Pages

Wednesday, January 18, 2012

காந்தியும் குடிமைச் சமூகமும் - 1 (பின் நவீனத்துவ காந்தி-4)

தொடர் பதிவு ..


குடிமைச் சமூகத்தின் தேவை மற்றும் நிர்வாக அமைப்பின் வடிவமைப்பிலும் செயல்முறையிலும் அதன் பங்களிப்பு- இவை குறித்த விழிப்புணர்வு முன்னைக்காட்டிலும் தற்போது கூடியுள்ளது.  புதிய அமைப்புகளை உருவாக்குவதிலும் ஏற்கனவே உள்ள அமைப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்துவதிலும் குடிமைச் சமூகத்தின் பிரதிநிதிகளாக தன்னார்வக் குழுக்கள் அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் தந்து வருகின்றனர். சென்ற சில ஆண்டுகளில் இப்படிப்பட்ட இயக்கங்கள் அதிகரித்துள்ளன.  அவை பரவலான ஆதரவைப் பெற்றுள்ளன என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். ஆனாலும் இவை இன்று பல்வேறு காரணங்களால் பிளவுபட்டு நிற்கின்றன ,தற்பொழுது ஒருங்கிணைந்து செயல்படக் கூடிய ஆற்றலைத் தேடி நிற்கின்றன.


குடிமைச் சமூகத்தை உருவாக்குவதிலும் அதை வழி நடத்துவதிலும் காந்தியின் அணுகுமுறை எப்படிப்பட்டதாக இருந்திருக்கும் என்ற கேள்வியை எழுப்பி அதற்கு ஓரளவு தெளிவான பதிலைத் தருவதாக இந்நூலின் நான்காம் அத்தியாயம் உள்ளது (The Coffee House and the Ashram Revisited : How Gandhi Daemocratized Habermas' Public Sphere - Susanne Hoeber Rudolph and Lloyd I. Rudolph, "Postmodern Gandhi and other essays",  2009,  Oxford India Paperbacks).  

வீட்டுக்கும் பணியிடத்துக்கும் வெளியே உள்ள பொதுவெளியில் தன்னார்வ அடிப்படையில் ஒருங்கிணைந்து உரையாடும் ஓர் வர்க்கம்,  அது தனக்குள் விவாதித்து, தன் விவாதங்களைக் குறித்த தகவல்களை அச்சு ஊடகங்கள் வழியாக மேலும் பரவலான விவாதத்துக்கு உட்படுத்தி தொடர்ந்து விரியும் பொதுவெளியை உருவாக்குகிறது.  ஹாபர்மாஸ் போன்றவர்கள் குடிமைச் சமூகம் இப்படிப்பட்ட ஒரு இயல்பும் நடைமுறையும் கொண்ட ஒன்று என்ற தங்கள் தீர்மானத்தை முன்வைத்தனர்.  

வீட்டிலும் பணியிடத்திலும் கடைபிடிக்கப்பட வேண்டிய சமூக கட்டாயங்களையும் அடையாளம் சார்ந்த நம்பிக்கைகளையும் கைவிட்டு,  எந்தவிதமான சார்புமற்ற, முற்றிலும் புறவயப் பார்வையுடன் திகழ்வது என்பது குடிமைச் சமூகத்தின் ஆக்கப்பூர்வ செயல்பாட்டுக்குத் தேவைப்படுகிறது. இத்தகைய ஒரு குடிமைச் சமூக இயக்கத்தின் அறிவாற்றல் பரவலான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும். அதன் விளைவாக மக்களாட்சி வேரூன்றி அதிகார பரவலாக்கம் நிகழும். ஆனால்,  அந்தப் பொதுவெளியை நிறைத்திருக்கும் சாமானியர்கள் மற்றும் தன்னலம் பேணும் அமைப்புகள் குடிமைச் சமூகத்தைக் கைப்பற்றி இறுதியில் அழிப்பதைத் தவிர்க்க முடியாது என்பது ஹாபர்மாஸியர்களின் முடிவாக இருக்கிறது.   மக்களாட்சி பெரும்பான்மை மக்களின் விருப்பு வெறுப்பு மற்றும் நம்பிக்கைகளின் அதிகாரம் செயல்வடிவம் பெறும் அமைப்பாக இருப்பதால், இவர்களால் கைப்பற்றப்பட்டுவிட்ட பொது வெளியில் குடிமைச் சமூகம் சீரழிவுக்குட்படுவதைத் தவிர்க்க முடியாது என்கிறார் ஹாபர்மாஸ். 

இனி இப்புத்தகம் உணர்த்தும் காந்தியக் குடிமைச் சமூகத்துக்கு வருவோம். 
ஹாபர்மாஸ்   பொது வெளி  .


காந்தியின் முதல் சத்தியாகிரகம் நடைமுறைப் பயன்பாடு கண்ட இடம் சம்பரன். இங்கு உள்ள இண்டிகோ தோட்டங்களைப் பயிர் செய்யவும் வேலை செய்யவும் கட்டாயப்படுத்தப்பட்டது. அங்கு வறுமையில் உழன்ற கூலித் தொழிலாளர்களுக்காகப் போராட காந்தியை அழைத்த இளம் வழக்கறிஞர்களில் ராஜேந்திர பிரசாத்தும் ஒருவர்.  அங்கிருந்த ஏழைத் தொழிலாளர்களின் சார்பில் அரசை எதிர்த்து போராட முற்பட்ட வழக்கறிஞர்கள் அனைவரும் மேல்சாதியினர்,  பணக்கார, உயர்தட்டு மக்கள்.  தார்மீக அறவுணர்வால் உந்தப்பட்ட அவர்கள் அங்கிருந்த ஏழைத் தொழிலாளர்களைச் சுரண்ட அனுமதித்த சட்டங்களை மாற்றச் சொல்லி நீதிமன்ற அமைப்புகளைக் கொண்டு தங்கள் போராட்டத்தைத் துவங்க முடிவு செய்திருந்தனர்.  அமைப்புகளுக்கு இணக்கமான போராட்ட முறையின் குறைகளை உணர்ந்தே அவர்கள் காந்தியைக் களத்துக்கு அழைத்திருந்தனர்.  சம்பரன் வந்த காந்தி, இந்த வழக்கறிஞர்களை ஏளனம் செய்தார்.

"என் நண்பர்களின் வித்தியாசமான வாழ்க்கை முறை துவக்க நாட்களில் அவர்கள் எங்கள் நகைப்புக்காளாகக் காரணமாயிற்று.  ஒவ்வொரு வக்கீலுக்கும் ஒரு வேலைக்காரனும், சமையல்காரனும் இருந்தனர். எனவே, இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிச் சமையலறை இருந்தது.  சில சமயம் இரவு பன்னிரெண்டு மணிக்குதான் சாப்பிட்டனர். அவர்கள் தங்கள் செலவுகளைத் தாங்களே பார்த்துக் கொண்டாலும், இதில் உள்ள ஒழுங்கின்மை எனக்குக் கவலையளித்தது. ஆனால் நாங்கள் நல்ல நண்பர்களானபின்.... என் கேலியை அவர்கள் கோபப்படாமல் ஏற்றுக் கொண்டனர். ... இறுதியில் சமையல்காரர்கள் தேவையில்லை என்று முடிவு செய்யப்பட்டது, ஒரே சமையலறை இருக்க வேண்டும் என்றும் சீரான உணவு நேரம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது... எளிய உணவையே உட்கொள்ள வேண்டும் என்றும் உணர்ந்தோம்"

ஹாபர்மாஸ் போன்ற மேற்கத்திய சிந்தனையாளர்கள் குடிமைச் சமூகத்தை வீட்டுக்கும் சந்தைக்கும் வெளியே, படித்தவர்களின் அறிவுப்புலத்தில் கண்டனர். தனி மனித வாழ்வும் அதற்கு ஆதாரமான அமைப்புகளும் விவாதத்துக்கு அப்பாற்பட்டவை.  வீட்டில் எப்படிப்பட்டவனாக இருந்தாலும், தன் பணத்தை எப்படி சம்பாதித்தாலும் படித்தவனாக இருந்தால் அதைத் தவிர மற்ற விஷயங்களைப் பற்றி பேசவும் எழுதவும் ஒருவனுக்கு உள்ள உரிமை விமரிசிக்கப்படவில்லை. அப்படி அவனது தனிப்பட்ட வாழ்வைக் கேள்விக்குட்படுத்த ஹாபர்மாசின் குடிமைச் சமூகத்தில் இடமில்லை.  சுய சார்புகள் செயல்படாத, புறவயப்பட்ட பார்வை கொண்ட பலரது பங்களிப்பு ஒருமித்த குடிமைச் சமூகமாக செயல்பட்டு பரவலான மனித மேம்பாட்டை உறுதி செய்யும் என்று நம்பினார்கள்.

காந்தியுடன் போராட முன்வந்த ராஜேந்திர பிரசாத் போன்ற பணக்கார, உயர்சாதி வழக்கறிஞர்களுக்கு அப்படிப்பட்ட எண்ணம் இருந்திருக்கலாம்.  ஏழைத் தொழிலாளிகளுக்கு உரிய ஊதியத்தைப் பெற்றுத் தருவதே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது.  சட்டம் படித்த அவர்கள் சரியான சட்டங்களை இயற்றுவதையும் நடைமுறைப்படுத்துவதையும் மட்டுமே தங்கள் சமூகக் கடமையாகக் கருதினார்கள்.  ஒரு பொது நல போராட்டத்தில் பங்கேற்கும்போதே தனி வசதிகளை அனுபவிப்பதில் முரண்பாடிருப்பதாக அவர்கள் அறியவில்லை. ஆனால் இவ்வாறு தனி வாழ்வையும் பொது வாழ்வையும் இரு வேறு வட்டங்களாகப் பிரித்துப் பார்ப்பதில் காந்திக்கு ஒப்புமையில்லை. காந்திக்கு அறிவின் பயன்பாடு மட்டுமல்ல, உணர்வின் பங்களிப்பும் சமூக மேம்பாட்டுக்குத் தேவையாக இருந்தது. ராஜேந்திர பிரசாத்தும் அவருடனிருந்த வழக்கறிஞர்களும் தாமே கிணற்றில் இருந்து நீரிறைத்து, தாமே தம் கழிவறைகளைச் சுத்தப்படுத்திக் கொண்டனர்.

இந்தியச் சூழலில் தனி மனித அறங்களைத் தொடாமல் சமூக அறங்களை நிறுவ முடியாது என்று உணர்ந்திருந்தார் காந்தி. சமூக அநியாயங்களும் அடக்குமுறைகளும் தனிப்பட்ட வாழ்வு முறையை மையப்படுத்தி, அதன் இயல்பைக் காப்பாற்றிக் கொள்ள நிகழ்த்தப்படுகின்றன. பொது வாழ்வில் ஈடுபடுவோர் தங்கள் தனிப்பட்ட வாழ்வை பொது விழுமியங்களிலிருந்து பிரித்துப் பார்க்கக் கூடாது.  இதை நடைமுறைப்படுத்தும் சோதனைக் கூடங்களாக காந்தியின் ஆசிரமங்கள் இருந்தன - அங்கு துவங்கி பரவலான மாற்றத்தை ஏற்படுத்த காந்தியின் பிரசுரங்கள் பயன்பட்டன.

ஆளும் அமைப்புகளுக்கு வெளியே, பொது மக்களுக்கு அன்னியமான ஒன்றாக காந்தி குடிமைச் சமூகத்தை அறியவில்லை.  காந்தி குடிமை அமைப்புகளே ஆளும் அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கின்றன என்று உணர்ந்திருந்தார் :  படித்த, சிந்திக்கப் பழகிய ஒரு சிறுபான்மையினர் தங்கள் உரையாடல்களைக் கொண்டு உருவாக்கிய குடிமைச் சமூக அறிவொளியின் வெளிச்சத்தில் அதிகார அமைப்புகள் தங்கள் செயல்பாட்டை மாற்றிக் கொண்டு பரவலான பொது மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் என்பது மேற்கத்திய சிந்தனையாக இருந்தது. காந்தி இதை முற்றிலும் நிராகரித்தார் ஸ்வராஜ்யமே நல்லாட்சி என்றால், தன்னாட்சியின் அடிப்படை தனி மனிதன் தன் தன்னதிகாரத்தை நெறிப்படுத்திக கொள்வதில் துவங்குகிறது என்றார் அவர்.  தனி மனித உரிமை மற்றும் சமூக கடமைகளை உணர்ந்த ஒன்றுபட்ட குடிமைச் சமூகத்தை உருவாக்குவது அவரது நோக்கமாக இருந்தது - அறிவையும் உணர்வையும் தனிப்பட்ட வாழ்வையும் பொது வாழ்வையும் ஒன்று கூட்டி ஒரு முன்னுதாரண வாழ்வை ஸ்வராஜ்ய ஆர்வலர்கள் வாழ வேண்டும் என்பது அவரது வழிமுறையாக இருந்தது. எழுத்தல்ல, வாழ்வே அவர் பயன்படுத்திய ஊடகமாக இருந்தது.ஆம் என்  வாழ்வே நான் விடுக்கும் செய்தி என்று துணிந்து சொன்னவர். 

இந்தப் புத்தகத்தில் காந்தியின் குடிமைச் சமூகம் குறித்து பேசப்படும் கருத்துகளை வாசிக்கையில் இந்த எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை : இன்றைய குடிமைச் சமூகப் பிரதிநிதிகளின் முயற்சிகள் பரவலான ஆதரவைப் பெற்றிருந்தாலும் அது பிளவுபட்டு, போதிய ஆற்றலுடன் இயங்க முடியவில்லை என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதன் தலைமை காந்தியப் போராட்டத்தின் அடிப்படையை உணரவில்லை - பெரும்பான்மையின் நலனுக்காக ஒரு சிலர் மட்டும் மேற்கொள்ளும் போராட்டமாக காந்திய போராட்டம் இருக்க முடியாது.  சுதந்திரம், ஸ்வராஜ்ஜியம் என்ற பொருளில் பேசினால், சுதந்திரமும் உரிமைகளும் பெற்றுத் தரப்படுவதில்லை. அவை, தன் ஆற்றலை உணர்ந்த ஒரு சமூகத்தால் அவரவரளவில் கடமைகளாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இன்று அதற்கான முயற்சியில் முன்னிற்கும் இயக்கத்தினர் தங்கள் தனி வாழ்வைப் பொது வாழ்வாக்கி அதையே தங்கள் ஊடகமாகப் பயன்படுத்த முற்படவில்லை : ஹாபர்மாசிய அறிவுப்புல செயல்பாட்டின் பள்ளம் அக்கரையில் உள்ளவர்களுடன் ஒத்திசையும் உணர்வுகளால் நிரப்பப்படவில்லை.  இன்றைய ராஜேந்திர பிரசாத்களுக்கு வேலையாட்களும் சமையல்காரர்களும் அனுமதிக்கப்படுகின்றனர்.

No comments:

Post a Comment