வரலாற்றின் ஆகப்பெரிய இடப்பெயர்வை காந்தி தடுத்திருக்க முடியுமா ? இக்கேள்விக்கான விடை அத்தனை எளிதானது அல்ல.காந்தி பிரிவினையை ஆதரிக்கவும் இல்லை அதற்கு துணைபோகவும் இல்லை .பஞ்சாபில் நடந்தேறிய வன்முறைகளை தடுத்திட முடியவில்லை.வங்காளத்தை கட்டுப்பாட்டில் கொணர்ந்து அமைதியை மீட்டுவிட்டு பஞ்சாபை நோக்கி அவரது கவனம் திரும்பும் முன்பே மாபெரும் மானுட நாசம் அங்கு நடந்தேறிவிட்டது.அகிம்சை வழிமுறைகளை சோதித்தறிய ஓர் களத்தை அவர் தவறவிட்டுவிட்டார் என்றே தோன்றுகிறது, தன்னை மதிக்காத ஓர் தரப்பினர் அகிம்சை அறைக்கூவலுக்கு எப்படி செவி சாய்த்திருப்பார்கள் என்பதையும் பஞ்சாபில் அறிந்துக்கொண்டிருக்கலாம்.மக்கள் உண்மையில் பிரிவினையை ஏற்கும் மனோநிலையில் இருந்தார்களா என்பதை யூகிப்பது கடினமே.சுக்கு நூறாக பெயர்த்தெடுக்கப்படும் என்று இந்தியாவை பற்றி அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் எண்ணியது, ஆனால் எண்ணியதற்கு மாறாக (ஆங்காங்கு சில பலவீனமான எதிர்ப்புகள் கிளம்பிய பொழுதும் ) இரண்டு துண்டுகளாக மட்டுமே பிரிந்தது, அதற்கு காரணம் பிரிவினையை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே.கட்டுரையாளரோடு இது போன்ற சிற்சில கருத்து வேற்றுமைகள் இருந்தாலும்கூட இது ஓர் முக்கியமான கட்டுரை. நண்பர் திரு.தமிழ் அவரது வலைதளத்தில் பதிந்த கட்டுரையை இங்கு மீள் பதிவு செய்கின்றோம்.காந்தியின் கடைசி இரு நூறு நாட்கள் புத்தகத்தை பற்றிய ஓர் அறிமுகம் என்று கொள்ளலாம் , தனது கருத்துகளையும் பதிவு செய்துள்ளார்
--------------
காந்தி ஏன் இந்திய பிரிவினையை தடுக்கவில்லை ?
சுதந்திர கால வரலாற்றை வாசிக்கும் பொழுது அதில் காந்தியின் பங்கை, தலைமையை உணரும் ஒருவர் இந்தக் கேள்வியை கடக்காமல் இருக்க இயலாது.அதற்கான பதிலை தேடுவோமேயானால் அக்காலத்தில் நிலவிய பல்வேறு சூழ்நிலைகள் அறிமுகம் ஆகும். பிரச்சினையின் பன்முகத்தன்மை என்று அதைக்கொள்ளலாம்.மெல்ல அதன் பிரம்மாண்டத்தை உணரும்போது, காந்தி ஒருவர் மட்டுமே அந்த மாபெரும் பிணைக்கும் பணியை செய்திருக்க முடியுமா என்று சந்தேகம் எழும். மக்கள் அமைப்புகளான காங்கிரஸ் அல்லது முஸ்லீம்லீக்கின் ஆதரவு அவருக்கு தேவையாக இருந்தது. ஆனால் ஒருபோதும் அது அவருக்கு கிடைக்கவில்லை.
விடுதலை உறுதி செய்யப்பட்டு விட்ட அந்த தருணத்தில்; காங்கிரஸ் கட்சிக்குள் நிலவிய பல்வேறு உட்சலனங்கள்(சுக்கானை விட்டுத் திமுறும்) கட்சி அவரது கட்டுப்பாட்டில் இருந்து விலக விரும்புவதை வெளிப்படுத்தின. ஜின்னாவை ஒன்றுபட்ட இந்திய பிரதமராக ஆக்குவதற்க்கான அவரது முயற்சியும் தோல்வியடைந்தது.கட்சிக்குள் புதிய ஆசைகள் உருவாகிவருவதை அவர் அறிந்திருந்தார் மரியாதையாக விலகிக்கொண்டார். பிரிவினையும் தவிர்க்க இயலாததாக ஆகியது.
இது சரியான அனுமானமா?.
காந்தி இறந்த அன்று அதிகாலையில் காங்கிரஸ் கட்சிக்கான உட்கட்சி சட்ட முன்வரைவை தயார் செய்வதில் ஈடுபட்டார் . அதில் இருந்த அம்சங்களில் ஒன்று.... காங்கிரஸ் இந்திய விடுதலைப் போராட்டத்தை ஒருங்கிணைக்க உருவானது. இப்போது விடுதலை பெற்று விட்டதால் நாம் காங்கிரஸ் கட்சியை கலைத்து விட்டு இரண்டு புதிய நிறுவனங்களை அமைக்க வேண்டும். ஒன்று, அரசாட்சியில் பங்கேற்க முனையும் அரசியல் அமைப்பாக இருக்கும் மற்றொன்று கிராம சபாக்கள் உதவியுடன் மக்களுக்கு சேவை புரியும் அரசியலுக்கு அப்பாற்ப்பட்ட அமைப்பாக இருக்கும். மக்களுக்கு ஜனநாயகம், வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துவது , காதி , அவர் அனுமானித்திருந்த புதிய கல்விமுறை , சுயதொழில், கூட்டுச் செயல்பாடு போன்றவற்றை கற்பிப்பது இதன் பணியாக இருக்கும் என வகுத்திருந்தார். ( இன்றைய சூழ்நிலையில் கண்டிப்பாக வேண்டிய ஒரு அமைப் பற்றி யோசிக்கையில் வேறேதாவது தோன்றுகிறதா??... ). இன்னும் கொஞ்ச நாட்கள் உயிரோடு இருந்திருந்தால் இதையும் செய்திருப்பார்.

இப்படி கட்சியில் செல்வாக்குள்ள ஒருவர், தான் சரி என்று உணர்ந்ததை (நினைத்ததை அல்ல ) தவிர மற்றதை செய்யாத ஒருவர் எவ்வாறு இந்த பிளவை அனுமதித்தார்?. இந்த கேள்விக்கு பதில்... அப்போது நமது மக்களின் விருப்பம், உள்ளுர அதுவாகவே இருந்தது என்பதே.. முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிவிடவேண்டும் என்பதுவே... அதுவே நடந்தது. அந்த குறுகிய கால இடைவெளியில், தான் ஒருவனால் மட்டும் இந்த மாற்றத்தை நிகழ்த்த முடியாது என்று அறிந்து வருத்தத்துடன் கண்முன் தெரியும் நிலையை உணர்ந்து கொண்டார். மற்றவர்கள் இந்த பிரிவினையால் நிரந்தரமாக சமூகத்தில் ஏற்படும் வெறுப்பு உணர்வுகளை ஏன் காண மறுக்கின்றனர் என்று அவருக்கு புரியவில்லை. இந்த யதார்த்தம், அவர் கனவு கண்டு கொண்டிருந்த இந்தியாவை விட்டு வெகுவாக விலகி இருந்தது.
இந்த முடக்கிப் போடும் நிலையில் இருந்துதான் "காந்திஜியின் கடைசி 200 நாட்கள்" புத்தகம் ஆரம்பிக்கிறது. மிகுந்த மனவருத்தத்துடன் அவர் இருந்த நாட்கள் அவை. இதுவரை அவர் போதித்து வந்த, கடைப்பிடித்து வந்த இலட்சியங்கள் தம் கண்முன் சிதைக்கப் படுவதை ஒரு பார்வையாளனாக காண வேண்டி இருந்தது. அவரை அருகில் இருந்து அவதானிப்பது போல தொகுக்கப் பட்டிருக்கிறது...
ஆனால், மீட்புக்கான வழி செயல் படுவதே என்று அவர் அறிந்திருந்தார். தன்னால் முடிந்தது; இந்த குழப்பத்தில், வெறுப்பில் சிக்கிய மனிதர்களை அவர்களின் கண்ணை மறைக்கும் பழிவாங்கும் உணர்ச்சியை அகற்றி அகிம்சை என்ற பெரும் உண்மையை உணர்த்துவதே என்பதை அறிவார். ஆகவே பிரிவினையை தவிர்க்க முடியாத நிலையில், அதன் விளைவுகளையாவது கட்டுப் படுத்துவது அவரது வழியாக இருந்தது.
இந்துக்களும் ஒரே இடத்தில் ஒற்றுமையாய் வாழமுடியும் என்பதை குறிப்பால் உணர்த்தவே ; ஒருவருடம் முன்பு நேரடியாகச் செயல்படும் நாள் (direct action day) என்ற பெயரில் கல்கத்தாவில் நடந்த கொலைகளுக்கும், சூரையாடலுக்கும் காரணமாக இருந்த முஸ்லிம்லீக் தலைவர் சுராவர்த்தியோடு ஹைதாரி மாளிகையில் தங்கினார். மாளிகை என்றவுடன் "அதுதானே பார்த்தேன்" என்று உங்கள் சந்தேகங்கள் உறுதி செய்யப் பட்டு விட்டதாக நினைக்க வேண்டாம். அது ஒரு பாழடைந்த கட்டிடம்... சேரிக்கு நடுவில் அனைத்து குப்பைகளுக்கும் மத்தியில் இருந்தது.
இப்போது சுராவர்த்தி உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தது ஒருவருடம் முன்பு அவர் செய்தவற்றிக்காக ஹிந்துக்கள் பழிவாங்க முனைந்திருந்தார்கள். சுராவர்த்தி காந்தியிடம், அவர் முஸ்லிம்களுக்கும் தனக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.காந்தி சில நிபந்தனையின் பேரில் அதற்குச் சம்மதித்தார். ஹிந்துக்கள் சிறுபான்மையினராக இருந்த நவகாளியில் அவர்களின் பாதுகாப்பு முஸ்லிம்களால் உறுதி செய்யப்பட வேண்டும்.. மேலும் சுராவர்த்தி அவரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் சம்மதித்தால்; தன்னுடன் இங்கு வந்து தங்க வேண்டும் என்பது..
அவர்கள் இருவரும் அங்கு வந்த முதல் நாள்; கலகக் கும்பல் ஆயுதங்களுடன் சுராவர்தியை தாக்க வந்துவிட்டனர்.. காந்தியையும்தான்..(இங்கு எந்த காவலர்களும் பணியில் இருக்கவில்லை.. காந்தியும் அதை விரும்பவில்லை ) வீட்டினுள் கல்வீசப் பட்டது... காந்தி வெளியில் வந்து அங்கு கொதித்துக் கொண்டிருந்தவர்களிடம் "இன்று மிகவும் நேரம் ஆகிவிட்டது.. நான் எங்கும் ஓடிவிட மாட்டேன் .. இன்று போய் நாளை வாருங்கள் என்றார்". அவர்களும் அந்த 79 வயது கிழவரின் பேச்சைக் கேட்டு திரும்பி விட்டனர்!!!.. பின்னர் வந்த நாட்களில் கல்கத்தாவில் பதட்டம் தணிந்தது .. பத்திரிக்கைகள் இதை "காந்தியின் மந்திரம்" என்று வர்ணித்தன.
சுராவர்தி மோசமான நபர் அவரை நம்ப வேண்டாம் என்று பலரும் அவரிடம் கூறினார்கள் . அதற்கு காந்தியின் பதில் "நான் மற்றவருக்கு வாக்குறுதி கொடுக்கும் போது அவர் என்னை நம்பவேண்டும் என்று எப்படி எதிர் பார்க்கிறேனோ.. அதுபோல அவரின் வாக்குறுதியையும் நான் நம்புவேன் " என்பதாக இருந்தது. என்னை பொறுத்தவரை இதுவே காந்தியத்தின் அடிப்படை .மனிதர்களின் மீது நம்பிக்கை வைத்து கூட்டாக செயல்படுவது..
இந்த காலங்களில் அவர் முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டது. கொஞ்ச காலத்திற்கு முன்னர் அவர் நவகாளியில் அசிங்கங்களுக்கு மத்தியில் குடிசையில் தங்கி இருந்து ஹிந்துக்களை காப்பற்ற முயன்ற போது "இப்போது காந்தியின் வேஷம் கலைந்து விட்டது" என்று சொல்லப் பட்டது. முன்னர் , அவர் ஆலைய நுழைவு போராட்டங்கள் நடத்திய போது உயர்சாதி இந்துக்களால் வசை பாடப் பட்டார் .. தலித்களுக்கான இரட்டை வாக்குரிமையை மறுத்து போராடியபோது ஜாதிவெறியர் என்று வசைபாடப்பட்டார் .
நாம் நினைக்கலாம் ஏன் அவர் பஞ்சாப்புக்கு சென்று அங்கு நடந்த வன்முறைகளை குறைக்க வில்லை? என. முதலில் நாம் அறியவேண்டிய ஒன்று வங்காளத்திலும் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவருக்கு மத்தியில் மற்றொருவர் வாழ்ந்து கொண்டு இருந்தனர். மேலும் இங்கு மக்கள் அடர்த்தி மிக அதிகம். இங்கு வன்முறை கட்டவிழ்த்து விடப் பட்டிருக்குமானால் பஞ்சாபில் ஏற்பட்ட அளவிற்கு இங்கேயும் இழப்பு ஏற்ப்பட்டிருக்கும். என்பதே உண்மை.
காந்தியின் தொடர்பு வட்டத்தை பார்க்கும் போது மிகவும் பிரமிப்பு ஏற்படுகிறது .. தினமும் அதிகாலையில் பலருக்கு கடிதம் எழுதுகிறார்.. பல முகம் தெரியாதவர்களுக்கு பதிலளிக்கிறார்.. தேவை ஏற்படும்போது அவர்களை உபயோகப் படுத்தவும் அவரின் திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கவும் அவரால் முடிகிறது. தினமும் மாலை வேளைகளில் நடத்திய பிரார்த்தனைக் கூட்டங்களை அவரின் செய்தியை பரப்ப உபயோகித்துக் கொள்கிறார். கல்கத்தாவில் நடந்த சில கூட்டங்களில் 5 ,7 லட்சம் என மக்கள் கலந்து கொண்டனர்..

காந்தியின் ஆளுமையின் பல பரிமாணங்களை இப்புத்தகம் வழியாக அறியலாம். உதாரணமாக அவர் ஹைதாரி மாளிகையில் தங்கி இருந்தபோது அங்கு அடிக்கடி வந்த மக்கள் கூட்டத்தினால் சுத்தமும், சுகாதாரமும்(1,2) மிகவும் மோசமடைந்தது.. நகராட்சி அலுவலர்களும் கண்டு கொள்ளவில்லை.. காந்தி அங்கு வெறுங்காலுடன் நடக்க ஆரம்பித்தார். பின்னர் அப்பகுதி மக்களே, அந்த சுத்தப் படுத்தும் வேலையை செய்து முடித்தனர். அவருக்கு ஒரு பிரச்சினையிலிருந்து மற்றொரு பிரச்சினை வேறுபட்டதாகவே தெரியவில்லை. ஒரே பிரச்சனையின் சில கூறுகளாகவே இவை அனைத்தையும் கண்டார். மக்கள் தங்கள் கடமையிலிருந்து தவறியதே நடக்கும் கலவரத்திற்கும் , இந்த சுகாதாரமின்மைக்கும் ஒரே காரணாமாக கருதினார். இந்த இடத்தை சுகாதாரமாக்கித் தருவது அரசின் வேலை. சுத்தமான இடம் நமது உரிமை என்று சொல்லுபவர்களிடம்.. " உரிமை என்று தனியாக ஒன்று இல்லை . கடமைகள் இல்லாத ஒருவனுக்கு உரிமை என்பது இல்லை." என்பதுவே அவரது செய்தியாக இருந்தது.
எனது நண்பன் என்னிடம் காந்தி நல்லவரா கெட்டவரா என்று கேட்டான். ஒரு குழந்தைத் தனமான கேள்வியாக இது இருந்த போதிலும், உண்மையில் இதை அறிய முயற்சிசெய்தால் இரண்டு பதில்களை அடைவதற்கும் அனைத்து வாய்ப்புகளும் உள்ளது. உண்மைக்கு நிகராக அனைத்து திரிபுகளும் சந்தையில் உலவுகின்றன. காந்திக்கு பிடித்த கதையாக குருடர்கள் யானையை பார்த்த கதையை சொல்லுவதுண்டு.. காதை தொட்ட ஒருவன் யானை முரம் போல இருப்பதாக உணர்வான்.. காலை தொட்ட ஒருவன் யானை உலக்கை போல இருப்பதாக சொல்லுவான்... இப்படி போகும் அது. உண்மையின் பன்மைத் தன்மையை உணர்த்தும் கதை அது. என்ன வேடிக்கை என்றால், காந்தியே அந்தக் கதையில் வரும் யானை போல புரிந்து கொள்ளப் படுகிறார் என்பதே.
No comments:
Post a Comment