ஜீன் ஷார்ப்பின் கட்டுரையின் அடுத்த பகுதி.இப்பகுதியில் ,அகிம்சை போராட்டத்தின் உலகளாவிய வீச்சை பற்றி ஷார்ப் அலசுகிறார்.அரசியல் களத்தில் அகிம்சை வழிமுறைகள் எட்டியுள்ள மகத்தான உயரங்களிற்கு காந்தியின் பங்களிப்பு என்ன ? இக்கேள்விக்கான விடை தேடும் பதிவிது.
இருபதாம் நூற்றாண்டில் அகிம்சை
அகிம்சை போராட்ட வழிமுறைகளின் வளர்ச்சியும் அதன் பரவலான வீச்சும் இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும். அகிம்சை போராட்ட முறை பல்வேறு யுத்திகளை உள்ளடக்கமாய்க் கொண்டது- அகிம்சை எதிர்ப்பு , சத்யாக்ரகம், நேரடி செயல்பாடு, வேலைநிறுத்தம், புறக்கணிப்பு, ஒத்துழையாமை , சட்டமறுப்பு, தர்ணா போன்றவைகள் அதிலடங்கும் .அகிம்சை போராட்டத்திற்கு நீண்ட வரலாறு உண்டு, ஆனால் நம் வரலாற்று ஆய்வாளர்கள் பொதுவாக வன்முறை வெறியாட்டம் நிறைந்த போர்களை பற்றியும் ,கலகங்களை பற்றியுமே அதிகம் கவலைப் படுவதால் நாம் பல வரலாற்று தகவல்களை இழந்து விட்டோம்.
நவீன காலகட்டத்தில் அகிம்சை போராட்டம் மூன்று பிரிவினர்களின் பங்களிப்பினால் முக்கியத்துவம் பெறுகிறது.
1- சமூக ராடிக்கல் பிரிவினர்- தொழிற் சங்கத்தினர், அரசின்மைவாதிகள் மற்றும் சோசியலிஸ்ட் வகையினர் சமூக அநீதி என்று தாங்கள் கருதும் ஓர் விஷயத்திற்கு எதிராக வேலைநிறுத்தம், கடையடைப்பு , புறக்கணிப்பு போராட்டங்களை நடத்தினர்.
2.தேசியவாதிகள்- வெளிநாட்டு எதிரிக்கு எதிராக இத்தகைய போராட்டங்கள் பலனளிப்பதை உணர்ந்தனர் ( ஆஸ்த்ரியாவிற்கு எதிராக நடந்த ஹங்கேரிய போராட்டம், சீனாவிலும் ஜப்பானிலும் நடந்த புறக்கணிப்பு போராட்டங்கள் ).
3.தனி நபர்கள்- சமூகத்தின் திசைகாட்டிகள்- புதிய சமூக அமைப்பிற்கான வழிமுறைகளை முன்வைத்தவர்கள் ( ரஷ்யாவில் தால்ஸ்தாய் ,அமெரிக்காவில் தொரோ , ஜெர்மனியில் கஸ்டாவ் லாந்தர் போன்றவர்கள்)
அகிம்சை வழிமுறைகள் சரியான முறைப்படுத்துதலும் திட்டமிடுதலும் இல்லாமல், முழுமையான செயல்வடிவம் பெறாமல் குறைபட்டிருந்தது. உண்மையில் அதை முழுமைப்படுத்த யாரும் முழுமூச்சுடன் முனையவில்லை. சமூக மேம்பாட்டின் ஒரு பகுதியாகவும் அதை யாரும் அங்கீகரிக்கவில்லை. பெரும்பாலும் எதிர்தரப்பின் செயலுக்கு எதிர்வினையாகவே இவை பிறந்தன.
ஆரம்பகாலத்தில் க்வாக்கர் போன்ற மத அமைப்புகள் மரணதண்டனைக்கு எதிராக அகிம்சையைக் கையாண்டுள்ளனர். அகிம்சையின் தார்மீக குணாம்சங்களுக்கும் அதன் சமூக மற்றும் அரசியல் போராட்டங்களின் பயன்பாட்டிற்கும் இடையே எவ்வித ஒட்டுதலும் இல்லாமல் இருந்து வந்தது. தால்ஸ்தாய் போன்ற சில தனிமனிதர்கள் அதைக் கடந்தாலும், அவை அறிவு தளத்திலேயே நின்றுவிட்டது.
காந்தியின் வருகைக்காகவே அவை காத்துக் கிடந்தன . ஒத்துழையாமை, கீழ்படியாமை மற்றும் அமைதியான அதே வேளை காத்திரமான எதிர்ப்பு -ஆகியவை மூலம் ஆட்சியாளர்களைக் கட்டுப்படுத்தவும், கொள்கை முடிவுகளை மாற்றவும், அரசியல் அமைப்புகளை பலவீனப்படுத்தவும் முடியும் என்பதை உலகிற்கு காந்தியின் அரசியல் சோதனைகள் உணர்த்தின .
காந்தியின் பரிசோதனைகளின் விளைவாக - இப்போராட்ட வழிமுறைகள் விரிவடைந்தன , நுண்மையான பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தற்பொழுது இப்போராட்டங்களுக்கு உரிய உத்தியும், வழிமுறைகளும் வளர்த்தெடுக்கப்படுகின்றன. போராட்ட முறைகளின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளன .சமூக மாற்றத்திற்கான திட்டத்துடன் அகிம்சையை இணைத்தார் காந்தி.
அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் கடைசி முயற்சியாக ஆற்றப்படும் எதிர்வினை என்ற நிலையிலிருந்து களத்தில் தாமே மனப்பூர்வமாக முன்னெடுத்துச்செல்லும் ஒரு முழுப் போராட்டமாக பரிணமித்தது அகிம்சை. பெருந்திரள் மக்கள் பங்கேற்கும் போராட்ட வழிமுறையென்றும், அகிம்சைப் போராட்டத்தைத் தங்கள் வழிமுறையாகத் தேர்வு செய்வதன் மூலம் கூடுதல் தார்மீக பலம் கிட்டும் என்பதும் இணைத்து உணர்த்தப்பட்டது . போராட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு, எவர் மீதும் எதுவும் வலுக்கட்டாயமாக திணிக்கப்படுவதில்லை என்பது அதிமுக்கியமானது.
வாய்மையை மட்டுமே நம்பி, சத்தியத்தின் பாதையில் செல்வதால் வரும் உறுதி என்று பொருள்படும் சத்யாக்ரகம் எனும் பெயரில் காந்தி தனது போராட்ட முறையை அழைத்தார். மிகவும் தத்துவார்த்தமாக பொருள்படுவது போல் இருந்தாலும் ,உண்மையில் காந்தியின் போராட்ட வழிமுறை அரசியல் அடிப்படை உண்மைகளை சரியாக உள்வாங்கிக்கொண்டது.மக்களின் ஒத்துழைப்பு மற்றும் அவர்கள் கீழ்படிந்து தங்களை ஒப்புவிப்பதால் மட்டுமே ஆட்சியாளர்கள் தம் அரசை நிர்வகிக்க முடியும் எனும் அடிப்படை உண்மையை காந்தி நன்கு உணர்ந்திருந்தார். மனப்பூர்வமாகவோ மறைமுகமாகவோ, மக்கள் தாங்கள் ஆளப்பட ஒப்புதல் அளித்து அரசை ஏற்றுக் கொள்ளும்வரைதான் ஓர் அரசு ஆட்சி செய்ய முடியும்.
காந்தியின் சோதனை முயற்சிகளின் விளைவாக அகிம்சை போராட்ட வழிமுறை உலகெங்கும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வெகு விரைவாக பரவியது. சில சூழல்களில் காந்திய சோதனை முயற்சிகளின் தாக்கம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தென்பட்டது. வெவ்வேறு அரசியல் மற்றும் பண்பாட்டு பின்புலங்களுக்கு ஏற்ப காந்தி முன்வைத்த வடிவிலிருந்து முன்சென்று பல புதிய வடிவங்களை எட்டியது.
நிறப் பிரிவினை மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக அமெரிக்காவின் கறுப்பின மக்களின் போராட்டம் உலகம் அறிந்த ஓர் முக்கிய நிகழ்வு.அமெரிக்க கறுப்பின தலைவர்களை காந்தி சந்தித்து உரையாடும்போது , அமெரிக்காவில் இத்தகைய போராட்டம் சாத்தியம் என்பதை அவர் உணர்ந்திருந்தார். 1937 ஆம் ஆண்டு டாக்டர்.சார்மிங் டோபியாஸ் மற்றும் டாக்டர் பெஞ்சமின் மேஸ் இருவரும் காந்தியை சந்தித்தனர், அவரிடம் அமெரிக்க கறுப்பின மக்களுக்குச் சொல்ல ஏதும் செய்தி உண்டா என்றும் அவர்களது போராட்டத்தின் எதிர்காலத்தைக் குறித்து அவருடைய எண்ணம் என்ன என்றும் வினவினார்கள்.
அகிம்சை போராட்டத்தை காந்தி " புத்திசாலிகள் மற்றும் பலசாலிகளின் வழி "என்று முன்வைத்தார்," நியாயம் அவர்கள் பக்கம் இருந்து, அகிம்சையை மட்டுமே அவர்கள் தம் ஆயுதமாகக் கையாண்டால் அவர்களுக்கு நிச்சயம் வளமான எதிர்காலம் காத்திருக்கிறது"
முன்னதாக, 1936ஆம் ஆண்டு டாக்டர்.திருமதி. ஹோவர்ட் துர்மன் அவர்களிடம் காந்தி கூறினார், "கறுப்பின மக்களின் மூலம் அகிம்சையின் வலிமையை பற்றிய மெய்யான செய்தி உலகிற்கு சென்று சேர வாய்ப்பு உள்ளது "
காந்திய தாக்கம் கொண்ட அகிம்சை போராட்டம் உலகில் பல்வேறு இடங்களில் நிகழ்ந்து கொண்டிருந்த அதேவேளையில், கம்யுனிஸ்ட் மற்றும் நாஜிக்களால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் மிகக்கடுமையான சூழலுக்கு இடையே தன்னிச்சையாக இத்தகைய போராட்டங்கள் கிளர்த்து எழுந்தன .
எந்த சர்வாதிகார அரசாங்கமும் அகிம்சை போராட்டத்தினால் தூக்கி எறியப்படவில்லை என்றாலும் (கட்டுரை எழுதப்பட்ட காலத்தை கணக்கில் கொண்டு), பொதுவாக நாம் எண்ணுவதைக்
காட்டிலும் அதிகமான எதிர்ப்பு நிலவி வருகிறது என்பதே உண்மை.இத்தகைய போராட்டங்கள் அகிம்சையை வந்தடைந்தது பெரும்பாலும் ஒரு விபத்தாகவே திகழ்ந்தது. தார்மீகமாகவோ, அல்லது ஆன்மீக காரணங்களாலோ வன்முறையை எதிர்த்து இவர்கள் அகிம்சையை தேர்ந்தெடுக்கவில்லை. சில சமயங்களில், இத்தகைய அகிம்சை போராட்டங்களைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது - அல்லது வன்முறையின் சாயம் சிறிதளவேனும் கலந்திருந்தது.பெரும்பாலும் இப்போராட்டங்களின் முக்கிய அம்சமாக ஆண்களும் பெண்களும் எவ்வித ஆயுதத் துணையுமின்றி, அரசுடன் ஒத்துழைக்க மறுத்து தங்களின் எதிர்ப்பை ஒருங்கே வெளிப்படுத்தினார்கள்.
நோர்வே போராளிகள் |
நாஜிக்களின் ஆக்கிரமிப்பின்போது நார்வே நாட்டவர்களின் போராட்டம் இவ்வகையில் மிக முக்கியமானது. குஸ்லிங்கின் நார்வே திட்டம் இந்த எதிர்ப்பினால்தான் தகர்க்கப்பட்டது.நார்வே நாட்டு ஆசிரியர்கள் பள்ளி குழந்தைகளுக்கு நாஜிக்களின் சிந்தனைகளை ஊட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததும், பாசிச ஆசிரியர் குழுமத்தில் இணையாமல் இருந்ததும் உண்மையில் அவர்களின் துணிவுக்கு மிக முக்கியமான எடுத்துக்காட்டு.இவர்கள் மட்டுமின்றி,பாதிரிமார்களும், விளையாட்டு வீரர்களும், தொழிற்சங்கவாதிகளும் அவரவர் பங்குக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
1940-45 காலங்களில் நடந்த டானிஷ் போராட்டம், குறிப்பாக 1944 ஆண்டு கொபென்ஹாகனில் நடைபெற்ற மாபெரும் பொது வேலை நிறுத்தம், கிழக்கு ஜெர்மனியின் ஜூன் 1953 எழுச்சி - மாபெரும் அகிம்சை போராட்டங்கள் நிகழ்ந்தன. ஜெனாவில் பெண்கள் உட்பட அனைவரும் ருஷ்ய பீரங்கிகளுக்கு எதிரில் அபார நெஞ்சுரத்துடன் அமர்ந்து போராடினர், 1953 ஆம் ஆண்டில் சோவியத் யூனியனில் அரசியல் கைதிகள் அடைபட்டிருந்த சிறைவளாகங்களில் நிகழ்ந்த வேலைநிறுத்தம் - இப்போராட்டத்தின் விளைவாக அவர்கள் நடத்தப்படும் விதம் வெகுவாக மாறியது , 1956-57 ஆண்டுகளில் நடந்த ஹங்கேரிய புரட்சியின்போதும் ராணுவ நடவடிக்கைகள் மட்டுமின்றி மக்கள் பங்குகொண்ட மிகப்பெரிய பொது வேலை நிறுத்தம் நடந்தது, பரவலாக அகிம்சை வழியில் வலுவான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. போலந்திலும் அகிம்சை போராட்டம் கணிசமான மாற்றத்தை அதன் அரசியல் சூழலில் ஏற்படுத்தியது.
அனைத்து போராட்டங்களிலும் வெற்றி தோல்வியின் அளவில் வேறுபாடுகள் உண்டு. இவ்வகை போராட்டங்கள் பொதுவில் தன்னிச்சையாக எவ்வித திட்டமிடலும் முன்னேற்பாடும் இன்றி கிளர்த்தெழுந்தன. இவை அனைத்தும் நமக்கு பலராலும் மறுக்கப்பட்டு வரும் முக்கியமான உண்மையை அறிவுறுத்துகின்றன- சர்வாதிகாரத்திற்கு எதிராக எத்தகைய சூழலிலும் அகிம்சை போராட்டம் சாத்தியம் என்பதையும் மேலும் சில தருணங்களில் சில சலுகைகளை பெற்றுத்தருவது மட்டுமின்றி சிறிய அளவிலேனும் வெற்றிகளும் சாத்தியம் என்பதையும் நமக்கு தெளிவாக்குகிறது.
சில தருணங்களில், டென்மார்க், கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி நாடுகளில் நிகழ்ந்தது போல் - சொந்த நாட்டின் ராணுவத்திலேயே மனகிலேசங்கள் ஏற்படும், நம்பகமின்மை ஏற்படும்.கலகம் இதன் உச்சக்கட்ட வடிவம் என்று கூறலாம்.ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும், ஜப்பானிலும், தெற்கு வியட்நாமிலும்,மேலும் பல தேசங்களிலும் அகிம்சை போராட்டங்கள் தொடர்ந்து உயிர்பெற்று வருகின்றன.
அரசியல் களத்தில் அகிம்சை வழிமுறைகளின் பங்களிப்பு காந்தியின் தென்னாப்ரிக்கா முயற்சி மற்றும் இந்திய சுதந்திர போராட்ட காலங்களுக்கு பின்பு பலப்படிகள் கடந்து புதிய உயரங்களை எட்டியுள்ளது .மக்களும்,சமூக விஞ்ஞானிகளும் அகிம்சை வழிமுறைகளின் மீது தங்களின் கவனத்தை திருப்பி, இப்போராட்டங்களின் இயல்பை பற்றியும் அதன் வலிமையை பற்றியும், போராட்டத்தை வெற்றிகரமாக மாற்ற என்னென்ன தேவைகள் என்பதைப் பற்றியும் வெவ்வேறு எதிர்தரப்புகளை எதிர்கொள்வது எப்படி என்பதையும் , வருங்கால பயன்பாடு எத்தகையது போன்ற பல வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியில் ஆய்வுகளை நிகழ்த்துகின்றனர்.
காந்தி வாழ்ந்த காலத்தில் நிலவிய இந்திய சூழலுக்கு மட்டுமே அகிம்சை வழிமுறை பொருந்தும் எனும் வாதம் உண்மையை அடிப்படையாக கொண்டதல்ல. பல வருடங்களுக்கு முன்பே இந்திய சமூகவியலாளர் கிரிஷ்ணலால் ஸ்ரீதராணி, கொலம்பியா பல்கலைகழக ஆய்வுக் கட்டுரையில் இவ்வாறு வாதிடுகிறார் "மேற்குலகத்தோடு நான் கொண்ட தொடர்பு , பலருடைய நம்பிக்கைக்கு மாறாக நான் புரிந்துக்கொண்டது - உரிய திட்டமிடலுடன் முழுவீச்சில் சத்யாக்ரகத்தைக் கடைபிடித்தால் கிழக்கை காட்டிலும் மேற்கில் அதிக பலனளிக்கக்கூடும்.போரைப் போல் சத்யாக்ரகத்திலும் பொதுநலம், தியாகம், திட்டமிடல், சகிப்புத்தன்மை மற்றும் ஒழுக்கம் ஆகியவை வெற்றியை நிர்ணயிக்கின்றன. எங்களவர்களைக் காட்டிலும் இத்தகைய பண்புகள் மேற்குலக சமூகங்களில் அதிகம் புழக்கத்தில் உள்ளதை நான் உணர்கிறேன். பிரம்மாண்டமான வன்முறையை வடிவமைக்கும் அதே ஆகச்சிறந்த கைவினைஞன் அகிம்சை போராட்டத்தில் ஆகச்சிறந்த விளைவுகளை ஏற்படுத்தக்கூடுமோ என்னவோ ."
---மேலும்---
-சுகி
No comments:
Post a Comment