இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் காந்தி ஒரு தற்குறிப்பு எழுதி வைத்துக் கொள்கிறார்: "நீ குழப்பத்தில் இருக்கும்போதும் உன்னைப் பற்றிய எண்ணங்கள் உன் உள்ளத்தை நிறைக்கும்போதும் நீ பின்வரும் சோதனையை மேற்கொள்ள வேண்டும்: நீ அறிய வந்தவர்களில் மிகுந்த ஏழ்மையில் இருந்த அந்த மிக எளியவனின் முகத்தை நினைத்துப் பார். அடுத்து நீ என்ன செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறாயோ அது அவனுக்குப் பயன்படுமா என்று உன்னையே கேட்டுக் கொள். அதனால் அவனுக்கு நன்மை ஏதேனும் ஏற்படுமா? தனது வாழ்க்கையையும் விதியையும் தீர்மானித்துக் கொள்ளும் உரிமையை அவனுக்கு அது திரும்பப் பெற்றுத் தருமா? வேறு சொற்களில் சொல்வதானால், பசியிலும் ஆன்மிக வறுமையிலும் வாடும் பல கோடி மக்களுக்கு அதனால் ஸ்வராஜ்யம் கிடைக்குமா? இந்தக் கேள்வியில் உன் குழப்பங்களும் தன்னுணர்வும் கரைந்தே போகும்" (348, Great Soul - Mahatma Gandhi and His Struggle with India, Joseph Lelyveld, HarperCollins Publishers India, 2011).
தன் குழப்பங்களையும் அச்சங்களையும் வென்று பொதுநலனுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளக் காரணமாக இருந்தது காந்தியின் அறவுணர்வு. அதை வெளிப்படுத்தும் இந்தக் குறிப்பை எழுதி வைத்துக் கொண்ட சில மாதங்களில் காந்தி மறைந்தார். பலபத்தாண்டு கால போராட்டத்தின் இறுதியில் எழுதி வைத்துக் கொண்ட இந்தக் குறிப்பில் காந்தி தனக்கு நினைவுறுத்திக்கொள்வது ஏதும் புதிய சிந்தனைகளையல்ல, இவை காந்தியத்தின் துவக்கங்கள். பசியிலும் ஆன்மிக வறுமையிலும் வாடும் அந்த ஏழை, எளியவர்களில் எளியவன், அவன் விடுதலை பெறுவது எப்படி என்ற கேள்வி காந்தியின் உள்ளத்தை வாழ்நாள் முழுதும் நிறைத்த ஒன்று. ஆம், ஒரு மானுடனை மகாத்மாவாக உயர்த்தி, ஒரு தேசத்துக்கு அதன் ஆற்றலை உணர்த்திய, அறவுணர்வில் பிறந்த அந்த காந்திய உத்வேகம், அவரது துவக்கம் முதல் முடிவு வரை, நியாயத்துக்காகப் போராடும் ஊக்கத்தை காந்திக்குத் தருவதாகவே இருந்தது.
Lloyd I. Rudolph & Susanne Hoeber Rudolph எழுதிய, "Postmodern Gandhi and other essays- Gandhi in the World and at Home" என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அதன் ஐந்தாம் அத்தியாயம், "The Fear of Cowardice" ஒரு அடிப்படைக் கருத்தைப் பேசுகிறது. சுதந்திரமற்ற, தன்னம்பிக்கையற்ற மக்கள், தோற்றுப்போனவர்கள், முதலில் எதிர்கொள்ள வேண்டியது தம் அச்ச்சங்களையே. அவர்கள் சுதந்திரமற்று இருப்பதே அவர்களிடம் விடுதலையைப் போராடி வெல்லக் கூடிய வீரம் இல்லை என்பதற்கு சான்றாக இருக்கிறது. விடுதலையைப் பேசும்போது அடிமட்டத் தொண்டன் முதல் உச்சத்தில் இருக்கும் தலைமை வரை அனைவரும் தம் கோழைத்தனம் குறித்த அச்சங்களையே முதலில் எதிர்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றனர். உரிமைப் போராட்டங்கள் தம் வீரத்தை நிலைநிறுத்திக் கொண்ட பின்னரே முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. அமைப்புக்கு எதிரான போராட்டங்களில் பெரும்பாலானவை வன்முறையாக வெளிப்பட அரசு அடக்குமுறை மட்டும் காரணமல்ல. தம் கோழைத்தனம் வெளிப்பட்டுவிடக் கூடாது என்ற அச்சமும் தீவிரவாதப் போராட்டத்துக்கு ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது.
ஆனால் காந்தியத்தின் துவக்கங்களை இந்தத் தாழ்வு மனப்பான்மையில், அதற்கு எதிரான உந்துதலில் பிறந்த அச்சத்திலும் கோபத்திலும் அல்ல - அன்பிலும் கருணையிலும் அவற்றின் அடிப்படையில் அமைந்த தார்மிக தன்னம்பிக்கையிலும் மட்டுமே காணலாம். கருணையே காந்திக்கு செயலூக்கம் தருவதாக இருந்தது. அது மட்டுமல்ல, கருணையே நம் தேசத்தை ஒன்றாகப் பிணைத்தது. இருப்பவன் இல்லாதவன், உயர்ந்தவன் தாழ்ந்தவன், படிக்காதவன் பாமரன் என்ற வேறுபாடுகளைக் களைந்து, நாமனைவரும் நமக்காகவே போராடுகிறோம் என்ற உணர்வை நாம் அடைய, கருணையே காரணமாக அமைந்தது. காந்தியும், அவர் காட்டிய வழியில் நம் தேசமும் கருணையில் ஒன்றுசேர்ந்தபோது வீரம், ஆண்மை, அதிகாரம் குறித்த பல அடிப்படைக் கேள்விகளை எழுப்பிய ஒரு பெரும் சிக்கலுக்கு தீர்வு கிடைத்தது.
"அவர் கூறியனவற்றில் பெரும்பாலானவை முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சில சமயம் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டன. ஆனால் அவர் என்ன சொன்னார் என்பது முக்கியமாக இருக்கவில்லை. அவரது படிப்பினைகளின் சாரம் அஞ்சாமையும் உண்மையும் அவை சார்ந்த செயல்பாடுகளுமாக இருந்தது... திடீரென்று மக்கள் மனதை நிறைத்த அச்சத்தின் இருள் விலகியது. முழுமையாக அல்ல எனினும், பிரமிக்கத்தக்க அளவில் இது நேர்ந்தது," என்று காந்தியின் தாக்கம் குறித்து நேரு குறிப்பிடுகிறார். நேருவின் இந்த சொற்களின் பின்னணியில் ஒரு தேசம் அடிமைத்தனத்தை, மிடிமையைத் தன் சிந்தனையில் பூண்ட வரலாறு இருக்கிறது. தன்னம்பிக்கையற்று, தன்னடையாளத்தை இழந்து, தன் நோக்கங்களை சந்தேகித்த மக்களின் அச்சங்கள் தமது திறன் குறித்து மட்டுமல்ல, தம் அடிப்படை இயல்பு குறித்தே இருந்தன.
1857ன் சிப்பாய்க் கலகத்தின் தோல்வியைத் தொடர்ந்து புதிய பாரதம் படைக்கப்பட்டது - பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்களால். சத்திரிய அரசர்கள் பிரிட்டிஷ் பேரரசு அளித்த பாதுகாப்பில் ஆடம்பர வாழ்க்கை நடத்த மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். தொல்காலம் தொட்டே போராலும் வீரத்தாலும் வரலாறாக அமைந்த இந்தியா அகிம்சையை மட்டுமே கடைபிடிக்கும் தேசமாக அடையாளம் பெற்றது. அகிம்சையின் மறுபக்கம் கோழைத்தனம், பெண்பிள்ளைத்தனம், வலுவின்மை, தளர்ச்சி என்றும் இவையே இந்தியர்களின் இயல்பு என்று வலியுறுத்தப்பட்டது. இவைதான் இந்திய மரபு என்று வேதகாலம் தொட்டு புழங்கி வந்த இந்திய தத்துவ மரபைச் சேர்ந்த நூல்களைக் கொண்டு நிறுவப்பட்டது. பிராமணர்கள், வைசியர்கள், கயஸ்தர்கள் அகிம்சையை இயல்பாகக் கொண்டவர்களாகவும், போர்க்குணமற்றவர்களாகவும் சித்தரிக்கப்பட்டனர். படித்த இந்தியர்கள் பிரிட்டிஷ் பேரரசின் முகங்களாகவும் கரங்களாகவும் ஊழியம் செய்து வந்த நிலையில், இதை இந்திய மக்களே நம்பவும் தலைப்பட்டனர்.
இத்தனைக்கும் வங்காள கயஸ்தர்கள் முகலாய காலம் முதல் பிரிட்டிஷ் காலம் வரை களவும் காவலும் செய்யக்கூடிய போர் மரபைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். 1857ன் சிப்பாய்க் கலகத்தைத் தொடர்ந்து அந்த சமஸ்தானத்தைச் சேர்ந்த பிராமணர்கள் அனைவரும் வங்காளப் ராணுவத்திலிருந்து விலக்கப்பட்டனர்- சிப்பாய் கலகத்தை இவர்கள்தான் முன்னின்று நடத்தியதாக பிரிட்டிஷ் அரசு நம்பியது. இதெல்லாம் முடிந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் போர்த்தொழில் ராஜ்புத்திரர்களுக்கும் சத்திரியர்களுக்கும் மட்டுமே உரிய ஒன்றாக இந்தியர்களாலேயே ஏற்கப்பட்டு விட்டது. ஆனால், அந்த மன்னர்களோ பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை அவர்களின் சார்பாக ஆள்பவர்களாக இருந்தனர்.
பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த பிராமணர்கள், வைசியர்கள் மற்றும் கயஸ்தர்கள் போராட்ட குணமற்றவர்களாக சித்தரிக்கப்பட்டதில் ஒரு தந்திரமான உள்நோக்கம் இருந்தது. அவர்களால் பிரிட்டிஷ் அரசு நிர்வாகத்தில் ஊழியம் செய்ய மட்டுமே இயலும் என்ற கருத்து அவர்களை பிரிட்டிஷ் அரசின் கூலிகளாக அடையாளப்படுத்தியது. அவ்வாறு இல்லாமல் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள், தம் இயல்புக்கு மாறாக செயல்படுபவர்களாக ஏளனம் செய்யப்பட்டனர். மேலும், இவர்களுக்குப் போராடும் தகுதியே கிடையாது என்றும் பேசப்பட்டது.
பிரிட்டிஷ் ஆட்சி அமைப்பின் நிர்வாகத்தால் பெருமளவு பிராமணர்கள், வைசியர்கள் மற்றும் கயஸ்தர்களே அதிகாரமும் பொருளாதார பயனும் பெற்றவர்களாக இருந்தனர். இவர்களில் சிலரே பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராடக்கூடிய கல்வியையும் பொருளாதார பலமும் பெற்றவர்களாக இருந்தனர். பாரத விடுதலையையும் தேசிய மறுமலர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டு இந்த சிலர் தம் வசமிருந்த பேனா, பதவி மற்றும் செல்வத்தை மக்களை ஒன்று திரட்ட அர்ப்பணித்தனர். ஒன்றுபட்ட மக்கள் இயக்கத்தை உருவாக்கி, அதற்கு நிதியுதவி அளித்து பரவலான பிரச்சார அமைப்பையும் நிறுவ இந்த சிலர் பாடுபட்டனர். செய்தித் தாள்கள் மற்றும் துண்டுப் பிரசுரக் கட்டுரைகளில் தேசிய விடுதலை குறித்த சிந்தனைகளை இவர்கள் விவாதித்துக் கொண்டே இருந்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இவர்களா உண்மையான இந்தியர்கள்? என்று கேள்வியெழுப்பியது பிரிட்டிஷ் பிரச்சார ஊடகங்கள். போராட வேண்டியவர்கள் இவர்களல்ல, ஏழை எளிய மக்களே, கிராமப்புறங்களைச் சேர்ந்த பெரும்பான்மை விவசாயக் குடிகளே,- அவர்களைப் பாதுகாக்கும் ராஜபுத்திர அரசர்களே இந்த எளிய மக்களின் காவலர்கள். இவர்களுக்கே சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கக்கூடிய உரிமையும் வெற்றி பெறக்கூடிய போர்க்குணமும் உண்டு. பிரிட்டிஷ் அரசு அளித்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு சமய, வணிக மற்றும் அறிவுப்புலத்தை ஆக்கிரமித்த பிராமண, வைசிய, கயஸ்தர்கள் உண்மையான, எளிய கிராமங்களைச் சேர்ந்தவர்களா? அவர்களுக்காகப் போராடும் தகுதி இவர்களுக்கு உண்டா? உண்மையில் இவர்கள் யாருக்காகப் போராடுகிறார்கள்? இருக்கும் அதிகாரம் போதாதென்று அரசியல் அதிகாரத்தையும் மக்களின் பெயரால், விடுதலையின் பெயரால் கைப்பற்ற நினைத்த இவர்களுக்கு அரசுக்கு எதிராகவோ மக்களின் சார்பாகவோ போராடும் அதிகாரம் இல்லை. இன்றும் இதுபோன்ற வாதங்கள் ஆட்சியாளர்களால் சமகால காந்திய இயக்கத்தினருக்கு எதிராக முன்வைக்கப்படுகின்றன என்பது மிகவும் துரதிருஷ்தவசமானது.
அந்நாளைய பிரிட்டிஷ் அரசு மட்டும் இதைச் சொல்லவில்லை. இந்தியர்களே இப்படிப்பட்ட நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர். அகிம்சையைத் தவிர வேறு வழிமுறையை அறியாதவர்களாக, அந்த அகிம்சையையும் ஒரு கையாலாகாத்தனமாக மட்டுமே கருதினார்கள். போராட்டத்தில் பங்கேற்க வேண்டிய பெரும்பாலான ஏழை எளியவர்கள் கல்வியற்றவர்கள், போராட்டத்தில் தாமாக முன்வந்து பங்கேற்க இயலாதவர்கள். தம்மை ஒன்றுபட்ட இயக்கமாகத் திரட்டிக் கொள்ளும் ஆற்றலற்றவர்கள். இதைச் செய்யகூடிய படித்த, நகர்ப்புறம் சார்ந்த தலைவர்கள் பெரும்பான்மை மக்களில் ஒருவரல்லர்.
இதுவே காலனியம் முன்வைத்த சிந்தனைத்தள சிக்கல். இதிலிருந்து வெளிவர வழியில்லாததாக அன்றைய அரசியல் தலைமை இருந்தது. காந்தியின் தாக்கம், இந்த அகிம்சையை ஆயுதமாக, துணிச்சல் உள்ளவர்கள் மட்டுமே கையாளக்கூடிய கருவியாக மாற்றியது, இதுவே காந்தியின் சாதனை. படித்தவர்களையும் பாமரர்களையும் ஒன்றினைக்கக்கூடிய, கருணையின் அடிப்படையிலான சிந்தனைத் தளத்தையும் செயல்முறைத் திட்டத்தையும் அவர் உருவாக்கினார். இவை சாமானிய சாதனைகளல்ல.
நேரு சொல்வதுபோல், காந்தி ஒரு தேசத்தின் ஆழமான அச்சங்களை அடையாளம் கண்டு, அந்த அச்சங்கள் குறித்த விழிப்புணர்வு அளித்து அவற்றிலிருந்து மக்களை விடுவித்தார். இதை அவரலால் எப்படி சாதிக்க இயன்றது என்று யோசித்தால், நாம் அவரது வாழ்க்கையைப் பேச வேண்டும். காந்திக்குத் தன் வாழ்வு கற்பித்த படிப்பினைகளே நம் தேசத்தை உய்வித்த போதனைகளாக மாறின.
--மேலும் -
அர.சு.ராமையா
காந்திக்கு 2011ல் செய்யப்பட்ட மிகப் பெரிய அவதூறு அண்ணா ஹசாரேவை காந்தியவாதி என்று சித்திரித்ததுதான். அந்த அவதூறை ஆதரிக்கும் இந்த தளம் எப்படி காந்தி மீதான இதர அவதூறுகளைக் களையமுடியும் ? வாய்ப்பே இல்லை,. காந்தி உங்களுக்கு ஒரு முகமூடி. அவ்வளவுதான்.- ஞாநி
ReplyDeleteமதிப்புக்குரிய எழுத்தாளர் ஞானி அவர்களுக்கு,
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றி .
முகமுடியாகவே இருக்கட்டுமே, நாளடைவில் எங்கள் ஆளுமையின் ஓர் பகுதியாக மாறிவிடும் என்று நாங்கள் நம்புகிறோம்.அண்ணா ,பரம்பொருளின் மறு அவதாரம் என்று நாங்கள் யாரும் எண்ணவில்லை, சில பலவீனங்களுடன் கூடிய எளிய நேர்மையான ஆளுமை , பலவீனங்களை மட்டுமே நடுநிலையின் பெயரால் உயர்த்தி பிடிக்கும் பொழுது, அவரது வாழ்நாளில் அவர் ஆற்றிய பணிகள் குறித்தும் பேசவேண்டும் என்பதே எங்கள் விருப்பம், மற்றபடி அவரை மதிப்பிடு செய்தல் ,புரிந்துகொள்ளுதல் அவரவர் மனச்சாய்வை பொருத்தது.