Pages

Monday, January 16, 2012

பௌத்த பொருளியல்- 2




மனிதனுக்கு சரியான பணி அமையவில்லை என்றால் அவன் பதட்டமான சூழலில் சிக்குகிறான். வாழ்வதற்குப் போதிய வருமானம் இல்லை என்பது மட்டுமல்ல வேறெந்த ஒன்றாலும் கொடுக்க முடியாத உயிர் சக்தியை, உற்சாகத்தை, முறையான வேலை மட்டுமே அவனுக்குக் கொடுக்கும்; அதை இழந்து நிற்பதே அவனது முதன்மைப் பிரச்சினை. ஓர் நவீன பொருளாதார நிபுணன் பல சிக்கலான கணக்கு வழக்குகளை பற்றியே சிந்திப்பான், அனைத்து பணியிடங்களையும் நிரப்பினால் அவனுக்கு லாபமா ? அல்லது குறைவான பணியாட்களைக் கொண்டு சிக்கனமாக செயல்பட முடியுமா ? அவனை பொறுத்தவரை வெற்றிக்கான அளவுகோல் -குறித்த காலத்தில் செய்யப்பட்ட மொத்த உற்பத்தி, அவ்வளவுதான். பொருள் உற்பத்திக்கான தேவை அவசரமான ஒன்றல்ல என்றால் வேலைக்கான அவசரமும் இல்லை. எதிர்ப்புகளை பற்றி கவலைப்படாமல் நிலைதன்மைக்காக ஆட்குறைப்பு செய்ய முடிந்தால் -நம்மால் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களின் வாழ்க்கை தரத்திற்கேற்ப பொருட்களை இலவசமாக தந்து உதவ முடியும் என்கிறார் பேராசிரியர் கால்ப்ரைத் .   


                பொருட்களை மனிதர்களுக்கு மேலானதாகவும் ,நுகர்வை படைப்பூக்கத்திற்கு மேலானதாகவும் சித்தரிப்பது பௌத்தத்திற்கு நேரெதிர் நிலைப்பாடு என்று சொல்லலாம். அதாவது தொழிலாளியிடத்திலிருந்து தயாரிப்பை நோக்கி ஒட்டுமொத்த விசை மையம் கொள்கிறது. மனிதனிலிருந்து அவனைக் காட்டிலும் கீழான ஒன்றிற்குச் செல்கிறது, அதுவே நம்மை தீய சக்திகளின் அடிமைகளாகக் கொண்டு நிறுத்தும். பௌத்த பொருளாதாரத்தின் முதல் கொள்கை முழுமையான வேலை வாய்ப்பை உறுதி செய்வதே. வெளி வேலை வேண்டும் என்று முயல்பவர்கள் அனைவருக்கும் அவ்வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் .வேலை வாய்ப்பையோ அல்லது உற்பத்தியையோ உச்சகட்டத்திற்கு பெருக்குவது அதன் நோக்கம் அல்ல. பெண்களை அதிக அளவில் தொழிற்கூடங்களில் பணியமர்த்துவது என்பது அமிழ்ந்து கிடக்கும் மிகப்பெரிய பொருளாதார சிக்கலின் வெளிப்பாடு, குறிப்பாக இளம் அன்னையர்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிவதும், குழந்தைகள் கவனிப்பாரின்றித் திரிவதும், தனித்திறன் கொண்டவர்களை ராணுவத்தில் சேர்த்து வீணடிப்பது எப்படி நவீன பொருளாதார நிபுணரின் பார்வையில் மலினமானதோ ,அதே போல் ஒரு பௌத்த பொருளியல் நிபுணரின் பார்வையில் இவையும் மலினமானவையாக இருக்கும். 
ஷுமாக்கர்
                சாமானிய பொருள்முதல்வாதியின் கவனம் முழுக்க பொருளைச் சார்ந்தே இருக்கும், பௌத்த சமயத்தினரின் ஆர்வம் விடுதலையை நோக்கியே இருக்கும். விடுதலைக்குச் செல்வம் ஒரு தடையல்ல, மாறாக அச்செல்வத்தின் மேல் இருக்கும் பற்றே தடை. மகிழ்ச்சியாக வாழ்க்கையில்  அனைத்தையும் அனுபவிப்பதற்கு தடையேதும் இல்லை, அதையே வாழ்வாக எண்ணி முழு மூச்சோடு நுகரும் வாழ்வுதான் சிக்கல். எளிமையும் அகிம்சையுமே பௌத்த பொருளியலின் அடிநாதம். பௌத்த பொருளியலின் மிக முக்கியமான அம்சம்- செயல்பாட்டில் உள்ள நம்ப முடியாத எளிமை ஏற்படுத்தும் மகத்தான விளைவுகள்.

                நவீன பொருளாதாரம் ஒரு மனிதனின் நுகர்திறனைக் கொண்டே அவனது வாழ்க்கைத் தரத்தை மதிப்பிடுகிறது. அபரிமிதமாக நுகர்பவன் குறைவாக நுகர்பவனைக் காட்டிலும் உயர்வான வாழ்க்கைத் தரம் கொண்டவன் என்று அது சொல்கிறது. பௌத்த பொருளியல் இந்த மதிப்பீட்டை முழுமையாக நிராகரிக்கும், நுகர்வு என்பது மனிதன் வளமாக வாழ்வதற்கு அடிப்படைத் தேவை எதுவோ, அதைப் பூர்த்தி செய்து கொள்வது எனும் தளத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது .முடிந்த அளவுக்கு நுகர்வை குறைத்து வாழ்வை வளமாக பேணுவதே அதன் நோக்கம். நாம் உடுத்தும் உடையை ஓர் உதாரணமாக கொண்டு புரிந்து கொள்ளலாம். சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப உயிர்ப்பான, நமக்குத் தோதான உடை அணிவதே நம் நோக்கம் எனில், அதை மிகக்குறைவான உழைப்பில் ,போதுமான துணியில் , நவீன உடையலங்காரங்களைப் போல் சிக்கலாக அதை வெட்டி தைத்து நேரத்தை செலவிடாமல், அவ்வுடையில் தமது முழு படைப்பூக்கத்தை காட்ட நேரத்தை பயன்படுத்துவதே அதற்கு ஏதுவானது . அதன் மூலம் உடையும் உயர்தரமான வேலைப்பாடுகளுடன் கூடியதாக அமையும். இது உடைக்கு மட்டுமல்ல மனிதனின் அனைத்து தேவைகளுக்கும் பொருந்தும். ஒரு பொருளை உடமையாக்குதலும், நுகர்தலும் நமது தேவைகளைப் பெற்றுக் கொள்ளும் வழிமுறைகள்தான். பௌத்த பொருளியல் நமது தேவைகளை அடைய சாத்தியமான பல எளிய வழிமுறைகளை முன்வைக்கிறது.  

                 நுகர்வே அனைத்து பொருளாதார நடவடிக்கைகளின் உள்ளர்த்தம் என்றும் அதற்கான வழிமுறைகளே, முதலீடும் உழைப்பும் என்று நவீன பொருளியல் கருதுகிறது. பௌத்த பொருளியல் நுகர்வை கட்டுப்படுத்துவதன் மூலம் மனிதனுக்கு ஒரு மகிழ்ச்சியான திருப்திகரமான வாழ்வை ஏற்படுத்தி தர விழைகிறது .நவீன பொருளியல் நுகர்வை அதிகப்படுத்தி அதற்கேற்ப உற்பத்தியை பெருக்க விழைகிறது. அபரித நுகர்வைத் தக்கவைக்கத் தேவைப்படும் உழைப்பைக் காட்டிலும் தேவைகளை நிறைவு செய்யும் நுகர்வுக்கான உழைப்பு மிக குறைவானது. உழைப்பை குறைக்கப் பயன்படுத்தும் எந்திரங்களை அமெரிக்காவோடு ஒப்பிட்டால் பர்மா மிக குறைந்த விகிதத்திலேயே பயன்படுத்துகிறது ,இருப்பினும் கூட அமெரிக்காவில் வாழ்வதை காட்டிலும் பர்மாவில் வாழ்க்கை இலகுவாக சுமையற்று இருப்பதை உணர முடிகிறது. 

                 உலகளாவிய சந்தை நிலவரங்களை அண்டிப் பிழைப்பவர்களைக் காட்டிலும் தன்னிறைவான சிறிய சமூகங்களில் வாழ்பவர்களே பெரும் வன்முறைகளுக்கு பலியாகாமல் வாழ்கிறார்கள். இயற்கை வளங்கள் அளவோடு இருப்பதால், அதை மிகக் குறைவாக பயன்படுத்தும் சமூகத்தில் ,ஒருவர் மற்றொருவரின் குரல்வளையை நெரிக்கத் தேவையில்லை. பௌத்தம் முன்வைப்பது போல் "தீமையை தவிர்த்து,நன்மையை செய்திட" அவர்களால் முடிகிறது. 

                   உள்ளூர் தேவைகளை அங்குள்ள வளங்களைக் கொண்டு நிறைவு செய்து கொள்வதே பௌத்த பொருளியலுக்கு ஏற்றது.மிகச் சிறிய அளவில் சில விதிவிலக்குகளை தவிர்த்து, தூரதேசங்களிலிருந்து இறக்குமதி செய்தல், பின்னர் அதை ஈடுக்கட்ட எங்கோ யாருக்கோ ஏற்றுமதி செய்தல் போன்றவை பௌத்த பொருளியலுக்கு ஏற்புடையதில்லை .மனிதனின் வசிப்பிடத்திலிருந்து அவனது பணியிடத்திற்குச் செல்வதற்கு போக்குவரத்து சேவைகளை அதிகமாகச் சார்ந்திருப்பது உண்மையில் உயர்ந்த வாழ்க்கை தரத்தை குறிப்பது அல்ல, மாறாக அது அவனது துரதிருஷ்டம் என்பது நவீன பொருளியல் நிபுணனின் பார்வையாகும் .தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள தமது அருகாமை சுற்றுப்புறங்களை சாராமல் தூரதேசங்களைச் சார்ந்திருப்பது என்பது பௌத்த பொருளியலை பொறுத்தவரை தோல்வியையே குறிக்கும். ஒரு மைலுக்கு எத்தனை டன் /ஆட்கள் நாட்டின் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்துகிறார்கள் என்பது நவீன பொருளியலுக்கு அத்தேசத்தின் வளர்ச்சியின் குறியீடு. அதே புள்ளி விபரம் ஓர் பௌத்த பொருளியல் நிபுணருக்கு அருவெறுக்கத்தக்க சமூக நுகர்வு வெறியின் குறியீடு.  
பெர்ட்ரான்ட் தே ஜோனேல்  
                    பிரெஞ்சு அரசியல் மெய்யியலாளர் பெர்ட்ரான்ட் தே ஜோனேல் "மேற்கின் மனிதனை" பற்றி சொல்வது நவீன பொருளியல் நிபுணருக்கும் பொருந்தும். மனித உழைப்பைத் தவிர அவனுக்கு வேறு எதுவுமே செலவீனமாகத் தெரிவதில்லை. எத்தனை உலோக தாதுக்களை அவன் குப்பையில் வீசுகிறான் ,அதை காட்டிலும் எத்தனை உயிருள்ள ஜீவன்களை அழிக்கிறான் என்பதைப் பற்றிய அக்கறை அவனுக்கு துளியும் கிடையாது. எத்தனையோ உயிர்கள் வாழும் இப்புவி அமைப்பில் வாழும் இன்னொரு உயிரினம் தான் மனிதன் என்பது அவனுக்குப் புரிவதில்லை. உலகம் நகரங்களிலிருந்து ஆளப்படுவதால் ,மனிதனுக்கு சக மனிதனைத் தவிர வேறு உயிர்களுடைய பரிச்சயம் நேர்வதில்லை, அவனிருக்கும் சூழல் அமைப்பு அவனுக்குப் புரிவதில்லை. இதன் விளைவாக நாம் சார்ந்திருக்கும் மரங்கள், தண்ணீர் போன்ற வளங்களை சகட்டுமேனிக்கு சீரழிக்கிறோம் என்கிறார் அவர் .இயற்கை வளங்களை எப்படி பயன்படுத்துவது என்பதிலும் நவீன பொருளியல் பௌத்த பொருளியளிருந்து விலகி நிற்பது புலப்படுகிறது.  

                    மரங்கள் எத்தனை முக்கியமானவை? தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பொருளாதார சீர்கேட்டின் அதிமுக்கிய காரணம் மரங்களை புறக்கணிப்பதே .பௌத்தம் சக உயிர்களின் மீது மட்டும் அன்பு செலுத்தச் சொல்லவில்லை, மரங்களையும் நேசிக்கச் சொல்கிறது. பௌத்த மதத்தினர் ஒவ்வொருவரும் தம் வாழ்வில் மரத்தை நட்டு பராமரித்துவர வேண்டும் என்கிறது பௌத்தம். இதை உலகமெங்கும் பின்பற்றி வந்தால் உண்மையான பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை பௌத்த பொருளியல் உலகிற்கு உணர்த்த முடியும்.

                    புதிப்பிக்கத்தக்க வளங்களுக்கும் ,புதிப்பிக்கவியலா வளங்களுக்கும் நவீன பொருளியல் எந்த வேறுபாட்டையும் காண்பதில்லை. எரிபொருளைப் பொறுத்தவரை, எண்ணெய், கரி ,நீர், காற்று, விறகு போன்றவைகள் இருந்தாலும், இதில் ஒரு யூனிட்டுக்கு ஒப்பீட்டளவில் மிக குறைந்த செலவில் எரிசக்தி எது வழங்குகிறதோ அதுவே லாபகரமானது. அதைப் புதிப்பிக்க முடியுமா இல்லையா போன்ற கேள்விகளுக்கு இடமே இல்லை. புதிப்பிக்கவியாலா வளங்களை தான்தோன்றித்தனமாகவும் ,ஊதாரித்தனமாகவும் பயன்படுத்துவது ஒருவித வன்முறை ,அவ்வளங்களைப் பேணி பாதுகாப்பது மிக முக்கியம் என்று பௌத்த பொருளியல் கருதுகிறது. முற்றிலும் தவிர்க்க முடியவில்லை என்றாலும், மிக அத்தியாவசியமான சூழலில் குறைந்த அளவில் புதுப்பிக்கவியலா வளங்களை விழிப்போடு பயன்படுத்த வேண்டும். வன்முறையை முற்றிலும் ஒழிக்க முடியாவிட்டாலும், அதற்கான முயற்சிகளில் மானுட குலம் சோம்பலின்றி முன்னெடுத்து சென்றாக வேண்டும்.
                    புதுப்பிக்கவியலா வளங்களை நம்பி மக்கள் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்வது என்பது வருமானத்தை நம்பி வாழாமல் முதலீட்டில் காலம் கழிப்பது போல, ஒரு ஒட்டுண்ணி வாழ்க்கை .இதில் நிரந்தர அமைதிக்கு வழியே இல்லை, ஒரு தற்காலிக மாற்று ஏற்பாடாக மட்டுமே இதைக் கருத முடியும். புதிப்பிக்கவியலா எரிசக்திகளான, எண்ணெய், கரி, எரிவாயு போன்றவை உலகின் வெவ்வேறு பகுதிகளில் பரவிக் கிடக்கிறது. இந்த எரிசக்திகள் வரைமுறையின்றி சுரண்டப்படுவது இயற்கைக்கு எதிரான மனிதனின் வன்முறை ,இது நாளை மனிதர்களுக்குள்ளும் வன்முறையை விளைவிக்கும்.


       கலிபோர்னியா தொழில்நுட்ப கல்லூரியின் பேராசிரியர் ஹாரிசன் பிரவுன் அவரது முக்கியமான புத்தகமான "தி சாலஞ் ஆப் மேன்ஸ் ப்யுச்சரி"ன் இறுதி பகுதியில் சொல்கிறார்- "தொழில்துறை சமூகம் அடிப்படையில் நிலையில்லாதது ,மேலும் எதேச்சாதிகாரதிற்கு வழிவகுக்கக் கூடியது. தனி மனித சுதந்திரத்தையும் நிலைத்தன்மையும் எப்படி முழுமையாக அடைவது என்பதே அச்சமூகத்தின் முன் எழும் முக்கிய கேள்வியாகும். சரி இது அதன் நீண்ட கால விளைவு என்றுஎடுத்துக் கொண்டாலும், ஆன்மீக அறங்களுக்கு மதிப்பின்றி நவீனத்துவம் எனும் பட்டியில் இருக்கும் நடைமுறைகளால்  மக்களுக்கு ஏதும் நன்மை வாய்த்திருக்கிறதா ? மக்களைப் பொறுத்தவரை- கிராமீய பொருளாதாரம் சிதிலமடைந்துவிட்டது , நகரங்களில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது ,உடலுக்கும் ஆன்மாவிற்கும் ஊட்டமில்லாமல் நகரங்களில் பெருகும் பாட்டாளி வர்க்கம்- என்று சீர்கெட்டு குலைந்து நிற்கிறது.  


          தற்பொழுதைய அனுபவங்களை கொண்டோ தொலைநோக்கு பார்வையுடனோ எப்படி பார்த்தாலும் ஆன்மீக ,மத அறங்களைக் காட்டிலும் பொருளாதார வளர்ச்சி அதிமுக்கியம் என்று நம்புவர்களுக்கும்கூட பௌத்த பொருளியல் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இது "நவீன வளர்ச்சி " மற்றும் "மரபு தேக்கம் " ஆகியவற்றுக்கு இடையே ஒன்றை தேர்ந்தெடுப்பதை பற்றியல்ல, சரியான வளர்ச்சிப் பாதையை தேர்ந்தெடுப்பதே முக்கியம். குறிக்கோளற்ற பொருள் வாதத்திற்கும் மரபார்ந்த மந்தமான தேக்க நிலைக்கும் மத்தியில் அவ்வளர்ச்சி பாதையுள்ளது. சுருக்கமாக சொல்வதெனில் -நல்வாழ்க்கையை நோக்கி நம் தேடல் விரிகிறது. 

-நிறைவு -
சுகி 

No comments:

Post a Comment