Pages

Wednesday, February 29, 2012

வாரணாசியில் காந்தியின் உரை


பிப்ரவரி -4-1916- காந்தி தென்னாப்ரிக்காவிலிருந்து இந்தியா திரும்பி வந்த சூழலில் , வாரணாசி இந்து பல்கலைகழக தொடக்க விழாவில் பங்குபெறுமாறு காந்திக்கு பண்டிதர்.மாளவியா அழைப்பு விடுத்திருந்தார்.அப்பொழுதைய வைஸ்ராயான லார்ட்.ஹாடிஞ் விழாவில் பங்குபெற்றதால் போலீஸ் கெடுபிடிகள் எங்கும் நிறைந்து இருந்தன.வாரனாசியே போலீஸ் ஆளுகைக்கு உட்பட்டதுப்போல் காட்சியளித்தது. பகட்டு ஆடைகளும் ,ஆபரணங்களும் அணிந்த இந்தியாவின் பல மகாராஜாக்களும் ,ராணிகளும்,ராஜகுமாரர்களும் ,பெரும் செல்வந்தர்களும்,பிரபுக்களும் அங்கு  குழுமியிருந்தனர்.அக்கூட்டத்தில் எளிய கதியவாரி உடையணிந்த காந்தி பேச அழைக்கப்பட்டார்.அந்த ஒடுங்கிய தேகத்திற்குள் இருந்த அபார மனத்துணிவும் ,ஆற்றலும் உண்மையில் வியக்கத்தக்கது.காந்தியின் பேச்சில் இருந்த உண்மை மேடையில் இருக்கும் ஆளுமைகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை.வரலாற்று சிறப்புமிக்க அந்த உரை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது .ஆனால் அதன் விளைவாகவே காந்தி தனது சீடராக வினோபாவை கண்டடைந்தார் . டி.டி.திருமலை தொகுத்த "சத்திய சோதனையில் வென்ற மகாத்மா காந்தியின் சத்திய வாழ்க்கை " (சாருப்ரபா பதிப்பு,சென்னை விலை-rs.12/-)எனும் புத்தகத்தில் இவ்வுரையின் சில பகுதிகள் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது அதிலிருந்து...


----------------------------


"இன்று மாலை மாணவர்களுக்காக நான் பேசுவதாக ஏற்பாடு.இந்த நாடு ஆன்மீக வாழ்வுக்காக பெருமை பெற்றது.இத்துறையில் நம் நாட்டிற்கு ஈடாக எந்த நாடும் நிற்கமுடியாது.ஆனால் இந்த பெருமையை பேச்சு மூலம் பரப்பிவிடலாம் என்று நினைப்பீர்களானால் அது தவறான கருத்து!இந்தியா ஒருநாள் இந்த செய்தியை உலகிற்கு அளிக்கப்போகிறது .ஆனால் அதை பிரசங்கத்தால் பரப்பிட முடியாது .சொற்பொழிவாற்றும் ஆற்றலின் எல்லையை நாம் எட்டிவிட்டோம்.காதுக்கு மட்டும் இனிமையூட்டினால் போதாது, கண்ணுக்கு விருந்தளித்தாலும் போதாது, உள்ளத்தை தொட வேண்டும் அதற்கு நமது காலும் கையும் இயங்க வேண்டும்.

இப்புனிதமான நகரில் அமைந்துள்ள உன்னதமான கல்லூரிக்கு அருகில் ,என்னுடைய நாட்டு மக்களுக்கு அந்நியமொழியில் பேசவேண்டிய என் அவலநிலை குறித்து நான் வெட்கப்படுகிறேன் .நாமாகவே எதையும் செய்யத் தொடங்குவதில்லை என்று நம்மைக் குறை கூறுகிறார்கள்.அன்னியமொழியைச் செம்மையாகப் பயிலுவதற்கு நமது வாழ்நாளில் பெரும்பகுதியை செலவிட வேண்டியிருக்கும்போது ,நம் ஆற்றலை வளர்த்துக்கொள்ள நேரம் எங்கு இருக்கிறது? ஆங்கிலக் கல்வி பெற்றவர்கள் முன்னேறுகிறார்கள் என்றும் ; அவர்கள் தான் நம் நாட்டிற்கு நல்லது செய்கிறார்கள் என்றும் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன் .ஆனால் கல்வி என்ற பெயரில் ஆங்கிலக் கல்வி ஒன்றுதானே இங்கு நடக்கிறது.எனவே அதில் தான் நாம் அக்கறை காட்ட முடியும்.இந்த ஐம்பது ஆண்டுகளாக நமது தாய்மொழியில் கல்வி பெற்று வந்திருந்தோமானால்,இன்று நமக்கு எம்மாதிரியான பயன் கிட்டியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்,இந்தியா விடுதலை பெற்றிருக்கும்.நம் நாட்டுக் கல்வி பயின்றவர்கள் இங்கு இருப்பார்கள்.சொந்த நாட்டிலேயே அயல்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருப்பது போல் இல்லாமல் ,நமது கல்வியில் சிறப்படைந்து மக்களின் இதயத்தை வென்றவர்களாக விளங்கியிருப்பார்கள்.பரம ஏழைகளின் மத்தியிலிருந்து அவர்களுக்காக உழைத்திருப்பார்கள்.இந்த ஐம்பது ஆண்டுகளில் அவர்கள் பாடுபட்டது வருங்கால மக்களுக்கு விட்டுசெல்லப்பட்ட சிறந்த சொத்தாக விளங்கியிருக்கும்.

சுய ஆட்சியைப் பற்றி காங்கிரஸ் மகாசபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது .இவர்களோ,மாணவர்களோ,மக்களோ (இந்நிலையில் ) என்ன சாதித்துவிட முடியும்? எனவே எனக்கு அதில் அக்கறையில்லை.ஏட்டுச் சாதனைகள் எல்லாம் நம்மை சுயாட்சிக்கு இட்டுச் செல்லமாட்டா.நமது நடத்தையே அதற்கு நம்மை தயாராக்கும் .நம்மை நாம் எவ்வாறு ஆள முயலுகிறோம் ? வெளிப்படையாக எல்லோருடைய காதுகளிலும் விழும்படியாக நான் இப்பொழுது உங்கள் முன் சிந்திக்கிறேன்.சொற்பொழிவு நிகழ்த்த ஆசைப்படவில்லை.ஒளிவு மறைவில்லாமல் நான் பேசுகிறேன் என்றால் ,பகிரங்கமாக சிந்தனை செய்யும் பழக்கமுள்ள ஒருவன் பேச்சைக் கேட்கிறோம் என்று கருதி செவிமடுக்க வேண்டுகிறேன்.கட்டுப்பாடுகளை மீறிப் பேசுவதாக உங்களுக்கு தோன்றினால், அப்படி நான் உரிமை எடுத்துக் கொள்வதற்கு என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.நேற்று மாலை இங்குள்ள விஸ்வநாதசுவாமி கோவிலுக்கு சென்றிருந்தேன் .அந்த இடுக்கு முடுக்குகள் வழியே செல்லும்போது இந்தக் கருத்துக்கள் என் மனதில் பட்டன.அந்நியன் ஒருவன் திடிரென்று இந்தப் புனிதமான கோவிலுக்கு வந்து இந்துக்களாகிய நாம் எவ்வாறு நடந்துக்கொள்கிறோம் என்பதைப் பார்த்தால் ,நம்மை அவன் கண்டிப்பது நியாயமாகாதா என்று கேட்கிறேன்.நமது நடத்தையின் வெளிப்பாடுதானே இந்தக்கோயில் .இந்து என்ற உணர்வால் நான் இதைச் சொல்கிறேன், நமது புனிதமான கோவிலின் அருகேயுள்ள முடுக்குகள் ,இம்மாதிரி அசுத்தமும் குப்பையும் நிறைந்தா காணப்படவேண்டும்? நமது கோயில்களைக்கூட காற்றோட்டமாகவும் ,சுத்தமாகவும் வைத்துக்கொள்ள நமக்கு இயலவில்லையானால் நமது சுயராஜ்யம் என்ன லட்சணமாக இருக்கும் ?

பம்பாயில் மாடிகளிலிருந்து தலைமேல் எச்சில் துப்பிவிடுவார்களோ என்ற பயத்துடன் எப்போதும் மக்கள் வீதிகளில் நடந்து செல்ல வேண்டியிருப்பது உள்ளத்துக்கு நிறைவு தருவதாக இல்லை.நான் அதிகமாக ரயிலில் பிரயாணம் செய்கிறேன்.மூன்றாம் வகுப்பு பயனிகளுக்குள்ள இன்னல்களை நன்கு கவனித்திருக்கிறேன்.ஆனால் எல்லா இன்னல்களுக்கும் ரயில்வே நிர்வாகிகளைக் குற்றம் சொல்லக்கூடாது .சுத்தமாக இருப்பதற்கான முதல்பாடம்கூட நாம் கற்றுக்கொள்ளவில்லை.ரயில் பெட்டியின் தரையை மக்கள் படுத்துக்கொள்ள பயன்படுத்துகிறார்களே என்றக் கூச்சம் கூட இல்லாமல் ,எல்லா இடத்திலும் துப்பி வைக்கிறோம் .எப்படி ரயில்பெட்டியை பயன்படுத்த வேண்டும் என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை.எனவே ரயில் பெட்டி முழுவதும் அசுத்தப்படுத்துகிறோம் .மேல்வகுப்பு பிரயாணிகள் என்று கருதப்படுபவர்களைக் கண்டு கீழ் வகுப்பு பிரயாணிகள் அச்ச்சப்ப்படும்படி நடந்துகொள்கிறார்கள்.இம்மாதிரியே மாணவர் உலகமும் நடந்து கொள்வதை நான் பார்த்திருக்கிறேன் .சில சமயங்களில் அவர்களை விட கீழ்த்தரமாக மாணவர்கள் நடக்கிறார்கள்.ஆங்கிலம் பேச தெரிந்ததாலும், பேன்ட் ,கோட்டு அணிந்த வெள்ளையர் மாதிரி நடக்க பழகியதாலும் அந்தஸ்து வந்ததாக நினைத்து மூன்றாவது வகுப்பு பிரயாணிகளை அரட்டி ரயில் பெட்டியில் நுழைந்து ,உட்காரும் உரிமை கேட்கிறார்கள்.எல்லாவற்றையும் நன்கு கவனித்திருக்கிறேன் .எனக்குப் பேச உரிமையை நீங்கள் தந்திருப்பதால் தான் உள்ளத்தில் இருப்பதை அப்பட்டமாக உங்கள் முன் வைக்கிறேன்.சுயராஜ்யத்தை நோக்கி முன்னேற உழைக்கிற நாம் இதையெல்லாம் சீர்திருத்தியாக வேண்டும்.

  பண்டிட் .  மதன் மோகன் மாளவியா   

மேன்மைத்தாங்கிய மகாராஜா நேற்றைய கூட்டத்தில் இந்திய மக்களின் வறுமையை பற்றி பேசினார்.மற்ற பேச்சாளர்களும் அதுபற்றி கவனிக்கும்படி அழுத்தமாக பேசினார்கள்.ஆனால் வைஸ்ராய் நடத்தவந்த இந்த அடிக்கல் நாட்டுவிழாவில் என்ன நடந்தது என்பதைப் பார்த்தீர்களா ? பகட்டான,மினுமினுக்கும் ஆடம்பரமான காட்சிகளைக் கண்டீர்கள்.வந்தவர்கள் அணிந்து வந்த ஆபரணங்கள் மிக நாகரீகமான பாரிஸ் நகரத்தின் பிரபலமான நகை வியாபாரிகள் கண்களுக்கு அரிய விருந்து.பல கோடிக்கணக்கான ஏழை மக்களை இந்த விலையுயர்ந்த ஆடை ஆபரங்கள் அணிந்த கனவாண்களுடன் ஒப்பிட்டு பார்க்கிறேன்.நீங்கள் அணிந்திருக்கிற விலை உயர்ந்த அணிகலன்களை எல்லாம்  கழற்றி ,அவற்றை இந்நாட்டு மக்களின் சொத்தாக கருதி, அதனைப் பாதுகாக்கும் அறங்காவலர்களாக நீங்கள் மாறாவிட்டால் இந்தியாவிற்கு விமோசனமே இல்லை என்று அவர்களை நோக்கி கூற விரும்புகிறேன்.எங்காவது ஓர்  பெரிய அரண்மனையை ஒரு மாநகரத்தில் கட்டி முடிக்கிறார்கள் என்றால் என் உள்ளம் பொருமுகிறது.ஆம் ஏழை விவசாய மக்களின் பணமல்லவா இம்மாதிரி கட்டுவதற்கு வாய்ப்பளிக்கிறது .நம் நாட்டு மக்களில்  75% உழவர்கள் .அவர்களின் உழைப்பின் பலனை வேறொருவர் எடுத்துக் கொள்வதோ அல்லது எடுத்துக் கொள்ள அனுமதிப்பதோ ,சுயராஜ்ய உணர்வுக்கு மாறுபட்டது.அது தேசபற்றல்ல.உழவர்கள் மூலமாகவே தான் நமக்கு விமோசனம் கிடைக்கும்.வழக்கறிஞர்களோ ,மருத்துவர்களோ ,பணக்கார நிலச்சுவான்தார்களோ அதைப் பெற்று தர முடியாது.நம் மக்கள் பொறுமை இழந்ததால் அராஜகக்கூட்டம் உற்பத்தியாகி இருக்கிறது.இது கண்டு உள்ளம் கொதிக்கலாம் குமுறலாம் அல்லது எதிர்க்கலாம்.நானே ஒரு அராஜகவாதி தான்.ஆனால் என்னுடைய அராஜகம் முற்றிலும் மாறானது .நம்மை ஆளுகிறவர்களை நாம் தோற்கடிக்க வேண்டுமென்றால் மேலே சொன்னவர்களின் அராஜகம் பயன்படாது .அது அச்சத்தினுடைய வெளிப்பாடு.மகாராஜாக்களுக்கோ,வைஸ்ராய்களுக்கோ ,ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்திக்கோ கூட பயப்படக்கூடாது .கடவுளுக்கு அஞ்சவேண்டும்.அப்பொழுது வேறு எவருக்கும் அஞ்ச வேண்டாம்.( குறுக்கே மறித்து "தயவு செய்து நிறுத்துங்கள் " என்றார் அன்னி பெசன்ட் அம்மையார்)

நான் பேசுவதனால் இந்த நாட்டிற்கோ அல்லது இந்த சாம்ராஜ்யத்திற்கோ நான் தொண்டு செய்யவில்லை என்று கருதப்பட்டால் நான் பேசுவதை நிறுத்திக்கொள்கிறேன் .( பேசுங்கள்,பேசுங்கள் என்று குரல்கள் எழும்பின).நண்பர்களே ! இந்த குறுக்கீட்டைப் பொறுத்துக்கொள்ளுங்கள் .இளைஞர்களே ! உங்கள் முன் வெளிப்படையாக சிந்திப்பதனால் தவறு செய்கிறேன் என்று அன்னி பெசன்ட் அம்மையார் கருதுவதால் ,நான் பேசுவதை நிறுத்த வேண்டும் என்று சொன்னார்கள் .பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்கும் நமக்கும் இடையே காணப்படுகின்ற அவநம்பிக்கையைக் களைந்தெறிந்து இருவருக்கும் பரஸ்பர அன்பும் நம்பிக்கையும் ஏற்படுத்தினால் ஒழிய நமது லட்சியத்தை அடைய முடியாது என்பதனாலேயே (அன்னி பெசன்ட் அம்மையார் மாறாக கருதினாலும் ) இவ்வாறு பேசுகிறேன்.மாணவர்கள் விவாதிக்காத பொருள் கிடையாது , மாணவர்களுக்கு தெரியாத பொருளும் கிடையாது .எனவே நம்மையே நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்கிறேன்.எனவேதான் உங்களுடன் இந்த எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறேன் .தாழ்மையுடன் உங்களுக்கு சொல்கிறேன் .இந்தியாவில் அராஜகத்திற்கு இடமிருக்க காரணமில்லை.நம்மை ஆள்வோரிடம் நாம் என்ன சொல்லவேண்டும் என்று நினைக்கிறோமோ ,அதை நேருக்கு நேராக பேசுவோம்.நமது சொற்கள் அவர்களுக்கு வெறுப்பாக இருந்தால் ,அதன் விளைவை நாம் அனுபவிக்க தயாராய் இருப்போம்.ஐ.சி.எஸ் வேலையில் இருக்கும் பெரும்பான்மையான ஆங்கிலேயர்கள் ,பொறுமை இல்லாதவர்களாகவும் ,கொடுமையானவர்களாகவும், சிந்தனையற்றவர்களாகவும் விளங்குகிறார்கள்.இவ்வாறுதான் அவர்கள் இருப்பார்கள் என்று நான் சொல்கிறேன்.இந்தியாவில் சில ஆண்டுகள் வாழ்ந்த பிறகு இப்படி கீழ்தரமாகிவிட்டார்கள் என்றால் அதன் பொருளென்ன ? இங்கு வருவதற்கு முன் பண்புள்ளவர்களாக இருந்தார்கள்.ஆனால் இப்பொழுது நெறி தவறுகிறார்கள் என்றால் அது நம்முடைய நடத்தையையே பிரதிபலிக்கிறது.( இல்லை இல்லை என்று குரல்கள் ).நேற்று ஒருவன் நல்லவனாக இருந்தான் என்னுடன் பழகிய பிறகு கெட்டுவிட்டான் என்பதற்குக் காரணம் அவனா ?நானா? என்று சற்றே சிந்தித்துப்பாருங்கள் .பொய்யும் காக்காய் பிடித்தலும் நிறைந்திருக்கிற சூழ்நிலை அவர்களை நெறி தவறசெய்துவிட்டது.அது நம்மில் பலரையும் கூட அவ்வாறு செய்துவிடும்.இம்மாதிரியான தவறுகளை நாமே ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் சில நேரங்களில் வரும்.சுயராஜ்யம் வேண்டுமானால் இந்த நிலையை நாம் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.இல்லாவிட்டால் நமக்கு ஒருநாளும் சுயராஜ்ஜியம் அளிக்கப்பட மாட்டாது.ஆங்கில மக்கள் .அவர்களுடைய சாம்ராஜ்ஜியம் இவற்றின் வரலாற்றை சிறிது நோக்குங்கள்.சுதந்திரத்தை தாங்களே ஏற்கத் தயாராகாத மக்களுக்கு அவர்கள் உரிமை வழங்க ஒப்புக்கொள்ளமாட்டர்கள் .போயர் யுத்தத்திலிருந்தாவது இந்த பாடத்தை நீங்கள் கற்க வேண்டும்.சில ஆண்டுகளுக்கு முன்னாள் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்கு எதிரிகளாக இருந்தவர்கள் இப்பொழுது நண்பர்களாகி விட்டார்கள்.

(இந்த நேரத்தில் கனவான்கள் பலர் மேடையை விட்டு சென்றுவிட்டார்கள்.குழப்பம் அதிகமானதால் காந்தி பேச்சை நிறுத்த வேண்டியிருந்தது.பெசன்ட் அம்மையார் கூட கூட்டத்தை கலைத்து விட்டார்கள்)

காந்தி இறுதியாக கூறியது "எப்பொழுது பணத்தாசையை விடுத்து உண்மையை பற்றிக்கொள்கிறோமோ எப்பொழுது பணம்,அதிகாரம் இவ்விரன்டினால் விளைகிற செல்வாக்கிலும் ஆடம்பரத்திலும் ஆசையை விடுத்து,அச்சமில்லாமல் நிற்கிறோமோ ,எப்பொழுது சுயநலம் மறந்து பிறர் நலம் பேணுகிறோமோ ,அப்பொழுது தான் நம் நாடு உண்மையான ஆன்மீக நாடாக விளங்கும்.எப்பொழுது நம் இல்லங்களிலிருந்தும் அரண்மனைகளிளிருந்தும் ,கொவில்களிளிருந்தும் செல்வத்தின் செருக்கை அகற்றி அறநெறியின் இயல்புகளை நிலவச் செய்கிறோமோ ,அப்பொழுது தான் பலத்த ரானுவமின்றி எல்லாவிதமான எதிர்ப்பு சக்திகளின் மீதும் ஆற்றல் மிக்க போர் தொடுக்க முடியும்"                  

நன்றி-டி.டி.திருமலை 

No comments:

Post a Comment