ஸ்வராஜ்யமும் சத்யாகிரகமும்.
ரஷ்யாவின் தேர்தல் விதிமுறை அத்துமீறல்களை எதிர்த்து ஒரு மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சென்ற மாதம் மாஸ்கோவில் நடைபெற்றது. சொல்வனம் இணைய இதழில் இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற எழுத்தாளர் நடாலியா க்ள்யூஷரேவா எழுதியுள்ள ஒரு கட்டுரை பதிப்பிக்கப்பட்டுள்ளது. "நாம் நம்மைப் பலரென்றுணர்ந்த அந்த எதிர்பாரா தருணம்..." என்ற அந்தக் கட்டுரையின் இரு வாக்கியங்கள் கவனிக்கத்தக்கன : " நாங்கள் எங்களுக்கு உதவி செய்து கொள்ள முடியும் என்று திடீரென உணர்ந்தோம். இது எங்கள் தேசம், இதன் எதிர்காலம் எங்கள் கையில் உள்ளது என்று உணர்ந்தோம். " . கட்டுரையை எழுதிய நடாலியா க்ள்யூஷரேவா இந்த உணர்தலையே குடிமைச் சமூகம் பிறந்த கணம் என்று கூறுகிறார். ரஷ்யாவில் குடிமைச் சமூகம் பிறந்த தினம் அது என்று ஐரோப்பிய இதழ்கள் சிலவற்றிலும் குறிப்பிடுகின்றனர்.
அதைப் படித்தபோது எனக்கு காந்தியின் தொலை நோக்குப் பார்வையும், மக்களின் உட்கிடைகளை அறிந்து அவற்றுக்கு செயல்வடிவம் தருவதில் அவருக்கு இருந்த புரிதலும் அவர் மேலுள்ள பிரமிப்பை இன்னும் அதிகரிக்கச் செய்தன ('The Coffee House and the Ashram Revisited : How Gandhi Democratized Habermas' Public Sphere' - Susanne Hoeber Rudolph and Lloyd I. Rudolph, "Postmodern Gandhi and other essays", 2009, Oxford India Paperbacks). காந்தியின் ஸ்வராஜ்யம் தனி மனித அளவில் தன்னை வெல்தல் என்றும் அரசியல் வெளியில் தன்னாட்சி என்றும் பொருள்பட்டது . அதிகார வேட்கை தனி மனிதனை தனக்கு அடிமையாக்கிக் கொள்கிறது என்பது அவரது கருத்தாக இருந்தது- இதே அதிகார வேட்கை அரசியலில் அடக்குமுறைக்கு வழி வகுப்பதாக அவர் நினைத்தார். இவற்றுக்கு எதிராக சத்தியாகிரகத்தை வடிவமைத்தார் : அது தனி மனித அளவில் புரிதலையும் அரசியல் வெளியில் அதிகார பரவலாக்கத்தையும் தன் குறிக்கோள்களாக வைத்திருந்தது : வெறுப்பால் அல்லாமல், அன்பால் மாற்றுத் தரப்பினரைப் புரிந்து கொண்டு தான் வலிய துன்புற்று அவர்கள் மனதை மாற்றுவதே சத்தியகிரகத்தின் வழிமுறையாக இருந்தது. தனிமனித விடுதலையின் நாட்டமும் தனிமனித ஆற்றலில் நம்பிக்கையும் தனிமனித செயல்பாட்டில் தியாகமுமே காந்திய ஸ்வராஜ்யத்தின் அடிப்படைகள் என்று சொல்ல முடியும்.
-------------------
"ஒரு விஷயத்தைத் தீவிரமாக நம்புபவர்களைச் சிந்திக்கத் தூண்டி அவர்கள் உள்ளத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதையே நம் அனுபவம் உணர்த்துகிறது... இதயத்தின் வழியாகவே அறிவைத் தொட சத்யாகிரகி முயற்சி செய்கிறான். பொதுக் கருத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதயத்தை அடையும் வழி. வெடிமருந்தைவிட அதிக ஆற்றல் பொதுக் கருத்துக்கு உண்டு... மக்களுக்கு அடிப்படைத் தேவையாக உள்ளவற்றை அறிவைக் கொண்டு மட்டுமே அடைந்துவிட முடியாது என்ற உணர்வு என்னுள் வலுப்பெற்றே வருகிறது... துன்பத்தை ஏற்று இன்பத்தை விலையாகத் தருவதைக் கொண்டே அவற்றைப் பெற முடியும். அறிவின் குரலைக் கேட்க மறுக்கும் எதிராளியின் செவிகளைத் திறப்பதில் காட்டுச் சட்டங்களைவிட துன்புறுதலே கூடுதல் ஆற்றலோடு செயல்படுகிறது. வெற்றி பெற வாய்ப்பே இல்லாத முயற்சிகளில் என்னளவுக்கு மனுக்களை எழுதி அனுப்பியவனோ, போராட முனைந்தவனோ வேறு யாரும் இருக்க மாட்டார்கள். இறுதியில் இப்போது நான் இந்த அடிப்படை முடிவுக்கு வந்திருக்கிறேன். மெய்யாகவே முக்கியமான ஏதேனும் ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அறிவைக் கொண்டு மட்டுமே அதைச் செய்துவிட முடியாது- இதயத்தையும் தொட வேண்டும். அறிவைத் தொடுவதோடு சிந்தனை நின்று விடுகிறது, துயரமே இதயத்தைத் துளைத்துச் செல்கிறது. மனிதனின் அகப் புரிதலை துயரே திறக்கிறது."
என்று காந்தியை மேற்கோள் காட்டுகிறார் ருடால்ப். காந்திய அறப்போர் மாற்றுத் தரப்பினரை வெற்றி கொள்வதைத் தன் நோக்கமாகக் கொண்டதல்ல. தன்னைப் புரிந்து கொள்ளத் தேவையான திறந்த மனதைக் கோருகிறது அது - அதற்கான சூழலை உருவாக்குவதே சத்தியாகிரக போராட்டத்தின் நோக்கம்.
"நீங்கள் உங்கள் எதிரிகளை நேசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்கள் நோக்கம் எவ்வளவு நேர்மையானதாக இருக்கிறதோ, அதே நேர்மை உங்கள் எதிரிகளுக்கும் இருப்பதாக நீங்கள் நம்ப வேண்டும். அதுவே நேச வழி," என்கிறார் காந்தி. மேலும், "இது கடினம். ஆனால் நம் எதிர்தரப்பினரின் பார்வையை நம் பார்வையாகக் கொண்டால்தான் அவர்களுக்கு நம்மால் முழுமையாக நீதி வழங்க முடியும். இதற்கு விருப்பு வெறுப்பற்ற மனநிலை தேவைப்படுகிறது என்பதை நான் அறிகிறேன். அந்த மனநிலையை அடைவது எளிதல்ல. ஆனாலும், ஒரு சத்தியாகிரகிக்கு இந்த மனநிலை ஒரு அடிப்படைத் தேவையாக இருக்க வேண்டும்".
ஹாபர்மாஸ் போன்றவர்களின் குடிமைச் சமூகம் கல்வி கற்றவர்களின் சமூகம். அதன் விவாதங்கள் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களால் செய்யப்படுபவை. அதன் விளைவுகள் அதிகார அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி அங்கிருந்து கீழ்நோக்கிப் பரவலாகச் செல்லக் கூடியவை. ஆனால் காந்திய குடிமைச் சமூகம் தன் கடமைகளையும் உரிமைகளையும் குறித்த விழிப்புணர்வு பெற்றவர்களின் சமூகம். அதன் விவாதங்கள் கருத்துகளாலல்ல, சொற்களாலல்ல, நடைமுறைப்படுத்தப்பட்ட நம்பிக்கைகளால், முன்னுதாரணமாகத் திகழக்கூடிய வாழ்வால் நிகழ்த்தப்படுகிறது. இது தனி மனித விடுதலையில் துவங்கி அரசியல் அதிகாரப் பரவலாக்கத்தை அடைய மேல்நோக்கிப் பரவுகிறது. நவீனத்துவம் அதிகாரத்தை அமைப்பு சார்ந்ததாகக் காண்கிறது - காந்தியம் தனி மனித ஆதரவைச் சார்ந்ததாகக் காண்கிறது. ஒத்துழையாமை இயக்கம், தனி மனித ஆதரவில்லாமல் அமைப்புகளின் அதிகாரங்கள் செல்லுபடியாகாது என்பதை உணர்த்தவே முற்பட்டது. ஆனால் அதன் ஆதார நம்பிக்கை, தனி மனித விடுதலையும் தன்னாட்சியுமே ஆகும். தனிமனித தியாகமும் தனிமனித நல்லிணக்கமும் தனிமனித விடுதலையுமே அதன் துவக்கப் புள்ளிகள்.
"சுதந்திரம் அடித்தளத்தில்தான் துவங்க வேண்டும்," என்கிறார் காந்தி, "நான் கிராம ஸ்வராஜ் என்று சொல்லும்போது கிராமங்களை பூரண சுதந்திரம் கொண்ட குடியரசுகளாகக் காண்கிறேன் என்று பொருள் கொள்ள வேண்டும். அவை தத்தம் அடிப்படைத் தேவைகளை தாமே நிறைவு செய்து கொள்கின்றன. ஆனால் எவற்றுக்கெல்லாம் பிறரைச் சார்ந்திருக்கும் தேவை உள்ளதோ, அவற்றுக்கு இந்த கிராமங்கள் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன". இதை வேறு யாராவது சொல்லியிருந்தால் அது இந்தியாவின் சிதைவுக்கும் சீரழிவுக்குமான கோரிக்கையாக இருந்திருக்கும் - ஆனால் தேசத் துரோகமும்கூட காந்தியத்தைப் போல் கருத்துகளில் இல்லை, அவற்றின் அடிப்படை நம்பிக்கைகளிலேயே உள்ளது : அதிகார வேட்கையிலிருந்து விடுதலை பெற்ற சுதந்திர மனிதர்கள் கொண்ட சமூகம் இப்படித்தான் இருக்கும். காந்தியின் கிராம ஸ்வராஜ்யம் ஒரு அமைப்பல்ல : அது கீழிருந்து மேல் நோக்கிப் பரவிய சத்யாகிரக இயக்கத்தின் உச்சம்.
1909ல் தான் எழுதிய ஹிந்த் ஸ்வராஜ் என்ற நூலிலேயே ஒரு உரையாடலில் காந்தி இக்கருத்தை வெளிப்படுத்தி விடுகிறார் :
எடிட்டர் : கனடாவிலும் தென்னாப்பிரிக்காவிலும் உள்ளது போன்ற தன்னாட்சி நமக்கும் கிடைக்கிறதென்று வைத்துக் கொள்வோம். உங்களுக்கு அது போதுமானதாக இருக்குமா?"
வாசகர் : "அவற்றுக்குள்ள அனைத்து அதிகாரங்களும் நமக்கும் கிடைக்கும்போது நாம் நம் கொடியை ஏற்றுவோம். ரஷ்ய ஜார் மன்னனின் கடற்படையை அழித்த ஜப்பான்போல் நாமும் வலுவாக இருக்க வேண்டும். நமக்கும் சொந்தமாக ஒரு கடற்படை வேண்டும், ஒரு ராணுவம் வேண்டும், நாமும் நம் மகொன்னதங்களை வெளிப்படுத்த வேண்டும். அப்போது உலக அரங்கில் இந்தியாவின் குரல் ஓங்கியொலிக்கும்"
எடிட்டர் : "முழுமையான ஒரு சித்திரத்தை வரைந்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்ல வருவதன் உட்பொருள் இதுதான் : நமக்கு ஆங்கிலேயர்கள் இல்லாத ஆங்கிலேய ஆட்சி வேண்டும் என்று சொல்கிறீர்கள். உங்களுக்குப் புலி வேண்டாம். ஆனால் புலியின் இயல்பு வேண்டியிருக்கிறது... இதுவல்ல நான் விரும்பும் தன்னாட்சி".
இதைத் தொடர்ந்த காந்தியின் வாழ்க்கை முழுவதும் இந்த லட்சியத்தை அடைவதை நோக்கிய நீண்ட பயணமாகவே இருந்திருக்கிறது. இந்தப் பயணம் எத்தனையோ தோல்விகள் கண்டிருக்கலாம், அவற்றால் இது தடைப்பட்டுள்ளதே தவிர முடிவுக்கு வரவில்லை. ஏனெனில், இந்தத் தோல்விகள் மானுட வாழ்வின் சூழ்நிலை நிர்பந்தங்களால் ஏற்பட்டவை - பல சமூக, பண்பாட்டு, அரசியல், பொருளாதார காரணிகள் நம் வாழ்வில் இயங்குகின்றன. இவற்றில் உள்ளிருந்து மாற்றங்களை ஏற்படுத்துவது என்பது எளிய செயலல்ல. ஆனால், காந்தியத்தின் அடிப்படை நம்பிக்கைகளான அன்பின் வழி தனி மனித விடுதலையையும் துயரின் வழி அரசியல் விடுதலையையும் நோக்கி உலகெங்கும் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டவர்கள் தலைப்படுகின்றனர்.
எங்கெல்லாம் "நம் நோக்கமல்ல, நம் வழிமுறைகளே நம் நியாயங்களாகின்றன" என்ற காந்திய நம்பிக்கை தனிமனிதனின் அறவுணர்வில் கிளைத்த உரிமை மற்றும் கடமையின் வெளிப்பாடாக வெறுப்பை மறுத்து அன்பை நிலைநாட்ட முனைகிறதோ, அங்கெல்லாம் ஸ்வராஜ்யமும் சத்தியாகிரகமும் கைகூடிய காந்தியம் மேலும் தீவிரமடைகிறது. அங்குதான் குடிமைச் சமூகம் தன் முழு மலர்ச்சியடைந்த வடிவம் பெறுகிறது..
அர.சு.ராமையா
No comments:
Post a Comment