செயல்பாடுகளில் வெளிப்படுக்கிறது," என்று சொன்னார். காந்தியின் அரசியலை அவரது ஆன்மிகத்திலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது- காந்தி இந்திய விடுதலைக்க காங்கிரஸ் இயக்கத்தை முன்னின்று நடத்திய ஒரு அரசியல் தலைவராக மட்டும் இருக்கவில்லை. இன்றுள்ள படித்த இளைஞர்கள் அவரை அப்படித்தான் அறிந்திருக்கின்றனர் என்றாலும், காந்தி தான் வாழ்ந்த காலத்தில் பொதுவாழ்வில் அறத்தையும் தனி வாழ்வில் ஞானத்தையும் தேடிய ஒரு துறவியாகவே மக்களால் அறியப்பட்டார். அதுவே இந்தியாவின் பல்வேறு பிரிவினரையும் அனைத்து அடியாளங்களையும் கடந்து அவரிடம் ஈர்ப்பதாக இருந்தது.
காந்தியின் வாழ்வு மூடப்பட்ட கதவுகளுக்குள் கணப்பொழுதும் வாழப்பட்டதல்ல. ஒவ்வொரு நொடியும் அவர் மற்றவர்களின் பார்வையில் இருந்தார். தன்னை வெற்றி கொண்ட ஒருவனே பிறரை வழி நடத்த முடியும் என்பதை காந்தியும் அவரைச் சார்ந்தவர்களும் நம்பினார்கள். நேர்மை, தலைமைப் பண்புகள், அறிவுக் கூர்மை போன்றவற்றை மட்டுமல்ல, புலனடக்கமும் தன்னை வென்ற வாழ்வின் அடையாளங்களாக இருந்தன. திருக்குறளிலும் நாம் இதுபோன்ற கருத்துகளைக் காண்கிறோம் என்பது நினைவுக்கு வருகிறது - காந்தி இந்த மண்ணுக்கு உரியவராக இருந்த காரணத்தால்தான் அவரால் இந்திய விடுதலையை ஒரு அரசியல் விடுதலையாகப் பார்க்காமல் ஆன்மிக விடுதலையாகவும், தலைமைப் பண்புகளை மேலாண்மைப் பண்புகளாகக் குறுக்கி விடாமல் ஆன்மிகத் தன்மைகளையும் கொண்ட ஒன்றாக வெளிப்படுத்த முடிந்தது.
நாம் இதை நம்புகிறோமோ இல்லையோ, காந்தி பிரமச்சரியத்தில் நம்பிக்கை வைத்திருந்தார் - "நான் என் வாழ்நாள் எல்லாம் தொடர்ந்த பிரமச்சர்யத்தைக் கடைபிடித்திருந்தால் என் உற்சாகமும் உத்வேகமும் இன்றுள்ளதைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகமாக இருந்திருக்கும் என்று முழுமையாக நம்புகிறேன். அதை என் தேசத்துக்கும் என் உய்வுக்கும் பயன்படுத்தியிருக்க முடியும்," என்றார் காந்தி. மேலும், "உயிர் தோன்றக் காரணமாக இருக்கும் ஜீவசக்தியை வீணாக்காமல் சரியான வழியில் பயன்படுத்துபவனுக்கு அனைத்து ஆற்றலும் கிடைக்கிறது... முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட சிந்தனைக்கு எண்ணற்ற ஆற்றல் உண்டு, அது தானாகவே செயல் வடிவம் பெற்று வெற்றி காண்கிறது... தன் சக்தியை விரயம் செய்பவனுக்கு இந்த ஆற்றல் எட்ட முடியாத ஒன்று".
காந்தி பிரம்மச்சரியத்தை புலனடக்கமாகவே புரிந்து கொண்டார். "சத்தியாகிரக தளபதியின் சொல் ஆற்றல் மிகுந்ததாக இருக்க வேண்டும். எண்ணற்ற ஆயுதங்களின் ஆற்றலல்ல. தீவிர கண்காணிப்பும் தொடர் பழக்கமும் உருவாக்கிய தூய வாழ்வின் ஆற்றல். பிரம்மச்சர்யத்தைக் கடைபிடிக்காமல் இந்த ஆற்றலைப் பெற முடியாது..... இங்கு பிரம்மச்சரியம் என்பது சுய கட்டுப்பாடு மட்டுமல்ல. அதைவிடப் பெரிது. அது அனைத்து புலன்களையும் அடக்கி ஆளுதல். கறைபடிந்த எண்ணம் மட்டுமல்ல, கோபமும் பிரம்மச்சரியத்தைக் குலைக்கிறது," என்று எழுதினார் அவர்.
அதை அவர் 1930களில் தேசிய இயக்கம் கடும் சோதனைகளைச் சந்தித்தபோது எழுதியிருந்தார். இந்த சோதனைகளை காங்கிரஸ் பேரியக்கம் எதிர்கொள்ள முடியாமல் துவண்டபோது அதற்குத் தன்னையே காரணமாக அடையாளப்படுத்திக் கொண்டார் காந்தி- "அகிம்சை குறித்து ஆய்வுகளுக்குத் தேவையான ஆளுமையை என்னால் என் எண்ணங்களின்பால் செலுத்த முடியவில்லை. எனது அகிம்சை பிறரையும் தொற்றி வசீகரிக்க வேண்டுமென்றால் நான் என் எண்ணங்களைக் கட்டுக்குக் கொணர வேண்டும். இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் நான் குறிப்பிட்ட தலைமையின் தோல்விக்குக் காரணம் என்னிடம் எங்கோ ஒரு குறை இருக்கிறது என்பதாகதான் இருக்கும்" என்று எழுதுகிறார் காந்தி.
காந்திக்கு அரசியல் ,ஆன்மீகக் களமாக இருந்தது. அதன் வெற்றியும் தோல்வியும் அவருக்கு ஆன்மிக வெற்றி தோல்விகளாக இருந்தன. அரசியலின் சவால்களைச் சந்திக்க அவர் தன்னை ஆன்மிக சோதனைக்குட்படுத்திக் கொண்டார்- கோபத்தையும் காமத்தையும் நேரடியாக எதிர்கொண்டு தன்னை சுத்திகரித்துக் கொள்வதால் தன்னால் பொதுவெளியில் இன்னும் ஆற்றலுடன் இயங்க முடியும் என்று நம்பினார் காந்தி.
இந்தப் பின்னணியில்தான் நாம் மனுவுடன் காந்தி தன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டதை புரிந்து கொள்ள வேண்டும். வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு, வெளிப்படையாக எந்த மறைவுமில்லாமல் யாரும் வந்து செல்லக் கூடிய அறையில் நிகழ்த்தப்பட்ட அவரது சோதனையின் நோக்கம் காமத்தை வெல்வது மட்டுமல்ல, கோபத்தையும்தான்.
இந்தியா சுதந்திரமடைந்த காலக்கட்டத்தில் இந்து முஸ்லிம் கலவரத்தால் வட இந்தியாவிலும் வங்காளத்திலும் கொடூரமான கலவரங்கள் வெடித்தன. காந்தி தன் அகிம்சை வெற்றி பெறவில்லை என்றோ மக்கள் தவறான வழியில் செல்கிறார்கள் என்றோ சொல்லவில்லை. அவர் தன் தூய்மையை, தன் துறவைத்தான் கேள்விக்குட்படுத்திக் கொண்டார். தான் தன்னை இன்னும் பூரணமாக வெற்றி கொண்டால், தனக்கு இது அனைத்தையும் தடுத்து நிறுத்தக் கூடிய ஆன்ம சக்தி கிடைக்கும் என்று நம்பினார்.
நவகாளி கலவரங்கள் அவரது அமைதியைக் குலைத்திருந்தன. "எனக்கு இந்த சோகமான சூழலில் செயல்படக்கூடிய பொறுமையோ முறைமையோ தெரியவில்லை. நான் காணும் துயரமும் தீமையும் என் நினைவை நிறைக்கின்றன. நான் புழுங்கிச் சாகிறேன்," என்றார் அவர். கோரமான கொலை கொள்ளை சம்பவங்களைக் கண்டும் கொபப்படாதவன் மகாத்மாவாக இருக்க முடியாது. "நவகாளி நிகழ்வுகள் என் அமைதியைக் குலைத்து விட்டன. நான் கவலைக்கும் கோபத்துக்கும் ஆளாகும் கணங்கள் பல உண்டு," என்று எழுதுகிறார் காந்தி. இந்தச் சூழலை எப்படி எதிர்கொள்வது என்று தொடர்ந்து சிந்தித்தவண்ணம் இருந்தார் காந்தி என்பதை நிர்மல் போஸ் பதிவு செய்திருக்கிறார். முடிவில், "மிகவும் உஷ்ணமான ஒரு சோதனையை" மேற்கொள்ள முடிவெடுக்கிறார் காந்தி.
அது குறித்து ஆச்சார்யா கிருபலானிக்கு எழுதிய கடிதத்தில் காந்தி எழுதுவது இது; "என் பேத்தி மனு காந்தி என் ரத்தத்தின் ரத்தமாகவே என் படுக்கையைப் பகிர்ந்து கொள்கிறாள்.... இதுவே எனது இறுதி யாகமாக இருக்கும்".
காந்தி அகத்தூய்மை புறச்சூழலை மாற்றியமைக்கும் என்று நம்பினார். காமத்துக்கும் கோபத்துக்கும் இடம் தராத புலனடக்கம் உலகில் அன்பையும் நேசத்தையும் நிறைக்கும் என்று நம்பினார். அதன் சோதனைக்களம் தனிமையாகவும் தியானமாகவும் அவருக்கு இருக்கவில்லை. காமமும் கோபமும் இருக்கும் இடத்தில் தாய்மையை அடைவதால், அந்த அக அனுபவம் புறவுலகை நிறைத்த வெறுப்புக்கும் ஆத்திரத்துக்கும் மருந்தாக இருக்கும் என்று நம்பினார் அவர் - இது குறித்து அவர் தனது இறைவணக்கக் கூட்டங்களில் அறிவிப்பும் செய்தார். "தான் செல்லும் பாதை சரியானதுதான் என்று தெரிந்தவன் பொதுமக்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் தன் வழியில் செல்லும்போது வெளிப்படுத்தும் வீரம் மிக உயர்ந்தது," என்றார் காந்தி.
"Self Control and Political Poentency" என்ற இந்த அத்தியாயத்தில் ருடால்ப் இது குறித்து இன்னும் பல தகவல்கள் மற்றும் பார்வைகளை முன்வைக்கிறார். இவை காந்தி குறித்த புரிதலுக்குத் துணை செய்யும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த அத்தியாயத்தைப் படித்து முடிக்கும்போது எழுத உணர்வை சொல்லாமல் இருக்க முடியவில்லை.
தன்னை வென்றவன் தரணியை வெல்வான் என்பது போன்ற நம் புராதான நம்பிக்கைகளை நம்பினார் காந்தி. விஸ்வாமித்திரர் கதையே அவர் காமத்தையும் கோபத்தையும் வெற்றி கொள்வதான இந்திரிய ஜெயத்தின் ஆற்றலால் திரிசங்கு சொர்க்கம் போன்ற உலகங்களையும் படைக்கும் தவவலிமை பெற்றதைத்தானே சொல்கிறது? இவற்றை வெறும் கட்டுக்கதைகள் என்று புறந்தள்ளாமல், தன் வாழ்வில் தன் புலனடக்கத்தால் தன்னோடு வாழ்ந்த மக்களின் துயரங்களை நீக்கி அவர்கள் வாழ்வில் அமைதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்த முயன்றார் காந்தி. அவர் தன் புலனடக்காதால் படைக்க நினைத்த உலகம் மிக எளிமையானது. திரிசங்கு சொர்க்கத்தைப் போல் தேவலோகத்துக்கு இணையான பிரம்மாண்டம் கொண்டதல்ல- ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்ற எளிய நோக்கம் கொண்ட ஒரு சாதாரண கனவு. எளியவர்கள், ஏழைகள் இவர்கள் துன்பமற்று வாழ ஒரு உலகைப் படைக்க விரும்பினார் காந்தி.
ஆனால் இந்தியா அரசியல் விடுதலை பெற்றபோது அதன் மக்கள் ஆன்மிக விடுதலை பெறவில்லை. அந்த நோக்கத்தையே மறந்திருந்தார்கள். சமய மற்றும் தேசிய உணர்வு மேலீட்டால் கொடூரமான கொலைகளை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். இந்தச் சூழலில்தான் காந்தி வங்காளத்தில் அமைதியை ஏற்படுத்தப் புறப்பட்டு, அதில் வெற்றியும் கண்டார். "ஒரு நபர எல்லைப் படை" என்று மவுண்ட்பேட்டனே வியப்புடன் குறிப்பிடும் வல்லமை பெற்றதாக அவரது தாக்கம் அங்கு இருந்தது.
லட்சக்கணக்கான உயிர்கள் பலியாவதைத் தடுப்பதற்கு விலையாக, ஒரு தார்மீக அறச்சோதனை முயற்சியாக, ஊரறிய உலகறிய, காந்தி "இறுதி யாகமாக" தன் பேத்தியுடன் படுக்கையில் விழுந்தார் என்றால் அங்கே விழுந்தது காந்தியல்ல. காந்தியின் நம்பிக்கைகளை வீழ்த்தி, "நான் வெறுக்க மாட்டேன்" என்று உறுதியெடுத்து அன்பைத் தவிர வேறெதையும் வேண்டாத, தன்னையே எக்கணமும் தியாகம் செய்யத் தயாராக இருந்த, தனக்கென எதுவும் இல்லாத ஒரு ஏழைக் கிழவனைக் கைவிட்டு, அவனை ஒரு பெரும் அக்னியில் சுத்திகரித்துக் கொள்ளச் செய்த, சராசரி மக்களின் அற்பத்தனம் தலையெடுத்தோங்கிய இந்தியாவின் வீழ்ச்சிக் கணம்தான் அது.
--மேலும் --
அர.சு.ராமையா
No comments:
Post a Comment