ஜீன்ஷார்ப் எழுதிய கட்டுரையின் தமிழ் மொழியாக்கத்தின் இரண்டாம் பகுதி இது.இந்தியர்கள் வேறுவழியின்றி அகிம்சையை கையில் எடுத்தனர் எனும் வாதத்தை பொய்யாக்கி,எப்படி அகிம்சையை சுதந்திர போராட்ட களத்தில் ஓர் யுத்தியாக காந்தி மக்களை கொண்டு பயன்படுத்தினார் என்பதை விளக்குகிறார்.பொருளியல் ரீதியாக இந்தியாவை கட்டுப்பாட்டிற்குள் வைப்பது நட்டத்தை ஏற்படுத்தியதால் இந்தியாவைவிட்டு ஆங்கிலேயர்கள் அகன்றனர்,இதற்கும் காந்தியின் அகிம்சை போராட்டத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று நிலவும் ஓர் கருத்தை தர்க்கப்பூர்வமாக புள்ளிவிவரங்களைக்கொண்டு தகர்க்கிறார்.காந்தி, மற்றும் அவரது அகிம்சை முறை மீது முன்வைக்கப்படும் குற்றசாட்டுகளை எதிர்கொள்ளும் முக்கியமான பகுதி இது.மீண்டும் ஓர் நினைவுறுத்தல்- இக்கட்டுரை ஜீன் ஷார்ப்பால் மேற்கத்திய வாசகர்களை மனதில் கொண்டு எழுதப்பட்டது.
-----------------------------------
ஏழை விவசாயிகளுக்கு இந்திய விடுதலை பெரிதாக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை .காந்தி அவர்களை அகிம்சை முறையில் போராடி நிலங்களை பெற போராட சொன்னார் ,அரசியல் ரீதியாக அணி திரளவேண்டும் என்று வலியுறுத்தினார்.காங்கிரசின் தேர்தல் பிரச்சாரங்களின் பொழுது காந்தியின் பெயரும் படமும் பரவலாக பயன்படுத்தப்பட்டது.காந்தியோ " நாம் கனவு காணும் சமூக மாற்றத்தை இன்றைய காங்கிரஸ் கட்சியால் நிகழ்த்த முடியாது என்பதை நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும் .." என்றார்.காந்தியின் மரணத்திற்கு முன்பு காங்கிரஸ் கட்சியை கலைக்கும் ஓர் தீர்மான முன்வரைவை காந்தி எழுதி இருந்தார்,காங்கிரசை தன்னார்வலர்கள் கொண்ட சேவை அமைப்பாக மாற்றி, அரசிற்கு வெளியே நின்று ஓர் அகிம்சை சமூகத்தை கட்டி எழுப்பி, இந்தியாவின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் பாடுபடவேண்டும் என்று காந்தி விரும்பினார்.
காந்தியை அவரது கொள்கைகள் மற்றும் பார்வைகளைக்கொண்டே மதிப்பிட வேண்டும் ,மற்றவர்களுடையதை கொண்டு அல்ல.மேலும் மேற்கில் , காந்தி மற்றும் அகிம்சை போராட்டம் தொடர்பாக பரவலாக நிலைத்திருக்கும் பார்வைகளையும் நாம் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.உண்மையில் அவரை சரியாக மதிப்பிடுவதில் இவை குறுக்கிடுகின்றன .பெரும்பாலும் இவை உண்மைக்கு புறம்பானதாக இருக்கின்றது , ஆதலால் காந்தியை பற்றியும் அவர் இந்தியாவில் செய்த சோதனை முயற்சிகளை பற்றியும் ஆழ்ந்து புரிந்துகொள்ள முடியாமல் போகிறது.முக்கியமான ஆறு புரிதல் பிழைகளின் பால் நாம் கவனத்தை குவிப்போம்..
இந்தியாவில் அகிம்சை முறையில் விடுதலை போராட்டம் நடந்துக்கொண்டிருந்த காலங்களிலும் அதன் பின்னரும் வெளியுலகில் பரவலாக ஓர் கருத்து நிலவியது , அகிம்சை இந்தியர்களின் இயல்பான குணம்,பல்வேறு காரணங்களால் அவர்களால் வன்முறையில் ஈடுபட முடியாது என்பதே அது .இதன் உட்பொருள் என்னவெனில் , இதற்கு மேல் இந்தியாவில் நடந்த அகிம்சை போராட்ட கள பரிசோதனைகளுக்கு முக்கியத்துவம் இல்லை என்பதே.இப்பொழுது இத்தகைய குரல்கள் ஒலிப்பதில்லை தான் , இருப்பினும் கூட இத்தகைய பார்வை மாற்றத்தின் விளைவுகள் சரிவர ஆராயப்படவில்லை.
ஆங்கிலேயர்களால் வெறும் கலகம் என்று முத்திரைகுத்தப்பட்ட இந்தியாவின் முதல் சுதந்திர போர் 1857 -59 ஆண்டுகளில் முழுவீச்சில் நிகழ்ந்தது ,இதில் கொரில்லா தாக்குதல் மட்டுமல்ல நேரடி யுத்தங்களும் நடந்தன என்பதை இந்தியர்களை தவிர்த்து வேற்று தேசத்தவர்கள் நினைவில் கொள்வதில்லை 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இந்திய தேசியவாதிகளிடையே ஓர் தீவிரவாத இயக்கம் முளைத்தது ,குறிப்பாக பஞ்சாப் ,வங்காளம் ,மகாராஷ்டிரா மாகணங்களில் துப்பாக்கி தாக்குதல்கள் மற்றும் குண்டுவெடிப்புக்களின் விளைவாக எண்ணற்ற உயிர்கள் பலியாகின.
காந்தி போராட்ட களத்தில் இறங்கிய பின்னரும் கூட தீவிரவாதிகள் இயங்கிக்கொண்டு தானிருந்தார்கள்.1929 களில் கூட டெல்லி சட்ட சபையின் மீது குண்டு வீசப்பட்டது,துப்பாக்கி சூடு நடந்தது .அதே வருட இறுதியில் வைஸ்ராய் லார்ட் இர்வின் பயணித்த ரயில்வண்டியின் அடியில் குண்டு வெடித்தது (பிற்காலத்தில் -இவர் லார்ட் ஹாலிபாக்ஸ் என்றழைக்கப்பட்டார்,அமெரிக்கவுக்கான பிரிட்டிஷ் தூதராக திகழ்ந்தார்).அத்தோடு அவர்களின் செயல்பாடு ஓய்ந்துவிடவில்லை.
1928 வாக்கில்"உங்கள் உதிரத்தை கொடுங்கள் நான் சுதந்திரத்திற்கு உத்திரவாதம் அளிக்கிறேன் " எனும் அறைகூவலின் விளைவாக சுபாஷ் சந்திர போஸ் மக்களிடையே கணிசமான ஆதரவை பெற்றிருந்தார் , அவரும் நேருவும் அவ்வருடமே பூரண ஸ்வராஜ்யம் வேண்டும் என்று அறைகூவல் விடுத்தனர்,இல்லையேல் சுதந்திரத்திற்கான போர் தொடங்கும் என்றனர்.
இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக 1938 ஆம் ஆண்டு போஸ் பதவி வகித்தார்,1939 ஆம் ஆண்டு மாநாட்டின் போது மீண்டும் தேர்வு செய்யப்பட்டார் ,ஆனால் காந்தி கொடுத்த அழுத்தத்தின் விளைவாக அப்பதவியை துறந்தார்.இரண்டாம் உலகப்போரின் போது போஸ் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி ஜப்பானுடன் இனைந்து போராடினார் ,இந்தியாவின் ஒரு சாரருக்கு இது பெரும் உவகை அளித்தது.
சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் நடந்த மதக்கலவரங்களை பற்றி சொல்லவேண்டியதில்லை.பல்லாயிரக்கணக்கானோர் மடிந்தனர் .சுமார் ஐந்து மில்லியன் மக்கள் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உருவான புதிய எல்லையை கடந்து இடம்பெயர்ந்தனர்.உள்நாட்டு போர் மூளுமோ எனும் நியாயமான அச்சம் அங்கு நிலவியது,பின்னர் புதிதாக சுதந்திரமடைந்த இரு நாடுகளுக்கு இடையே போர் மூளுமோ எனும் அச்சமும் சேர்ந்துக்கொண்டது.பரஸ்பரம் ராணுவங்கள் காஷ்மீரில் சந்தித்துக்கொண்டன.
இந்திய எல்லைகளுக்கு ஏதேனும் ஆபத்து நேரும் பொழுது தன்னைகாத்துக்கொள்ள மாபெரும் ராணுவ நடவடிக்கைகளை எடுக்க இந்திய அரசு தயங்காது என்பது இந்திய -சீன எல்லை பிரச்சனையின் பொழுது தெளிவாக துலங்கியது.பெரும்பான்மை மக்களும் அதே மனநிலையில் தானிருந்தனர்.அரசின் மீது முன்வைக்கப்பட்ட முக்கியமான விமரிசனமே அரசு போருக்கு தக்கப்படி தயாராகவில்லை என்பது தான் . கோவாவில் நடந்த படையெடுப்பு,நாகாலாந்து போர் ,போன்றவை இந்திய அரசு தேவையென்றால் ராணுவத்தை பயன்படுத்த தயங்குவதில்லை என்பதை தெளிவாக்குகிறது.இது காந்தி எதிர்பார்த்தது தான்.ராணுவ பாதுகாப்பு என்று வரும்போது மற்ற அரசுகளிலிருந்து அதன் நடவடிக்கைகளில் இந்தியா பெரிதாக வேறுபடவில்லை என்பதை இந்தியா மீண்டும் மீண்டும் நிருபித்துள்ளது.
நேருவின் அணிசேரா கொள்கைகள் காரணமாக அல்லது இத்தகைய வழிமுறைகள் பால் அவருக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும் கூட ,சீனா அணு ஆயுதங்களை உருவாக்கிவிட்டால் இந்தியாவும் அத்திசையில் நிச்சயம் பயணிக்கும்..
இவை அனைத்தையும் தொகுத்து பார்க்கும் பொழுது - இந்தியர்கள் வன்முறையை பிரயோகிப்பதில் தேர்ச்சியுடயவர்கள் என்பது தெளிவாக புரிகிறது, அப்படி இருந்தும் ஏதோ சில விசேஷ காரணங்களினால் அகிம்சை முறையை சுதந்திரத்தை அடைய தங்களது முக்கிய திட்டமாக ஏற்றுக்கொள்ள முடிந்தது .
இந்திய மதங்களிலும் பாரம்பரியங்களிலும் காந்தி முன்வைத்த வழிமுறைகளுக்கு இடம் இருக்கின்றது என்பதும் உண்மை தான்,காந்தி இதை பயன்படுத்தி ஆன்மீக மொழியில் பேசியபோது எளிதாக ஆன்மீகவாதிகள் அவரை புரிந்துக்கொள்ள முடிந்தது.இதில் மிக முக்கியமானது எண்ணத்தினாலோ செயலினாலோ அல்லது வார்த்தைகளினாலோ கூட பிற உயிர்களுக்கு தீங்கிழைக்க கூடாது எனும் அகிம்சை கோட்பாடு தான்.சந்தேகமின்றி இவை முக்கியமானது தான்,ஆனால் காந்தி இதற்கு வெவ்வேறு புதிய அர்த்தங்களை அறிமுகப்படுத்தினார் .
மேற்குலக நாகரீகத்தில் எப்படி எதிரியிடத்திலும் அன்பு செலுத்து எனும் கிறித்துவின் கோட்பாட்டிற்கு முரண்பாடான கொள்கைகளும் வழக்கங்களும் இருக்கிறதோ அதே போல் இந்திய மதங்களிலும் கலாச்சாரங்களிலும் முரண்பாடுகள் உண்டு.சீக்கியர்களும் முஸ்லீம்களும் ராணுவ நடவடிக்கைகளில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.இந்து மதத்தின் வர்ண அமைப்பிலேயே க்ஷத்ரியர்களுக்கு ஓர் இடமுண்டு .காந்தி வெகுவாக போற்றி ,குறியீட்டு தளத்தில் அதன் வெவ்வேறு அர்த்தங்களை பற்றி பேசிய பகவத் கீதை- உண்மையில் போர் முனையில் நிற்பவரிடம் போரில் பின்வாங்காமல் பங்கெடுக்க அறிவுறுத்துகிறது.
இத்தகைய பல ஆவணங்களைக்கொண்டு பார்க்கையில்,அரசியல் போராட்ட களங்களில் இந்தியர்கள் வன்முறையை தேவைப்பட்டால் கையாள்வார்கள் என்பது புலப்படுகிறது .இந்திய சுதந்திர போராட்டம் பெரும்பாலும் அகிம்சை வழியில் நடைப்போட்டதற்கு காரணம் அவர்கள் வன்முறையை அறிந்திருக்கவில்லை எனும் வாதம் சரிகிறது.
முழுவீச்சிலான நேரடி போர் என்பது அறிவீனம் ,அதனால் அது சாத்தியபடாமல் போயிருக்கலாம் ,ஆனால் நிச்சயம் பெரிய அளவிலான கொரில்லா தாக்குதல்கள் சாத்தியம் தான்.( அல்ஜீரியாவில் நடந்த அத்தகைய போராட்டத்தை போன்ற விளைவுகளை இந்தியாவிலும் ஏற்படுத்தி இருக்கும் என்று எடுத்துக்கொண்டால்-இந்தியாவிலும் 3,000,000- 3,500,000 இந்தியர்கள் அல்ஜீரியர்களைப்போல் மடிந்திருக்கக்கூடும் .இந்தியாவில் அகிம்சை போராட்டத்தில் பங்குபெற்று மடிந்தவர்கள், அல்லது காயமடைந்து மறைந்தவர்களின் எண்ணிக்கை ரிச்சர்ட் கிரேகின் கணக்குப்படி சுமார் 8000.பிரெஞ்சு நாட்டவர்கள் ப்ரிடிஷார்களை காட்டிலும் இயல்பில் குரூரமானவர்கள் என்று நிச்சயம் கருதமுடியாது !)
இந்திய அகிம்சை போராட்டம் வேறுவழியின்றி தோன்றியதோ ,இல்லை இயல்பினால் தோன்றியதோ அல்ல என்பதை புரிந்துக்கொண்டு,அகிம்சையை சுதந்திர போராட்டகளத்தில் பிரதான யுத்தியாக பயன்படுத்தி அதை அனைவரையும் ஏற்றுகொள்ள செய்ததற்கு காந்திக்கு அதிமுக்கியமான பங்குண்டு என்பதை உணர வேண்டும் .இந்திய தேசிய காங்கிரஸ் அவரது யுத்தியை ஏற்றதற்கு தார்மீகமோ ஆன்ம நலனோ காரணமில்லை.அது ஓர் அரசியல் செயல்பாடு .காந்தி, அவர்களுக்கு அகிம்சையை முன்வைத்து நடைமுறையில் பயனளிக்க வல்ல வழிமுறைகளை அடையாளம் காட்டினார்.
காந்தி இந்திய பாரம்பரியத்தின் ஓர் அடையாளம் என்று பரவலாக நம்பப்படுகிறது.கலிபோர்னியா பல்கலைகழகத்தின் டாக்டர். ஜோன் போண்டுரன்ட் கூற்றின்படி இந்திய பாரம்பரிய கோட்பாடுகளை அவர் எப்பொழுதெல்லாம் பயன்படுத்தினாரோ அப்பொழுதெல்லாம் அதன் மூலப்பொருளிலிருந்து மாறுபடும் முக்கியமான புதிய புரிதல்களை முன்வைத்தார்.அதே வேளையில் காந்தி பல தருணங்களில் இந்தியர் அல்லாதராகவும் திகழ்ந்தார் என்பதையும் நினைவுகூர வேண்டும்.பரவலாக கடைபிடிக்கப்பட்ட பல கட்டுபாடுகளையும் பழக்கவழக்கங்களையும் அவரது சொல்லினாலும் செயலினாலும் வெளிப்படையாகவே மீறினார். தீண்டாமை இப்பொழுதை காட்டிலும் முழு தீவிரத்தோடு இந்திய சமூகத்தில் புரையோடிய காலங்களில் முழுமூச்சோடு அதை எதிர்த்து போராடினார் என்பது ஓர் எளிய உதாரணம்.தனது வாழ்வையும் அரசியலையும் முழுமையாக பரிசோதனைகளாகவே ஆக்கிக்கொண்டார் ,இந்த அடிப்படையில் மேற்கின் தாக்கம் கணிசமாக நிலவுகிறது.
தீமையை புரிந்துகொள்வதோ ,ஏற்றுக்கொள்வதோ காந்தி முன்வைத்த வழிமுறையல்ல அதை எதிர்த்து போராட வேண்டும்.பலர் ஆமோதித்தாலும் ,இதற்கு நேரெதிரான கொள்கைகள் கொண்ட சிந்தனை மரபும் இந்து மதத்தில் உண்டு,தீமையை எதிர்க்ககூடாது அதை கடக்க வேண்டும் என்று முன்வைக்கிறது .நன்மைக்கு தீமைக்கும் இடையிலான அறபோராட்டங்களின் விளைவாக மனிதன் மேன்மையை அடைவான் ஆதலால் இதை பற்றி மனிதன் பெரிதாக கவலைப்படவேண்டியதில்லை என்கிறது .
காந்தியின் போராட்ட திசை இத்தகைய இந்து மத தத்துவங்களுக்கு எதிராகவே இருந்தது.பரவலாக வழக்கத்திலிருந்த நடைமுறைகளிலிருந்து பெரிதும் அவரது செயல்பாடு விலகி இருந்தது.எதிர்ப்பின்றி சரணடைதல் என்பது அப்பொழுது இந்தியர்களின் இயல்பு குணமாக இருந்தது, ப்ரிடிஷார்களை காட்டிலும் மக்களின் இந்த குணமே சுதந்திரத்தை அடைய தடையாக இருப்பதை காந்தி கண்டுக்கொண்டார்.இத்தகைய மனப்போக்கை மாற்றி தன்னம்பிக்கையையும் ,செயலூக்கத்தயும் ,மனத்துணிவையும் மக்களிடையே நிறுவியதில் அவரது பங்கு மகத்தானது.
1920 ல் காந்தி எழுதுகிறார், " அகிம்சை என்பது தீங்கிழைப்பவரிடம் எதிர்ப்பின்றி சரணடைவது அல்ல, மாறாக தன் முழு ஆன்ம பலத்தோடு வன்முறையாளர்களின் இச்சைக்கு எதிராக துணிந்து நிற்பது ,இந்தியா பலவீனமாக இருப்பதால் நான் இந்தியாவை அகிம்சையை கடைபிடிக்க சொல்லவில்லை ..இந்தியா அவளது சக்தியையும் பலத்தையும் உணர்ந்தபடி அகிம்சையை பின்பற்றவேண்டும் என்றே நான் விரும்புகிறேன்."
காந்தியையும் இந்திய சுதந்திர போராட்டத்தையும் தொடர்புபடுத்தி பரவலாக மார்க்சியர்களால் முன்வைக்கப்படும் மற்றொரு குற்றசாட்டு - ப்ரிடிஷார்கள் இந்தியாவை விட்டு அகண்டதற்கும் காந்தியின் அகிம்சை போராட்டத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.இந்திய துணை கண்டத்தை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைப்பது அவர்களுக்கு லாபகரமாக இல்லாததால் அவர்கள் நாட்டை விட்டு சென்றனர். காந்தி மற்றும் அவரது அகிம்சை போராட்டத்திற்கும் ,பிரித்தானிய பொருளாதார வீழ்ச்சிக்கும் தொடர்பில்லை எனும் முன்முடிவு மார்க்சியர்களின் அறியாமையை வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது.பிரிட்டிஷ் ராஜ்யத்திற்கு எதிராக கிளர்தெழுந்த எதிர்பிற்கும் ,சுதந்திர வேட்கைக்கும் காந்தி ஓர் முக்கிய காரணகர்த்தா.இவ்வெழுச்சி பிரிட்டிஷ் ராஜ்யத்திற்கு பெரும் சவாலாக திகழ்ந்தது , ராஜ்ஜியத்தை தக்கவைத்து கொள்வதும் பெரும் செலவீனமானது.குறிப்பாக ஒத்துழையாமை மற்றும் சட்ட மறுப்பு போராட்டங்களின் பொழுது அவர்களை இது பெரிதாக பாதித்தது.
இந்தியாவுடனான வணிக உறவின் பொருளியலை மட்டும் கணக்கில்கொண்டால் கூட ,காந்தியின் செயல்திட்டம் கணிசமான பாதிப்பை செலுத்தியது.1930-31 ஆண்டுகளில் நடந்த சட்ட மறுப்பு ,ஒத்துழையாமை போராட்டங்கள் அதை தெளிவாக உணர்த்தியது.உலகெங்கிலும் பொருளாதார மந்த நிலை நிலவிய அதே காலகட்டம் தான் என்றாலும்,பிரித்தானிய பொருட்களுக்கான இந்திய சந்தை கணிசமாக குறைந்ததற்கு பொருளாதார மந்த நிலை மட்டும் காரணமில்லை ,ஒத்துழயாமைக்கும் அதில் முக்கிய பங்குண்டு.
இந்தியாவிற்கான பிரிட்டிஷ் செயலர் பிரித்தானிய மக்கள் சபையில்( ஜெ.சி.குமரப்பாவின் கூற்றின்ப்படி ) 1930 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவிற்கான ஏற்றுமதியில் 25 சதவிகித வீழ்ச்சியை பொருளாதார மந்தநிலையை காரணமாக சூட்டினார், மேலதிக 18 சதவிகிதம் -இந்திய தேசிய காங்கிரஸ் நடத்திய ஒத்துழையாமை போராட்டங்களின் மீது சுமத்தினார்.இந்தியாவிற்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி புள்ளியியல் விவரங்கள்ப்படி ( ஸ்டேர்லிங் பவுண்டுகளில் ) 1924 ஆம் ஆண்டு 90.6 லிருந்து 1927 ல் - 85 ஆகவும், பின்னர் 1929 ல் 78.2 ஆகவும், ஒத்துழையாமை ஆண்டான 1930 ல் 52.9 ஆகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது .
அனைத்து தேசங்களிலிருந்தும் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பருத்தியின் அளவு 1924 ல் 1.82 பில்லியன் யார்டுகளிளிருந்து 1929 ல் 1.94 பில்லியன் யார்டுகளாக பெருகி,பின்னர் 1930 ல் 1.92 பில்லியன் யார்டுகளாக குறைந்தது.பிரித்தானியாவின் ஏற்றுமதி புள்ளிவிபரங்கள் படி பார்த்தால் ,இதே பருத்தி 1924 ல் 1.25 பில்லியன் யார்டிளிருந்து 1929 ஆம் ஆண்டில் 1.08 பில்லியன் யார்டுகளாக குறைந்தது ,அதாவது 14 சதவிகித வீழ்ச்சி.பின்னர் 1930 ல் 0.72 பில்லியன் யார்டுகளாக குறைந்தது- 42.4 சதவிகித வீழ்ச்சி.அக்டோபர் 1930 லிருந்து ஏப்ரல் 1931 வரையிலான போராட்டத்தின் உச்சகட்ட காலகட்டத்தில் ,சுமார் 84 சதவிகித வீழ்ச்சி ஏற்பட்டது.
இந்திய சுதந்திரத்திற்கான பல்வேறு காரணிகளை அலசுவது இதன் நோக்கமல்ல என்றாலும், இப்புள்ளிவிவரங்கள் காந்திய அகிம்சை போராட்டங்களுக்கும் பொருளாதார காரணிகளுக்கும் தொடர்பில்லை எனும் மார்க்சிய பார்வை உண்மையை அடிப்படையாக கொண்டதல்ல என்பதை புரிந்துகொள்ளலாம்.
நான்காவதாக முன்வைக்கப்படும் அரசியல் இயல்புவாதக்காரர்களின்(political realists) பார்வை - ஆக்கப்பூர்வமான அரசியல் அதிகாரத்தை அடைய காந்தியின் அகிம்சைக்கு திராணியில்லை ,ஆதலால் நடைமுறை அரசியல்வாதிகளுக்கு அது உதவாது.காந்தியை மிக சாதரணமாகவும்,அவரது வழிமுறைகள் பலமற்றதாகவும், அதனால் அரசியல் எதிரிகளுக்கு எவ்வித சவாலையும் கொடுப்பதில்லை என்று முன்முடிவுகளோடு கருதுகின்றனர் .இவை எதுவுமே உண்மையை அடிப்படையாகக்கொண்டவையல்ல .
--மேலும்--
-சுகி
காந்திய போராட்டம் பிரித்தானிய பொருளாதாரத்தில் மந்த நிலையை ஏற்ப்படுத்தி உள்ளது என்பது அதன் நடைமுறை சக்தியையும் , தார்மீக பலத்தையும் நிரூபனம் செய்கின்றன
ReplyDelete