Pages

Sunday, January 22, 2012

"குடி" மகன்களுக்கு எதிராக ஓர் குடிமகன்



மது இந்திய சமூகத்திற்கு ஏற்படுத்தும் சீரழிவு மிக பிரம்மாண்டமானது .தமிழகத்தில் தனிநபர் வருமான வரி 8,000 கோடிகளை தொட்டு நிற்கிறது,டாஸ்மாக் விற்பனையோ 16,000 கோடிகளை கடந்துக் கொடி கட்டி பறக்கிறது.பொருளியல் ரீதியாக ஒரு குடி அடிமை நோயாளி டாஸ்மாக் மூலம் அரசுக்கு அழுவது மென்பொருளாளர் அரசுக்கு கட்டும் வருடாந்திர வருமான வரியை காட்டிலும் அதிகமானது .

ஆனந்தவிகடனின் ஒரு பகுதியாக வரும் என்விகடன்-கோவை பதிப்பில் ஓர்  ஒருபக்க கட்டுரை ஒன்று எங்கள் கண்ணில் பட்டது .அதனுடைய கருப்பொருள் வெகுவாக ஈர்த்தது.நண்பர்களின் உதவியுடன் விகடன் அலுவலகத்திலிருந்து அவரது தொடர்பு எண்ணை பெற்றுக்கொண்டு அவரோடு பேசுவதாக தீர்மானமானது.



அவரது பெயரே வெகு வித்யாசமாக இருந்தது.பாலகிருஷ்ணன் என்ற இயற்பெயருடைய டாக்டர் .பிராங்க்ளின் ஆசாத் காந்தி!அவரது தந்தை திரு.கிருஷ்ணனும் ஒரு தீவிர காந்தியர். சேலத்தில் வசிக்கும் இந்த 79 வயது காந்தியவாதி ,டாஸ்மாக் வாசல்களில் நின்று "குடி மகன்களின் " காலை பிடித்து,குடிக்காதீர்கள் என்று கெஞ்சுவதாக ஒரு படமும் செய்தியும் வெளியானது.நண்பர் ஒருவரின் உதவியின் மூலம் அவரது தொடர்பு எண் கிட்டியது.அவரிடம் பேசியதும் உடனே நினைவுக்கு வந்தது ,எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கோட்டி எனும் சிறுகதைதான்.

k113.jpg
விகடனில் வெளியாகிய செய்தி-நன்றி விகடன்  

தொலைபேசியை அவரே எடுத்தார், தயக்கமின்றி இயல்பாகவும் உற்சாகமாகவும் சுமார் பத்துநிமிடங்கள் பேசினார்.இத்தகைய சமூக செயல்பாடுகள் மிக மிக முக்கியமானவை,உத்வேகமளிப்பவை .அவருடனான நமது உரையாடலை இங்கு பதிவுசெய்கிறோம்.

ஐயா ,வணக்கம், நாங்க காந்தி-இன்று இணையத்தளம் சார்பாக பேசுறோம், உங்கள பத்தி ஒரு செய்திய விகடன்ல வாசிச்சோம்..அது விஷயமா பேசலாமா ..

ஒ ,சொல்லுங்க ப்ரதர் ,சொல்லுங்க ப்ரதர் ..சந்தோசம் ..
நாங்க ஒரு அறுபத்தி எட்டு நாளா காந்தி சிலைகிட்ட கால்களை பிடிச்சு கெஞ்சி ,குடிச்சி உங்களையும் உங்க குடும்பத்தையும் கெடுத்து தெருவுல நிறுத்த வேண்டாம்னு கழுத்துல போர்ட மாட்டிகிட்டு தினமும் நிக்கிறோம் ,இன்னிக்கி 68 ஆவது நாளா நிக்கிறோம் தினமும் 9.15 லேந்து 11 மணி வரை நிப்போம்.

ராத்திரியா 

இல்ல இல்ல காலைல 

நீங்க எப்படி ஒரு குழுவா இருக்கீங்களா ?

தினமும் நான் நிப்பேன், தவிர நாலு பேரு அஞ்சு பேரு ,பத்து பேருன்னு யாராவது நிப்பாங்க லேடிசும் நிப்பாங்க, எல்லாரும் காந்தி தொப்பி போட்டுக்கிட்டு நிப்போம் ,கையில காந்தி வைத்திருப்போம்   (படம்) , ரெண்டு பக்கமும் -இந்தமாதிரி இந்த மாதிரின்னு ப்ளெக்ஸ் அடிச்சுருக்கோம். குடிச்சு உங்களையும் உங்க குடும்பத்தையும் நாசமாக்கிக்காதீங்க அப்டின்னு. அப்புறம் போறவங்க வர்றவங்ககிட்ட எல்லாம் சொல்லுவோம்.எல்லாரும் பாத்துக்கிட்டே போவாங்க,சிலபேரு பாத்து நன்றி சொல்வாங்க ..இப்டியே போய்க்கிட்டுருக்கு 

குடிகாரர்கள் இதுக்கு எப்படி சார் ரீயாக்ட் செய்றாங்க ?

ரீயாக்ட் பண்றாங்க,கால்ல வந்து விழறாங்க 

யாரும் மறுப்போ எதிர்ப்போ தெரிவிக்கலையா?

அப்படி எல்லாம் பெருசா ஒண்ணுமில்லை .

இல்ல எங்களால முடியல ,என்ன செய்றதுன்னு தெரியல இப்டின்னு சொல்லிக்கிட்டு வர்றாங்களா ?

எங்களால முடியல உதவி செய்யுங்கன்னு கேட்டு வர்றாங்க ,ஏதாவது வழி சொல்லுங்க , அப்டிங்குறாங்க . அவுங்கள கவுன்சிலிங் வர சொல்றோம் ,மாத்திரைகளும் கொடுக்குறோம்,தொடர்ந்து செஞ்சுட்டுதான் வர்றோம்.சில பேரு வந்து உங்கள் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள் அப்டின்னு சொல்லிட்டு போறாங்க ..

இந்தமாதிரி நீங்க செய்றத பாத்து யாரும் குடியை விட்டுருக்காங்களா சார்?

ஆமா,ஆமா,நெறைய பேரு ,எங்களுக்காக இப்படி வெயில்ல வந்து நீங்க நிக்குறீங்க ,சத்தியமா நாங்க இத விட்டுவிடுகிரோம்னு நெறைய பேரு சொல்லிருக்காங்க .இப்ப கூட அப்படி விட்டவர் ஒருத்தர் வந்துருக்காரு,என்ன பாக்க..

ரொம்ப மகிழ்ச்சி அய்யா 
வேற எத்தனையோ விஷயங்கள் இருக்கும் போது குடிக்கு எதிராகச்  செயல்படனும் அப்படின்னு உங்களுக்கு ஏன் உதிச்சுது ?

நாங்க ஒரு 28 ஆண்டுகளா இந்த மாதிரி செஞ்சுக்கிட்டு வர்றோம்.என்னுடைய எல்லா சட்டையிலும் மது அருந்தக்கூடாது ,புகை பிடிக்கக்கூடாது ,அது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு , அப்டின்னு இருக்கும் அதத்தான் 28 வருஷமா போட்டுட்டுருக்கேன் .

இந்த மாதிரி போராட்டம் வருஷம் முழுக்க செய்விங்களா ? இல்ல குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டுமா ?

என்னுடைய எல்லா விஷயத்துலயும் இது இருக்கும்,கார்ல கூட முன்னாடி பின்னாடி ஸ்டிக்கர் ஒட்டிருப்பேன்-மதுவோட தீமைகளை பத்தி, மேல காந்தியோட கொடி இருக்கும்.,வாசல்ல நெறைய நோட்டிஸ் இருக்கும் ,வர்றவங்களுக்கு எல்லாம் கொடுப்போம்,டாக்டர் ஒரு மெண்டல் கேஸ் அதான் இப்டி இருக்காருன்னு சொல்லுவாங்க ( பலமாக சிரிக்கிறார் )..டோட்டலாவே மெண்டல் ஆகிட்டேன்னு சொல்லுவாங்க..

இப்ப விகடனுக்கு முன்னாடி ஒரு நியூஸ் பேப்பர்ல வந்துச்சு ,நான் நிக்கறத பாத்துட்டு ஜூனியர் விகடன்லேந்து முதல்ல வந்தாங்க, காலை பிடிச்சு கெஞ்சுவிங்களா அப்டின்னு கேட்டாங்க..வரிசையா நிக்க வைங்க எத்தன பெரு கால வேணும்னாலும் பிடிச்சு கெஞ்சுறேன்னு சொன்னேன், அப்புறம் நிக்க வெச்சு படம் எடுத்தாங்க..அப்புறம் தான் இந்த விகடன் வந்தாங்க..டாஸ்மாக் வந்து இத செய்வீங்களான்னு கேட்டாங்க ..எத்தன டாஸ்மாக் வேணாலும் வரேன்னு சொன்னேன்..அப்புறம் ஒரு டாஸ்மாக் போனா..அங்க இருக்குற ரெண்டு மூணு பெரு என்ன பாத்தவுடனே ஓடுறாங்க ..நீங்க ஏன் எங்க கால பிடிக்கிறீங்க ? நாங்கதான் உங்க கால பிடிக்கணும்னு ஓடுறாங்க ..
என்ன பண்றதுங்கய்யா சமூதாயம் பூராவும் ரொம்ப கெட்டு போய்டுச்சுங்க .

நீங்க குடிய முக்கியமான சீரழிவுன்னு நினைக்கிறீங்க இல்லையா ?

அய்யா ,சாதாரண சீரழிவு இல்லை,இதுக்கு அணுகுண்டு கூட பரவாயில்லை .ஒரு 30,000 நோட்டீஸ் அடிச்சுருக்கோம், அதுல அழகா அற்புதமா எழுதி இருக்கோம் நாங்க - "எனக்கொரு மகன் பிறப்பான் ,அவன் என்னைப்போலவே இருப்பான் "- குடிகாரனுக்கு ஒரு மகன் பிறப்பான் அவன் குடிகாரனாகவே மாறுவான், அதுல சந்தேகமில்லை ...அப்டிதான் வருமது ..

இத எப்படி, நீங்க ஒரு அமைப்பா செய்றீங்களா ?

ஆமாம், தமிழக லட்சிய குடும்பம் அப்டின்னு பேரு ,எல்லா ஊர்லயும் இருக்கும் ,உங்க ஊர்ல கூட இருக்கும்.காந்திய வழியில பல போராட்டங்களை நடத்தி இருக்கோம்..சென்னையில நாங்க போய் சாகுற வரைக்கும் உண்ணாவிரதம் இருந்தோம், ஒரு எட்டுநாளைக்கு வெறும் பச்சத்தண்ணி மட்டும் குடிச்சு உண்ணாவிரதம் இருந்தோம்.

எதுக்காக ஐயா ?

தமிழ்நாட்டுல பூரண மதுவிலக்கு கேட்டு,எட்டுநாளைக்கு அப்புறம் எங்கள ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போயிட்டாங்க .நான் சொன்னேன் எங்கள மூனு மாசமோ ஆறு மாசமோ கொண்டு போய் ஜெயிலுல போடுங்க ,மகிழ்ச்சியா இருக்கோம் அப்டின்னு ,காந்திஜி நாட்டுக்காக ஒன்பதரை வருஷம் ஜெயில்ல இருந்துருக்காரு நாங்க இதுக்காக ஒரு ஆறு மாசம் ஜெயில்ல இருக்கிறது எங்களுக்கு சந்தோஷம் தான்..எங்கள பிடிச்சு போடுங்கன்னு சொன்னோம் ..ஆனா ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிட்டாங்க .

எத்தன பேரு இருந்தீங்க ?

ஒரு 25 பேரு சேப்பாக்கத்துல ,அந்த குளிருல,கொசுக்கடில, பெருச்சாளியோட சேர்ந்து இருந்தோம்.என்ன பண்றதுங்கய்யா ?

இந்த மதுவுக்கு எதிரான போராட்டத்துக்கு உங்களுக்கு தனிப்பட்ட உந்து சக்தி ,காரணம் எதுவும் உண்டா ?

அதாவது அய்யா ,நான் காந்திய நேர்ல பாத்துருக்கேன்..சின்ன வயசுல எங்கப்பா கூட்டிட்டு போயிருக்காரு..எங்கப்பா காந்திய பத்தி நெறைய விஷயங்களை ரொம்ப ஆழமா சொல்லிருக்காரு..மதுரை பல்கலைகழகத்துல காந்தியன் பிலோசபில எம்.எ , எம்.பில் எல்லாம் வாங்கிருக்கேன்.பேராசிரியர் ஜெயப்ரகாஷ் பத்தி கேள்வி பட்டிருப்பீங்க அவரு எனக்கு டீச்சர் தான்.காந்தியோட பேரன் வந்து ஒரு அஞ்சு நாள் இருந்தாரு இங்க ஆசிரமத்துல .அவரு வந்து ஆசிரமத்துல சிலைய திறந்து வச்சாரு 

யாரு வந்து சிலைய திறந்து வெச்சாங்க ?

 துஷார் காந்தி வந்தார் .

அய்யா உங்களுக்கு எவ்வளவு வயசாகுது -

இப்ப 79 வயசாகுது ..

அந்த ஆசிரமம் எங்க சேலத்துல இருக்கா ?

ஆமா,காந்தி குடில்ன்னு பேரு, மத ஒருமைப்பாடுக்காக அதை ஏற்படுத்தினோம்.

என்ன செய்வீங்க அங்க?

வாராவாரம் சர்வ மத பிரார்த்தனை நடக்கும், இந்து,இஸ்லாம்,கிருத்தவத்தை சேர்ந்த நண்பர்கள் வருவாங்க, பைபிள் ,கீதையிலிருந்து ,குரானிலிருந்து சில வரிகள் வாசிப்போம்.

உங்க பேரே வித்யாசமா இருக்கு ...

ஆமாம் சார், காந்தி சொல்லிருக்காரு- i am a hindu,muslim and christian அப்டின்னு ,அதான் ஒரு 18 வருஷம் முன்னாடி என்னுடைய பேர மாத்திக்கிட்டேன்,கேசட்ல கூட போட்டுட்டேன்.எல்லா மதமும் ஒண்ணுதான் ,எம்மதமும் சம்மதம்னு காந்தி சொல்லிருக்காரு.

உங்க நேரத்துக்கு ரொம்ப நன்றி ஐயா ,கூடிய விரைவுல உங்கள சந்திக்க முயற்சி செய்கிறோம்..

நிச்சயமா , சந்திக்கலாம்..

உங்களோடு பேசுனது ரொம்ப உற்சாகத்தை கொடுத்துச்சு..
நன்றி அய்யா ..

நன்றி சார், காந்தி வணக்கம்.

இவ்வுரையாடல் ஓர் நிறைவான அனுபவத்தை அளித்தது.காந்தியம் நம் மண்ணோடு மண்ணாக கலந்து காலந்தோறும் தன்னலனை தகர்த்து முளைவிட்டு மண்ணிலிருந்து எழுகிறது.சத்தியத்தின் வல்லமையும் அன்பின் மகத்துவமும் அற்புதமானது , காலங்களை கடந்து மனிதர்களை அது தட்டி எழுப்பிக்கொண்டே இருக்கும்.

வரலாற்றுப் பூர்வமாக குடி என்பது இந்திய சமூகத்தில் பின்னி பிணைந்த ஒன்று என்றாலும், அது சமூக பழக்கமாகவும் ,கௌரவமாகவும் திணிக்கப்படுவது அண்மைய காலங்களில் தான். குடி முதலில் தனிமனிதர்களை தனதாக்கி பின்னர் குடும்ப அமைப்பை அழித்து ஒட்டுமொத்த சமூகத்தை அரித்து தின்னும் புற்றுநோய் .இன்றைய தேதியில் பூரண மதுவிலக்கு கள்ளச் சாராயத்தை ஊக்குவிக்கும் என்பதாலும்,வருமான இழப்பு ஏற்படும் என்பதாலும் இன்னும் சிலபல காரனங்களிளாலும்  சாத்தியமா என்று தெரியவில்லை.உடனடி சாத்தியம் இல்லை என்றாலும் கூட ஒரு இலட்சிய அரசு இலட்சிய சமூகத்தை உருவாக்க மதுவிலக்கை நோக்கியே கொள்கைகளை வகுத்து அத்திசயிலேயே பயணிக்க வேண்டும்.முற்றிலும் மாறாக குடியை ஊக்குவிப்பதையே அரசு முழு முனைப்போடு செய்துவருகிறது.
    
விகடன் கட்டுரையில் இடம்பெற்ற காந்தியின் வரிகள் " ஆயிரக்கணக்கான குடிகாரர்கள் நம் நாட்டில் இருப்பதை காட்டிலும் நம் நாடு ஏழ்மையாக இருப்பதையே நான் வரவேற்கிறேன் "

நன்றி- ஆனந்த விகடன் 
திரு.செல்வேந்திரன் 
சுகி 

No comments:

Post a Comment