Pages

Saturday, March 3, 2012

காந்தியத்தின் துவக்கங்கள் - வீரம் விளைந்த மண் -2 பின்நவீனத்துவ காந்தி -7




பொது வாழ்க்கையின் விளிம்பில் உள்ள எவருக்கும்கூட தன் குறைகள் தெரிந்திருக்கும். பொதுப் பணி, பொதுநலம், சேவை என்ற சொற்களின் பின்னியங்கும் நபருக்குத் தன் தகுதிகள் குறித்த கேள்விகள் புதியவையாக இருக்காது. எனினும், எல்லாரும் காந்தியாகி விடுவதில்லை. நம்மில் பெரும்பாலானோர் நம் குறைகளை மறைத்தும் மறந்தும் பொதுநலச் செயல்களில் பங்கேற்கிறோம். நம் குறைகள் நம் செயல்களால் விளையக்கூடிய நன்மைகளுக்குத் தடையாக இருக்கக் கூடாது என்ற உயர்ந்த எண்ணம் நம்மில் பலருக்கும் உண்டு. காந்திக்கும் தன் குறைகளைத் தாண்டிச் செல்ல, இந்த கருணையே, பொதுநல விழைவே காரணமாக இருந்தது. ஆனால், அவர் நம்மைப் போன்றவரல்ல: அவர் தன் குறைகளைத் திறந்த மனதுடன், வெளிப்படையாக விவாதித்தார்.  காந்தியின் குறைகளாக நாம் அறியும் விஷயங்களில் பெரும்பாலானவை அவராலேயே முன்வைக்கப்பட்டவை என்பது கவனிக்கத்தக்கது. தன்னையே நேர்மையான சத்திய சோதனைக்கு உட்படுத்திக் கொள்வது - இதுதான் நமக்கும் காந்திக்கும் உள்ள வேற்றுமை. நாமும் நம் குறைகளை அறிந்தவர்களாக, அவற்றுக்கு அப்பால் கிடைக்கக்கூடிய நன்மைகளுக்காக ஏதேனும் செய்பவர்களாக இருக்கக்கூடும்: ஆனால் நம் சொற்களும் செயல்களும் எவ்வளவு உன்னதமானவையாக இருப்பினும், அவை ஒரு வேடதாரிக்கு உரியவையாகவே உள்ளன- தன் குறைகளை வெளிப்படையாகப் பேசி , தன்னை சுத்திகரித்துக் கொள்ளும் காந்தியின் உண்மை நோக்கிய விழைவு நமக்கில்லை. எத்தனை குறைகள் இருந்தாலும் காந்தி மகாத்மாவாக இருப்பது இதனால்தான், எத்தனை நன்மைகள் விளைந்தாலும் நாம் துராத்மாக்களாக இருப்பதும் இதனால்தான்.


Lloyd I. Rudolph & Susanne Hoeber Rudolph எழுதிய, "Postmodern Gandhi and other essays- Gandhi in the World and at Home" என்ற புத்தகத்தில் காந்தியின் வாழ்க்கை, அது அவருக்குத் தந்த படிப்பினை, அது தேசத்தின் உணர்வுகளுக்கு குரல் தந்த ஆற்றல் என்று பலவும் பேசப்பட்டாலும், அவை எதுவும் நாமறியாதவையல்ல- காந்திக்கு மட்டும் உரியனவுமல்ல. 

காந்தியைப் போன்ற எத்தனை பேர் பொது வாழ்வுக்கு வந்திருப்பார்கள் - தன்னைக் குறித்த சந்தேகங்களுடன், தன்னம்பிக்கையில்லாமல் பொது வாழ்வுக்கு வந்து, ஒரு கூட்டத்தின் பிரதிநிதியாக நிற்பதால் தனக்கு ஆற்றல் சேர்த்துக் கொண்டு தலைமைப் பதவியை நோக்கி உயர்ந்தவர்கள் ஏராளமாக உண்டு. ஆனால் காந்தியைப் போன்ற சிலருக்கு மட்டுமே கூட்டத்தைத் தனக்காகப் பயன்படுத்திக் கொள்ளாமல் கூட்டத்திலும் தனித்திருந்து செயலாற்றும் துணிச்சல் இருந்தது. தன் குறைகளைப் பேசிய காந்தியின் துணிச்சலே அவருடைய நம்பகத்தன்மையை அதிகரிப்பதாகவும் இருந்தது.

தன் இளமைப் பருவத்தில் கோழையாக, வலுவற்றனாகத் தன்னை உணர்ந்திருந்தார் காந்தி.  சாதுர்மாஸ்ய பருவ மாதங்கள் நான்கிலும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு வேளை உணவு மட்டுமே உட்கொண்டு விரதமிருந்த தன் தாயின் மன உறுதி அவருக்கு முன்னுதாரணமாக இருந்தது.  காந்தியின் தாத்தா மற்றும் தந்தையின் பக்தி காந்தியின் உணர்வில் வேரூன்றிற்று: சமூக வேற்றுமைகளைப் பொருட்படுத்தாமல் அனைவரையும் சம உணர்வுடன் காண வேண்டும் என்ற படிப்பினையை காந்திக்கு பக்தி மார்க்கமே அளிப்பதாக இருந்தது. இவற்றுடன் மாற்றார் பிழைக்கும் தன்னை வருத்திக் கொள்ளும் இயல்பு - பிறர் தன் பிழைகளை உணர தன் நலன்களைத் தியாகம் செய்யும் பண்பு அவரது வளர்ப்பில் இயல்பாய் அமைந்த ஒன்று.  உதாரணத்துக்கு காந்தி தன் தவறு ஒன்றைக் குறித்து தன் தந்தைக்குக் கடிதம் எழுதும்போது, தன்னை மன்னிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், இந்தத் தவறுக்காக தந்தை தன்னை வருத்திக் கொள்ளக் கூடாது என்றும் விண்ணப்பிக்கிறார்.  தனக்குத் தந்தை தரக்கூடிய தண்டனையைவிட, அவர் தன்னைத் தண்டித்துக் கொள்ளக் கூடாது என்பதே காந்தியின் அச்சமாக இருந்திருக்கிறது.

பதின்மப் பருவத்தின் துவக்கத்தில், தன் பதின்மூன்றாவது வயது முதல் பதினாறாம் வயது வரை காந்தி தன் கோழைத்தனத்தை நீக்கி, போர்க்குணத்தை வளர்க்க முயற்சித்திருக்கிறார்.  புலால் உண்ணுதல் உடலுக்கும் மனதுக்கும் உறுதி தரும் என்பது அவரது நம்பிக்கையாக இருந்திருக்கிறது. "நான் வலுவானவனாகவும் துணிச்சல் மிக்கவனாகவும் இருக்க விரும்பினேன். நான் மட்டுமல்ல, என் தேசத்தவர்களும் ஆற்றல் மிக்கவர்களாக மாறி ஆங்கிலேயர்களை  இந்த தேசத்தைவிட்டே விரட்ட வேண்டும் என்று விரும்பினேன்," என்று எழுதுகிறார் காந்தி.  புலால் உண்பதால்தான் ஆங்கிலேயர்களால் இந்தியாவை ஆள முடிந்தது என்பதும் அகிம்சையைப் பின்பற்றிய காரணத்தாலேயே இந்தியர்கள் வலுவற்று இருந்தனர் என்பது பரவலான நம்பிக்கையாக இருந்தது. 

வழக்கறிஞராகத் தேர்ச்சி பெற்ற காந்தி இங்கிலாந்துக்குச் சென்ற போதும் அவர் அந்த மயக்கம் நீங்காதவராகவே இருந்தார். ஆங்கிலேய உடை, ஆங்கிலேய நடை, ஆங்கிலேய பாவனைகள் என்று மூன்று மாதங்கள் முயற்சித்து அவற்றின் அபத்தத்தை உணர்ந்து தன் பண்பாட்டின் இயல்புகளுக்குத் திரும்பினார்.  ஆனால் அதன் பலங்களை அறியாதவராகவே இருந்ததால் அவருக்கு அது தன்னம்பிக்கை தருவதாக இருக்கவில்லை. தன் வாழ்க்கை தோற்றுப் போன ஒன்றாகவே அவரால் உணரப்பட்டது.- இந்தத் தோல்வி ஆங்கிலேய வார்ப்புக்குத் தன்னை வடிவமைத்துக் கொள்ள இயலாத தோல்வி. ஒரு வழக்கறிஞராக,  ஆங்கிலேயே பழக்க வழக்கங்கள் அவருக்கு எவ்வளவு முக்கியமானவையாக இருந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை.  இதனாலேயே இந்தியா திரும்பிய காந்தியால் தன் முதல் வழக்கை வாதாட முடிவதில்லை - கேள்விகள் கேட்கவும் நாவெழும்பாமல், நீதிமன்றத்தில் இருந்த அனைவரின் நகைப்புக்கும் உரியனாகி, தோல்வியின் காயங்களுடன் பிற வழக்கறிஞர்களுக்கு வழக்கைத் தயார் செய்து கொடுக்கும் பணியிலமர்ந்தார்.  அதன் பின் ஒரு வெள்ளைக்காரரால் ஏளனப்படுத்தப்பட்ட அனுபவம் அவரை இந்தியாவை விட்டு ஓட வேண்டும் என்ற உத்வேகத்தை அளித்தது. 

இதுவரை தோல்விகளையே சந்தித்திருந்த காந்தி, தென்னாப்பிரிக்காவின் தீவிரமான இனவெறி அரசில் பேசவும் தெரியாத, தம் உரிமைகளுக்குப் போராடும் எண்ணமும் இல்லாத இந்தியர்கள் மத்தியில்தான் தன் தனித்தன்மையை உணர்ந்தார்.  தீவிரமான குழப்பங்களுக்கிடையே தன்னம்பிக்கையின்மையால் தன் தேசத்தைவிட்டுத் தப்பி வந்த காந்தி, தென்னாப்பிரிக்காவில் காலடி பதித்த மூன்றே வாரங்களில் பிரிடோரியாவில் உள்ள இந்தியர்களை ஒரு பொதுக் கூட்டத்துக்கு அழைகிறார்- அப்போது அவருக்கு வயது இருபத்து நான்கு. ட்ரான்ஸ்வால்வாழ் இந்தியர்கள் அனைவரும் அனுபவித்த அடக்குமுறையையும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் தீர்வு காண ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டம் அது.  அங்கே காந்தி எந்த தயக்கமும் இல்லாமல் உரையாற்றினார். 

தன்னைவிட தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள், தன் உதவி கோரி நிற்பவர்கள் இவர்களுக்காகப் பேசும்போதும், செயல்படும்போதும் காந்தியால் தன் தயக்கங்களை வெல்ல முடிந்தது - தன் தன்னம்பிக்கையை இனங்கண்டு குரலெழுப்ப முடிந்தது : "என் ஆற்றலில் அளவையை நான் அடையாளம் கண்டு கொண்டேன், " என்கிறார் காந்தி.

இதுவே, அவர் தன் இறுதி நாட்களிலும்,  "நீ குழப்பத்தில் இருக்கும்போதும் உன்னைப் பற்றிய எண்ணங்கள் உன் உள்ளத்தை நிறைக்கும்போதும் நீ பின்வரும் சோதனையை மேற்கொள்ள வேண்டும்:  நீ அறிய வந்தவர்களில் மிகுந்த ஏழ்மையில் இருந்த அந்த மிக எளியவனின் முகத்தை நினைத்துப் பார்.  அடுத்து நீ என்ன செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறாயோ அது அவனுக்குப் பயன்படுமா என்று உன்னையே கேட்டுக் கொள்.  அதனால் அவனுக்கு நன்மை ஏதேனும் ஏற்படுமா? தனது வாழ்க்கையையும் விதியையும் தீர்மானித்துக் கொள்ளும் உரிமையை அவனுக்கு அது திரும்பப் பெற்றுத் தருமா? வேறு சொற்களில் சொல்வதானால், பசியிலும் ஆன்மிக வறுமையிலும் வாடும் பல கோடி மக்களுக்கு அதனால் ஸ்வராஜ்யம் கிடைக்குமா? இந்தக் கேள்வியில் உன் குழப்பங்களும் தன்னுணர்வும் கரைந்தே போகும்"என்று நினைவுகூரக் காரணமாக இருந்திருக்க வேண்டும்.

இன்னும் ஒரே ஒரு சம்பவம் - காந்தி தென்னாப்பிரிக்காவில் தன் முதல் வழக்கை இரு தரப்புக்கும் ஏற்புடைய சமாதானமான தீர்வு கண்டு முடித்துத் தருகிறார்.  வெற்றி பெற்ற கட்சிக்காரர் நஷ்ட ஈட்டைத் தவணை முறையில் பெற்றுக் கொள்ள சம்மதிக்கிறார்.இது தோல்வியடைந்த தரப்பினரை பொருளாதார அழிவிலிருந்து காப்பாற்றுகிறது.  இதைத் தொடர்ந்து காந்தி எழுதுகிறார், "நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.  சட்டத்தின் சரியான நடைமுறையை அறிந்து விட்டேன். மனித இயல்பின் நற்பண்புகளைக் கண்டடையக் கற்று விட்டேன், மனித இதயத்தைத் திறப்பது எப்படி என்பதைப் புரிந்து கொண்டு விட்டேன்.  பிரிந்த கட்சிக்காரர்களை இணைப்பதுதான் வழக்கறிஞரின் உண்மையான பணி என்ற தெளிவடைந்து விட்டேன்,"  என்று எழுதுகிறார் காந்தி.

காலங்காலமாக இந்தியா சட்டத்தை இருதரப்புக்கும் அந்நியமான ஒன்றாகவும், வாதிடும் தரப்பினரை எதிரிகளாகவும் கருதாமல் இருவருக்கும் பொதுவான நீதி வழங்குவதை நடைமுறை வழக்கமாக வைத்திருந்தது.  வழக்கறிஞரின் இடத்தில் இருவருக்கும் பொதுவான மத்தியஸ்தர் இருந்தார். இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய சமாதான உடன்படிக்கையை நோக்கியே வாதங்கள் சென்றன.  காந்தி இதையே தன் அரசியல் நடைமுறைக்கும் கொணர்ந்தார்.  

தன்னலத்தைப் பொருட்படுத்தாமல் பிறருக்காகத் துன்பத்தை ஏற்பது என்ற அணுகுமுறையுடன், எப்போதும் இரு தரப்பினரும் ஏற்கக்கூடிய தீர்வுகளை நோக்கிய தேடல் காந்தியை இந்தியாவின் இயல்புக்கு ஏற்றதாக முன்னிறுத்தியது . கருணையையும் தியாகத்தையும் முன்வைத்த காந்திய இயக்கம், இந்திய விடுதலையை நோக்கமாகக் கொண்ட அரசியல் இயக்கமாக மட்டும் நில்லாமல், தன்னலத்தையும் அதன் விளைவான தனி மனித வளம் மற்றும் பகைமையைக் களையக்கூடிய ஆன்மிக இயக்கமாக விரிவடைந்தது.  இந்தியாவின் ஆன்மா அரசியலிலும் அதிகாரத்திலும் அக்கறை கொள்ளாத ஒன்று; பொருளாதார வளத்தை பரவலான சமுதாய நலனில் பகிர்ந்து கொண்டாடும் ஒன்று - அடிப்படையில் இந்திய விழுமியங்கள் ஆன்மிக அடிப்படை கொண்டவை.  கருணையையும் தியாகத்தையும் கோரி காந்தி முன்வைத்த அழைப்புக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளித்தனர் என்பது இன்று பார்க்கும்போது இயல்பான ஒன்றாக இருக்கிறது. ஆனால், இதை அடையாளம் காணவும்,  இதன் முகமாக இருக்கவும் காந்தியைத் தவிர வேறு எவராலும் இயலவில்லை.  

நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டு, அகிம்சையை ஒரு பொன்விலங்காய்ச் சுமந்த தேசம். தன் விடுதலைக்கான வழியாக வன்முறையைத் தேர்ந்தெடுப்பதுதான் தன்னைத் தன் தளைகளிலிருந்து விடுவிக்கும் என்று நினைத்திருக்கலாம்.  எதிரியை எதிர்த்துப் போராடி வெற்றி காண்பதுதான் வீரம், ஆனால் அது நம் மண்ணுக்கு ஒவ்வாதது என்றிருந்த நிலையில், சகிப்புத் தன்மைதான் வீரம்,  உண்மைக்காகவும் கருணைக்காகவும் நீதிக்காகவும் அன்பை இழக்காமல் பகைவனுக்கருளும் மனமே,  தன் உடல் பொருள் ஆவி என்று அத்தனையையும் இவற்றுகாகத் தியாகம் செய்யத் துணிந்த தியாக உள்ளமே வீரம் விளையும் மண் என்பதை இந்திய மக்களுக்கு உணர்த்தி,  தானே அதற்கு முன்னுதாரணமாகவும் இருந்தவர் காந்தி. 

---மேலும்--
அர.சு.ராமையா

முந்தைய பதிவுகள் 

காந்தியத்தின் துவக்கங்கள்- 1-வீரம் விளைந்த மண்-(பின் நவீனத்துவ காந்தி-6)


No comments:

Post a Comment