Pages

Monday, January 9, 2012

பின் நவீனத்துவ காந்தி - 3-சர்வோதயமும் சமத்துவமும் - இருவேறு சமூக பார்வைகள்




சென்ற பதிவின் தொடர்ச்சி 


இந்திய பிரிவினையைத் தவிர்த்திருக்க முடியுமா என்ற கேள்வி காந்தி காலத்தில் மட்டுமல்ல, இன்றும் விடையற்றதாக இருக்கிறது. பிரிவினையால் ஏற்பட்ட உயிர் மற்றும் உடைமை இழப்புகள் அசாதாரணமானவை. அதன் தொடர்ச்சியாக இன்றும் இந்திய பாதுகாப்பை அச்சுறுத்தும் பிரச்சினைகள் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு தேசங்களின் ஆற்றலையும் விரயம் செய்கின்றன. காந்தி, நேரு, ஜின்னா போன்றவர்கள் செய்த தவறுகள், இதில் பிரிட்டிஷ் அரசின் பங்கு என்று விவாதங்கள் இன்று வரை முடிவில்லாமல் நீள்கின்றன.  இனம், மொழி, சமயம் என்ற பற்பல அடையாளங்கள் தேசியவாதத்துக்கு நியாயம் கற்பித்த நவீன சூழலில் பிரிவினை தவிர்க்கப்பட்டிருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு காரணம் இல்லாதிருந்தால் வேறொரு காரணம் பிரிவினைக்கு வழி செய்திருக்கும். ஏனெனில், நவீனத்துவ தேசியவாத சிந்தனையின் தன்மை இத்தகைய பிரிவினைகளைக் காலத்தின் கட்டாயமாகத் தருவிக்கின்றது.  


தான் வாழும் காலத்தைத் தாண்டி, அதையாளும் சிந்தனைகளின் தாக்கத்துக்குட்படாமல் சுயமாக சிந்திக்கக் கூடியவர்கள் ஒரு பொருட்படுத்தத்தக்க எண்ணிக்கையில் இருந்திருந்தால் தேசியவாதத்தின் எல்லைகளும் அதை ஒரு தனிப்பெரும் தீர்வாக நிறுவுவதில் உள்ள ஆபத்துகளும் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.  எவ்வளவு பெரிய ஆளுமைகளாக இருந்தாலும் இதை ஓரிருவர் செய்திருக்க முடியாது - நவீனத்துவம் உலகனைத்தையும் வெற்றி கொண்ட சூழலில் இந்தியா இதை எவ்வளவுக்கு எதிர்த்திருக்க முடியும்? காந்தி மட்டும் என்ன செய்திருக்க முடியும்?

பின்நவீனத்துவ காந்தியில் ரூடால்ப் இந்திய பிரிவினைக்கு நேருவை முதன்மைக் காரணியாக அடையாளம் காட்டுகிறார். நேரு என்ற தனி மனிதரையல்ல, நேருவை நவீனத்துவத்தின் பிரதிநிதியாக முன்னிறுத்தி பிரிவினை நவீனத்துவத்தின் இயல்பான நீட்சியே என்று விளக்குகிறார், நேரு நவீன சிந்தனையாளராக இருந்ததால் காந்தியின் பின்நவீனத்துவத்தை அவரால் பொருட்படுத்த இயலவில்லை, காந்தியின் குரல் மதிக்கப்பட்டிருந்தால் பிரிவினை தவிர்க்கப்பட்டிருக்கும் என்பது ரூடால்பின் கருத்தாக இருக்கிறது. ஆனால் புரட்சியின் மொழியில் பேசிய நேருவின் நவீன சிந்தனைகள் முற்போக்கானவையாகவும் மரபின் மொழியில் பேசிய காந்தியின் சிந்தனைகள் பிற்போக்கானவையாகவும் கருதப்பட்ட அன்றைய சூழலில் மட்டுமல்ல, இன்றுள்ள சிந்தனைச் சூழலிலும்கூட காந்தியம் எந்த ஒரு பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தக் கூடியதாக இல்லை என்று கருதப்படுகிறது .  சிந்தனை வெளியில் காந்தியின் இடத்தை நிறுவுவதும் அவரது சிந்தனைகளின் தொலைநோக்குப் பார்வை சமகாலப் பொருத்தம் கொண்டதாக உள்ளதை உணர்த்துவதுமேகூட இன்றுள்ள  காந்தியர்கள் முன்னிற்கும் பெரும் சவாலாக இருக்கிறது.

----

"நேரு போன்ற நவீன சிந்தனையாளர்கள் உயர் அரசமைப்பின் விரிவு, சீர்மை மற்றும் மைய அதிகாரப் பண்புகளை வலியுறுத்தினர். காந்தி போன்ற பின்நவீனத்துவர்கள் இவை மூன்றையும் நிராகரித்தனர்- எளிமை, பன்மை மற்றும் உள்ளாட்சி அதிகாரப் பண்புகளை முன்வைத்தனர். உயர் அரசமைப்பை முன்வைத்த நேரு போன்றவர்கள் வலுவான நடுவண் அரசு, சீர்மைக் குடியுரிமை, பெரும்பான்மை அடிப்படையிலான மக்களாட்சி முதலியவற்றை வலியுறுத்தினர். எளிய அரசமைப்பையும் குடிமைச் சமூகத்தையும் முன்வைத்த காந்தி போன்றவர்கள் உள்ளாட்சி அதிகாரம் கொண்ட சமட்டி அரசையும் சிறுபான்மை உரிமை மற்றும் பிரதிநிதித்துவத்தையும், பரவலாகப் பகிரப்பட்ட தன்னாட்சியையும் வலியுறுத்தினர். உச்சக்கட்ட நவீனத்துவராக இருந்த நேருவின் சிந்தனையும் செயலும் அரசமைப்பை மையமாகக் கொண்டிருந்தது; பின்நவீனத்துவரான காந்தியின் சிந்தனையும் செயலும் குடிமை சமூகத்தை மையமாகக் கொண்டிருந்தது," என்று எழுதுகிறார் ரூடால்ப்.

இந்திய விடுதலை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு நேருவின் பதில் பூரண சுதந்திரம் என்பதாக இருக்கிறது, காந்தியின் பதிலோ, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ளது போன்ற பிரிட்டிஷ் ராணியைத் தலைமையாகக் கொண்ட டொமினியன் அமைப்பாக இருக்கிறது என்கிறார் ரூடால்ப். 1929ல் இவ்விவாதம் மேற்கொள்ளப்பட்டு நேருவின் பூரண சுதந்திரம் என்ற கோரிக்கை காந்தியால் ஏற்கப்பட்டுவிட்ட நிலையில் காந்தி நேரு என்ற இருமை இவ்விஷயத்தில் கட்டமைக்கப்படுவதற்கான நியாயம் கேள்விக்குரியது. ஆனால் அதைச் செய்கிறார் ரூடால்ப். காந்தியா நேருவா, பிரிவினைப் பேச்சுவார்த்தைகளை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் இருவரின் அணுகுமுறையும் எவ்வகையில் வேறுபட்டன,  இது தொடர்பான அரசியல் நிகழ்வுகளில் இவ்விருவரின் தாக்கமும் எத்தகைய இயல்பு கொண்டவையாக இருந்தன என்ற இருமை செயற்கையான ஒன்றாக உள்ளது-  நேருவின் தலைமைக் கொள்கைகளை காந்தி கேள்விக்குட்படுத்தினாலும் எதிர்க்கவில்லை : கருத்து வேற்றுமைகள் பிளவில் முடியாதவரை அவற்றை முரண்படுதல்களாக எதிரெதிர் நிலையில் வைத்துப் பேசுவது சரியல்ல. ஆனாலும், நவீனத்துவத்தின் குறைகள் மற்றும் காந்திய பின்நவீனத்துவத்தின் நல்லியல்புகள் என்ற வகையில் இத்தகைய விவாதம் மேற்கொள்ளப்பட்டாக வேண்டும்.

நேருவின் நவீனத்துவம் அவரது ஐரோப்பிய மற்றும் ரஷ்ய பயண அனுபவங்களின் அடிப்படையில் உள்ளது என்கிறார் ரூடால்ப். அவையே அவரை பூரண சுதந்திரம் கோரும் தேசியவாதியாக மாற்றுகின்றன. காந்தியின் அரசியல் அனுபவமோ ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவராக அவர் பங்கேற்ற தென்னாப்பிரிக்க அரசியலால் உருப்பெற்ற ஒன்று : பெரும்பான்மை ஜனநாயகத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், சிறுபான்மையினரின் அச்சங்களை நீக்கவும் டொமினியன் அந்தஸ்து உதவும் என்பது காந்தியின் நம்பிக்கையாக இருந்தது.

இது தொடர்பான கடித்தங்களை வாசித்தால் காந்தியை நேரு புரிந்து கொள்ளவே இல்லை என்பதைக் காட்டுகின்றன-

"உங்கள் சுயசரிதை மற்றும் யங் இந்தியாவில் நீங்கள் எழுதியுள்ள பல கட்டுரைகளை வாசிக்கும்போது... நான் என் லட்சியங்கள் உங்களிடமிருந்து எவ்வளவு வேறுபடுகின்றன என்பதை அடிக்கடி உணர்ந்திருக்கிறேன்... நீங்கள் மேலை நாகரிகத்தை மிகத் தவறாகக் எடை போடுகிறீர்கள் என்றும் அதன் குறைகளுக்கு மிகைப்பட்ட முக்கியத்துவம் தருகிறீர்கள் என்றும் நான் நினைக்கிறேன்... நீங்கள் ராமராஜ்யம் என்று எதை அழைக்கிறீர்களோ அது ஒன்றும் அவ்வளவு மகோன்னதமாக இருந்ததில்லை என்பது என் எண்ணம், அது திரும்ப வேண்டும் என்ற ஆசையும் எனக்குக் கிடையாது... மேலை நாகரிகம், அப்படிச் சொல்வதைவிட, தொழில்மயப்பட்ட நாகரிகம் இந்தியாவை வெற்றி கொள்ளும் என்று நான் நம்புகிறேன்... தொழில்மயமாதலின் குறைகளை அனைவரும் அறிந்திருக்கின்றனர், உடோபிய மற்றும் சமூகக் கோட்பாடுகள் இவற்றைக் களையும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டு வருகின்றன..."

என்று காந்திக்கு நேரு கடிதம் எழுதியதாக ரூடால்ப் மேற்கோள் காட்டுகிறார். மேலும்,

"நீங்கள்... இந்தியாவிலுள்ள ஏழைகளின்... சார்பாக எழுதியுள்ளீர்கள்.... (கிராமப்புற வேலை வாய்ப்பு மற்றும் ஆக்கப்பணி முறையில்) ஏழ்மையின் அடிப்படைக் காரணிகளைத் தொடவும் முடியுமா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது... நீங்கள் செமி-ப்யூடலிய (semi feudal) ஜமீன்தாரி அமைப்புக்கு எதிராக ஒரு வார்த்தைகூட சொல்வதில்லை... தொழிலாளர்களையும் நுகர்வோரையும் சுரண்டும் முதலாளித்துவ அமைப்புக்கு எதிராகவும் ஏதும் சொல்வதில்லை"

என்று எழுதுகிறார் நேரு. காந்தியின் பதில், "நீங்கள் சொல்வது போல் நான் தவறான பாதையில் செல்கிறேனென்றால் நான் தேசத்துக்கு சரி செய்ய முடியாத தீங்கிழைக்கிறேன் என்று பொருளாகிறது... எனக்கெதிராகப் போராட வேண்டியது உங்கள் கடமை" என்பதாக இருக்கிறது.

நேரு போராடுவதில்லை- அரசியலில் நான் உங்கள் குழந்தை- சொல்பேச்சு கேட்காத வழி தவறிய குழந்தை- என்று கூறி காந்தியுடனான தன் உறவை சரி செய்து கொள்ளும் நேரு பிரதமரானதும் தான் தேர்ந்தெடுத்த நவீனத்துவத்தின் பாதையில்தான் இந்தியாவைக் கொண்டு செல்கிறார். அதற்கு அவரையும் குறை சொல்ல முடியாது - அவரது காலத்தில் நவீனம் என்பது முன்னேற்றம் என்று பொருள்பட்டது,  அதன் போதாமைகளை உணர்ந்திருந்த சிந்தனையாளர்கள் வெகுச் சிலரே.  

காந்தி சமய நம்பிக்கையின் பலத்தையும் பல்வகைப்பட்ட சிறுபான்மையினரின் அச்சங்களையும் உணர்ந்திருந்தார்.  அவர்களின் நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள அன்னியர்களான பிரிட்டிஷ் தலைமையில் இந்திய சுதந்திரம் அடையப்பட்டு பேணப்பட வேண்டுமென்றாலும் அதற்கு அவர் தயாராக இருந்தார். அடிப்படையில் காந்தியின் சிந்தனை மனிதக் கூட்டம் அனைத்தின் ஒருமித்த நலனையும் நாடுவதாக இருந்தது. அவருக்கு யாரையும் நம்மவர் அன்னியர் என்று வகைப்படுத்தி விரும்பவோ வெறுக்கவோ நியாயங்கள் இருக்கவில்லை.  நேருவோ சமய நம்பிக்கையின் குரல்களை மதவாதக் குரல்கள் என்று ஒதுக்கி வைத்தார்- உயர் வகுப்பினர் தங்கள் அதிகாரத்தையும் நலன்களையும் தக்க வைத்துக் கொள்ள மதம் என்ற போர்வையில் முன்னேற்றத்துக்குத் தடை செய்வதாக நினைத்தார்.  தன்னார்வத் தொண்டின் அடிப்படையிலான ஒரு சர்வோதய சமுதாயம் காந்தியின் கனவாக இருந்தது- வலுவான நடுவண் அரசு அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் மையப்படுத்தி சரியாக திட்டமிட்டு ஒரு சமதர்ம சமுதாயத்தை ரஷ்யாவில் ஏற்கனவே உருவாக்கி விட்டதாக நேரு நம்பினார். அதற்கு இந்திய முகம் இருந்தால் போதும் என்பது நேருவின் கொள்கையாக இருந்தது.

அடிப்படையில் நேரு அவரது சமகால புரட்சிகர அரசியல் மற்றும் சமூக சிந்தனைகளைக் கேள்விகளின்றி ஏற்றவராகவே இருந்தார்.  அவரது பார்வை அறிவியலின் தொழில் நுட்பப் பயன்களைக் கண்டு அதுவே முன்னேற்றத்துக்கான சமூக மற்றும் அரசியல் உண்மைகள் அனைத்தையும் புலப்படுத்தும் என்று நம்புவதாக இருந்தது.  அவரது சமகால அரசியல் சிந்தனையாளர்களோடு ஒப்பிட்டால் நேருவின் புரிதல் பரவலாக உலகெங்கும் வளரும் நாடுகளின் சிந்தனையாளர்களால் நடைமுறை சாத்தியமாக நம்பப்பட்ட ஒன்று என்று அறியலாம். 

ரூடால்ப் "பயணப்படாத பாதை" என்று காந்தியின் டொமினியன் இந்தியாவைச் சொல்கிறார். அது இந்திய ஒருமைப்பாட்டைக் காத்தாலும் காத்திருக்கலாம்- பெரும்பான்மையின் முரட்டு பலத்துக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது என்ற சிறுபான்மையினரின் அச்சம் எவ்வளவுதான் நியாயமான மக்களாட்சியாக இருந்தாலும் நியாயமானதே.  நேருவின் தேசியவாதம் நியாயமெனில் அனைத்து தேசியவாதங்களையும் நியாயப்படுத்தலாம்.  நவீனத்துவம் மேலும் மேலும் பிளவுபடுத்தும், இருமைகளை உருவாக்கும் தன்மை கொண்டது.  அதன் பல தீவினைகளில் தேசியமும் ஒன்றே. காந்திய சிந்தனை பின் நவீனத்துவமான ஒன்றோ இல்லையோ, அது நவீனத்துவத்தின் எல்லைகளை நன்கறிந்ததாக இருந்தது. அவற்றைத் தவிர்க்க முனைந்தது. இக்காரணங்களால்தான் காந்தியம் இன்றும் முக்கியமான சிந்தனையாக இருக்கிறது.

அர.சு.ராமையா 



No comments:

Post a Comment