Pages

Saturday, January 7, 2012

பின் நவீனத்துவ காந்தி - 2-காந்திய லட்சியவாதமும் யதார்த்தமும்




நாம் உண்மை என்று நம்புவனவற்றை நடைமுறைப் பயன்பாட்டில் காணும் உந்துதலே நம் லட்சியங்களுக்கு உருவமளிக்கிறது.  ஆனால் அந்த உண்மை பன்முகங்கள் கொண்டது என்பதையும் அதை முழுமையாக அறிய முடியாது என்பதையும் காந்தி உணர்ந்திருந்தார் - அவருக்கு என்றும், எந்த ஒரு கோட்பாடும் முழுமுதல் உண்மையாக இருந்திருக்கவில்லை : அறிவியல் கோட்பாடுகளைப் போல் காந்திய உண்மைகள் களச்சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவற்றின் குறைகள் களையப்பட்டன.  


காந்திய லட்சியவாதம் யதார்த்தத்தின் அடிப்படையில் அமைந்த ஒன்று : அது குறிப்பிட்ட எந்த ஒரு லட்சியக் கனவையும் மெய்ப்படக் காண வேண்டும் என்பதைத் தன் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை.  கடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்ற கீதாசார வாக்கியம், காந்திக்குத் தன் தனி வாழ்விலும், பொது வாழ்விலும் ஒரு உரைகல்லாக இருந்தது.  முன்முடிவுகளைக் கொண்ட முயற்சிகள் பொய்மையையும் வன்முறையையும் நியாயப்படுத்தும் தன்மை கொண்டவை - அவை உண்மையை மறைப்பதை தம்மியல்பாகக் கொண்டிருப்பதைத் தவிர்க்க முடியாது என்பது காந்தியின் நம்பிக்கையாக இருந்தது. எனவே, அவர் தன் லட்சியவாதம் கற்பனையை அடிப்படையாகக் கொண்டது என்பதை மறைக்கவில்லை - நடைமுறை யதார்த்தத்தின் உச்ச சாத்தியங்களை சோதித்தறியும் நீண்ட பயணத்துக்குத் துணை செய்யக்கூடிய கருவியாக மட்டுமே காந்திய லட்சியவாதம் இருக்கிறது.  

கீதை எது உண்மை என்பதை வரையறுத்துச் சொல்லவில்லை, எப்படி உண்மையை அறியலாம் என்ற வழியை மட்டுமே சுட்டுகிறது என்றார் காந்தி - வினைப்பயன்களில் நாட்டமற்றிருப்பதே கீதையின் தன்னிகரற்ற பாடம்.  காந்தியத்தின் இயல்பும் இத்தகையதே:  காந்தியம் என்று சொல்லப்படுவது ஒரு லட்சியக் கனவே- அதன் நடைமுறை யதார்த்தம் எளிய வாழ்வு, பொதுநலத்தில் அக்கறை, நம்பிக்கை பேணல் என்பனவற்றில் இருக்கிறது. காந்தியத்துக்குத் தோல்வியில்லை - அது உலக அளவில் சிந்தித்து உள்ளூரில் செயல்படுகிறது, அதன் உயர்ந்த லட்சியங்கள் நடைமுறை யதார்த்தத்தை இழிவுபடுத்துவதில்லை, சமகால சூழலை மதித்து மேன்மைப்படுத்த முனைகின்றன.

----

ருடால்பின் "பின்நவீனத்துவ காந்தி" என்ற கட்டுரை அரசு நிர்வாகம் குறித்த காந்திய சிந்தனைகள் நேருவின் முற்போக்கு சிந்தனையுடன் எவ்வகையில் முரண்படுகின்றன என்பதையும் பேசுகிறது.  நேரு, அவர் காலத்து முற்போக்கு சிந்தனையின் தாக்கத்தில் சிந்திப்பவராக இருந்தார்- அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியே பொருளாதார முன்னேற்றத்தையும் மனிதவள மேம்பாட்டையும் உறுதி செய்யும் என்று நம்பினார் அவர். காந்தியின் சிந்தனை காலத்துக்கப்பாற்பட்ட பயன்பாடு கொண்டது - அது அடிப்படை அறங்களை போற்றுவதாக இருந்தது.

சுதந்திர இந்தியாவின் நோக்கங்கள் குறித்து நேருவுக்கு 1945ம் ஆண்டு ஒரு கடிதம் எழுதுகிறார் காந்தி: அதில் ஒவ்வொரு மனிதனின் வாழ்வாதாரத் தேவைகளும் அவனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார் அவர்.  கிராமங்களிலிருந்து மேலெழும் சுதந்திர நிர்வாக அமைப்பை காந்தி வலியுறுத்துகிறார் - கிராமங்கள் சுதந்திரமாகவும் தொழில் வாய்ப்புகள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் என்கிறார் காந்தி.  சிறு தொழில் நிறுவனங்கள், கைவினைத் தொழில்கள் மற்றும் விவசாயம் சார்ந்த பொருளாதாரத்தை காந்தி முன்னிறுத்துகிறார். ஆனால் நேருவோ நகரம், ராட்சத தொழிற் சாலைகள்,  மைய அரசாட்சி என்று எதிர் திசையில் செல்கிறார். 

நேரு கிராமங்களை ஒரு பொருட்டாக மதிப்பதேயில்லை- "பொதுவாகச் சொன்னால் கிராமங்கள் அறிவாலும் பண்பாட்டாலும் பின்தங்கியவை.  பின்தங்கிய சூழலில் முன்னேற்றம் காண முடியாது. குறுகிய மனம் கொண்டவர்களே பொய்யர்களாகவும் வன்முறையாளர்களாகவும் இருப்பார்கள், " என்று காந்திக்கு பதில் எழுதுகிறார் அவர்.  நேருவின் நவீன இந்தியாவில் கிராமங்களுக்கு இடமில்லை.

இத்தனைக்கும் காந்தி நேருவுக்கு இன்றைய கிராமங்களைப் பற்றி தான் பேசவில்லை என்று எழுதியிருக்கிறார். "நான் பேசும் கிராமங்கள் என் கற்பனையில் இருக்கின்றன" என்கிறார் அவர். ஒரு அப்பழுக்கற்ற பின்நவீனத்துவராக, "ஒவ்வொரு மனிதனும் தன் கற்பனை உலகில்தான் வாழ்கிறான்," என்றும் காந்தி எழுதுகிறார். காந்தி இந்தக் கடிதத்தை எழுதி நாற்பதாண்டுகள் சென்ற பின்னரே, நேருவின் முற்போக்கு ஆலயங்களின் தெய்வத் திருவுருக்கள் ரஷ்யாவின் சாலைகளில் கயிறு கட்டி வீழ்த்தப்பட்டு சுத்தியல்களால் உடைத்தெறியப்படும்போதுதான் அவரது கற்பித உலகின் அறிவியல் உண்மைகள் ஒரு கொடுங்கனவென்று சந்தேகத்துக்கிடமின்றி அறியப்படுகின்றன.

"எனது கற்பனையில் உள்ள கிராமத்தில் உள்ளவர்கள் ஓய்ந்திருக்க மாட்டார்கள்... குப்பைகள் நிறைந்த ஒரு இருட்டறையில் அவர்கள் மிருகங்களைப் போல் வாழ மாட்டார்கள். ஆண்களும் பெண்களும் சுதந்திரமாக வாழ்வார்கள். உலகனைத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பார்கள்.  அங்கு சோம்பலிலோ ஆடம்பரத்திலோ யாரும் இருக்க மாட்டார்கள்," என்று நேருவுக்கு எழுதுகிறார் காந்தி.  காந்தியின் கற்பனை கிராமம் முற்றிலும் எதையும் சாராத தனிச் சமூகம் அல்ல  , தன்னை நம்பி இருப்பது, தன் காலில் நிற்பது. "பெரிய அளவில் உற்பத்தி செய்யப்பட வேண்டியவை பல உள்ளன.  ரயில்வே, தபால் தந்தி போன்ற துறைகள் இருக்கலாம்.  என் கிராமங்களில் எவை இருக்கும் இருக்காது என்று எனக்குத் தெரியவில்லை, அதில் எனக்கு அக்கறையுமில்லை.  அதன் சாரத்தை என்னால் காப்பற்ற முடிந்தால் போதும், மற்றவையனைத்தும் மக்கள் வருவதற்கும் இருப்பதற்கும் தேவையான சுதந்திரத்தைத் தருவதாக மட்டுமே இருக்கும்" என்று எழுதுகிறார் காந்தி. ஆல்வின் டாஃப்ளர், 'செயற்கைக் கோள்களுடன் காந்தி' என்றொரு பொருளாதார அமைப்பை உருவகப்படுத்தும்போது நாம் இந்த வரிகளை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து தவிர ஏனைய அமைப்புகள் கிராமிய அளவில் சுதந்திரமாய் செயல்படக்கூடிய ஆற்றல் கொண்டிருக்க வேண்டும் என்பது காந்திய கனவாக இருந்தது. நாம் இதை காந்திய லட்சியமாகக் கொண்டு இப்படிப்பட்ட ஒரு சமூக அமைப்பு சாத்தியமான ஒன்று என்றுகூட முன்வைக்க வேண்டியதில்லை - நடைமுறை யதார்த்தத்தில் எது சாத்தியமாக இருக்கிறதோ, அதை சோதனை முறையில் செயல்படுத்துவதே காந்தியமாக இருக்கும். 

"நாம் இருவரும் இவ்விஷயங்களில் ஒத்த கருத்துள்ளவர்களாக இருக்கிறோம்," என்று பின்னொரு கடிதத்தில் நேருவுக்கு எழுதுகிறார் காந்தி:

1.  ஒவ்வொரு மனிதரும் அறிவாற்றல், பொருளாதார, அரசியல் மற்றும் அற மேம்பாடடைவது எப்படி என்பதே உங்கள் முன் நிற்கும் கேள்வியாக நிற்கிறது. எனக்கும்தான்.

2. மேற்சொல்லிய விஷயங்களில் மேன்மையடைய ஒவ்வொருவருக்கும் உரிமையும் வாய்ப்பும் உறுதி செய்யப்பட வேண்டும்.

3. உணவு, நீர், உறைவிடம், உடை, பொழுதுபோக்கு என்று அனைத்து வசதிகளும் நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் சம அளவில் கிடைக்க வேண்டும்.

4. மற்றவர்களின் உழைப்பில் யாரும் உயரக் கூடாது என்று உறுதி செய்து கொள்ள நாம் தன்னிறைவு பெற்ற கற்பனை கிராமத்தையும் தன்னிறைவு பெற்ற குழுவையும் சமுதாயத்தின் அடிப்படை அலகாகக் கொள்ள வேண்டும். இந்த கிராமங்களிலும் குழுக்களிலும் மக்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வார்கள்.  இந்த சிந்தனை உலகெங்கும் உள்ளவர்களிடையே நிலவக் கூடிய உறவைப் பற்றிய சித்திரத்தை நமக்கு அளிக்கிறது.

காந்திய சிந்தனையின் தன்மை கீழிருந்து மேலாகவும், அகக்காட்சியில் துவங்கி புறவயப்பட்ட உண்மையை நோக்கி விரிவதாகவும் இருக்கிறது.  காந்தியக் கனவை ஒரு தரிசனம் என்றே சொல்லலாம் - ஆனால் அதன் பயன்பாட்டை அறியக்கூடிய பயணம் இதுவரை ஆத்மார்த்தமாக முயற்சிக்கப்படவே இல்லை.  இருப்பினும் பஞ்சாயத்து ராஜ் சட்டம், தன்னார்வக் குழுக்கள் போன்றவை உற்சாகமளிக்கும் துவக்கங்களாக இருக்கின்றன.

காந்தி முழுக்க முழுக்க குடிமைச் சமூகத்தைச் சேர்ந்தவர், அதை அனைத்தினும் வலுவான அமைப்பாக அடையாளம் கண்டவர்:  உண்மையின் நடைமுறை செயல்வடிவமாக சத்யாகிரகத்தையும் பொது நலனுக்கான சேவையை சர்வோதய இயக்கமாகவும் வடிவமைத்தார் அவர்.  இவ்விரண்டும் குடிமைச் சமூகம் தன் ஆற்றலை உணரவும் மேம்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பளிப்பனவாக இருந்தன. அரசு அதிகாரத்தைக் குறைந்த அளவில் சார்ந்திருக்கும் குடிமைச் சமூகத்தை உருவாக்குதல் காந்தியின் லட்சியமாக இருந்தது.

---

"பின்நவீன காந்தியும் மற்ற கட்டுரைகளும்" என்ற லாயிட் ரூடால்பின் புத்தகத்தின் "பின்நவீனத்துவ காந்தி" என்ற அத்தியாயத்தின் இறுதிப் பத்தி காந்தியில் காணப்படும் பின்நவீனத்துவக் கூறுகளைப் பட்டியலிடுகிறது.  அதை இங்கு மொழிபெயர்த்து வைத்துக் கொள்வது பயனுள்ளதாக இருக்கலாம்:-

காந்தி போர் மற்றும் வன்முறையைக் குறித்த பின்நவீனக் கதையாடலை அதன் காலம் வருமுன்னரே வெளிப்படுத்தினார்- வன்முறை தவறானது, நம்மைச் சிறுமைப்படுத்துகிறது என்பது மட்டுமல்ல, அதற்கு முடிவில்லை,  அதைக் கையாள்பவனை அது அழிக்கிறது, வன்முறை ஒரு கோழைத்தனம் என்றார் காந்தி.

பால் வேற்றுமையைப் பற்றிப் பேசும்போது ஆண்மையும் பெண்மையும் உடலின் அடிப்படைப் பண்புகளல்ல, அவை தம்மியல்புகள் என்றார் அவர். மேலும் ஆண்கள் பெண்மையை ஏற்க வேண்டும் என்றார், பெண்மை ஆண்மையைவிட உயர்ந்தது என்று நம்பினார்.

தொழில்களைப் பேசும்போது, தொழில் வல்லுனர்களின் உன்னத நோக்கங்கள் எளிதில் திசைமாறிச் சீரழிந்து விடுகின்றன என்றார் காந்தி.  வழக்கறிஞர்கள் சுலபமாக பணம் சம்பாதிக்கும் ஆசையில் வேற்றுமையை வளர்க்கின்றனர்;  மருத்துவர்கள் நோயாளிகளை உயிரற்ற வஸ்துக்களாகக் கருதுகின்றனர், நோயற்ற சுகாதார வாழ்வுமுறையில் கவனம் செலுத்தாமல் நோயை குணப்படுத்துவது மட்டுமே தங்கள் தொழிலென்று நினைக்கிறார்கள் என்றார் காந்தி. 

உணவைப் பேசும்போது, எதை எவ்வளவு உண்கிறோம் என்பது நம் ஆரோக்கியம் மற்றும் உடல்நலத்தில் பெரும் தாக்கம் ஏற்படுத்துகிறது என்றார் அவர். 

வேற்றுமையைக் குறித்து பேசும்போது, அடையாளம் மற்றும் உண்மையின் எல்லைகளை வெளிப்புறம் விரித்து பிறருடன் சகோதரத்துவம் பாராட்டுவதால் அகிம்சை மற்றும் ஒற்றுமை வளர்ந்து நேயமான வழியில் புரட்சி நடைபெறுகிறது என்றார் காந்தி. அடையாளம் மற்றும் உண்மையின் எல்லைகளை உட்புறம் குறுக்கி அன்னியர்களை இனங்காண்பது வன்முறையை வளர்த்து, உட்பகையை ஊக்குவித்து இன அழிப்புக்கு இட்டுச் செல்கிறது என்றார் அவர்.

ஒற்றுமை, சமூக மூலதனம் , அன்பு - இவை அபரிதமான அளவில் உள்ளன என்பது மட்டுமல்லாமல் பயன்பாடு மிகும்போது மேலும் வளரக் கூடியவை என்றார்.

இவை அனைத்தையும்விட முக்கியமாக, அவரது பேச்சும் செயலும், உரையாடலும் செயலாக்கமும் அறிவியலின் ஒற்றைத் தன்மையிலிருந்து உண்மையை மீட்பதாக இருந்தது. அகவயப்பட்ட, உளமார்ந்த, காலாதீத உண்மைக்கான நியாயத்துக்கும் அது இயங்கக்கூடிய சுதந்திரத்த்துக்கும் மறு உருவம் கொடுத்தார் காந்தி.  தோற்றுக் கொண்டிருக்கும் நவீனத்துவத்தின் பாதையிலிருந்து விலகிச் செல்லக் கூடிய ஒரு பாதையை காந்தியின் பின்நவீனத்துவ குரலும் செயல் வழி மெய்த்தேட்டமும் நமக்களிக்கின்றன.

ரூடால்ப் விவரிக்கும் காந்தியின் பின்நவீனத்துவ வேர்கள் அருவ சிந்தனையின் முடிவுகள் அல்ல - காந்தி தனது பற்றற்ற நேர்மையின் வெளிச்சத்தில் சோதித்தறிந்த நடைமுறை உண்மைகள் அவை என்பதை நாம் எப்போதும் மறக்கக்கூடாது.

அர.சு.ராமையா  

No comments:

Post a Comment