காந்தியைத் தேடி 2011 கட்டுரை போட்டிகளில் பங்கு பெற்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் வித்யாலயா (ஆண்கள் ) பள்ளியில் பதினோராம் வகுப்பு பயிலும் மாணவர் திரு.சிவச்சந்திரன் அவர்களின் கட்டுரை முதல் பரிசு பெற்றுள்ளது. அவருக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.காந்தியின் கொள்கைகள் காந்தியை காட்டிலும் பழமையானது என்பதை உணர்ந்துள்ளார். காந்தியின் உளவியல் வெற்றியை பற்றி இவர் ஒருவரே கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.காந்தி எனும் பன்முக ஆளுமையின் பல்வேறு கூறுகளின் இடையே இருக்கக்கூடிய அசாத்திய ஒத்திசைவு ஆச்சர்யமானது.அதற்கு முக்கிய காரணம் அவர் அவரது மனதின் மேல் கொண்ட ஆளுகையே.இவ்வரிகளுக்கே பரிசை வழங்கலாம் "காந்தியின் கொள்கைகள் நம் நாட்டில் ஒரு மூலையில் உள்ள பள்ளத்தில் தேங்கியிருக்கும் நீரைப்போல் உள்ளது. ஆனால் காந்தியம் ஒரு கடல் , அது பரந்து விரிந்து உலகெங்கும் பரவ வேண்டும்".
இன்றைய சூழலில் காந்தியம்
காந்தியடிகள் தம் வாழ்வில் பின்பற்றிய கொள்கைகளும், அகிம்சையும் இன்று நம்மால் காந்தியக் கொள்கை என அழைக்கப்படுகிறது. காந்தி தன் வாழ்வல் எந்த புதிய கொள்கைகளையும் பின்பற்றிவிடவில்லை. நாம் அவசியம் பின்பற்ற வேண்டிய , பின்பற்ற மறந்த கொள்கைகளை தான் தன் வாழ்வில் கடைபிடித்து காட்டியுள்ளார் , நமக்கும் நினைவூட்டியுள்ளார் .
நாம் இருக்கும் சூழ்நிலைக்கு காந்தியக் கொள்கைகளை கடைபிடிப்பது மிகக் கடினம் என்பது மக்களிடையே உள்ள கருது.
" காந்தி உண்மையை பேசுவதை தவறாமல் கடைபிடித்தார், நீங்களும் உண்மையை மட்டும் பேசுங்கள்" என்று பிறரிடம் கூறினால் அவர்கள் உண்மையை மட்டும் பேசுவது முடியாத காரியம் என்று பதிலளிக்கிறார்கள் .
காந்தி உண்மையை மட்டும் பேசுங்கள் என்று கூறியுள்ளார் என்றாலும் நீதிமன்றத்தில் சில நேரங்களில் நிரபராதிகளை காப்பாற்ற பொய் கூறவேண்டிய நிலை வருகிறது.
காந்தி முதன்முதலில் வெற்றிகொண்டது அவரது மனதைத்தான்.உளவியல் ரீதியாக நம் மனம் ஒரு குரங்கு போன்றது, அது பல இடங்களில் தாவும்.அத்தகய மனதை அடக்கி மன அடக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்தார்.இதைத்தான் அவர் நம்மிடம் மூன்று குரங்கு பொம்மைகளை காட்டி " கெட்டதை பேசாதே,கெட்டதை பார்க்காதே, கெட்டதை கேளாதே " என்று கூறியுள்ளார். ஆனால் இன்றைய உலகின் நவீன தொழில்நுட்பம், இணைய தள சேவையை பலர் தனது இச்சைகளுக்காக தவறாக பயன்படுத்துகிறார்கள், பிறகு வருந்துகிறார்கள்.
காந்தி எப்போதும் தம் கடமையை சரியாக செய்ய வேண்டும் என்ற கொள்கை உடையவர் ஆனால், இன்று நம் நாட்டில் பல அதிகாரிகள் தம் கடமையை சரியாக செய்வதில்லை. மேலோரிடமும், கீழோரிடமும் லஞ்சம் வாங்குகிறார்கள் .பலர் கோடிக் கணக்கில் வரி பணம் கட்டாமல் ஏமாற்றுகிறார்கள், ஊழல் செய்கிறார்கள்.இத்தனையும் ஏன் செய்கிறோம்? என்று கூட அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை.லஞ்சம் வாங்காமல் தன் கடமையை சரியாக செய்தால் அவர்களுக்கு புகழும் மரியாதையும் கிடைக்குமே.
ஒருமுறை காந்தியும் அவரது உதவியாளர் மகாதேவ் தேசாயும் ,பிற நண்பர்களும் கத்தியவார் நகரில் நடக்கும் மாநாட்டுக்கு சென்று கொண்டிருந்தார். இரயிலில் பயணித்து கொண்டிருந்த காந்தி அவரது உதவியாளரிடம் " நீ எத்தனை பயணச்சீட்டு வாங்கினாய் ?" என்று கேட்டார் , அவர் அவர்களுடன் வந்தவர்களுக்கு அதிகமாகவே பயணச்சீட்டு வாங்கியிருந்தார்.இதையறிந்த காந்தி "ஏன் அதிகமாக சீட்டு வாங்கினாய் என்று கேட்டார் அவர் " "மோர்பி நகரில் உள்ள நண்பர்கள் வரவில்லை , அவர்களும் நமக்கு தகவல் அளிக்கவில்லை " என்று கூறினார். காந்தி உடனே , தான் அவர்களிடம் சரியாக விசாரிக்காமல் விட்டதால் மக்கள் பணம் வீணாகி போய்விட்டதே என்று எண்ணி வருந்தினார்.
ஆனால் இன்று பல அரசியல்வாதிகள், அதிகாரிகள் மக்கள் பணத்தை சுருட்டி தமக்காகவும் தம் குடும்பத்திற்காகவும் ஆடம்பர செலவு செய்கின்றனர். ஆனால் காந்தியிடம் இறுதி வரை இருந்த சொத்துக்கள் என்ன தெரியுமா ? நூற்கும் ராட்டை , குவளை , கண்ணாடி, ஒரு கடிகாரம் , ஆறு கதர் வேட்டிகள் இவையே.
காந்தி கடைபிடித்த எளிமையை நம்மாலும் கடைபிடிக்க முடியும், ஆனால் பலர் பணத்தாசையால் அளவுக்கு மீறி பணத்தை பதுக்கிவைக்கின்றனர்.
இத்தகைய அநியாயங்கள் தன் கண்முன்னே நடந்தாலும் அதை சட்டப்பூர்வமாக தட்டி கேட்க மக்களிடம் பொதுநல உணர்வு குறைவாக உள்ளது.தன் வீட்டெதிரே குப்பைகள் குவிந்து கிடக்கும் அவற்றை சுத்தம் செய்யும் எண்ணம் நம்மிடம் இல்லை. பாதாள சாக்கடை மூடி திறந்து கிடக்கும் அதை மூட நமக்கு எண்ணம் வருவதில்லை.
"காந்தி சட்டத்தின் முன் அனைவரும் சமம் " என்ற கொள்கையில் உறுதியானவர்.இக்கொள்கையே நம் நாட்டில் காந்தியம் அழியவில்லை என்பதற்கு சான்றாக உள்ளது.இன்று நம் நாட்டில் முதல்வரானாலும் சரி யாராக இருந்தாலும் சரி சட்டத்தின் மூலம் நீதிகேட்பவர்களுக்கு நீதி கிடைக்கும்.தவறு செய்தவர்கள் முதல்வராக இருந்தாலும் தண்டனை உண்டு.
காந்தி அஹிம்சை என்ற கொள்கையை தம் உயிராக கருதினார்.தம்மை பூட்ஸ் காலால் மிதித்த ஆங்கிலேயரைக் கூட அகிம்சையால் விரட்டினார்.
அண்ணா ஹசாரே அகிம்சையை பின்பற்றியதால் தான் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற இந்திய அரசு சம்மதித்துள்ளது.
அகிம்சையில்லாமல் ஆயுதத்தை எடுத்ததால் தான் இலங்கையில் நடைபெற்ற விடுதலைபுலிகள்- இலங்கை ராணுவ போரில் பலர் மாண்டனர்.சுபாஷ் சந்திர போஸ் கூட இறப்புச் செய்தி சரியாக தெரியாமல் இறந்துபோனார்.
காந்தி அனைவரிடமும் அன்பு வழியை பின்பற்றினார். அவர் " நான் கண்ட வெற்றியனைத்தும் அன்பால் கண்டவையே " என்று கூறியுள்ளார். இன்று , அன்பு சூழலில் வாழாத பிள்ளைகள் பலர் தீவிரவாதிகளாகவோ , குற்றவாளிகளாகவோ மாறுகின்றனர்.
தனிமனித ஒழுக்கத்தை காந்தி வலியுறுத்தினார். அதை பின்பற்றாததால் இன்று கொலை கொள்ளை நடைபெறுகிறது.எய்ட்ஸ் போன்ற நோய்கள் வாட்டுகிறது.
காந்தியம் என்ற கொள்கை முழுவதும் நம் மக்களிடையே பரவாமல் உள்ளது.இதற்கு காரணம் அதை பரப்பும் முயற்சியின்மை ஆகும்.
நம் நாட்டு பாடத்திட்டங்களில் கூட காந்தியின் காந்தியம் பற்றி பாடங்கள் இல்லை, எனவே காந்தியம் பற்றிய அறிவு மக்களுக்கு எட்டவில்லை.
காந்தியின் கொள்கைகள் நம் நாட்டில் ஒரு மூலையில் உள்ள பள்ளத்தில் தேங்கியிருக்கும் நீரைப்போல் உள்ளது. ஆனால் காந்தியம் ஒரு கடல் , அது பரந்து விரிந்து உலகெங்கும் பரவ வேண்டும்.
இதற்கு நாம் பல பொதுக்கூட்டங்களில் காந்திய கொள்கையை எடுத்துரைக்க வேண்டும். அவர் கொள்கைகளை நாம் நிச்சயம் பின்பற்ற முடியும் என்று எண்ணி பின்பற்றுதல் வேண்டும்.
நம் வீட்டில் வளரும் குழந்தைகளுக்கு காந்தியின் எளிய கொள்கைகளை கடைபிடிக்க சொல்லித்தர வேண்டும்.
nandri
ReplyDelete