Pages

Thursday, January 5, 2012

பின்நவீனத்துவ காந்தி-1


லாயிட் ருடால்ப் அமெரிக்காவின் சிகாகோ பலகலைகழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதார துறையில் பேராசிரியராக பணிபுரிந்து ஒய்வுப்பெற்றவர்.தெற்காசிய நாடுகளின் அரசியல் நடவடிக்கைகளை உற்று கவனித்து பல முக்கியமான கட்டுரைகளை எழுதி வருபவர் .அவருடைய மிக முக்கியமான கட்டுரை தொகுப்பு " போஸ்ட்மாடர்ன் காந்தி அண்ட் அதர் எஸ்செஸ் -காந்தி இன் தி வார்ல்ட் அண்ட் அட் ஹோம் "('Postmodern Gandhi and other essays - Gandhi in the World and at Home' by Lloyd L Rudolph and Susanne Hoeber Rudolph).இப்புத்தகத்தில் உள்ள முக்கிய அம்சங்களை தொட்டு தனது பார்வையை பதிவுசெய்கிறார் திரு.அர.சு.ராமையா .தொடர் கட்டுரைகளாக நமது தளத்தில் இது வெளிவர உள்ளது.
Lloyd Rudolph
 லாயிட் ருடால்ப் 

      -------------------------------------------------------



காந்தி பின்நவீனத்துவராக இருந்தாலென்ன,  முன்நவீனத்துவராக இருந்தாலென்ன?- நவீனத்துவராக இல்லாமலே இருக்கட்டுமே, பண்டிதர்கள் காந்தியைப் புரிந்து கொண்டு அவருக்குரிய இடத்தைத் தீர்மானிக்க இப்படிப்பட்ட பட்டிகள் பயன்படலாம்.  ஆனால், நமக்கு அதனால் ஆகப் போவது எதுவுமில்லை. 

இதைச் சொல்லும்போதே இப்படிப்பட்ட புத்தகங்களையோ இப்படிப்பட்ட சிந்தனைகளையோ நாம் நிராகரிக்க முற்படக்கூடாது.  இந்தப் பட்டிகளால் நமக்குப் பயனில்லை என்றாலும் இவை எவ்வளவுக்கு காந்திக்குப் பொருந்துகின்றன என்ற வாதங்கள் பலதரப்பட்டவை - இவை காந்தியை புது வெளிச்சத்தில் காட்டுகின்றன.  அவ்வகையில் இவற்றை வாசிப்பது நமக்கு அவசியமாகிறது.

எனவே, இந்தப் புத்தகத்தைப் பற்றி பேசும்போது,  நவீனத்துவம் பின்நவீனத்துவம் என்ற அடையாளங்களை நாம் பெரிய அளவில் பொருட்படுத்த வேண்டியதில்லை; அதே போல், இப்போது கல்வி வட்டத்தில் எழுதப்படும் புத்தகங்கள் அனைத்தும் உலக அளவிலான விவாதச் சூழலைக் கணக்கில் கொண்டு எழுதப்படுகின்றன - காந்தியை மேற்கத்தியர்கள் எப்படி புரிந்து கொள்கிறார்கள், அவர்களின் தேவைகள் என்ன என்பதையொட்டியே அறிவுலக வாதங்கள் அமைகின்றன.  சாதாரண இந்தியர்களான நம் விசாரம் வேறு,  துறைசார் சிந்தனையாளர்களின் கவலை வேறு. இதை எல்லாம் நாம் மனதில் வைத்துக் கொண்டுதான் புத்தகங்களில் நுழைய வேண்டியிருக்கிறது.

----

இன்றைய பதிவில் நாம் காந்தி உண்மையை எப்படி அணுகினார் என்று பார்க்கலாம். எது உண்மை, அதை அறியும் வழி என்ன, அதை எப்படி நடைமுறைப்படுத்துவது -  இந்த மூன்று விஷயங்களிலும் காந்தியின் அணுகுமுறை எப்படி இருந்தது?

அண்மையில் மறைந்த செக்கொஸ்லவேக்கிய சிந்தனையாளர் வக்லாவ் ஹவெல் 1992ல் கம்யூனிசத்தின் வீழ்ச்சியோடு நவீன நாகரிகம் முழுவதுமாக முடிவுக்கு வந்து விட்டது என்ற சொல்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணங்களில் முதன்மையானது இதுதான்: நவீன நாகரிகத்தின் அடிப்படை நம்பிக்கை, அறிவியலால் உண்மையை அறிய முடியும் என்பதும் அப்படி நாம் அறிவியலைக் கொண்டு அறியும் உண்மை முழுமையானதாகவும் அதைக் கொண்டு உலகில் அனைத்தையும் நம்மால் கட்டுக்குள் கொண்டு வந்து ஆட்சி செய்ய முடியும் என்பதும்தான். இதன் உச்சம் கம்யூனிச சிந்தனை- ரஷ்யாவின் வீழ்ச்சி,  அறிவியல் என்னும் ஒற்றை உண்மையின் குடைக்குள் உலகைக் கொண்டு வந்து விடலாம் என்ற நம்பிக்கையின் தோல்வியை நவீனத்துவத்தின் முடிவாய் ஹவெல் கருதுகிறார்- இனி அரசியல் "நடைமுறை அறமாக இருக்கும் (morality in practice)' என்று சொல்கிறார் அவர்.
 வக்லாவ் ஹவெல்  

காந்தியின் வாழ்க்கையே அந்த நடைமுறை அறம் எதுவாக இருக்கும் என்ற உண்மையை அறிய முனைவதாக இருந்திருக்கிறது.  காந்தி தன் அனைத்து நம்பிக்கைகளையும் செயல்பாடுகளையும் சத்திய சோதனைக்கு உட்படுத்தினார் - இதுதான் உண்மை என்று எதையும் நிறுவ அவர் முற்படவே இல்லை. திறந்த மனதுடன் தன் வாழ்க்கையை, தன் அரசியல் கொள்கை மற்றும் இயக்கத்தின் நடைமுறைகளை உண்மையின் வெளிச்சத்தில் விசாரித்து வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு சூழ்நிலைகளில் தான் காணும் விடைகளுக்கேற்ப அவற்றை மாற்றிக் கொண்டே இருந்தார்.

நவீனத்துவம் அறிவியலைக் கொண்டு அறியும் உண்மையே தனிச் சிறப்புடைய உண்மை என்று நம்பியது. உண்மையே கடவுள் என்று நம்பிய காந்தி, அந்த உண்மையைத் தான் அறிந்திருப்பதாக சொல்லிக் கொள்ளவேயில்லை. மாறாக தான் வாழ்நாளெல்லாம் அதைத் தேடுவதாகவே குறிப்பிடுகிறார்- ஒரு வைரத்தின் வெவ்வேறு முகங்களில் வெவ்வேறு வண்ணங்கள் வெளிப்படுவது போல் உண்மையின் வெவ்வேறு முகங்கள் வெவ்வேறு சூழ்நிலையில் வெவ்வேறு வடிவம் பெறுகின்றது என்ற சமண நம்பிக்கை அவரது ஆதாரக் கோட்பாடாக இருந்தது. ஆனால், முழு உண்மையை அறிய முடியாததால் குறைபட்ட உண்மையை நம்பி எதுவும் செய்ய முடியாது என்ற செயலற்ற நிலைப்பாட்டை அவர் ஏற்கவில்லை.

லட்சியத்துக்கும் எதார்த்தத்துக்கும் உள்ள உறவை காந்தி எப்படி புரிந்து கொள்கிறார் என்பது அவர் உண்மையை எப்படி அணுகுகிறார் என்பதை எளிமையாகப் புரிய வைப்பதாக இருக்கிறது: 'யூக்லிட்டின் ஜியோமெட்ரி கோடு அகலமே இல்லாதது... அதை யாரும் வரைந்ததில்லை... வரையவும் முடியாது.  இருப்பினும் இந்த லட்சியத்தை மனதில் வைத்துக் கொண்டு அதன் அடிப்படையில்தான் ஜியோமெட்ரியில் நம்மால் முன்னேற முடிந்திருக்கிறது. இந்த உண்மை அனைத்து லட்சியங்களுக்கும் பொருந்தும்," என்று சொல்கிறார் காந்தி.

பன்முகப்பட்டது உண்மை; அதில் தற்போது அறியப்படும் உண்மையே தனக்கு தெய்வம் என்று முழுமனதுடன் செயல்படுவது காந்தியின் இயல்பாக இருந்திருக்கிறது- "பூரண உண்மையை அறியாத வரை என்னாலறியக் கூடிய உண்மையையே நான் உறுதியாகக் கடைபிடிததாக வேண்டும்" என்று எழுதுகிறார் அவர்.

நாமறிந்த உண்மையின் வெளிச்சத்தில் நாம் வாழ்ந்தாக வேண்டும் - ஆனால், இந்த உண்மையின் மெய்ம்மையை நாம் உறுதி செய்து கொள்வது எப்படி என்ற கேள்வி எழுகிறது. இதற்கு காந்தியின் விடை, கீதையின் செய்தியாக இருக்கிறது- "பலனுக்கு ஆசைப்படாத இடத்தில் பொய்க்கும் வன்முறைக்கும் இடமில்லை.   தன் நாட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற வேட்கையின் பின்னணியே எந்த ஒரு பொய்க்கும் வன்முறைக்கும் காரணமாகிறது" என்று சொல்கிறார் காந்தி.  

அனைத்து செயல்களும் பாபத்தின் கறை படிந்தவையதாக இருக்கின்றன- காரணம், நாம் முழு உண்மையை உணர்ந்து எதையும் செய்வதில்லை. செயல்பட வேண்டும், ஆனால் அதன் வினைப்பயனைத் தப்புவதேனில் அது எப்படி சாத்தியமாகிறது? - விருப்பு வெறுப்பற்ற செயலே கீதையின் செய்தி; "உன் கடமையைச் செய், அதன் பலன்களை நாடாதே. விருப்பு வெறுப்பற்று செயலாற்று. எந்த லாபத்தையும் எதிர்பாராமல் பணியாற்று... செயல்படாதவன் வீழ்ச்சியடைவான். செயலின் பலனில் நாட்டத்தைத் தியாகம் செய்தவன் மேன்மையடைவான்"என்பது காந்தியின் செய்தி.

இது மட்டுமே உண்மை என்று எதையும் காந்தி முன்வைக்கவில்லை:  அதற்கு பல முகங்கள் இருப்பதை அவர் அறிந்திருந்தார். ஆனால் அறியப்பட்ட உண்மையின் முழுமையின்மை அவரது செயலை பாதிப்பதாக இல்லை:  விருப்பு வெறுப்பற்று செயலாற்றுதலே அவருக்குப் போதுமானதாக இருந்தது.  விரும்பிய முடிவைக் காண வேண்டும் என்ற நாட்டமின்றியிருத்தல், நோக்கத்தின் நேர்மை, உண்மையைப் போதுமான வெளிச்சத்தில் அறிய துணை செய்யும் என்ற நம்பிக்கையில் முழுமனதாகச் செயல்பட்டார்.  மாறும் சூழ்நிலையில் உண்மையின் இயல்பும் மாறக்கூடியது என்று உணர்ந்தவராய்த் தன் செயல்பாட்டில் நெகிழ்ச்சியைக் கடைபிடித்தார்.

லாயிட் ரூடால்ப் இவற்றைக் கொண்டு காந்தியின் பின்நவீனத்துவத்தை நிறுவுகிறார்: ஒற்றை உண்மையில் அவருக்கு நம்பிக்கை இருக்கவில்லை;  அதன் தற்காலிகத்தன்மையை அவர் அறிந்திருந்தார். அதன் சூழலில் பொருத்திப் பார்த்தே அதை அறிய முடியும் என்பதை அவர் தன் நடவடிக்கைகளில் நிகழ்த்திக் காட்டினார். இவற்றை ரூடால்ப் பின்நவீனத்துவத்தின் கூறுகளாகச் சொல்கிறார்.  

கீதையை ஒரு இறைவாக்காகக் கொள்ளாமல் கவிதையாகாவே பேசுகிறார் காந்தி- 'ஒரு கவிஞன் குறிப்பட்ட ஒரு உண்மையை உலகின் முன்வைப்பதைக் கொண்டு அவன் அதை முழுமையாக அறிந்ததாகவோ அந்த உண்மையின் அனைத்து விளைவுகளையும் கணித்து விட்டதாகவே சொல்ல முடியாது.  சாத்தியமென்று கொண்டாலும் அதை அவன் முழுமையாக வெளிப்படுத்த முடியும் என்று சொல்வதற்கில்லை.  இதுவே கவிதையின் மகத்துவம், கவிஞனின் மகோன்னதம்.  ஒரு கவிஞன் உணர்த்தக்கூடிய பொருள் எல்லையற்றது.  மனிதனைப் போல், மாபெரும் கவிதைகளின் பொருளும் வளர்ச்சியடைகின்றன. மொழிகளின் வரலாற்றை ஆய்வதன்மூலம் நாம் சொற்களின் பொருள் விரிவடைந்திருப்பதைக் காண்கிறோம்.  கீதைக்கும் இந்த உண்மை பொருந்தும்... கீதாசிரியர், சொற்களின் பொருளுக்கு விரிவு சேர்த்திருக்கிறார். நம்மையும் அவ்வகையில் தன்னைப் பின்பற்றக் கற்பித்திருக்கிறார்" என்று எழுதுகிறார் காந்தி.

இது காந்தியை முழுக்க முழுக்க பின்நவீனத்துவராகவே சித்தரிக்கிறது, இல்லையா? அவர் பழமையானவரல்ல- தான் வாழ்ந்த காலத்துக்கும் அப்பாற்பட்ட அறிவு கொண்டவர். இன்றைக்கும் புதியவர். "இன்னும் நூறாண்டுகளுக்காவது தீமையை நன்மையென்றும் நன்மையை தீமையென்றும் நம்புவதாக நம்மிடமும் பிறரிடம் நாம் நடித்தாக வேண்டும், ஏனெனில் தீமை பயன்பாட்டு லாபம் கொண்டதாக இருக்கிறது, நன்மை பயனற்றதாக இருக்கிறது," என்று கெய்னிஸ் போன்ற பொருளாதார மேதைகள் நம்பிய நாட்களில்,  பயன்பாடு நம் செயல்களின் ஆதார அடிப்படையாக இருக்க முடியாது , மாறாக பயனில் நாட்டமற்றிருத்தலே உண்மையில் நம்மை நிலைநிறுத்துவதாக இருக்கும் என்று சொன்னார் காந்தி. அவரது அறம் சிந்தனையால் அறியப்படும் தன்மை கொண்டதல்ல, அது நம் செயல்களைக் கொண்டு சோதித்து அறியப்படுவது.

அதற்காக காந்தியின் உண்மை அவரது நம்பிக்கைகளின் அடிப்படையில் மட்டும் தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்று சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் அது சந்தர்ப்பவாதத்துக்கு மிக அருகில் இருப்பதாக அமையும்.  புலால் உண்ணக்கூடாது என்று அவர் தன் தாய்க்குக் கொடுத்த வாக்கை, எது புலால், என்ற கேள்வியைக் கொண்டு விருப்பத்துக்கு ஏற்றபடி அவர் வளைத்துக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால், தன் தாய் எதை புலால் என்று நம்பினாரோ, அதன் அடிப்படையில்தான் புலால் உண்ணாமையைக் கடைபிடிக்கக் வேண்டும் என்ற தெளிவு அவருக்கு இருந்தது.  

நேர்மையே காந்தியத் தேடலின் அடிப்படை என்று சொல்லலாம். அவரது சத்திய சோதனை இந்த நேர்மையின் வெளிச்சத்தில்தான் நிகழ்த்தப்பட்டது.  அனைவருக்கும் பொருந்தக்கூடிய பொதுப் பயன்பாட்டுடைய புறவயமான அறிவியல் உண்மை நவீனத்துவத்தின் அடையாளமாக இருந்தால், பன்முகப்பட்ட, சூழல்களுக்கு மாறும்,  விருப்பு வெறுப்புகளைக் களைந்து கண்டறியப்பட வேண்டியதாக காந்தியின் உண்மை இருந்தது.  அறிவியலின் முடிவுகளில் உறுதியான நம்பிக்கை நவீனத்துவத்தின் முகமாக இருந்தால், தேடலின் இடையறாத கேள்விகள் காந்தியின் நடைமுறையாக இருந்தது. கோட்பாட்டு அடிப்படையில் நவீனத்துவ அரசியல் செயல்பட்டால், காந்தியின் அரசியல் அறத்தை உணரும் நடைமுறை இயக்கமாக இருந்தது. 

காந்தி பின் நவீனத்துவரா இல்லையா என்ற கேள்வியைவிட, நமக்கு, நாம் இருக்கும் சூழலில் எது காந்திய உண்மை, அதை அறியும் வழியும் செயல்பாடும் என்ன என்று அறிவதே அவசியமாக இருக்கிறது.

அர.சு.ராமையா 

No comments:

Post a Comment