Pages

Monday, February 27, 2012

காந்தியின் இன்றைய அரசியல் முக்கியத்துவம் -3 -ஜீன் ஷார்ப்


சென்ற பதிவின் தொடர்ச்சி 

ஜீன்ஷார்ப்பின் கட்டுரையுடைய மொழியாகத்தின் மூன்றாம் பகுதி இது.காந்தியின் அகிம்சை போராட்ட வழிமுறைகளின் மீது சுமத்தப்படும் களங்கங்கள்,குற்றசாட்டுகள், புரிதல் பிழைகளை பற்றி அலசும் பதிவு.



1930-31 ஆண்டுகளில் நடந்த சட்ட மறுப்பு போராட்ட காலத்தில் காந்தியின் வார்த்தைகள் அற்புதமானவை.

"தங்கள் அரசாட்சி முடிவுக்கு வர வேண்டும் என்பதை பிரித்தானிய மக்கள் உணர வேண்டும். இந்தியாவிற்குள் நமது எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளப் போதுமான பலத்தை திரட்டினாலொழிய அவர்கள் அதை உணர மாட்டார்கள்... முன்முடிவுகளோடு விவாதங்களை சுமந்து செல்வதல்ல பிரச்சினை. சமபலம் கொண்ட இருதரப்பில் ஏதேனும் ஓர் தரப்பிற்கு சாதகமாகவே இப்பிரச்சனை தீரும். பிரித்தானிய பேரரசு இந்தியாவுடனான வணிகத்தை கட்டுக்குள் வைக்க வேண்டும் எனும் தனது நோக்கத்திற்காக தன் முழு பலத்தையும் பயன்படுத்தும் என்பது உறுதி. இந்தியா இந்த மரணப்பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள போதிய பலத்தை திரட்ட வேண்டும்... நாம் நம் தீவிரமான செயல்பாடுகளால் கட்டாயப்படுத்தினால் மட்டுமே ஆங்கிலேயர்கள் எதிர்வினையாற்றுகின்றனர். மனுக்கள், தூதுக்குழுக்கள், நட்பான பேச்சுவார்த்தைகள் போன்ற அரசியல் நடவடிக்கைகளில் நான் ஒரு காலத்தில் நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால் இவை அனைத்தும் வீணாய்ப்போனது. அரசை வழிக்கு கொண்டுவர இவை ஏதும் பயன்படாது என்பது எனக்கு தெரியும்.கலகமே என் மதமாகிவிட்டது.நமது போராட்டம் ஓர் அகிம்சை போராட்டம் "      


அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாத அறியாமையில் காந்தி இருந்ததாகச் சொல்லப்படுவதில் உண்மையில்லை.மாறாக, காந்தி தன் போராட்டத்தை முறைபடுத்தி இந்தியர்களின் பலத்தை அதன் உச்ச சாத்தியங்களுக்கு உயர்த்தவும் ஆங்கிலேயர்களை பலவீனப்படுத்தவும் அவர்களின் அரசியல் அதிகாரத்தின் பலவீனங்களைப் பயன்படுத்திக் கொண்டார். .அரசாங்கத்திற்கு மக்கள் வழங்கி வந்த ஒத்துழைப்பையும் ,கீழ்ப்படிதலையும் திரும்பப்பெற்றதன் மூலம் காந்தி ஆள்வோரின் அதிகாரத்திற்கான அடிப்படை ஆதாரங்களை கேள்விக்குள்ளாக்கினார். அதே நேரம், ஒத்துழையாமையும் கீழ்ப்படியாமையும் தங்கள் அதிகாரத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து பிரிட்டிஷ் அரசுக்கு பெரும் சிக்கலைக் கொடுத்தது. அகிம்சை முறையில் போராடுவோரின் மீது அடக்குமுறையை செலுத்துவது என்பது அரசிற்கு வலுச்சேர்க்காது. மாறாக, மேலும் பல இந்தியர்களை பிரிட்டிஷ் அரசிடமிருந்து அந்நியமாக்கும். அதேவேளை, -தங்கள் தேசத்திலும் எதிர்ப்பின்முன் ஒற்றுமை குலைந்து எதிர்ப்பும் அதிருப்தியும் வலுக்கும்.   

 இந்தியர்களின் உச்சகட்ட பலத்தை திரட்டிய அதே வேளையில் ஆங்கிலேயர்களின் பலத்தையே அவர்களுக்கு எதிராக திருப்பியது ஓர் அரசியல் ஆடு புலியாட்டம் தான். "எந்த அரசும் விருப்பத்துடனோ அல்லது கட்டாயப்படுத்தப்பட்டோ மக்கள் தங்கள் ஒத்துழைப்பை அளித்தாலன்றி ஒரு நொடி கூட பிழைத்திருக்க முடியாது, மக்கள் திடுமென்று ஒத்துழைப்பை முற்றிலுமாக திரும்பப் பெற்றுக்கொண்டால் அரசு ஒட்டுமொத்தமாக திகைத்து நின்றுவிடும் என்று நான் நம்புகிறேன்" என்றார் காந்தி.

அரசியல் அதிகாரங்களின் பயன்பாடு பற்றி காந்திக்கு அறியாமை இருந்தது என்பதையும் அவரது செயல்முறை வலுவற்றது என்பதையும் பிரித்தானிய அரசாட்சிப் பணியாற்றிய, இந்தியாவில் காந்தியுடன் தொடர்பிலிருந்த, ஒவ்வொரு பிரித்தானிய அதிகாரியும் வைஸ்ராயும் நிச்சயம் கடுமையாக மறுப்பார்கள்.

ஜூலை 1930 ஆம் ஆண்டில் இந்திய சட்டசபையின் கூட்டவையில் வைஸ்ராய் லார்ட் இர்வின் ஆற்றிய முக்கியமான உரையில் " என்னுடைய தனிப்பட்ட முடிவும், எனது அரசின் முடிவும் - சட்ட மறுப்பு இயக்கம் என்பது அரசின் அதிகாரத்தை தூக்கி எறிய பெருந்திரள் மக்களை பயன்படுத்திக் கொள்வதாகும். மேலும் இது அரசியலமைப்பிற்கு எதிரானது, ஆட்சியைக் கவிழ்க்குமளவிற்கு ஆபத்தானது. இந்த வெகுஜனப் போராட்டத்தை முன்வைப்பவர்கள் இதை அகிம்சை வழிமுறை என்று சொல்லிக்கொண்டாலும் உண்மையில் இது வன்முறையின் மற்றொரு வடிவம்தான். அது அரசை நிலைகுலைய செய்ய வேண்டும் எனும் தன் இலக்கை அடைய முனையும்போது, ஒன்று அரசு அதை முழு மூச்சோடு எதிர்க்க வேண்டும் இல்லையேல் அதற்கு பணிந்து போக வேண்டும் ..சட்டமறுப்பு இயக்கம் முடிவுக்கு வரும்வரை நாம் நம் முழு திறனோடு அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும் .."என்றார் இரவின். காந்தி நடைமுறைக்கு ஒவ்வாதவர் என்று அவரை புறம்தள்ளிய அரசியல் நடைமுறைவாதிகள் தங்கள் முடிவை மறுமதிப்பீடு செய்தாக வேண்தியது அவசியம்.

ஐந்தாவதாக, பரவலாக உள்ள ஒரு புரிதல் பிழை -குறிப்பாக இங்கிலாந்திலும்,சில இந்தியர்களிடமும் - அகிம்சை போராட்டம் வெற்றி பெறக் காரணம் - எதிர்தரப்பு மென்மையான நடைமுறைகளை கடைப்பிடிக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் என்ற எண்ணம் இருக்கிறது. இக்கூற்றில் சிறிதளவு உண்மை இருக்கிறது என்றாலும், அது அகிம்சை போராட்டத்தின் வெற்றியில் எந்த அளவிற்கு பங்களிப்பாற்றியுள்ளது என்று ஆராயாமல், இது மட்டுமே காரணம் என்று அதீதமாக நிறுவப்படுகிறது - ஆதலால் இதர நிகழ்வுகள் உரிய கவனம் பெறாமல் அப்படியே புறக்கணிக்கப்படுகிறது .

ஸ்டாலினைப் போலோ ஹிட்லரைப்போலோ பிரிட்டிஷார்கள் வரம்பற்ற வன்முறையாளர்கள் அல்ல. ஆனாலுகூட இன்று நம்பப்படுவதை காட்டிலும் பன்மடங்கு அதிகமான அடக்குமுறையை கையாண்டவர்கள் அவர்கள். மக்கள் மிக மோசமான சிறைச்சாலைகளிலும் சிறை முகாம்களிலும் வதைபட்டது மட்டுமின்றி போராட்டங்களின்போது மண்டையோடு தெறிக்கும் அளவுக்கு தலையில் லத்தி அடிகளையும் தாங்கிக் கொண்டனர்.இதைக் காட்டிலும் கொடூரமான நிகழ்வு- ஜாலியன் வாலா பாகில் நடந்தேறியது, அமைதியான முறையில் திரண்ட மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டிருந்த சமயத்தில் எவ்வித முன்னறிவிப்புமின்றி துப்பாக்கி சூடு நடந்தது .ஹன்டர் கமிஷனின் தகவலின் படி அதில் 379 உயிர்கள் பலியாகின, 1137 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 


அகிம்சை போராட்டத்திற்கு எதிராக ஆங்கிலேய அரசு அடக்கி வாசித்தது என்றால்- அதற்கு அகிம்சை போராட்டம் ஏற்படுத்திய பிரத்யேக பிரச்சனைகள்தான் காரணம், மேலும் அகிம்சை போராட்டம் உருவாக்கிய எழுச்சியும் அதற்கு முக்கிய காரணம். மென்மையை கடைபிடிக்கும்  ஆங்கிலேயர்கள் எதிர்தரப்பு என்பதினால் அல்ல. இதே ஆங்கிலேயர்கள் கென்யாவின் மாவு மாவுவிடமும் , ஜெர்மனியின் மீதான குண்டுவீச்சின்போதும் எத்தகைய மென்மையையும் கடைபிடிக்கவில்லை. 

ஹிட்லர் அவரது சுயசரிதையான மெய்ன் கேம்பில் - இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெற்றிபெற அகிம்சை போராட்டமோ வன்முறை புரட்சியோ கைகொடுக்கும் என்று நம்பவில்லை."இங்கிலாந்தை பணிய வைப்பது எத்தனை சிரமம் என்பதை ஜெர்மானியர்களான நாங்கள் உணர்ந்துள்ளோம் " என்று எழுதுகிறார் அவர்.  

அரசியல் போராட்டங்களில் இந்தியாவின் அகிம்சை போராட்டம் மட்டுமே தனியுதாரணமாகக் கருதப்பட்ட காலக்கட்டத்தில் வேண்டுமானால் அது ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடத்தப்பட்டது என்பதால்தான் வெற்றிபெற்றது எனும் கருத்து ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால் இப்பொழுதைய சூழலில் அது உண்மையில்லை, உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி வெவ்வேறு அரசியல் சூழல்களிலும் குறிபிடத்தக்க அளவுக்கு வென்றுள்ளது - நாஜி, கம்யுனிஸ்ட் ஆட்சிகள் உட்பட. அதன் பயனை முழுவதுமாக உணர அந்தந்த சூழலை பற்றிய நுண்ணிய ஆய்வுகள் அவசியம்.


இறுதியாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஓர் கருத்து -அகிம்சை வழிமுறை மூலம் அரசியல் வெற்றி பெறுவது என்பது காந்தி வாழ்ந்த காலத்தில் நிலவிய இந்திய சூழலுக்கு மட்டுமே பொருந்தும். இந்தியாவிற்கு வெளியில் உள்ளவர்கள் இதன் மூலம் அகிம்சை- நடைமுறைக்கு ஒவ்வாது என்று கருத நேரிடும். இந்தியர்களை பொருத்தவரை -ஒரு காலத்தில் நடைமுறையில் இருந்தது, இனி எப்போதும் பயன்படாது என்ற ஒரு எண்ணம் உள்ளது. சில சமயங்களில் இத்தகைய பார்வை மேலும் குறுகி- இந்துமதத்தை பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே அகிம்சை வழிமுறை ஏதுவானது என்றும் கருதப்படுகிறது . 


இக்கருத்தை மறுத்திட இந்திய அனுபவங்களேகூட நமக்கு உதவும். அகிம்சை போராட்டங்களில் அபார திண்மையோடும் உறுதியோடும்  பங்குக்கொண்டவர்கள் வட மேற்கு பிராந்தியத்தை சேர்ந்த முஸ்லீம் பதான்கள். நீண்டகாலமாக பலவேறு போர்களில் பங்குபெற்று அவர்களின் வீரதீர செயல்களுக்கு பெயர்போனவர்கள். இவர்கள் கான் அப்துல் கபார் கானின் திண்மையான தலைமைக்கு கீழ் அகிம்சை முறையில் போராட அணிதிரண்டனர்.   

இது நமது முக்கிய கவனத்திற்கு உரியதில்லை என்றாலும்,இப்பொழுதும் அகிம்சை செயல்பாடுகள் இந்தியாவில் சாத்தியம் என்று ஒரு சாரர் நம்புகின்றனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.சுதந்திரத்திற்கு பின்பு பல்வேறு சந்தர்ப்பங்களில் உள்நாட்டு அளவில் இவ்வழிமுறைகள் பயன்பட்டுள்ளது.சீனாவோ பாகிஸ்தானோ ராணுவ பலத்தைக்கொண்டு எல்லை மீறி வந்தால் அதை எதிர்கொள்ள அகிம்சைமுறை பயன்படுத்துவதற்கான ஆயத்தனங்களில் சிலர் ஈடுபட்டுள்ளனர் ,எனினும் இத்தகைய சூழலை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராகவில்லை என்பதும் உண்மையே. 

சுகி 

காந்தியின் இன்றைய அரசியல் முக்கியத்துவம்-2 -ஜீன் ஷார்ப்


1 comment: