போலிகளை ஒரு இனமாக உருவாக்கும் எந்த நாடும் ஒரு தேசியமாக பரிணமிக்க முடியாது - காந்தி.
இன்றளவும் இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் கல்விமுறைகளின் பால் ஆழமான விமரிசனங்கள் முன்வைக்கப்படுகிறது.ஆங்கிலேய அதிகாரப் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட இந்தியா , அவர்களது கல்வி மற்றும் கலாச்சார தூண்டிலில் சிக்கி சிதைகிறது.
ஆங்கில கல்வியையும் , ஆங்கில அரசாங்கத்தில் ஒரு கௌரவமான பணியும் பெரும் மதிப்பாக கருதப்பட்ட நாட்களிலேயே காந்தி அளவிற்கு ஆங்கிலேய கல்வி முறைகளை எதிர்த்தவர்கள் எவரும் இல்லை .சுதந்திரத்தை பற்றியும் சுயராஜ்ஜியத்தை பற்றியும் பேசுவது கூட ஆங்கிலத்தில் பேசவேண்டிய அவலநிலையை எண்ணி வருந்தினார் காந்தி."இன்றைய ஆரம்ப கல்வி முறை வீணானது மட்டுமல்ல மிக ஆபத்தானதும் கூட "என்றார். ஆங்கிலேய நாகரீகத்தை அப்பட்டமாக பின்பற்றுவதன் மூலம் நாம் அவர்களுக்கு காலாக்காலத்திற்கும் காலனீய அடிமையாக வாழ வழிவகை செய்துக்கொள்கிறோம் என்றார்.
"இன்று கல்வி கற்பது என்பதே ஆங்கிலம் கற்பது தான் எனும் சூழல் தான் நிலவுகிறது,உண்மையான சிக்கல் என்னவென்றால் , நம் மக்களுக்கு கல்வி என்றால் என்னவென்றே புரியவில்லை .பங்கு சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ள பங்குகளை மதிப்பீடு செய்வது போலோ, நிலத்தை மதிப்பீடு செய்வதை போலோ நாம் கல்வியையும் மதிப்பீடு செய்கிறோம்.மாணவன் மேலும் பணம் பன்ன என்ன வேண்டுமோ அதை வழங்குவதே நாம் கல்வி என்கிறோம்" என்று கடுமையாக குரலுயர்த்துகிறார் காந்தி .
காந்தி கடும் விமரிசனங்களை மட்டும் முன்வைக்கவில்லை , அதற்கு மாற்றாக சில ஆக்கப்பூர்வ வழிமுறைகளையும் முன்வைக்கிறார்.காந்தி கல்வியை பற்றி வெவ்வேறு தருணங்களில் பேசியதை , எழுதியதை பரதன் குமரப்பா இரண்டு சிறு புத்தகங்களாக 1950 களில் தொகுத்து வெளியிட்டுள்ளார் ( basic education, towards new education).மேற்குலக நாகரீகத்தை பற்றி அவரிடம் ஒரு தருணத்தில் ஓர் பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பிய பொழுது " அது ஒரு நல்ல யோசனை " என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார் காந்தி.
காந்தி எதிர்த்த காலனீய கல்விமுறை மற்றும் அதற்கு மாற்றாக அவர் முன்வைத்த புதிய கல்விகொள்கைகளை அவரது ஒட்டுமொத்த வாழ்க்கை பார்வையை அறிந்துகொண்டு அதை ஒட்டி புரிந்துகொள்வதே சரியான முறையாகும். காந்தி வாழ்ந்த காலத்தில் வலுவாக காலூன்றிய எந்திரமயமாக்களை அவர் எதிர்த்தார்.தேவைக்கு மேல் உற்பத்தியை சுயநல போக்குடன் பெருக்குவதே பொருளாதார ஏற்ற தாழ்வுகளுக்கு காரணம் என்று நம்பினார்.தொழில்மயமாக்களும், எந்திரமயமாக்களும் மக்களின் வாழ்வுகளை உறிஞ்சி அவர்களை இயற்கையிலிருந்தும் , தங்களது இயல்பான வாழ்க்கை முறைகளிலிருந்தும் அன்னியப்படுத்துகின்றது என்றார்.மேலும் மனித உழைப்புக்கு மாற்றாக பெரும் எந்திரங்களை உற்பத்திக்கு பயன்படுத்துவதன் மூலம், தொழிலாளி தனது உழைப்பிலிருந்தும் அவனது உறபத்தியிளிருந்தும் அன்னியமாகிறான் .மனிதனுக்கு இருக்கும் இதயம் எந்திரங்களுக்கு இல்லை. அறிவியலையோ அதன் வளர்ச்சிகளையோ காந்தி முழுமூச்சாக நிராகரிக்கவும் இல்லை, மூர்க்கமாக எதிர்க்கவும் இல்லை, ஆனால் அறிவியலின் பெயரால் நடந்தேறும் மானுட சீரழிவுகளை அவர் கடுமையாக எதிர்த்தார்.ஆங்கிலேய கல்வி முறைகள் அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றும் குமாஸ்தாக்களை உருவாக்குமே தவிர வேறெதுவும் செய்திடாது என்று முழங்கினார்.
"பாடப்புத்தகங்கள் மூலமே அனைத்தையும் கற்பித்துவிடலாம் எனில் ஆசிரியர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பற்று போய்விடும்.பாடபுத்தகங்களை மட்டும் கற்பிக்கும் ஓர் ஆசிரியர் , அவரது மாணவர்களிடத்தில் சுயசிந்தனையை விதைக்க முடியாது " என்றும் , மேலும் ஒரு நல்ல கல்வியென்பது ஒரு குழந்தை அல்லது மனிதனின் உடல், மனம் மற்றும் ஆன்மா உட்பட அனைத்து தளங்களிலும் அவனிடத்தில் உறைந்துள்ள ஆக சிறந்த பண்புகளை வெளிக்கொணர வேண்டும் என்று அவர் கருதினார்.கல்வி என்பது அடித்தட்டு விவசாயிக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.ஆங்கில மொழி கல்வியை கைவிட்டு பிராந்திய மொழிகளில் பாடம் நடத்துவதே சிறந்தது என்றும் அதை உடனடியாக அமுல் படுத்தவேண்டும் என்றார்.அதனால் எழும் சிக்கல்களை பற்றி கேட்கையில் " தினம் தினம் குவியும் கிரிமினல் குப்பைகளை காட்டிலும் , அதனால் விளையும் தற்காலிக குழப்பம் எத்தனையோ மேல் " என்று பதிலளித்தார்.
"பள்ளி என்பது வீட்டு சூழலின் விஸ்தரிப்பாகவே இருக்க வேண்டும்.மிக சிறந்த விளைவுகளை ஏற்படுத்த பள்ளியிலும் வீட்டிலும் குழந்தைகளுக்கு கிடைக்கும் மனப்பதிவுகளில் ஓர் ஒத்திசைவு அவசியம் வேண்டும்.வேற்று மொழிகளில் பயிலும்போது இந்த ஒத்திசைவு உடைபடுகிறது.இப்படி உடைப்பவர்கள், அவர்களின் நோக்கம் நேர்மையானதாக இருந்தாலும் கூட, அவர்கள் மக்களின் எதிரிகளே" என்று தாய்மொழி கல்வியின் தேவையை பற்றி காந்தி வலியுறுத்துகிறார் .
காந்தியின் கல்வி பரிசோதனைகள் அவர் தென்னாப்ரிக்காவில் தால்ஸ்தாய் பண்ணையில் வாழும் காலத்திலிருந்தே தொடங்குகிறது.அங்கு செருப்பு தைக்க கல்லேன்பாக் உதவியுடன் பயில்கிறார்.வலிய குழந்தைகள் மேல் திணிக்கப்படும் தண்டனைகள் அவர்களின் தவறுகளை திருத்தாது , மாறாக அவர்களை மேலும் கடினமாக்கும் என்பதே தனது அனுபவம் என்கிறார்.அவ்வபொழுது ஹரிஜன், யங் இந்தியா போன்ற பத்திரிக்கைகளின் வாயிலாகவும் கூட்டங்களின் சொற்பொழிவின் வழியாகவும் தனது கல்வி பார்வையை காந்தி முன்வைத்தாலும், முதன்முதலில் தெளிவாக கல்வி முறைமைகளை பற்றி தான் கண்ட கனவுகளை 1937 ஆம் ஆண்டில் நடைபெற்ற வார்தா மாநாட்டில் தான் முழுமையாக முன்வைக்கிறார்.பிற்காலங்களில் அடிப்படை கல்வி (basic education)என்றும் ,நயி தாலிம் என்று அறியப்பட்ட கல்விமுறையின் அடிப்படை அங்கு தான் உருவானது.
ஜமன்லால் பஜாஜ் நடத்தி வந்த மார்வாரி உயர்நிலை பள்ளியின் வெள்ளிவிழா ஆண்டு விழாவிற்காக அக்டோபர் 22, 23 காந்தி வார்தாவிற்கு வருகை புரிந்தார்.காந்தியின் கல்வி திட்டங்களுக்கு ஒரு வடிவம் கொடுப்பதே நோக்கமாகும்.காந்தி அக்கூட்டத்தில் தனது நான்கு அம்ச தீர்மானத்தை முன்மொழிந்தார்
1.இன்றைய கல்விமுறை நாட்டின் தேவையை பூர்த்தி செய்யவில்லை
2. அடிப்படை ஆரம்ப கல்வி என்பது குறைந்தது ஏழுவருடங்களுக்கு வழங்க வேண்டும்.அதில் மெட்ரிக்குலேஷன் தரத்திற்கு பொது அறிவு இடம்பெற வேண்டும், ஆங்கிலம் குறைவாகவும், ஏதேனும் ஒரு கைத்தொழில் கட்டாயமாக பயிற்ருவிக்கப்பட வேண்டும்.
3.மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை கணக்கில் கொண்டு- அவர்களுக்கு வருமானம் ஈட்டும் கைத்தொழில் ஒன்றை பயிற்ருவிக்க வேண்டும்.
4.உயர்கல்வி தனியார் பொறுப்பில் இருக்க வேண்டும்.நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப தொழில்நுட்பம், கலை , அறிவியல் ஆகியவற்றை பயிற்ருவிக்க வேண்டும்.
நாடெங்கிலுமிருந்து வந்து கலந்துகொண்ட பல்வேறு முக்கிய கல்வியாளர்களின் மாநாடு அது.அதன் இறுதியில், ஜாகிர் ஹுசைன் தலைமையிலான கமிட்டி நான்கு தீர்மானங்களை நிறைவேற்றியது.
1.இலவச மற்றும் கட்டாய அடிப்படை கல்வி ஏழு ஆண்டுகளுக்கு அனைவருக்கும் வழங்கப்பாட வேண்டும்.
2.தாய்மொழி வழி கல்வியே செயல்படுத்தவேண்டும்.
3.ஆக்கப்பூர்வ மானுட உழைப்பை கோரும் வண்ணம் கல்வி முறைமைகள் அமைய வேண்டும்.
4.இக்கல்விமுறையின் மூலம் நாளடைவில் ஆசிரியர்களின் ஊதிய செலவையும் உள்ளடக்க வேண்டும்.
காந்தி கல்வியோடு இணைத்து ஏதேனும் ஒரு சிறு கைத்தொழிலை கற்றுக்கொள்வதை முன்வைக்கவில்லை, மாறாக கல்வி முறையே தொழில் சார்ந்து,அதை மைய்யமாக கொண்டு இருக்கவேண்டும் என்று தெளிவாகவே முன்வைக்கிறார் .காந்திக்கு சுயசார்பு மற்றும் தன்னிறைவின் மேல் அபார நாட்டமுண்டு .இந்தியாவை பற்றிய அவரது அனைத்து கனவுகளின் அடியிலும் இவை ஓடிக்கொண்டே இருக்கும்.இந்திய கிராமங்கள் அனைத்தையம் தன்னிறைவடைந்த சிறு சிறு குடியரசுகளாகவே அவர் கண்டார்.அவர்களுக்கு தேவையான உணவு, உடை, நீராதாரம் ஆகியவற்றை அவர்களே உருவாக்கவேண்டும் , அதன்மூலம் நிறைவான பொருளாதராத்தை உருவாக்க முடியும் என்று நம்பினார்.அதே சமயம் தேசத்தின் இதர உறுப்புகளின் பால் அக்கரைகொண்டும் இருக்கும் நெகிழ்வான தேசியத்தை கனவுக்கண்டார் .பரதன் குமரப்பா அவரது புத்தகத்தின் முன்னுரையில் " கிராமீய பொருளாதாரத்தை சீராக்கி அதற்கு உரிய கல்வியை ஏற்படுத்துவதே நாட்டை அழிவிலிருந்து காக்க ஒரே வழி என்று அவர் நம்பினார், கிராமப்புற தொழில்கள் சார்ந்தே மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் " என்றார்.
பள்ளிக்கூட நிர்வாகங்களில் அரசு தலையிடுவதை காந்தி விரும்பவில்லை.மாணவர்கள் கற்ற தொழில்கள் மூலம் உருவாக்கும் பொருட்களை கொண்டு ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியும் என்பதே அவரது திட்டமாக இருந்தது.பள்ளிகள் அனைத்தும் இப்படி தன்னிறைவு அடைய வேண்டும் என்று எண்ணினார் .தொழிலை கற்று தேறுவதன் மூலம் யாருக்கும் அடிமையாக இல்லாமல் ஒவ்வொரு குடிமகனும் சுயமாக எழுந்து நிற்கமுடியும், அதற்கு அவனுக்கு கல்வி முறை நம்பிக்கையும் ஊக்கத்தையும் அளிக்க வேண்டும்.காந்தி கனவு கண்ட சமூக அமைப்பு குறுகி விரியும், மேல் -கீழ் பிரமிட் அமைப்பு அல்ல,அத்தகைய சமூக உருவகம் ஏற்ற தாழ்வுகளின் தொகுப்பு.காந்தி சமூகத்தை கடலில் எழும் வட்ட சிற்றலைகளாக (oceanic circles)உருவகப்படுத்தினார் ,அதன் மையத்தில் ஒரு தனிமனிதன் எப்பொழுதும் அதைவிட பெரிய வட்டமான தனது கிராமத்திற்காக தன்னை தொலைக்க தயாராய் இருப்பான், கிராமம்- அதைவிட பெரிய வட்டத்தில் தன்னை கரைத்துகொள்ளும், இப்படியே இது விரிந்து பிரம்மாண்டமாக தனிமனிதர்களிலாலான ஒற்றை உயிராய் உருபெறும், ஒரு பொழுதும் அகந்தை இல்லாமல், இருப்பதை பகிர்ந்து கொண்டு, தான் ப்ரம்மாண்ட கடலின் ஒரு சிறு துளியென்று உணர்ந்த ஒரு இயல்பான கம்பீரம் நிலைபெறும்.எத்தனை மகத்தான கனவிது?
மாணவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது, மாணவர்களின் தேவை மற்றும் திறனுக்கேற்ப அவனுக்கு உரியதை தேர்வு செய்து சரியான அளவில் கொடுக்க ஆசிரியர்களால் முடியும் .நவீன குருகுல கல்வி போல தென்படும் இம்முறை விமரிசனங்களுக்கு தப்பவில்லை.இதை ஒரு இந்துத்வ சதி என்று பலரும் நிராகரித்தனர்.மதங்களின் பால் அபார பற்றுடைய காந்தி, அவர் முன்வைத்த இந்த கல்விமுறையில் மத ரீதியான பாடங்களை சேர்க்க அனுமதிக்கவில்லை என்பது முக்கியமானது.அப்படி வைக்கப்படும் பாடம் புரிதலுக்கு மாறாக பிளவையே ஏற்படுத்தும் என்று காந்தி கருதினார்! மேலும் அவரது கல்விமுறை சமூக அமைதியை நிலைநாட்டும் என்றார், ஏனெனில் அவை அனைவருக்கும் பொதுவானது .நடைமுறைக்கு ஒத்துவரும் ஒரே மதமான சுய சார்பு எனும் மதமே தனது கல்வி முன்வைக்கும் என்றார் காந்தியின் அடிப்படை கல்வி திட்டத்தில் தொழில் அறிவு மட்டுமில்லாமல் அடிப்படை சுகாதாரம்,பொது அறிவு,கணிதம் ,ஆரோகியமான உணவுமுறை ,உடற்பயிற்சி போன்றவற்றை உள்ளடக்கியது.
ஆங்கிலேய கல்வியை அவர் கடுமையாக எதிர்தததை கொண்டு அவரை ஒரு மேற்குலக நாகரீகத்தை வெறுக்கும் வெறியர் என்றோ, இந்திய தொன்மையை மீட்டு எடுக்க வந்த போராளி என்றோ புரிந்துகொண்டால் ,அப்புரிதல் மிகப்பிழையானது.காந்தி என்றுமே ஒரு நடைமுறை லட்சியவாதி, மக்களோடு பழகி அவர்களது தேவைகளையும் தீர்வுகளையும் புரிந்துகொள்பவர்.அன்றைய சூழலில் கல்வியின் மோஸ்தர்தனம் எளிய மனிதர்களிடத்திளிருந்து அவர்களை அன்னியப்படுத்தியதை அவர் உணர்ந்தார்.கல்வி அனைவருக்கும் சமத்துவத்தை நிலைநாட்டவேண்டும் .இன்றைய சூழலை கொண்டு பார்க்கையில் பொருந்தா வாதம் போல் தோன்றலாம், ஆனால் அன்றைய யதார்த்தையும், பொருளாதார சூழலையும் புரிந்துகொண்டவர் காந்தி.குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதன் மூலம் குடும்ப வருமானம் குறைவதாக கிராமப்புறங்களில் எண்ணுவதால் அதை ஈடுகட்ட காந்தி முன்வைத்த திட்டமிது.

காந்தி முன்வைத்த இத்திட்டத்திற்கு சுதந்திரத்திற்கு முன்பே தேசிய உற்பத்தி மேம்பாட்டு ஆணையம் தனது எதிர்ப்பை தெரிவித்தது.பாம்பே நகரத்தை மட்டும் கணக்கில் கொண்டு எடுக்கப்பட்ட ஓர் சர்வேயை கொண்டு காந்தி முன்வைத்த கல்விமுறையை தற்பொழுதைய சூழலில் அவசியமற்றது என்று நிராகரித்தது.குழந்தைகளின் உழைப்பை ஊக்குவிக்கும் தொழில் சார்ந்த கல்விமுறைக்கு கடும் எதிர்ப்பை அக்குழு தெரிவித்தது, ஒரு விதத்தில் அரசின் பங்களிப்பு இல்லாத தன்னிறைவான பள்ளிகள் என்பது குழந்தை தொழிலாளிகளை ஊக்குவிப்பது போலாகும் என்று தனது முக்கிய குற்றசாட்டை அது முன்வைத்தது.மேலும் தொழில் நேர்த்திகளை சிறுவயதிலேயே அறிமுகப்படுவது அவர்களுக்கு பெரும் சுமையாக இருக்கும், மற்ற பாடங்கள் அனைத்தும் அதை ஒட்டி நடத்தப்பட்டால் அதன் மூலம் கிடைக்கும் அறிவு மிக மேம்போக்கானதாக இருக்கும்.
காந்தி ஆங்கிலேய மற்றும் மேற்குலக கல்விமுறைகளின் மீது சுமத்திய முக்கியமான குற்றசாட்டு , அது வன்முறையில் கட்டி எழுப்பப்பட்ட நாகரீகம், அதனால் அது முன்வைக்கும் கல்விமுறையும் அதையே போதிக்கும் என்பதே.அதற்கு மாற்றாக தனது கல்விமுறை அன்பையும், அகிம்சையையும் அதன் உள்ளீடாக கொண்டது என்றார் .காந்தி முன்வைத்த கல்விமுறையின் முக்கிய அம்சங்களை எட்டு புள்ளிகளாக தொகுக்கலாம் .
1.கல்வி என்பது ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும், அது செயல்திறனை ஊக்குவிக்க வேண்டும்.
2.கைத்தொழில் மூலம் கல்வி கற்பிக்கப்பட வேண்டும், வெறும் புத்தகங்களும் பாடங்களும் மட்டும் போதாது.
3.நல்ல கல்வியின் அடிநாதம் உயர்ந்த பண்புகள் கூடிய பொறுப்புள்ள குடிமகனை உருவாக்குவதே
4.கல்வி தற்சார்புடையதாக இருத்தல் வேண்டும்.கூடுமானவரை மாணவர்கள் அவர்களது கல்வி செலவை அவர்களே ஏற்க வேண்டும்.
5.கல்வி அகிம்சையை அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும்.சமூக ஒற்றுமையை பேணுவதாக இருக்க வேண்டும்.
6.தாய்மொழி வழி கல்வி கற்பிக்கப்பட வேண்டும்.
7.ஆரம்ப கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் ஏழு வருடங்களுக்கு கட்டாயம் ஆக்கப்பட வேண்டும்.அது இலவசமாக வழங்கப்பட வேண்டும்.
8.கல்விக்கான வரையறைகள் அனைத்தையும்- இந்திய கிராமப்புற மக்களை மனதில் வைத்துக்கொண்டு தீர்மானம் செய்யவேண்டும்.கல்வி ,மேட்டிமைவாதிகளின் சொத்தாக அவர்களை மட்டும் கணக்கில் கொண்டு தீர்மானிக்கப்பட கூடாது.
காந்தி எதிர்த்த கல்வியின் அம்சங்கள் இன்றும் அப்படியே தான் இருக்கிறது.மாணவர்களை கசக்கி பிழிந்து அவர்களது இளமை பருவத்தை முழுவதும் விழுங்கி விடும் கல்விமுறைகள்.காந்தியின் மற்ற எத்தனையோ கனவுகள் சுதந்திர இந்தியாவில் உதிர்ந்தது போல் இதுவும் மெல்ல உதிர்ந்தது.அரசாங்கத்தின் ஆர்வமின்மை, மக்களின் அவநம்பிக்கை , ஆசிரியர்களின் அக்கறையின்மை என்று எத்தனையோ காரணங்கள்.இன்றளவிலும் காந்தி நம் கல்விமுறைகளில் கண்ட அதே ஓட்டைகளை எதிர்த்தே நாம் போராட வேண்டியது உண்மையில் ஒரு முரண் நகை தான்.
தொடர்புடைய சுட்டிகள் -(இந்த சுட்டிகளை மூலமாக கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது )
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
-சுகி
குழந்தைகளுக்கான ஒரு கோடை விடுமுறை வகுப்பில்,"பால் எங்கிருந்து,
ReplyDeleteஎவ்வாறு பெறப்படுகிறது?"என்ற கேள்விக்கு,சென்னையிலேயே பிறந்து வளர்ந்த ஒரு சிறுவன், "மாதவரம் பண்ணயிலிருந்து, வேன் மூலம் பெறப்படுகிறது"
என்றான்.அவன் கூறியதில் தவறேதும் இல்லை.
"ஒரு பயணிகள் ரயில் பெட்டியின் சன்னல் கதவுகளைத் தூக்கவோ, கீழிறக்கவோ அறிந்திராத, தொழில் அறிமுகமே இல்லாத ஒரு தலைமுறை உருவாகி வருகிறது"என்றார் ராஜாஜி. தங்கள் தொழிலில் ஓர் உதவும் கரமாகப் பெற்றோர் குழந்தைகளைக் கருதுவதால் பள்ளிக்கு அனுப்புவதில்லை என்பதை கூர்ந்து கவனித்து 'ஒரு 3 மணி நேரம் அனுப்பினால் போதுமானது;மீதி நேரம் உங்கள் தொழிலுக்கு அவர்கள் பயன்படட்டும்' என்ற அபிப்பிராயத்தைச் சொல்லப் போய்தான் 'குலக் கல்விக்குத் திட்டம் இடுகிறார்' என்ற அவப்பெயரை வாங்கிக் கொண்டு விலகினார் ராஜாஜி!
சுனில்,
ReplyDeleteநல்ல கட்டுரை. காந்தி இக்கருத்துக்களை பாரம்பரிய இந்திய கல்விமுறைகளிலிருந்து எடுத்தாண்டிருக்கிறார். குறிப்பாக கல்வியே சுயதொழில் சார்ந்து இருக்க வேண்டும் என்பது தற்போது நடைமுறைக்கு மிக மிக அவசியமான தேவை.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.