Pages

Friday, March 9, 2012

காந்தியின் இன்றைய அரசியல் முக்கியத்துவம்-5-ஜீன் ஷார்ப்-இருபதாம் நூற்றாண்டில் அகிம்சை-2




ஜீன் ஷார்ப் காந்தியின் இன்றைய அரசியல் முக்கியத்துவம் குறித்து ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கத்தின் நிறைவு பகுதி.இது. சுதந்திரத்திற்கு பின்பான இந்திய சூழல், வினோபாவின் பூமிதான இயக்கம், அறுபது எழுபதுகளில் நிகழ்ந்த ஜெயப்ரகாஷ் நாராயணனின் எழுச்சி ஆகியவற்றை விவாதிக்கிறார் ஜீன் ஷார்ப்.

இவற்றை இப்பொழுது வாசிக்கும்பொழுது சாந்தி சேனையும், ஜெ.பியின் அகிம்சை அறைக்கூவலும் காற்றில் கலந்த கனவாக கரைந்து மறைந்து விட்டதை மனம் உணர்கிறது. இந்தியாவிற்கு என்று இருந்த ஆன்மீகமும் அறசார்பும் எங்கே சென்றது? சர்வதேசிய அரசியல் காரணிகளால் ஓர் இன அழிப்பை கண்மூடி வாய்பொத்தி இன்று வேடிக்கை பார்ப்பதை எண்ணி மனம் சோர்வடைகிறது.

காந்தி தனது மரணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு மேற்குலக பத்திரிக்கையாளர்களிடம் கூறினார் “இந்தியர்கள் வாழ்வில் என்னை பின்பற்றக்கூடும், என் மரணத்திற்கு பின் என்னை கொண்டாடக்கூடும் ,ஆனால் அவர்கள் ஒரு போதும் என் வாழ்வின் நோக்கங்களை அவர்களுடையதாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் “ சத்தியம் தோய்ந்த வார்த்தைகள் .இவ்வரிகளை அவர் எத்தனை வலியோடு உதிர்த்திருப்பார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது..



-----------------------------------------------

இடைப்பட்ட காலத்தில் நமக்கு கிட்டும் பல ஆதாரங்கள் இதை உறுதி செய்வதாகவே உள்ளது- (மேற்கு நாடுகளில் அகிம்சை சிறப்பாக செயல்படும் சாத்தியங்கள் பற்றி ) உலகெங்கிலும் நடந்த பல அகிம்சை போராட்டங்களை மேலோட்டமாக ஆய்வு செய்தால்கூட பலரின் முன்முடிவுகளுக்கு மாறாக – இத்தகைய போராட்டத்தில் பங்குபெற்றவர்களும் வழிநடத்திய தொண்டர்களும் அகிம்சையில் நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல, மாறாக அகிம்சையை ஏதோ ஒரு சமூக,பொருளாதார அல்லது அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தினர். இது நமக்கு பல செய்திகளைச் சொல்கிறது.
.

அகிம்சை வழிமுறையில் காந்தியினுடைய பங்களிப்பின் விளைவாக காந்திக்கும் அவர் கண்டெடுத்த அகிம்சைக்கும் உலக அரங்கில் ஓர் முக்கிய இடம் கிடைத்தது. ஓரளவு விஷயம் அறிந்தவர்கள்கூட காந்தியையும் அகிம்சையையும் அத்தனை எளிதாக புறந்தள்ளிவிட முடியாது.

காந்தியின் அரசியல் பங்களிப்பு விநோதமானது. அவர் அரசியல் ஏட்டுப்படிப்புகளை படித்த மாணவரும் அல்ல, அரசியல் ஆய்வாளரும் அல்ல. அவரது அரசியல் கோட்பாடுகளை முன்வைத்து எதுவும் பாட புத்தகம் எழுத வேண்டும் எனும் வேட்கை எதுவும் அவரிடமிருக்கவில்லை .இவை அவருடைய முக்கியமான குறைபாடுகள்தான். விரும்பத்தகாத விளைவுகளை அவரது இந்தக் குறைகள் பல தருணங்களில் உருவாக்கின. .தனக்கு “அபார புத்தக ஞானம்“ எதுவுமில்லை என்று அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.

இவை அனைத்தும் ஒரு புறமிருக்க ,காந்தி அரசியலில் பல அசலான  புதுமைகளைப் புகுத்தியவர். புத்தக அறிவு அவ்வளவாக இல்லையென்றாலும் ,தனக்கு அரசியல் யதார்த்தம் நன்றாக புரியும் என்பதை பல சூழல்களில் அவர் நிரூபித்துள்ளார். அவரின் உள்ளுணர்வும் ,அவர் மேற்கொண்ட தொடர் பரிசோதனைகளும் அவருக்கு பெரிதும் உதவின. வெவ்வேறு அரசியல் சிக்கல்களை பற்றிய எளிய சாமானியர்கள் எப்படி உணர்வார்கள் என்பதைப் புரிந்துகொள்ளும் திறன் அவரிடமிருந்தது .எத்தனையோ சக தேசியவாதிகளைக் காட்டிலும் ஓர் சாமானிய விவசாயியின் மனம் காந்திக்கு நன்றாகத் தெரிந்திருந்தது.

பிறரைத் துணிவுடன் களமிறக்கி அவர்களாலேயே அறியப்படாதிருந்த ஆளுமையின் வீச்சை உணரச்செய்ய அவரால் முடிந்தது.இத்துடன் அவரது தலைமை திறனும்,அற்ப விஷயங்களைக்கூட கவனமாக கூர்நோக்கும் திறனும் இணைந்து அகிம்சை போராட்டத்திற்கான அரசியல் வடிவை உலகிற்கு வழங்கியது. இந்தியாவின் இப்போதைய (அப்போதைய ) ஜனாதிபதி டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணன் ,யுனெஸ்கோ வெளியிட்ட காந்தியின் எழுத்துக்கள் அடங்கிய தொகுப்பின் முன்னுரையில் “ மானுட வரலாற்றில் அகிம்சை கோட்பாட்டை தனிமனிதனிலிருந்து சமூக மற்றும் அரசியல் தளத்திற்கு விரிவிடைய செய்த முதல் மனிதர் காந்தி “ என்கிறார்.

ஹிட்லர் ,ஸ்டாலின் ,அனு ஆயுதங்கள் என்று அரசியல் அரங்கில் வன்முறை உச்சக்கட்டத்தில் தலைவிரித்தாடிய அதே வேளையில் உலகின் மறுபுறம் அகிம்சை மெல்ல வளர்ந்து எழுந்தது. அரசியல் வன்முறை எனும் பிரச்சனை. பூதாகரமாக வளர்ந்ததன் விளைவாக அதன் தீர்வுக்கான வழிமுறையும் வளர்ந்து வந்ததாக சிலர் நம்புகின்றனர்

இந்தியா சுதந்திரத்திற்குப்பின் காந்தி எண்ணியதுபோல் அகிம்சையை மட்டும் நம்பி தன் சுதந்திரத்தை காத்துக்கொள்ள முனையவில்லை. அகிம்சை தந்த வெற்றியின் விளைவாக மக்கள் அதை ஒட்டுமொத்தமாக அப்படியே ஏற்றுக் கொள்வார்கள் என்று ஒரு சாரார் எண்ணியது பொய்த்தது.காந்தியும் அப்படித்தான் எண்ணினார், ஆனால் சுதந்திர இந்தியாவிற்கு என்று ஓர் ராணுவம் வேண்டும் என்றும் அவர் எண்ணினார்

இந்திய தேசியவாதிகள் காந்தி முன்வைத்த அகிம்சை வழிமுறையை சுதந்திர போராட்டத்தில் பிரதான யுத்தியாக பயன்படுத்த ஒப்புக் கொண்டனர். போராட்டத்தில் வெற்றி பெற்றபின்ப அவர்கள் அகிம்சையைத் தொடர்ந்து கடைபிடிக்கவில்லை. இது பலரும் எதிர்பார்த்த இயல்பான எதிர்வினைதான்.

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்க்க அகிம்சையை கையில் எடுத்ததற்கு கோட்பாடுகளோ தார்மீகமோ மட்டும் காரணம் அல்ல. அது ஓர் குறிப்பிட்ட அரசியல் சூழலை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட அரசியல் முடிவு. இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக இருந்த முக்கிய முஸ்லீம் தலைவரான மவுலான ஆசாத்,, "இந்திய தேசிய காங்கிரஸ் என்பது ஒன்றும் உலக அமைதியை ஏற்படுத்த வந்த அற அமைப்பு அல்ல மாறாக இது அந்நியர்களின் பிடியிலிருந்து விடுதலைக்காக போராடும் ஓர் அரசியல் அமைப்பு “ என்று கூறியிருந்தார்.  ,
ஜெயப்ரகாஷ் நாராயணன் 


வன்முறை நிறைந்த புரட்சிகளுக்கும் போருக்கும் மாற்றாக காந்தி முன்வைத்த அகிம்சை போராட்டம் இந்திய தேசியவாதிகளுக்கு தார்மீக பலமுள்ள ஓர் தேர்வாக தென்பட்டது

அகிம்சையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் போராட்ட களத்தில் சில சாதகங்கள் இருந்தாலும் ,போராட்டத்திற்கு தார்மீக பலம் கிட்டியதால் கூடுதல் பலம் பெற்றதாக உணர்ந்தனர். ஒவ்வொரு  தனிமனிதனையும்,ஒட்டுமொத்த சமூகத்தையும் அது உயர்த்துவதாக இருந்தது.இருப்பினும்கூட அகிம்சையை ஏற்றுக்கொள்வதற்கு இவை மட்டும் காரணம் அல்ல .

சுதந்திர இந்தியா காந்தி வகுத்துக் கொடுத்த அகிம்சையை கடைபிடிக்க விரும்பவில்லை. சுதந்திரத்திற்குப்பின் எழுந்த புதிய சிக்கல்களை என்ன செய்வது எப்படி செய்வது என்று காந்தி எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஆனால் அகிம்சை மன துணிவு உள்ளவர்களுக்கும் பலமுள்ளவர்களுக்குமான வழி என்பதில் காந்திக்கு ஐயமில்லை. கலவரங்களும் ,பிரிவினையும்,வேறு பல பிரச்சனைகளும் வெடித்துக் கிளம்பியதால், அதில் கவனம் செலுத்தவே அவருக்கு நேரம் சரியாக இருந்தது .அதனால் அப்பொழுது விளைந்த புதிய சிக்கல்களுக்கு அவருடைய மரணத்திற்குமுன் தீர்வு காண முடியவில்லை.

காந்தியின் மரணத்தைத் தொடர்ந்து அவரை பின்பற்றிய காந்தியர்களுக்கு எத்திசையில் பயணிப்பது என்பது சிறிது காலத்திற்கு குழப்பமாக இருந்தது. பின்னர் வினோபாவின் பூமி தான இயக்கம் மெல்ல எழுந்தது, அதை கையில் எடுத்துக்கொண்டு சமூக பொருளாதார சீர்திருத்தங்களை நோக்கி அவர்கள் பயணிக்க தொடங்கினார்கள். காந்தியோடு ஒப்பிடுகையில் வினோபா முற்றிலும் வேறுமாதிரியான ஆளுமை, அவரை எளிமையாக பொது சட்டகங்களின் கீழ் கொணர்ந்து விடலாம்.


காவலர்களுக்கும் ,ராணுவ வீரர்களுக்கும் ஒதுக்கப்பட்ட பணியை மேற்கொள்வதற்கு என்றே அகிம்சையை அடிநாதமாக கொண்ட சாந்தி சேனை எனும் தன்னார்வலர்கள் கொண்ட அமைப்பை வினோபா நிறுவினார். ஆனால் காந்தியைப் போல் துல்லியமாக திட்டமிடாததால் அது  நடைமுறைவாதிகளின் கருத்தையோ அல்லது அரசியல் தலைவர்களின்  கவனத்தையோ கவரவில்லை. சீன எல்லையிலும் கோவாவிலும் இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் சில அதிர்வலைகளை எழுப்பின. ஆனால் இந்த சாந்தி சேனை போதுமான அளவிற்கு வளர்ச்சி அடையவில்லை என்பதே நிதரிசனம் .

இந்திய அரசு அணிசேரா கொள்கையை கடைபிடிப்பதாக சொல்லும் அதே வேளையில் அதன் ராணுவ பலத்தையும் அதிகரித்து வருகிறது. இதன் உட்பொருள் யாதெனில் , நாளை இந்திய தேசியத்திற்கு ஏதும் சர்வதேசிய ஆபத்துகள் நேரிட்டால் இந்திய அரசு மற்ற நாடுகளைப் போல ராணுவம் மூலமே அதை எதிர்கொள்ளும்.

இந்தியாவின் நோக்கம் அதுவல்ல என்றால், அகிம்சை முறையில் தங்களை பாதுகாத்து கொள்ள இந்தியா காத்திரமாக திட்டமிட்டு செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அதற்கு எவரும் முனையவில்லை.

இத்தகைய சூழலில் அரசியலிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அகிம்சை இயக்கத்தை வளர்ப்பதற்காக வந்துள்ள ஜெயப்ரகாஷ் நாராயணனின் வருகை முக்கியமானது. நேருவிற்கு பின் பிரதமர் ஆகக்கூடியவர் என்று பலரும் எதிர்பார்த்த ஓர் தலைவர் அவருடைய பொறுப்பை முழுமையாக உணர்ந்துக்கொண்டுள்ளார்.

1963ஆம் ஆண்டு மே மாதம் அவர் பேசியபோது சீன ராணுவத்தின் அத்துமீறலுக்கு எதிர்ப்பின்றி சரணடைவதையும் கோழைத்தனத்துக்கு ஒத்துப்போவதையும் ஒட்டுமொத்தமாக நிராகரித்தார். 'அகிம்சை போரில் தோல்வி என்பதே கிடையாது, காந்தி நமக்கு கற்றுக்கொடுத்ததை நாம் மறக்கக் கூடாது.வன்முறையான போருக்கு மாற்று அனைத்து ஆயுதங்களையும் துறந்து அகிம்சை எனும் ஆயுதத்தை கையில் எடுப்பதே. நாம் ராணுவத்தைத் திரும்ப அழைத்துக் கொண்டால் அதன் பொருள் என்ன? நாம் சீனர்களுக்கும், ருசியர்களுக்கும் ,மற்றவர்களுக்கும் பயப்படவில்லை என்பதே, எந்த சர்வாதிகாரிக்கும் நாம் தலைவணங்கப் போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளோம், அகிம்சை மூலம் நமது எதிர்ப்பை வலுவாக தெரிவிப்போம்” .

மறக்கமுடியாத அந்த ஜனவரி 30 க்கு பிறகு பொருட்படுத்தத்தக்க இந்திய ஆளுமை உதிர்த்துள்ள முதல் முக்கிய கருத்து இது. நுண்ணிய ஆய்வும் திட்டமிடலும் இன்றி பல்வேறு உட்சிக்கல்கள் பிணைந்துள்ள இந்த கனவை நனவாக்க முடியாது. இதுவரையில் அம்மாதிரியான திட்டமிடல் ஏதும் கண்ணில் தென்படவில்லை. இத்தகைய திட்டத்திற்கு ஆகும் செலவும் மிக அதிகம், ஒரு வருடத்திற்கு சுமார் £ 1,000,000 செலவு பிடிக்கும். ஆனால் இந்த பணம் சரியான திட்டத்திற்கு சரியான நபர்கள் மூலம் சென்று சேரும் பட்சத்தில் உரிய விளைவுகளை எதிர்நோக்கலாம். இந்திய அரசு இதற்கு உதவுமா? சந்தேகமே, இப்போதைய ராணுவ செயல்திட்டம் இந்தியாவின் பொருளாதார பிரச்சனைகளை பல மடங்கு பிரமாண்டமாக்கும் என்று கணிக்கப்படுகிறது ,இந்தியாவிற்குள் காலூன்றி இருக்கும் கம்யுனிஸ்டுகளின் வளர்ச்சிக்கு அது வழிவகுக்கக்கூடும்.நேரு அகிம்சையின் முக்கியத்துவத்தை உணர்ந்தவராகவே உள்ளார், ஜோன் போண்டுரன்டிடம் நேரு கூறினார் “நான் பங்குபெற்ற அகிம்சை வழிமுறையை பற்றி முழுதாக புரிந்துகொண்டேன் என்று பொய் சொல்ல விரும்பவில்லை, ஆனால் அந்த வழிமுறை நமக்கு பல முக்கிய புரிதல்களை அளிக்கிறது ,பிரச்சனைகளை தீர்த்து சமரசத்தை உருவாக்க அது ஒரு சிறந்த வழிமுறை என்பதை நான் முழுவதுமாக உணர்ந்தே இருக்கிறேன் ,காந்தியின் வழிமுறை வெற்றிகரமானது, குறைந்தபட்சம் இந்த பாதையின் முக்கியத்துவத்தையும் ,சாத்தியக்கூறுகளையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும், நமது எண்ணங்களையும் செயல்பாட்டையும் எத்தனை தூரம் அந்த பாதையில் கொண்டு செல்ல முடியும் என்பதையும் சிந்திக்க வேண்டும் “

எதேச்சாதிகாரமும் போரும் இந்தியாவுடைய பிரச்சனை மட்டுமல்ல ,இவ்வுலகத்திற்கே பொதுவானது. போருக்கு மாற்றாக அகிம்சை  உருவெடுக்க வாய்ப்பு மிகக் குறைவு என்று கருதினாலும் ,நாம் பல சிக்கல்களில் தவித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் இத்தகைய சின்னஞ்சிறிய வாய்ப்பை கூட உதாசீனப்படுத்தாமல் ஆழமாக அலச வேண்டும்.

காந்தி, இப்படி நினைவுக்கூரப்படுவதையே விரும்பியிருப்பார் ,இதுவே அவருக்கு செலுத்தப்படும் சரியான அஞ்சலியும்கூட..அனைத்து கேள்விகளுக்கும் தன்னிடம் விடையுள்ளதாக ஒருபோதும் அவர் கூறியதில்லை. மக்கள் அவரையே எப்போதும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் எண்ணியதில்லை ,அவருடைய பணியைப் பற்றியே அவர்கள் சிந்திக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார் காந்தி..

காந்தி ஒரு முறை ஓர் அமெரிக்க பத்திரிக்கையாளருக்கு எழுதினார் ,”எனது லட்சியத்தை இந்தியாவில் மட்டுமே கனவாக்க முடியும் என்று நான் எண்ணவில்லை, ஒட்டுமொத்த உலகமும் துணைக்கு வரும் என்று நம்புகிறேன் , ஆனால் அத்தகைய மாற்றத்திற்கு முதலில் நாம் நம்மை தகுதியாக்கிக் கொள்ளவேண்டும்”

போருக்கு சரியான மாற்றுதான் என்ன ? இந்த வினாவிற்கு விடை தேடும் முயற்சியில் நாம் அனைவரும் சக பயணிகள். இதில் காந்தி நமது முன்னோடி. அகிம்சை வழிமுறையை பற்றியும் அதன் சாத்தியக்கூறுகளையும் பற்றியும் முழுமையான திறனாய்வு என்பது காலத்தின் தேவையல்லவா?

--நிறைவு --


No comments:

Post a Comment