Pages

Tuesday, February 14, 2012

பஹுரூபி காந்தி-1-அனு பந்தோபத்யாயா-முன்னுரை


அனு பந்தோபத்யாயா எழுதி 1964 ஆம் ஆண்டு நேருவின் முன்னுரையோடு வெளிவந்த ஓர் சிறிய புத்தகம் பஹுரூபி காந்தி .எளிய மொழியில் ஆர்.கே.லக்ஷ்மனின் கோட்டோவியங்களோடு பாப்புலர் பிரகாஷன் பதிப்பால் வெளியிடப்பட்டது.பின்னர் 1981 ஆம் ஆண்டு NCERT அமைப்பால் மீண்டும் பதிக்கப்பட்டது.காந்தியின் பன்முக ஆளுமையை அழகாக விவரிக்கும் மிக முக்கியமான புத்தகம் இது.பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தாலும் தமிழில் இதுகாறும் யாரும் மொழியாக்கம் செய்யவில்லை.ஒத்திசைவு தளத்தை நடத்திவரும் நண்பர் ராமசாமி இப்பணியை தொடங்கியுள்ளார்.அவ்வபொழுது சிறு சிறு பகுதிகளாக வெளிவரவுள்ளது.முதல் பகுதியாக முன்னுரை இங்கு வெளியிடப்படுகிறது.

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு-  இது ஒரு சுத்த மொழி பெயர்ப்பு அல்ல; என் முக்கிய உந்துதல், “பஹுரூபி காந்தி” யின் இலக்கண இலக்கிய சன்மார்க்க சத்திய சுத்தமான உருவாக்கம் அல்ல.  மாறாக – ‘தேசப் பிதா,’ ‘அண்ணல்,’ ‘அஹிம்சாவாதி,’ சத்யாக்ரஹி,’ ‘இந்தியப் பண்பாட்டை மீட்டெடுத்தவர்’  போன்ற பரிமாணங்களுக்கப்பால், மிக மிக அப்பால், அவர் தம் ஆளுமைகளை, கர்ம-ஞான யோகதரிசனத்தை, முழுமனிதராக உலாவியதை,  சிறிய கோடிட்டுக் காட்டுவது தான்.


அனு பந்தோபத்யாயா அவர்களின் முன்னுரையின் தமிழாக்கம்


இந்த புத்தகத்தின் கையெழுத்துப் பிரதி 1949-ல் இருந்து என்னிடம் இருக்கிறது. நான் 1948-ல் வங்காளத்தில் இருந்த கஸ்தூரிபா பயிற்சி முகாமை விட்டுவிட்டு இருக்கும்போது டி ஜி டெண்டுல்கரின் புத்தகமான ‘மகாத்மா’வின் கையெழுத்துப் பிரதியைப் படித்தேன். அப்போது நான் ஒரு கிராமத்தில் பணி செய்து கொண்டு இருந்தபோது, அங்கே கிராமத்து மக்களும், மாணவிகளும், காந்திஜி அவர்களைப் பற்றி மிகக் குறைவாகவே தெரிந்து கொண்டு இருப்பதை அறிந்தேன்.அவர்கள் காந்தி ஜெயந்தியைக் கொண்டாடினர், நூல் நூற்றனர், பிரார்த்தனை செய்தனர். அவர்களில் சிலர் தேசீய இயக்கத்தில் பங்கு பெற்று சிறைக்குச் சென்றவர்கள் கூட – ஆனால் அவர்களுக்கு எது காந்திஜியின் உண்மையான பங்களிப்பு என்பது தெரிந்திருக்கவில்லை என நினைத்தேன் -. ஒரு வேளை நான் இதனைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்னவோ, ஆனால் எனக்கு அப்போது அப்படித்தான் தோன்றியது.

நான் இப்போதும் கூட அப்படியே உணர்கிறேன் – நான் தினமும் பார்க்கும் பெரும்பாலானவர்கள் அனைவரும், இவர்களில் சிலர் கல்வியறிவு பெற்றவர்கள் கூட -  உடலுழைப்பை வெறுத்து ஒதுக்குகின்றனர். நானும் உடலுழைப்பின் மேன்மையை போற்றுபவன் அல்லன் – இருந்தாலும் நான் உடலுழைப்பின் கஷ்டத்தை உணர்ந்தவன்.  அதனால் தான் நான் பிரதி தினமும் சிறிதளவு உடலுழைப்பில், பணி செய்பவர்களுடன் ஈடு படுகிறேன் – மேலும், கொஞ்சம் பணத்தைக் கொடுத்தால் மற்றவர்களை எனக்கு வேலை செய்ய வைக்க முடியும் என்கிற அதிகார மனப்பான்மையை நான் வளர்த்துக் கொள்ளாமலிருக்கவும் தான்.

தங்கள் வாழ்வாதாரங்களுக்காக பலவேறுபட்ட வேலைகளில் ஈடுபட்டு வருபவர்களின் உழைப்பில் தன்னார்வத்துடன், சுய அர்பணிப்புடன் பங்கு கொண்டவரான காந்திஜியை, நான் காண்பிக்க விரும்பினேன். ஆக, இப்புத்தகத்தில் சில விவரிப்புகள் ஒரு முறைக்கு மேல் திருப்பிச் சொல்லப் பட்டுள்ளன.  நான் நிச்சயமாக, காந்திஜியைக் கண் மூடித்தனமாக வழிபாடு செய்பவர்களின் கும்பலுக்கு ஆள் சேர்க்க விரும்பவில்லை. ஆனால் நான் நம் நாட்டு இக்கால இளைஞர்களை – காந்திஜியை ‘தேசப் பிதா’வாகவோ அல்லது நமக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவராகவோ மட்டும் பார்த்து – விமர்சனம் செய்வதற்கு அப்பாற்பட்டு சிந்திக்க வைக்க வேண்டும் என விரும்புகிறேன்.

இந்தப் புத்தகத்துக்கான கரு என்னுடையது தான். நான் இதனை முதிரா இளைஞர்களுக்காக (teenagers) எழுதினேன். இந்தப் புத்தகத்தின் பெரும்பாலான பகுதிகள் டி ஜி டெண்டுல்கரின் ‘மகாத்மா’ புத்தகத்தைச் சார்ந்து எடுக்கப் பட்டுள்ளன – இதற்காக, என்னுடைய இச்சிறிய புத்தகத்திற்காக நான் எவ்வளவு டெண்டுல்கர் அவர்களிடம் கடன் பட்டிருக்கிறேன் என்பதை நான் விவரிக்க இயலாது.

என் கூச்சத்தினால் இந்தப் புத்தகத்தின் பதிப்பித்தல் தாமதமாகியது. திரு என் ஜி ஜோக் (N. G. Jog), முனைவர் பி ஆர் ஷென் ( Prof PR Sen) அவர்கள் தயை கூர்ந்து இதன் கையெழுத்துப் பிரதியைப் படித்துப் பார்த்தனர். திரு எம் சலபதி ராவ் (M. Chalapathi Rau) அவர்கள் எனக்கு, இப்புத்தகத்தின் இருபது அத்தியாயங்களை/அறிமுகங்களை ஒரு தொடராக நேஷனல் ஹெரால்டில் பதிப்பிக்க உதவி செய்தார்.

திரு ஆர் கே லக்ஷ்மன் அவர்களுக்கு அவர் வரைந்து தந்த படங்களுக்காக நன்றிக் கடன் பட்டுள்ளேன்.

ஜவஹர்லால்ஜி அவர்களுக்கு, முன்னுரை எழுதித் தந்தமைக்காக மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.

இப்புத்தகத்தைப் படிப்பவர்களில், ஆயிரம் இளைஞர்களில் ஒரு இளைஞராவது காந்திஜியின் பணிகளை. வேலைகளைச் செய்தால், நான் மகிழ்ச்சியடைவேன்.

அனு பந்தோபத்யாயா  (ஏப்ரல், 1964)

-ராமசாமி  

No comments:

Post a Comment