Pages

Friday, January 13, 2012

பௌத்த பொருளியல்-1


இந்தியா ஒரு வல்லரசாக வேண்டும்- இளைஞர்களில் பலர் தம் தேசத்திற்காக தாம் காணும் கனவாக அதை சொல்வார்கள். காந்தி கண்ட கனவு என்ன ? இந்தியாவை அவர் ஒரு போதும் வல்லரசாக நினைத்துப் பார்த்ததில்லை. காந்தியின் கனவு வல்லரசல்ல, நல்லரசு. அதிக மக்கள் தொகையில்லாத பிரித்தானியா ஓர் பேரரசாக உருவெடுக்க அது உலகின் சரிபாதி நாடுகளின் வளங்களை உறிஞ்சியது. இந்தியா போன்ற அபரிதமான மக்கள் தொகை கொண்ட நாடுகள் வல்லரசாக வேண்டும் என்றால் உலகின் மொத்த வளங்களும் அவற்றுக்கு போதாது என்றார் காந்தி. ஒவ்வொரு மனிதனின் தேவையையும் நிறைவு செய்து தரக்கூடிய இயற்கையால் அவனது பேராசையை ஒரு போதும் நிரப்ப முடியாது என்றார் அவர்.


ஜெர்மனியில் பிறந்த எர்னெஸ்ட் பிரெடெரிக் ஷுமாக்கர் இரண்டாம் உலகப் போருக்குப்பின் இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்தவர். இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் பொருளாதாரக் கல்வியை முடித்தார். பின்னர் இங்கிலாந்தின் பொருளாதார ஆலோசகராக பணியாற்றினார்.நிலக்கரி துறைக்கு ஆலோசகராக பணிபுரிந்தார். பல்வேறு தெற்காசிய நாடுகளுக்கு பயணம் செய்தார். 1955 ஆம் ஆண்டு அன்றைய பர்மிய அரசில் பொருளாதார ஆலோசகராகப் பொறுப்பேற்றார் .பௌத்த பொருளியல் கோட்பாடு அங்குதான் உருவாகின .1966 ஆம் ஆண்டு முதன்முறையாக அவரது "பௌத்த பொருளியல்" கட்டுரை வெளியானது. பின்னர் அவரது மிகப் பிரபலமான கட்டுரை தொகுப்பான "ஸ்மால் இஸ் ப்யுடிபுள் ",என்ற நூலிலும் இடம் பெற்றது.
ஷுமாக்கர்
ஷுமாக்கர் 1973 ஆம் ஆண்டு காந்தி நினைவு சொற்பொழிவு ஆற்றும்பொழுது, தனது கொள்கைகளில் காந்தியின் தாக்கத்தைப் பற்றி பேசியிருக்கிறார். காந்தியே நம் காலத்தின் முதன்மையான "மக்களுக்கான  பொருளாதார நிபுணர்" (people's economist) என்று புகழ்கிறார். சூழியல் விழிப்புணர்வு குரல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழத்தொடங்கிய காலகட்டத்தில், நவீன பொருளாதார கட்டுமானம் எவ்வாறு இயற்கையை சுரண்டுகிறது என்பதை மேற்குலகிற்கு மேற்கிலிருந்தே உரக்க அறிவித்த முக்கியமான குரல் அவருடையது. அவரது "பௌத்த பொருளியல் " கட்டுரையின் தமிழ் வடிவமிது.
   --------------

புத்தர் முன்வைத்த எட்டு பௌத்த நெறிமுறைகளில் சரியான வாழ்க்கைமுறை என்பது முக்கியமானது  .சரியான வாழ்க்கைமுறைக்குத் தகுந்த பொருளாதார அமைப்பு அவசியமாகிறது. அப்படியானால் நவீன பொருளியலை தவிர்த்து பௌத்தர்களுக்கு ஏற்ப ஒரு பௌத்த பொருளாதாரம் கட்டாயம் இருந்தாக வேண்டும் .பௌத்த தேசங்கள் தொடர்ந்து அவர்களது பாரம்பரியத்தின்பால் நம்பிக்கைக் கொண்டு அதைப் பேண விரும்புவதாகக் கூறி வருகிறார்கள். பர்மாவும், "புதிய பர்மாவில் ஆன்மீக அறங்களுக்கும் பொருளாதார வளர்ச்சிக்குமிடையே எவ்வித முரணும் இல்லை. ஆரோக்கியமான ஆன்மீக முதிர்ச்சியும் பொருளாதார தன்னிறைவும் உண்மையில் எதிரிகள் அல்ல, மாறாக அவை இயல்பான துணைகள்" என்றும் "எங்களது பாரம்பரியத்தில் உள்ள ஆன்மீக மற்றும் மதக் கொள்கைகளை நவீன தொழில்நுட்பத்துடன் நிச்சயம் வெற்றிகரமாக ஒருங்கிணைக்க முடியும்" என்றும் "பர்மியர்களான எங்களுக்கு ஓர் புனித கடமை இருக்கிறது , எங்களது கனவுகளும் , செயல்களும் எங்கள் நம்பிக்கைகளை ஒட்டியே இருக்க வேண்டும்.இதை எப்போதும் செய்ய வேண்டும்"- என்பதும் போன்ற குரல்கள் பரவலாக எழுகின்றன .

     இது போன்ற தேசங்கள் பெரும்பாலும் நவீன பொருளியல் கோட்பாடுகளின்படி தங்களது பொருளியல் கொள்கைகளுக்கு வடிவம் அளிக்க முடியும் என்று நம்புகின்றன .இந்த நம்பிக்கையில் முன்னேறிய நாடுகள் என்று அவர்கள் கருதும் நாடுகளிலுள்ள நவீன பொருளாதார நிபுணர்களை அணுகி ,பொருளியல் கொள்கைகளை உருவாக்கவும், வடிவமைக்கவும் ,நடைமுறைப்படுத்தவும் ஆலோசனைகளை கோருகின்றனர். ஒரு பிரம்மாண்ட வளர்ச்சித் திட்டத்தின் முன்வடிவைக் கோருகின்றனர். ஐந்தாண்டு திட்டம் என்றும் வேறு பெயர்களிலும் அது அறியப்பட வருகிறது. எப்படி நவீன பொருள்மயமான வாழ்வு நவீன பொருளியலை உருவாக்கியதோ, அது போலவே பௌத்தம் முன்வைக்கும் வாழ்க்கை முறைக்கு என்றும் பிரத்யேகமான பௌத்த பொருளியல் ஒன்று தேவைப்படும் என்பதை யாரும் உணர்ந்ததாகவே தெரியவில்லை.

     இதர எத்தனையோ சிறப்புத் துறையினர் போல், பொருளாதார நிபுணர்களுக்கும்கூட ஒருவித உயர் தத்துவத் தள பார்வை கிடையாது, அவர்களது துறை எந்த முன் முடிவுகளும் அற்ற ,மாறாத உண்மைகளை அடிப்படையாகக் கொண்ட அறிவியல் என்று நம்புகின்றனர். இன்னும் சிலர் புவியீர்ப்பு விசை விதிகளுக்கும், உயர் தத்துவங்களுக்கும் ,தார்மீக அறங்களுக்கும் தொடர்பற்றிருப்பதுபோல் பொருளியல் கோட்பாடுகளும் தொடர்பற்று சுதந்திரமானது என்கின்றனர். .நாம் வழிமுறைகளைப் பற்றிய விவாதங்களின் உட்புகப் போவதில்லை. .மாறாக நாம் சில அடிப்படைகளை எடுத்துக் கொண்டு அதை நவீன பொருளாதார நிபுணரும் பௌத்த பொருளாதார நிபுணரும் எப்படி புரிந்து கொள்வார்கள் என்று பார்க்கலாம்.

       பொருளீட்டலின் அடிப்படை மூலதனம் மானுட உழைப்பே என்பதை இவ்வுலகம் பொதுவில் ஒப்புக் கொண்டுள்ளது. தற்போதைய நவீன பொருளாதார நிபுணர்கள் மானுட உழைப்பை ஏறக்குறைய தவிர்க்க முடியாத அவசியம் கொண்ட தீமை என்று கருதும் போக்கு நிலவுகிறது. முதலாளிகளைப் பொறுத்தவரை இது தவிர்க்க முடியாமல் போனாலும் குறைக்க வேண்டிய வீண் செலவுதான். அதன் இடத்தில் யந்திரங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். தொழிலாளியைப் பொறுத்தவரை ,அவன் சுரண்டப்படுகிறான் ,அவன் தனது ஓய்வையும் ,வசதியையும் தியாகம் செய்ய வேண்டியுள்ளது ,ஊதியம் என்பதும்கூட இந்த தியாகத்துக்கு வழங்கப்படும் இழப்பீடுதான் .அதாவது வேலையை தொழிலாளி இல்லாமல் முடிக்க வேண்டும் என்று முதலாளியும் ,வேலையே பார்க்காமல் வருமானம் கிடைக்க வேண்டும் என்று தொழிலாளியும் எதிர்பார்க்கின்றனர்.

         இரு தரப்பினருக்கும் இருக்கும் இத்தகைய எதிர்பார்ப்புக்களின் விளைவுகள் மிகப் பெரியவை.வேலையை துறக்க வேண்டும் என்பதே நோக்கம் எனில், வேலைப் பளுவை குறைக்கும் அனைத்து முயற்சிகளும் நல்லவையே. யந்திர பயன்பாட்டைத் தவிர்த்து நமக்குக் கிடைக்கும் சக்தி வாய்ந்த வழிமுறை "உழைப்பின் பங்கீடு "(division of labor) முறையே ஆகும். ஆடம் ஸ்மித் தன்னுடைய "வெல்த் ஆப் நேஷன்ஸ் " எனும் படைப்பில் முன்வைக்கும் ஊக்கு தொழிற்சாலை இதற்கு சரியான உதாரணம். இங்கு இது காலம்தொட்டு மானுடம் பழகிப் பயின்று வந்துள்ள வழமையான நுண்மைகள் பற்றிப் பேசவில்லை மாறாக உற்பத்தி முறைமையை சிறு சிறு கூறுகளாகத் துண்டித்து உற்பத்திப் பொருளை அதிவேகமாக உண்டு பண்ண முடியும் என்கிறது .பங்களிக்கும் தொழிலாளிகள் அவர்களது மூட்டுக்களை யந்திரங்கள் போல் ஒரேமாதிரியான தொடர் அசைவுகள் மூலம் இயக்குவதே போதுமானது .  

       பௌத்தம் வேலையின் பயன்களாக மூன்று முக்கிய அம்சங்களை முன்வைக்கிறது,

1.மனிதன் தனது திறன்களை முழுமையாகப் பயன்படுத்தவும், திறன்களை வளர்த்துக் கொள்ளவும்
2. தனது அகந்தையைப் புறம்தள்ளி சக மனிதர்களோடு பொதுவான காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவும்
3. வாழ்வதற்குத் தேவையான அடிப்படை வளங்களை கண்டடைதல் .

       இந்த அம்சங்களை கணக்கில் கொண்டு பார்த்தால் இவை முடிவற்ற வாய்ப்புகளாய்க் கண் முன் விரிகின்றன .அர்த்தமற்ற ,சலிப்பூட்டும் ,பயனற்ற, நரம்புகளைத் தெரிக்க வைக்கும் வகையில் வேலையை திட்டமிட்டு அமைத்தல் என்பது கிரிமினல் குற்றத்திற்கு ஈடானது. பொருளுக்கு முதன்மை முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மனிதர்கள் இரண்டாம் பட்சம் ஆகிவிடுகிறார்கள். தொழிலில் ஒரு முனைப்போ பேரார்வமோ இருப்பதில்லை, ஆன்மாவைச் சீரழிக்கும் வலிமைக் கொண்ட உலக வாழ்க்கையின் மீதான ஆதி வேட்கை மட்டுமே எஞ்சி இருக்கும் .வேலைக்கு மாற்றாக ஓய்வுக்காக ஏங்குவதும் மானுட வாழ்வின் அடிப்படை உணமைகளை பற்றிய பிழையான புரிதலின் விளைவுதான். வேலையும் ஓய்வும் ஒன்றை மற்றொன்று நிரப்பி மனிதனின் வாழ்வை நிறைவு செய்கின்றன. வேலையின் அக மகிழ்வையோ ஓய்வின் நிறைவான அமைதியையோ அழிக்காமல் இவையிரண்டையும் பிரிக்க முடியாது.
ஜெ.சி.குமரப்பா
          ஆக பௌத்தம் இரு வெவ்வேறு வழிமுறைகளைத் தெளிவாக வரையறுக்கிறது .மனிதனின் திறனையும் ,ஆற்றலையும் ஊக்குவித்து அதிகரிப்பது ஒரு வழிமுறை. இன்னொன்று மனிதனின் வேலையை அடிமை யந்திரங்களுக்கு தாரை வார்த்து மனிதனை யந்திரங்களுக்கு ஊழியம் செய்ய வைப்பதாக இருக்கிறது. இவ்விரண்டையும் எப்படி பிரித்தறிவது ? நவீன மேற்குலகையும்,தொன்மையான கிழக்கையும் பற்றித் தெளிவாக பேசும் ஆற்றல் பெற்ற ஆனந்த குமாரசாமி கூறுகிறார் "கைவினைஞனே பிரித்தறிய முடியும், உபகரணத்திற்கும் ,யந்திரத்துக்கும் இடையே உள்ள மெல்லிய வேறுபாட்டை அவனால் மட்டுமே வரையறுக்க முடியும். பாய்த்தறி ஓர் உபகரணம் கைவினைஞன் அவனது கரங்களைப் பயன்படுத்திதறியை இயக்குகிறான், மாறாக விசைத்தறி ஒரு யந்திரம் ,அது ஏன் கலாச்சாரச் சீரழிவை ஏற்படுத்துகிறது என்றால் -மனிதன் செய்வதற்குரிய முக்கியமான வேலையை அது செய்து விடுகிறது". நவீன பொருளாதாரத்திலிருந்து பௌத்த பொருளாதாரம் மாறுபட்டிருக்க வேண்டும் என்பது திட்டவட்டமாக விளங்குகிறது .தேவைகளின் பெருக்கத்தில் நாகரீக வளர்ச்சி இல்லை, மாறாக மானுட பண்பு நலன்களின் மேம்பாட்டில் இருக்கிறது என்ற கொள்கையை பௌத்தம் முன்வைக்கிறது. பண்பு நலன்களை உருவாக்குவதில் பணியின் பங்கு பிரதானமானது. சுதந்திரமான, கௌரவமான சூழலில் செய்யப்படும் தொழில் தன் பணியாளர்களையும் அவர்களது தயாரிப்பையும் நிச்சயம் ஆசிர்வதிக்கும். இந்திய பொருளியல் நிபுணரும் மெய்யியல் அறிஞருமான ஜெ.சி.குமரப்பாவின் வார்த்தைகளில் சொல்வதெனில் -

    பணியின் இயல்பை சரியாக உள்வாங்கி அதில் முழுமையாக தம்மை ஈடுபடுத்திக் கொண்டால், உடலுக்கு உணவு எப்படி ஊட்டம் அளிக்கிறதோ, அது போல் மனிதனின் மேன்மையான பக்கங்களை முடுக்கி அவனிடமிருந்து சிறந்ததை அவனது பணி வெளிக்கொண்டு வரும். அவனுள் இருக்கும் மிருகத்தை நெறிப்படுத்தி, அவனது கட்டற்ற ஆற்றலை ஒருமுகப்படுத்தி அவனை மேம்படுத்தும். அவனது ஆளுமையை முழுமையாக்கும் .

             -சுகி 

No comments:

Post a Comment